ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 2 (Post No.10,373)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,373

Date uploaded in London – –   24 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ சத்ய சாயி பாபா! – 2

ச.நாகராஜன்

தொடர்ந்து வந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சேர்ந்தனர்.

பாபா இருக்குமிடம் பிரசாந்தி நிலையம் என்ற பெயருடன் உருவானது. ஆயிரக்கணக்கான அருள் விளையாடல்களை அவர் நடத்த ஆரம்பிக்க உலகமே பிரமித்தது. நேரத்தைக் கருதி ஒரு சில முக்கிய அற்புதங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதரைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் உண்டு.ஆங்கிலத்தில் இதை அவ்ரா (AURA) என்று குறிப்பிடுவர். இந்த ஒளிவட்டத்தைப் பற்றி ஆராய்ந்தவர்களுள் தலையாய விஞ்ஞானி அரிஜோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ராங்க் பாரனோஸ்கி என்பவராவார். அவர் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளால் எந்த வித சாதனமுமின்றி ஒரு மனிதரின் அவுராவை தனது வெறும் கண்களாலேயே பார்க்கும் திறனைப் பெற்றவர். அவர் பாபாவை தரிசித்தார். ஆனந்தம் கொண்டார். 1979ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி பிருந்தாவன் அருகே ஸ்ரீ சத்ய சாயி கல்லூரி கட்டிடங்களின் திறப்பு விழாவில் ஸ்ரீ சத்ய சாயி கட்டிடங்களைத் திறந்து வைக்க, தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில் எட்டாம் நாளன்று பாரனோஸ்கி உரை நிகழ்த்தினார். அந்த உரையில், “நான் அமெரிக்க நாட்டுத் தலைவர் ஃபோர்ட், இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிஸபத் நெதர்லாந்து ராணி வில்லெயுல்மினா ஆகியோர் இருந்த மேடைகளில் பேசியுள்ளேன்” என்று கூறிய அவர் ஸ்வாமியின் ஒளிவட்டம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதையும் அது அவர் பேசும் நபர் அல்லது தொடும் நபரை ஊடுருவி பிறகு திரும்பி வருவதையும் கண்டதாகவும், அவருடைய சக்தி எங்கும் பரவி இருப்பதாகவும் கூறினார். அவரது பிரேமை ஒளிவட்டத்தைக் கண்டு வியந்த அவர், Love Walking on Two Feet – நடமாடும் பிரேமை உருவம் – என்று அவரை வர்ணித்தார்.

அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகி வால்டர் கோவான் என்பவர். அவர் தனது மனைவி எல்ஸியுடன் இந்தியா வந்து ஸ்வாமியை தரிசித்தார். சென்னையில் 1971 டிசம்பரில் எட்டாவது அகில இந்திய ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அவர் வந்த போது கன்னிமாரா ஹோட்டலில் தங்கி இருந்தார். டிசம்பர் 20ஆம் தேதி காலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு காலமானதாக அறிவிக்கப்பட்டு அவர் நாசியிலும் காதுகளிலும் பஞ்சும் வைக்கப்பட்டது. அவர் சவத்தை அப்புறப்படுத்த டாக்டர் உத்தரவிட்டார். பிறகு தனது அலுவலைக் கவனிக்கச் சென்ற அவர் திரும்பி கோவானின் அறைக்கு வந்த போது அவர் உயிருடன் இருந்தார். பஞ்சு அகற்றப்பட்டிருந்தது. இதயத் துடிப்பு சீராக இருந்தது. என்ன நடந்தது என்று டாக்டர் பிரமித்தார். பணியாளர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்த ஒருவர் கோவானைப் பார்க்க வந்ததாகவும் உடனே அவர் உயிர் பிழைத்தார் என்றும் கூறினர் கோவானே நடந்தது என்ன என்பதைப் பின்னர் விளக்கினார்.

