தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -7

தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

 

51 எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள்

சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர், அருணகிரிநாதர், பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது.

51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு.

 

விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்:

“ ஐந்து பூதமும் ஆறு சமயமும்

மந்த்ர வேத புராண கலைகளும்

ஐம்பத்தோர்விதமான லிபிகளும்    வெகுரூப ”

என்றும் இன்னுமோர் இடத்தில்

“ அகர முதலென உரை செய் ஐம்பதொரக்ஷரமும்

அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும்

அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ”

 

என்றும் பாடுகிறார். இந்தப் பாடல்களுக்கு திரு. கோபாலசுந்தரம் எழுதிய உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மிகவும் தெளிவாக 51 சம்ஸ்கிருத எழுத்துகள் என்றே விளக்குகிறார். ஆக சம்ஸ்கிருத 51 எழுத்துக்களையே தமிழ்ப் புலவர்கள் 51 என்று குறிப்பிடுதல் தெளிவு. ஏனெனில் தமிழில் எக்காலத்திலும் 51 எழுத்துகள் இருந்ததற்கு பழந்தமிழ் நூல்களில் ஆதாரம் இல்லை.

கந்தர் அநுபூதியை 51 பாக்களில் அருணகிரி அமைத்தமைக்கும் மாணிக்கவாசகரின் திருவாசகம் 51 பாடல்களில் அமைந்தமைக்கும் இந்த மந்திர எழுத்துக்களே காரணம் என்றும் பெரியோர் கூறுவர்.

 

திருமந்திரம்

திருமந்திரத்தில் 51 எழுத்துக்கள் என்பதை திருமூலர் பல பாடல்களில் பாடுகிறார். இவைகளுக்கு உரை எழுதியோர் தொல்காப்பிய காலத்துக்கு முன் தமிழிலும் 51 எழுத்துக்கள் இருந்ததாக எழுதியுள்ளனர். பின்னர் அது 33 ஆகவும் முப்பதாகவும் குறைக்கப்பட்டதாகச் சொல்லுகின்றனர். (பக்கம் 366, பாடல் 878க்கு திரு ப ராமநாத பிள்ளை எழுதிய உரையில் இவ்வாறு கூறுகிறார்.) ஆனால் இதற்கு ஆதாரம் எதையும் அவர் காட்டவில்லை. ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை.

“ இணையார் திருவடி எட்டெழுத்தாகும்

இணையார் கழலிணை யீரைந்தாகும்

இணையார் கழலிணை ஐம்பதொன்றாகும்

இணையார் கழலிணை ஏழாயிரமே” (878)

( பாடல் 925,942,944,904, 1195, 1200, 1209, 1726,2650, 2826 ஆகியவற்றிலும் இதை திருமூலர் வலியுறுத்துகிறார்.)

12 உயிர் ,18 மெய், ஒரு ஆயுதம் உட்பட 31 தமிழ் எழுத்துகளே இன்று வரிவடிவத்தில் இருக்கின்றன. இத்தோடு உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஐயும் சேர்த்து 247 எழுத்துகள என்று சொல்லுவது வழக்கம்.

 

திருவிளையாடல் புராணம்

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் சங்கப் பலகை தந்த படலத்தில் ,” ஓ வாணியே,  உன் சொரூபமான ஐம்பத்தோரெழுத்தில் அகர முதலாக நாற்பத்தெட்டு எழுத்துகளும் நாற்பத்தெட்டு புலவர்களாக உலகத்தில் பிறக்ககடவன. திருவாலவாயானும் ஒரு புலவராகத் தோன்றி 49ஆவது புலவராக சங்கத்தில் அமரட்டும் என்று பிரம்ம தேவன் கூறியதாக உள்ளது.

