எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் :–992; —தேதி 21st April 2014.
இந்து மத முனிவர்கள், கானகங்களில் ஆசிரமங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை வனப்பு மிக்க மலைச் சாரல்களில் அமைக்கப்பட்டன. அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். காய்கறிகள், கனி வகைகள், பால் தயிர், கொஞ்சம் தானியம் ஆகியவைதான் அவர்களுடைய அன்றாட உணவு.
மான்கள், கிளிகள் முதலியன அவர்களுடைய குடில்கள் அருகே வசித்தன. நெய் மணக்கும் ஹோமப் புகை அவர்கள் குடில்களில் இருந்து காலையும் மாலையும் எழும். அவர்களுடைய அன்றாட உடற்பயிற்சி ஆறுகளுக்குச் சென்று நீராடி வருவதும். செடிகொடிகளுக்குத் தண்ணீர் விடுவதும் ஆகும். அத்தோடு ஹோமத்துக்குத் தேவையான குச்சிகளைப் பொறுக்கிக்கொண்டு வருவர்.
ஆசிரமங்களில் அமைதி தவழ்ந்தது. அவர்களுடைய தவ வலிமையால் அங்கு வரும் புலியும் மான்களும் ஒரே துறையில் தண்ணீர் குடிக்கும். அங்கு வரும் மன்னர் முதலானோருக்கு தாராளமாக விருந்து உபசாரம் கிடைக்கும். யாரேனும் தங்க வேண்டுமானால் அங்கு தங்கவும் அனுமதி உண்டு. மேலும் பிராணிகளும் கூட அவர்களுக்கு ஹோமத்துக்குத் தேவையான பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தன. பெண் துறவிகளும் அங்கே இருந்தனர்.
ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான முனிவர்களையும், ஆசிரமங்களையும் பற்றிய செய்திகள் இருக்கின்றன. அவைகளைப் படிக்கும்போதே மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். சம்ஸ்கிருத நாடகங்களில் இந்த ஆஸ்ரமங்கள் பற்றி இன்னும் பல புதிய செய்திகள் கிடைக்கின்றன. உலகின் மிக மூத்த நாடக ஆசிரியர்களில் ஒருவர் பாஷா. அவர் எழுதிய 13 சம்ஸ்கிருத நாடகங்கள் நமக்குக் கிடைத்தது நாம் செய்த தவப் பயனே.

நாடக உலகில் மிகவும் சிறப்புமிக்க இடத்தைப் பிடிக்கும் காளிதாசனின் மூன்று நாடகங்களில் சாகுந்தலம் என்னும் நாடகம் உலகப் புகழ்பெற்றுவிட்டது. இவைகளில் உள்ள வருணனைகள், ஆஸ்ரமங்களின் அற்புதமான காட்சிகளை நம் மனக் கண்ணுக்கு முன்னே கொண்டு வருகின்றன. மாபெரும் மன்னர்களும் கூட ஆஸ்ரமத்துக்கு தொலை விலேயே ரதங்களை நிறுத்திவிட்டு நடந்து வந்து முனிவர்களின் கால் களில் விழுகின்றனர். ஆயுதங்களையும், அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்களையும் கூடக் கழற்றிவிட்டு சாதாரண உடையில் வருகின்றனர். ஆசிரமத்தின் அமைதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
இமயமலை ஆஸ்ரமங்களின் காட்சிகள் புறநானூற்றின் மிகப் பழைய பாடல்களில் இருக்கின்றன. அவர்கள் காளிதாசனின் நூல்களைப் படித்து அதைப் பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளனர்.
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மீது முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய (புற.2) பாடலில்:–
“ நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அறுங்கடன் இறுக்கும்
முத்தீ விளகிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே !”
பொருள்:– பாலானது புளித்துப் போனாலும், கதிரவன் ஒளி நீங்கினாலும், நால்வேத நெறி மாறுபடினும் நீ இமயமலை போல நீண்டகாலம் வாழ வேண்டும். அந்த இமயமலைச் சாரலில் பெரிய கண்களை உடைய பெண் மான்கள் இருக்கின்றன. அவைகளின் பக்கத்தில் சின்ன மான் குட்டிகள் இருக்கும் அந்தணர் வீடுகளில் எரியும் முத்தீயில் இருந்து எழும்புகையில் அவை தூங்கும். அந்த இமய மலையோ சூரிய ஒளியில் தக தகவென தங்கம் போல ஒளிவீசும் (பொற்கோட்டு இமயம்= காஞ்சன ஸ்ருங்கம்= தற்போதைய பெயர் கஞ்ஜன் ஜங்கா). அப்பேற்பட்ட இமயமலை போல் நீ நீண்ட நெடுங் காலம் வாழ்வாயாக.