தான் இறந்து வெகு உயரம் சென்றதாகவும் பாபா தன்னுடன் வந்ததாகவும் அவர் கூறினார். ஒரு இடத்தில் மேஜை ஒன்றில் தலைவராகக் காணப்பட்ட ஒருவரிடம் கோவானைப் பற்றிய பல ஆவணங்கள் பல மொழிகளில் தரப்பட்டன.அவை அவர் பல் வேறு காலங்களில் பல்வேறு கலாசாரங்களில் உயர்ந்த பதவி வகித்து வந்ததை அவை குறிப்பிட்டன. அதை பாபா மொழிபெயர்த்துக் கூறினார். அந்தத் தலைவரிடம் பாபா, கோவானைத் தன்னுடைய பாதுகாப்பில் அனுப்பி வைக்குமாறு கூற தலைவர் அதற்கு இணங்க இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர். தான் மீண்டும் உயிருடன் இருப்பதை உணர்ந்ததாக கோவான் கூறினார். இப்படி இறந்த ஒருவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் நம் காலத்திலேயே நம் கண் முன்னாலே நடந்திருக்கிறது என்பது எத்துணை ஆச்சரியமான ஒன்று!

டாக்டர் பகவந்தம் கேம்பிரிட்ஜில் படித்த சுலபத்தில் மசியாதவர். சித்து வேலைகளைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. ஒரு முறை அவர் பாபாவைச் சந்தித்த போது அவரிடம் பாபா பகவத் கீதை வேண்டுமா, நான் கொடுத்தால் படிப்பீர்களா என்றார். ”இன்றே படிக்காவிட்டாலும் அதை பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்” என்றார் பகவந்தம்.

அவர் பார்த்துக் கொண்டே இருக்க கையை அசைத்தார் பாபா. அதிலிருந்து சிறிய அளவில் ஒரு கீதை புத்தகம் சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. விஞ்ஞான மனப்பான்மை கொண்ட பகவந்தம் அதிசயித்து அது எந்த பிரஸ்ஸில் அடிக்கப்பட்டது என்று கேட்டார்.
‘சாயி பிரஸ்ஸில். தெலுங்கு எழுத்துக்களில் அடிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் உங்களுக்குப் படிக்கச் சுலபமாக இருக்கும்
என்றார் பாபா. பகவந்தம் பாபாவின் அணுக்கத் தொண்டராக ஆனார்; பகவான் தெலுங்கில் ஆற்றிய சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பாக்கியத்தையும் பெற்றார்.

அமெரிக்காவில் பிரபலமான சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் சாமுவேல் சாண்ட்விஸ் (Dr. Samuel Sandweiss)என்பவர், தானே பாபாவிடம் பல அனுபவங்களைப் பெற்றார்.

Amazing! Unbelievable! Unthinkable! என்று தனது அனுபவங்கள் பலவற்றால் அவர் வியந்து கூறினார். இனி Psychiatry யே இல்லை! இனி உலகை Saichiatry யே ஆளும் என்று சிலேடையாக எழுதினார். அவரது Sai Baba The Holy Man and the Psychiatrist என்ற நூல் உலகப் புகழ் பெற்ற நூல்.

பாரா சைக்காலஜி எனப்படும் அதீத உளவியல் துறையில் நிபுணத்வம் கொண்ட பல விஞ்ஞானிகள் பாபாவிடம் வந்து அவரை ஆராய ஆரம்பித்தனர். கார்லிஸ் ஓஸில் என்ற விஞ்ஞானி பாபாவின் அனுமதியைப் பெற்று அவரை ஆராய ஆரம்பித்தார். அவருடன் ஹரால்ட்ஸன் என்பவரும் சேர்ந்தார்.

அங்கையை அசைத்து விபூதியை வரவழைத்து அவர்களிடம் தந்தார் பாபா. பல அதிசய அனுபவங்களைப் பெற்ற அவர்கள் 1975இல் கலிபோர்னியாவில் நடந்த பல்கலைக் கழக அதீத உளவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மகாநாட்டில் இந்த அற்புதங்களில் மோசடி இருப்பதற்கான சான்றாக எதையும் தங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றனர்.

***   தொடரும்

tags- சத்ய சாயி பாபா! – 2

Leave a comment

Leave a comment