இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்!
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1406; தேதி 12 நவம்பர், 2014.
தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தனர். பதினான்கு “ரத்தினங்கள்” கடலில் இருந்து தோன்றின என்பது பாகவதம், மஹாபாரதம் முதலிய புராண, இதிஹாசக் கதைகளில் உள்ளன. கம்போடியாவில் உள்ள அங்கோர்வட் கோவிலில் கூட இதைச் சிற்பமாக வடிக்கும் அளவுக்கும், தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான சிலை வைக்கும் அளவுக்கும் பிரபலமான கதை இது. தென்கிழக்காசியா முழுதும் இக்கதை பிரசித்தம்.
இதில் ஏதேனும் விஞான உண்மை இருக்கிறதா? இருக்கிறது.
14 ரத்தினங்களில் ஒன்று நிலவு. இதுவும் கடலில் தோன்றியது என்பது விஞ்ஞான உண்மையே. தமிழன் மிகவும் அறிவு வாய்ந்தவன். நிலத்தில் இருந்து – நாம் வாழும் பூமி என்னும் நிலத்தில் இருந்து— அது தோன்றியதால் அதற்கு நில+வு என்று பெயர் வைத்தான் என்பதை முன்னர் நான் எழுதிய நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு என்ற இரண்டு கட்டுரைகளில் எழுதினேன். இதை வடமொழி நூல்கள் கடலில் இருந்து வந்ததாக எழுதின. ஏன்?
நிலவு தோன்றிய இடம் இன்று பசிபிக் சமுத்திரமாக மாறிவிட்டதால் இப்படி எழுதினர். அது என்ன கதை?
பரிணாமக் கொள்கையை நமக்கு அளித்த சார்ல்ஸ் டார்வினின் மகன் ஜார்ஜும் ஒரு விஞ்ஞானி. பரிணாமக் கொள்கை நமது தசாவதாரத்தில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு காலத்தில் ஒரு பெரிய கிரஹமோ வால் நட்சத்திரமோ பூமியில் மோதிய போது பூமியில் இருந்த ஒரு பகுதி பிய்த்துக் கொண்டுபோனது. அந்த இடம் நீரால் நிரப்பப்பட்டு பசிபிக் பெருங்கடல் ஆகிவிட்டது. நிலவின் விட்டமும் பசிபிக் மஹா சமுத்திரத்தின் நீள, அகலமும் சரியாகப் பொருந்துகின்றன என்று ஜார்ஜ், 1800 ஆம் ஆண்டுகளில் ஒரு கொள்கை வெளியிட்டார். நிலவைத் தூக்கிவந்து அப்படியே பசிபிக் பெருங்கடலில் வைத்தால் நமக்கு முழு லட்டு கிடைத்த மாதிரி பூமி உருண்டை பூர்த்தியாகும்.
பசிபிக் பெருங்கடலைத் தோற்றுவித்த காரணத்தினால் இப்படி நம்மவர் சொன்னார்கள் என்று கொள்வதில் பசை இருக்கிறது. அது சரி, மற்ற 13 பொருள்களுக்கு விளக்கம் என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.14 ரத்தினங்கள் வந்ததையும் ஒரே நிகழ்ச்சியாகக் காணாமல், நீண்ட கால மனித குல நாகரீக வளர்ச்சியாக இதைக் காண வேண்டும்.
முதலில் 14 ரத்தினங்கள் என்று புராண இதிஹாசம் தரும் பட்டியலில் சில வேறுபாடுகள் இருப்பதை அறிதல் நலம். ஆகையால் நான் கொடுக்கும் பட்டியலில் 14க்கு மேல் இருக்கும். இதுவரை எத்தனையோ பேர் இவைகளுக்கு பலவித விளக்கங்கள் கொடுத்தனர். ஆனால் அவை திருப்தி அளிப்பதாக இல்லை. இவை இந்துக்களின் கடல் கடந்த்த நாகரீக வளர்ச்சியைக் காட்டுகிறது அத்னையும் வெளிநாட்டில் இருந்து கப்பல் மூலம் வந்ததால் இதைக் கடலைக் கடைந்ததாகக் கூறினர் என்றார் ஒருவர்.
