
Date: 2 FEBRUARY 2018
Time uploaded in London- 6-28 am
Written by S NAGARAJAN
Post No. 4692
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் நான்காவது உரை
- ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு!
ச.நாகராஜன்

ஓளி மாசு கூட உண்மையில் மாசு தானா? ஆம்! இயற்கை படைத்திருக்கும் அற்புதமான பிரபஞ்சத்தில் விண்ணில் மின்னும் கோடிக்கணக்கான தாரகைகளை நகரிலிருந்து பார்க்க முடியாமல் லட்சக்கணக்கானோரைத் தடுப்பது நகரில் மின்னும் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு தான்!
இயற்கையான சூரியனின் ஒளியும் அது மறைந்த பின்னர் ஏற்படும் இருளும் பல்வேறு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.
கடல் ஆமைகளுக்கு அதிக ஓளியினால் எங்கு முட்டைகளை இடுவது என்று தெரியவில்லை; விழிக்கின்றன! ஆண் வண்டுகளுக்கோ இன விருத்திக்காக பெண் வண்டுகளுடன் கூட முடியவில்லை. இடம் விட்டு இடம் செல்லும் பறவைக் கூட்டங்களோ வழி தெரியாமல் தவிக்கின்றன.
அதிக ஒளியினால் மனிதர்களும் அவஸ்தைப்படுகின்றனர்.
செக்ஸ் உறவில் ஆர்வமே போய்விடுகிறது. அதிகச் சோர்வு ஏற்படுகிறது. ஏன், தூக்கமின்மையுடன் சில சமயம் கான்ஸர் வியாதி கூட ஒளி மாசினால் உருவாகிறது.
இருள் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்கிறார் கின்கென்பார்க் என்னும் விஞ்ஞானி. “யாரும் இல்லாத தேசம் போல இருளைப் போக்கி ஒளி மயமாக்குவது நல்லதல்ல’ என்கிறார் அவர்.
நாளுக்கு நாள் இந்த ஒளி மாசு அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டு விழித்துக் கொண்ட முதல் நாடு செக்கோஸ்லேவேகியா தான். 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து விளக்குகளும் அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டதோ அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சம் தந்து இதர இடத்திற்குப் போகாதபடி பாதுகாப்பு ஷீல்டு எனப்படும் ஃபிக்ஸர்களைப் போட வேண்டும் என்று அது சட்டத்தைப் பிறப்பித்தது.
உலகில் இப்படி ஓளி மாசைத் தடுக்க முதன் முதலில் சட்டம் இயற்றிய செக்கோஸ்லேவிகியாவைத் தொடர்ந்து பல நாடுகளும் இதே போல சட்டங்களை இயற்றின.
ஆகவே வீட்டினுள்ளே உபயோகிக்கும் மின் விளக்குகளையும், சாலைகள் மற்றும் இதர இடங்களில் நாம் உபயோகிக்கும் மின் விளக்குகளையும் மிக மிகக் குறைந்த அளவில் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தினால் ஒளி மாசும் அகலும்; செலவும் குறையும்; வெப்ப மயமாதலும் குறையும்.
உணர்ந்து செயல்படுவோம்!
***