அந்தணர் வீட்டு முத்தீ= ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கியம்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் வேள் ஆய் அண்டிரன் மீது பாடிய பாடலில்
“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகம்”.
இந்த உலகம் நிலையாக நிற்க வட திசையில் உள்ள இமயமும் தென் திசையில் உள்ள பொதியமும் (ஆய்க்குடி)தான் காரணம். வட திசை இமய மலையில் கவரி மான்கள் நரந்தைப் புல்லையும் நறுமணம் உடைய மற்ற புல்லையும் மேய்ந்து விட்டு பெண் மான்களுடன் தகர மர நிழலில் தூங்கும். அந்த இமய மலை வானத்தைத் தொடும் அளவு உயர்ந்தது.
இதில் முனிவர்கள் பற்றிய குறிப்பு இல்லாவிடினும் முந்தைய புலவர் முடிநாகராயர் சொன்னதை ஒப்பிட்டால் இவரும் அதையே சொல்கிறார் என்பது தெள்ளிதின் விளங்கும்.
மாற்பித்தியார் வழங்கும் அற்புதக் காட்சி
புறநானூற்றுப் பாடல்கள் 251, 252ம் ஒரு இளைஞன் துறவியான அற்புதக் காட்சியை வருணிக்கின்றன. மாற்பித்தியார் என்ற புலவர் பாடிய பாடல்கள் இவை:–
“ஓவத்தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளற்கண்டிகும்—
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீவேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்துவோனே?”
பொருள்:– ஓவியத்தில் வரைந்தது போன்ற அழகான வீடு. அதில் சித்திரப் பாவை போல ஒரு அழகி இருந்தாள். அவள் வளையல்கள் கழன்று விழுமாறு காதல் கனலை மூட்டினான் ஒரு கட்டழகுக் காளை போன்ற இளைஞன். இப்போது அவன் எங்கே?
அதோ பாருங்கள், மலையில் ஒரு நீர்வீழ்ச்சி. அதில் நீராடிவிட்டு அனல் மூட்டி ஹோமம் செய்துவிட்டு இப்போது நீண்ட சடையை அந்தத் தீயின் வெப்பத்தில் உலர்த்திக் கொண்டு நிற்கிறான்.
இதோ அவர்பாடிய இன்னும் ஒரு பாடல்:
“கறங்கு வெள்ளருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையொடு
அள் இலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே”
பொருள்:– அதோ பாருங்கள்! அருவியில் குளிப்பதால் தில்லை நிறம் போன்ற சடையாக மாறிப் போனான். இப்போது தாளி மரத்தின் இளம் தளிர்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறான். இவன் முன்னர் பேசிய காதல் பேச்சில்—அவன் வீசிய சொல் வலையில் — மயில் போன்ற அத்தனை அழகிகளும் மயங்கி வீழ்ந்தனர்.

இந்த இரண்டு பாடல்களும் முன்னர் இளைஞனாக வாழ்ந்த ஒருவன் சந்யாசியாகி காட்டில் வாழும் காட்சியையும் அவன் நீண்ட சடையுடன் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வையும் நம் முன்னே சித்திரம் போலப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
நற்றிணைப் பாடலில் ஒரு காட்சி
சல்லியங்குமரனார் பாடிய நற்றிணைப் பாடல் (141) ஒரு முனிவரின் தோற்றத்தை அழகாக வருணிக்கிறது:-
“இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள், கய வாய்,
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழற்காய் கொன்றை
நீடிய சடையோடு ஆடாமேனிக்
குன்றுரை தவசியர் போல”
பொருள்:– மண் சேறு படிந்த கன்னத்தையும் பெரிய வாயையும் மேகம் போன்ற தோற்றமும் உடையது யானை. அந்த யானை உரசி உரசி பொரிந்த அடிமரம் உடையது கொன்றை மரம். அவை நீண்ட சடையும், நீராடாத உடம்பையும் உடைய தவசியர் போல இருக்கின்றன. (தவசியர் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் கவனிக்க).
ஒரு கொன்றை மரத்தை வருணிக்க முனிவர்களைக் கூறும் அளவுக்குத் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் ஆன்மீகம் வளர்ச்சி பெற்றி ருந்தது!! மக்களுக்குத் தெரிந்த பொருள்களையே உவமையாகக் கூறவேண்டும் என்பதும் உயர்ந்த பொருள்களையே உவமையாகக் கூறவேண்டும் என்பதும் நூல் மரபு. தமிழ் மக்களுக்கு இத்தகைய முனிவர் காட்சி அவ்வளவு சர்வ சாதாரணம்!
காளிதாசனின் ‘சாகுந்தல’ நாடக வருணனையும், பாஷாவின் ‘ஸ்வப்ன வாசவதத்தா’ நாடக வருணனையும் இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் கொடுத்துள்ளேன்.
Please read:
“Beautiful and Tranquil Hermitages of Ancient India’– posted on 20th April (Post No 991).
Contact swami_48@yahoo.com































You must be logged in to post a comment.