 

காஞ்சிப் பெரியவர் 14-10-1932-ல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு

“அம்பிகையே வாக் ஸ்வரூபமாக இருப்பவள். அம்பாள் உருவம் முழுவதும் அக்ஷரங்கள். நம்முடைய உடம்பில் எல்லாம் நாற்றமுள்ள வஸ்துக்களெ நிரம்பி இருக்கின்றன. இந்த ஆசாபாசங்களுள் அறிவு என்ற ஒரு மணி இருக்கிறது அம்பாள் உடம்போ அகாராதி க்ஷகாராந்தம் இருக்கும் அக்ஷரங்கள்தான. தர்க்கத்தில் முக்தாவளியில் சப்தத்தைப் பற்றி இரண்டு நியாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வீசிதரங்க நியாயம், கதம்பமுகுள நியாயம் என்பவை அவை.

வீசிதரங்க நியாயம் என்பது அலைகளில் இருந்து அலை பிரிவது. அதாவது பெரிய அலைகளில் இருந்து சிறு சிறு அலைகள் பிரிந்து சென்று கடைசியில் சிறிதாகி அடங்குவதைப் போல்வது.

சப்தம் கொப்பளித்து வெவ்வேறு ஒலியாக விழுதல் கதம்ப முகுள நியாயம். இந்த சப்தங்கள் தாம் 51 அக்ஷரங்கள். அவற்றிற்கு மாத்ருகா என்று பெயர். இந்த அக்ஷரங்கள் ஒரு உருவம் எடுத்ததுதான் அம்பிகையின் வடிவம், அக்ஷரமாலிகை, மாத்ருகா ஸ்வரூபம் என்பர். ‘ஸர்வ வர்ணாத்மிகே’ என்று காளிதாசர் சொல்லி இருக்கிறார். எல்லா எழுத்துக்களின் வடிவமாய் இருப்பவளே என்பது அதன் கருத்து.

நாம் ஜபத்தில் அங்கந்யாச கரன்யாசங்கள் செய்கிறோம். அந்த அந்த மந்த்ர தேவதைக்கு அந்த அந்த அக்ஷரம் அந்த அந்த அங்கங்களாக இருக்கின்றன என்பது குறிப்பு”.

ருத்ராக்ஷ மாலா, ஸ்படிகாக்ஷ மாலா என்பனவற்றை விளக்குகையில் அ முதல் க்ஷ வரை உள்ள 51 எழுத்துக்களைக் குறிக்கவே அக்ஷ என்பதைச் சேர்த்திருபதாகவும் பெரியவர் விளக்குகிறார். எழுத்துக்கு வடமொழியில் அக்ஷ—ரம் என்பர். இதிலேயே முதல் அ–வும் கடைசி க்ஷ–வும் இருக்கிறது.

 

மந்திர சாஸ்திர விளக்கம்

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற பழமொழிக்கிணங்க 51 சக்தி பீடங்களும் தேவியின் 51 மாத்ருகா அக்ஷரங்களைக் குறிக்கும் என்றும்  உடலில் ஆறு ஆக்ஞா சக்ர ஸ்தானங்களில் இந்த 51 அக்ஷரங்களும் உள்ளதாகவும் மந்திர சாஸ்திரம் அறிந்தோர் விளக்குவர்.

கொரிய மொழியில் சாமா என்ற 51 எழுத்துக்கள் (27+24) உண்டு.

உலகில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் சிவன், முருகன், தேவியர் ஆகியோருடன் தொடர்பு படுத்தும் அளவுக்கு வேறு எந்த மொழியும் கடவுளுடன் தொடர்பு படுத்தப்படவில்லை!!

கடந்த சில நாட்களில் வெளியான ஏனைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படித்து இன்புறுக. இன்னும் வரும்…………..

Contact london swaminathan at :  swami_48@yahoo.com

நரகத்துக்கு போவோர் பட்டியல்

 

Picture of Skanda/Kartikeya/Murugan in Cambodia (from Wikipedia)

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -6

நரகத்துக்கு போவோர் பட்டியல்

யார் யார் நரகத்துக்குப் போவார்கள் என்று ஒரு சுவயான பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:

 

ஓதுவித்தவர் கூலிகொடாதவர்

மாதவர்க்கு அதிபாதகமானவர்

ஊசலில் கனலாய் எரி காளையர்         மறையோர்கள்

ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்

ஆர்தனக்கும் உதாசினதாரிகள்

ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு

ஏதும் இத்தனை தானம் இடாதவர்

பூதலத்தினில் ஓரமதானவர்

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்

ஏகசித்த தியானமிலாதவர்

மோகமுற்றிடு போகிதம் ஊறினர்

ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே

 

பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் க்உம்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.

இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டுவோர் கௌமாரம்.காம்  –இல் திரு கோபாலசுந்தரம் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பைப் படிக்கவும்.

 

“ கடவுள் ஒரு திருடன் “

ஒரு நாஸ்தீகர் இப்படிச் சொல்லியிருந்தால் நாம் இது அவர்களின் வாடிக்கையான வசனம் என்று தள்ளிவிடலாம். அருணகிரிநாதரும் ஞான சம்பந்தரும் மீரா பாயும் சொன்னால் ஒதுக்கிவிட முடியுமா? கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

கண்ணபிரானைப் பற்றிப் பாடுவோர் எல்லாம் அவனை ‘சோர்’ (சம்ஸ்கிருத இந்தி மொழியில் சோர, சோர் என்றால் திருடன்) என்று புகழ்ச்சியாகப் பாடுவதைக் கேட்கிறோம். வெண்ணையை மட்டுமா திருடினான். கோபியரின் புடவையையும் அல்லவா திருடினான் கள்ளக் கிருஷ்ணன். ஆனால் இந்தத் திருட்டுக்கும் நம்ம ஊர் அரசியல் திருடர்களுக்கும் வித்தியாசம் உண்டு. கண்ணன் திருடினால் அவன் அன்பின் காரணமாக நம் வீட்டில் செல்வம் குவியும். நாம்ம ஊர் அரசியல்வாதிகள் திருடினால் நம் வாழ்வில் இருள் கவியும்.

அருணகிரிநாதர் கூட கண்ணனின் பெருமையைப் பாடுகிறார்:

 

சிகர குடையினி னிரைவர இசைதெரி

சதுரன் விதுரனில்  வருபவ னளையது

திருடி யடிபடு சிறியவ நெடியவன் மதுசூதன்

என்று பழனி திருப்புகழில் பாடுகிறார்.

 

சம்பந்தப் பெருமான் சிவனுக்கும் திருட்டுப் பட்டம் சூட்டினார். சிவனை உள்ளம் கவர் கள்வன் என்று மூன்று வயதிலேயே முதல் பாட்டிலேயே அடையாளம் கண்டுவிட்டார்:

 

தோடுடைய செவியன், விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் உனை நான் பணித்து ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்  அன்றே

 

மூன்று வயதிலேயே சம்ப்ந்தரின் உள்ளத்தைக் கவர்ந்ததால் ஞான சம்பந்தர் இந்து சமய வரலாற்றில் அழியாத இடம் பெற்றுவிட்டார்.

முருகனுக்கும் திருட்டுப் பட்டம் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள் தான் இப்படிச் சொல்லமுடியும்.

 

பெண் திருடி

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன், பிறவான், இறவான்,

‘சும்மா இரு சொல் அற’ என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

(கந்தர் அநுபூதி, பாடல் 12)

இறைவனின் திருவிளையாடல்கள் எண்ணிலடங்கா. எவ்வளவோ அடியார்கள் வாழ்வில் கொள்ளையர் ரூபத்தில் வந்தும் அருள் பாலித்தான். இதுபோல பல அரசர்களும் புலவர்கள் பேரில்கொண்ட அன்பின் காரணமாக அவரை மீண்டும் ஊருக்கு வரவழைக்க இப்படி வழிப்பறிக் கொள்ளை அடித்ததுண்டு.

 

எனது முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

1.தமிழில் திட்டத் தெரியுமா? வசை பாடுவது எப்படி?