இன்னும் ஒருவர் இவைகளுக்கு தத்துவ விளக்கங்களைக் கொடுத்தார். எனது விளக்கம் இதோ:–
14 “ரத்தினங்கள்:
சந்திரன் (சோம, நிலவு)
வாருணி ( கள், சுரா பானத்தின் அதிபதி)
உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை
ஐராவதம் என்னும் யானை
காம தேனு என்னும் பசு/சுரபி
பாரிஜாதம் – மரம்
கற்பக விருக்ஷம் – மரம்
கௌஸ்துப மணி
குடை
காதுகளுக்கான தோடு
அப்சரஸ் – தேவலோக அழகிகள்
சங்கு
லெட்சுமி – செல்வத்தின் அதி தேவதை
ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்
தன்வந்திரி – டாக்டர்
காலகூட விஷம்
அமிர்தம்
மிருகங்களான யானை, குதிரை, பசுமாடு ஆகிய அனைத்தும் வனத்தில் திரிந்தன. மனிதன் அவைகளைப் பிடித்து சாதுவாக்கி பயன்படுத்தத் துவங்கியதையே – பாற்கடலில் இருந்து— வந்ததாகக் கூறுகிறோம் எனக் கொள்ளலாம்.
அது போலவே சங்கு, அப்சரஸ் பெண்கள் முதலியவற்றை இசை, நடனம் முதலிய கலைகளை மனிதன் வளர்த்த கட்டம் எனக் கொள்ளலாம்.
தோடு, கௌஸ்துப மணி என்பன மனித குலம் – பாஷன்- முதலியவற்றை ஏற்ற நிலை.
வெண்கொற்றக் குடை என்பது மனிதர்கள், தங்களுக்குள் அரசன் என்று ஒருவனை நியமித்த கால கட்டம். அதாவது முதல் மனு.
லெட்சுமி என்பவள் உழைப்பின் பலன் – வைஸ்யர்கள் தோன்றி கடல் கடந்து வணிகம் செய்த கட்டம். இதைச் செய்யாதவர்களுக்கு கிடைப்பது ஜ்யேஷ்டா (மூதேவி). இது சோம்பேறித் தனமான கட்டம்.
தன்வந்திரி என்பது ஆயுர்வேதம், சித்தா முதலிய மருத்துவ வளர்ச்சி ஏற்பட்ட கட்டம்.
அழகான பூக்கும் மரங்கள் பாரிஜாதம், கற்பக விருட்சம் ஆகியன மனிதன் மரங்களைப் பயன்படுத்தி தோட்டம், நந்தவனம் ஆகியவற்றை ஏற்பத்திய நிலை ஆகும்.

இறுதியாக விஷம் — அமிர்தம் என்ற இரண்டும் உலகில் நடக்கும் எந்த ஒரு பணியிலும் நல்லதும் கெட்டதும் தோன்றும் என்பதைக் காட்டும். அத்தகைய சூழ்நிலையில் சிவ பெருமான் போல தியாக சிந்தனை உடையவரால் – விட்டுக்கொடுக்கும் போக்கு உடையவரால் – மனித குலம் தழைக்கும் என்று உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
இந்த பாற்கடல் கடைந்த வரலாறு – சமுத்ர மதனம் – மனித குலத்துக்கு தரும் செய்தி யாது?
உலகில் எப்பொழுதுமே நல்லதும் கெட்டதும் ( தேவ + அசுர) இருக்கும். இரு சக்திகளையும் ஒரு சேர அணைத்து பணிகளைச் செய்ய வேண்டும். அப்பொழுது நல்லதும் கெட்டதும் (அமிர்தம்+ விஷம்) – இரண்டும் வரும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளினால் மனித முலம் செழிக்கும், தழைக்கும். அசுரர்கள் தேவர்களாக மாற அமிர்தம் ( நற்செயல்கள்) உதவும். ஆயினும் எப்போதுமே உலகில் பாஸிட்டிவ், நெகட்டிவ் – ஆக்கபூர்வ/ அழிவுமிக்க சக்திகள் இருக்கத்தான் செய்யும். எப்படி மின்சாரம் பாய இரண்டும் அவசியமோ அப்படி இவை இரண்டும் தவிர்க்க முடியாதவை. கடலைக் கடைவதைப் போல நல்லதைக் கடைந்தெடுப்பது நம் கடமை.
இதில் இரண்டு இரண்டாக பாசிட்டிவ் – நெகட்டிவ் ஜோடிகளைக் காணலாம்: தேவர்/அசுரர், அமிர்தம்/ விஷம், பால்/ மது, லெட்சுமி/மூதேவி, ஆகவே உலகம் இரண்டு வகையான செயல்களால் ஆனது. நம் மனமும் அப்படித்தான்!
மனம் எனும் கடலைக் கடைந்தும் அமிர்தம் எடுக்கும் வழி உண்டு. அது ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஆகியோர் திவ்யப் பிரபந்த, தேவார, திருவாசகத்தில் காட்டிய வழி!
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை நாமும் வழிபட்டு அமிர்தம் எடுப்போம்!!
contact swami_48@yahoo.com




































You must be logged in to post a comment.