2.சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

3. தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

4. டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

5. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

6.’திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்’

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

“திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்”

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -5

“திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்”

 

அருணகிரிநாதர் பாடியதில் நமக்குக் கிடைத்த திருப்புகழ் பாடல்கள் 1300க்கும் சற்று அதிகம். அவைகளில் அவரே திருப்புகழின் பெருமையைக் கூறும் இடங்கள் நவில்தொறும் நூல்நயம் பயக்கும். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. திருப்புகழைப் பழிப்பவர்க்கு விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்:

 

“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்

செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

நினைத்தது அளிக்கும் மனத்தையும் உருக்கும்

நிசிக்கரு அறுக்கும்       –பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்

நிறைப் புகழ் உரைக்கும்   –செயல் தாராய்

 

திருத்தணியில் பாடிய இன்னொரு பாட்டில்

பலகாலும் உனைத் தொழுவோர்கள்

மறவாமல் திருப்புகழ் கூறி

படி மீது துதித்துடன் வாழ        –அருள்வாயே

என்பார்.

 

திருப்புகழ் படித்தால் இடர்கள் பறந்தோடும் என்று உறுதிபடக் கூறுகிறார்:

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்

இடுக்கினை அறுத்திடும் எனவோதும்”

இதே கருத்தை வேல் வகுப்பிலும் கூறுவார்:

“ துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்

நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்

எனக்கோர் துணையாகும்

சொலர்க்கறிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்து எறிய உறுக்கி எழு

மறத்தை நிலை காணும்”

 

சந்த நடை

சந்த நடை என்ற சொல் வரும் திருச்செங்கோட்டுப் பாடலில்:

“பத்தர் கணப்ரிய நிர்த நடித்திடு

பக்ஷி நடத்திய           குகபூர்வ

பச்சிம தக்ஷிண உத்தர திக்குள

பத்தர்கள் அற்புதம்        எனவோதும்

சித்ர கவித்துவ  சத்த மிகுத்த  தி

ருப்புகழைச் சிறிது அடியேனும்”

வரும் வரிகள் படிக்கப் படிக்கச் சுவைதரும்

கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுகளில் பூர்வ தக்ஷிண உத்தர பச்சிம சதுஸ் சமுத்ராதிபதி என்று எழுதி இருக்கிறார். நான்கு திசைகளிலும் அவர் வெற்றி வாகை சூடியதை இது குறிக்கும். ஏறத்தாழ அதே காலத்தில் வாழ்ந்த அருணகிரியின் பாடல்களில் அதன் தாக்கம் தெரிகிறது.

 

 

எல்லோரும் நன்கு அறிந்த சின்ன எட்டு வரிப் பாடல்

பத்தியால் யான் உனைப் பலகாலும்

பற்றியே மா திருப்புகழ் பாடி என்று துவங்கும் பாடல்.

பெங்களூர் ரமணி அம்மாளின் இனிய குரலில் இந்தப் பாட்டைக் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.

 

வயலூர் திருப்புகழில்

“வீசா விசாலப் பொருப்பெடுத்து எறி

பேர் ஆரவாரச் சமுத்திரத்தினில்

மீளாமல் ஓடித் துரத்தியுட் குறுஒருமாவை (மா மரம்)

வேரோடு வீழத் தறித்து அடுக்கிய

போராடும் சாமர்த்திய திருக் கையில்

வேல் ஆயுதம் மெய்த் திருப்புகழ் பெறு வயலூரா”

என்றும் பாடுகிறார்.

 

 

அற்புதத் திருப்புகழ்

அவரே தன் வாயால் ‘அற்புதத் திருப்புகழ்’ என்றும் முருகன் புகழைப் பாடுவார்:

யானாக நாம அற்புதத் திருப்புகழ்’

தேனூற ஓதி எத்திசைப் புறத்தினும்

ஏடேவு ராஜ தத்தினைப் பணித்ததும் இடர் ஆழி”

 

 

யமன் வரும் போதும் முருகன் வந்து ‘அஞ்சாதே’ என்று சொல்லிக் காப்பாற்றுவானாம்:

“ படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால்

பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் ”

நாமும் திருப்புகழைப் பாடி இடர் களைந்து இன்புறுவோமாக.

(படங்கள்: முக நூல்; நன்றி.)

 

 

எனது முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

1.தமிழில் திட்டத் தெரியுமா? வசை பாடுவது எப்படி?

2.சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

3. தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

4. டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

5. அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

மாதத்துக்கு மூன்று மழை ஏன்?

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்—ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்:

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்

ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார் (பாரதி பாடல்- மறவன் பாட்டு)

பாரத நாடு முழுதும் மழை பற்றி ஒரே கருத்து நிலவுகிறது. ஒரு மாதத்தில் மூன்று தடவை மழை பொழிய வேண்டும். இக்கருத்து வேத, புராண, இதிஹாசங்களில் ஏராளமான இடங்களில் வருகிறது. தமிழ் இலக்கியத்தில் வரும் சில குறிப்புகளை மட்டும் காண்போம்.

1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பெண் (கல்லூரி மாணவி வயது—டீன் ஏஜ் கேர்ல்) இருந்தாள். அவள் பெயர் ஆண்டாள். அற்புதமாகக் கவி பாடிய அழகிய நங்கை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. வாரணம் ஆயிரம் உள்ளடக்கிய நாச்சியார் திருமொழியையும் திருப்பாவை முப்பதையும் செப்பிய பருவமங்கை. திருப்பாவையில் தெய்வீக கருத்துக்களை விட்டுவிட்டு ஆராய்ந்தால் வரலாறு, பூகோளம், தமிழ்ச் சங்கம், மழை, பாவை நோன்பு, தை நீராடல் என்று தமிழ் கலாசாரம் பற்றி நிறைய விஷயங்களை ஆண்டாள் அள்ளித்தெளித்திருப்பதைக் காணலாம்.

ஓங்கி உலகலந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

………..

என்று திருப்பாவை பாடினார்

ஆண்டாளுக்குத் தெரிந்தது இன்று நமக்குத் தெரியாமல் போய்விட்டது. மாதத்துக்கு முன்று மழை ஏன்? அதிகம் பெய்தாலும் அவலம், குறைத்துப் பெய்தாலோ வறட்சி. இதைத் திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் பத்துக் குறட் பாக்களில் பெய்துவிட்டார். கெடுப்பதும் மழை, கொடுப்பதும் மழை என்று பிட்டுப் பிட்டுவைத்து விட்டார்.

மூன்று மழை பெய்யக் காரணம் என்ன?

விவேக சிந்தாமணி இதை அழகாக விளக்குகிறது:

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!

இப்போதெல்லாம் இப்படிப் பெய்வதில்லையே, ஏன்? என்று அந்தக் கவிஞரைக் கேட்ட போது,

அரிசி விற்றுடும் அந்தணர்க்கோர் மழை

வரிசை தப்பிய மன்னருக்கோர் மழை

புருஷனைக் கொன்ற பூவையர்க்கோர் மழை

வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே! என்றார்

நல்லாட்சி, நல்ல மதம், நல்ல பெண்கள் இருந்த போது மாதத்துக்கு மூன்று மழை. கெட்ட ஆட்சி, கெட்ட பெண்கள் ( நிமிடத்துக்கு நூறு டைவர்ஸ் செய்யும் பெண்கள்) அறத்தை மறந்த அந்தணர் இருந்தால் வருடத்துக்கு மூன்று மழை என்று எளிய தமிழில் சொல்லிவிட்டார்.

வள்ளுவர் இவருக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, “தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள், பெய் எனப் பெய்யும் மழை= பத்தினிப் பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும் என்று சொல்லிவிட்டார்.(இதைப் படித்துப் படித்துப் பெண்கள் சிரிப்பது அவர் காதில் விழுகிறது. ஆகையால் காவிரி நீர் மேட்டுர் அணைக்குள் வராதபடி தடுத்துவிட்டார்!!)

தமிழ் இலக்கணப் படி “கொழுநன் தொழுது எழுவாள்” என்பதை இப்படியும் அர்த்தம் செய்ய முடியும்= கணவர் ‘பெட் காப்பி’யுடன் வந்து மனைவியை தாயே எழுந்திரு, குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும், நான் ஆபீசுக்குப் போகவேண்டும் என்று சொல்லும் காட்சி! (குறள் 55, அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்)

வறட்சி பற்றிய கருத்தும் ஒன்றே

வறட்சி பற்றியும் பாரத நாடு முழுதும் ஒரே கருத்து நிலவுகிறது. 12 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வறட்சி பற்றி ரிக் வேதம் முதல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திரு விளையாடல் புராணம் வரை எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. சூரியனில் தோன்றும் கருப்புப் புள்ளிகளுக்கும் இந்த வறட்சிக்கும் தொடர்பு உண்டு. சரஸ்வதி நதி வற்றிப் போனதால் வறட்சியால் சிந்துவெளி நகரங்கள் மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் சுடுகாடாக மாறியது இப்போதைய ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.

அந்தக் காலத்தில் அரசர்களைச் சந்த்தித்த ரிஷி முனிவர்கள் கேட்ட முதல் கேள்வி, “மன்னவனே உனது நாட்டில் மாதம் மும்மாரி ( மூன்று மழை) பொழிகிறதா?” என்ற கேள்விதான். மழை பொழியாவிடில் ரிஷி முனிவர்களை நாட்டிற்குள் அழைத்தாலேயே போதும், அவர்கள் வரும் போதே மழை பொழியும். இந்தக் கருத்தையும் ரிஷ்ய ஸ்ருங்கர் கதை முதல் முத்துசாமி தீட்சிதரின் அமிர்த வர்ஷிணி ராகப் பாடல் வரையும் காணலாம். யாக, யக்ஞங்களால் மழை பொழியும் ( காளிதாசனின் ரகு வம்சம் 1-62) போன்ற கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையைக் கட்டுப் படுத்துவது தனி மனிதனின் ஒழுக்கமே என்று இந்துக்கள் நம்பினார்கள். ஒழுக்கம் தவறத் தவற இயற்கை உத்பாதங்கள் அதிகரிக்கும் என்பது கவிஞர்களின் ஏகோபித்த கருத்து.

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக”

காலே வர்ஷது பர்ஜன்ய:, ப்ருத்வீ சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மணா சந்து நிர்பயா:

அபுத்ரா; புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண;

அதநா; சதநா; சந்து ஜீவந்து சரதாம் சதம்!

(பொருள்: காலத்தில் உரிய மழை பொழியட்டும் நெல் வளம் சிறக்கட்டும், நாடு மகிழ்ச்சியால் செழிக்கட்டும், பிராமணர்கள் ( ஒழுக்கமுடைய அறிஞர்கள் ) பயமின்றி வாழட்டும், பிள்ளைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் உடையோர் பேரன் பேத்திகளை ஈன்றெடுத்து மகிழட்டும்,வறியோர்கள் செல்வச் செழிப்படையட்டும். நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்)

காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழிலும் உண்டு

 

Picture: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள காளிதாசன் சிலை

 

மகா கவி காளிதாசன் 1250 உவமைகளையும் உருவகங்களையும் வேறு பல உத்திகளையும் கையாளுகிறான். இவைகளை சங்கத் தமிழ் புலவர்களும் பின்பற்றுவதால் அவர்களுக்கு முன் காளிதாசன் வாழ்ந்தான் என்பது என் துணிபு. குறிப்பாக மிகவும் கற்றறிந்த மக்களிடையே மட்டுமே பயன் படுத்தக்கூடிய சில உத்திகளைக் காளிதாசன் பயன்படுத்துவது போலவே தமிழ்ப் புலவர்களும் பயன்படுத்துகின்றனர்.

இலக்கணம் போன்ற விஷயங்களை உவமையாகவோ சொல் அணிகளாகவோ பயன்படுத்த வேண்டுமென்றால் அதைக் கேட்டு ரசிப்போரின் அறிவும் அதிகமாக இருக்கவேண்டும். இதைத் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் காணும் போது களிபேருவகை ஏற்படுகிறது. இந்திய மக்கள் மேதாவிலாசம், அதே கால ஏனைய நாகரீகங்களை விட மிகவும் அதிகம். வேறு எந்த பழங்கால இலக்கியத்திலும் சிலேடைகள், புதிர்கள், விடுகதைகள், பழமொழிகளை உவமைகளாகப் பயன்படுத்துவதில்லை! முன்னரே ஒரு கட்டுரையில் ‘கொம்பு சீவுதல்’ என்பதை காளிதாசன் எப்படிப் பயன்படுத்தினான் என்பதைக் கண்டோம்.

 

நான்கூறும் தமிழ் உதாரணங்கள் சங்க கால பிராமணப் புலவர்கள் கையாண்ட உத்திகள். அவர்கள் வடமொழியில் வல்லவர்கள். காளிதாசனைக் கரைத்துக் குடித்த மேதாவிகள். தமிழைக் கிண்டல் செய்த பிரமத்ததன் என்ற வட இந்திய மன்னனுக்கு கபிலர் என்ற பிராமணப் புலவர் (சம்ஸ்கிருதம் மூலம்) தமிழைக் கற்பித்து அவனைப் பாட்டும் எட்டுக்கட்டச் செய்து அதை சங்க இலக்கியத்திலும் சேர்த்து விட்டார்!

சொற்சிலம்பம் ஆடுவதில் வல்லவன் காளிதாசன். வண்டு என்பதற்கு ‘ப்ரமர’ என்று வடமொழியில் சொல்லுவார்கள். அதைக் கவிதையில் பயன் படுத்துகையில் 2 “ர” க்களை உடைய பூச்சி என்று விடுகதை போடுவான் (குமார.3-36).

 

இதோ மற்ற இடங்களும் தமிழ் ஒப்பீடுகளும்:

1.வண்டு அல்லது தேனீயை அறுகாலி (6 கால்) என்று அழைப்பது (குமார.5-9) தமிழிலும் உண்டு:- புறம் 70 ,கோவூர் கிழார்:

2. ரத அங்க நாம்னா: ரகு.3-24, 13-31: (சக்ரவாகம்): தேரின் ஒரு உறுப்பு (அங்கம்) சக்கரம். அதைப் பெயரில் உடைய பறவை ‘சக்ரவாகம்’. இதைத் தமிழில் அன்றில் பறவை என்பர்.

3. தமிழில் மதுரை. வரி 87, 88 (நெல்லின் பெயரை உடைய ஊர்=சாலியூர்): மதுரைக்காஞ்சி எழுதிய மாங்குடி மருதன் இந்த ‘ரத அங்க நாம்னா’ உத்தியைப் பின்பற்றி சாலியூர் என்பதை நெல்லின் பெயரை உடைய ஊர் என்கிறார்.

ஏன் இப்படிச் சுற்றிவளைத்துப் பேசவேண்டும்? நேராக சாலியூர் என்று சொல்லிவிடலாமே என்று வாசகர்கள் நினைக்கலாம். சில நேரங்களில் கவிதையின் எதுகை மோனைக்காகவும் ,சில நேரங்களில் தன் புலமையைக் காட்டவும் கவிஞர்கள் இந்த உத்தியைக் கடைப் பிடிப்பர். இது போல பல இடங்களில் செய்வதும் இப்படி சுற்றி வளைத்து ஒரு விஷயத்தைச் சொல்லும்போது கவிதையின் அழகு கெடாமல் காப்பதும் கவிஞனின் திறமையைக் காட்டுகிறது.

4. பெரும்பாணாற்றுப்படை வரிகள் 297-310 (இராச அன்னம்): சங்க கால பிராமணப் புலவர்களில் ஒருவர் பெயர் ருத்ராக்ஷன். இதைத் தமிழில் உருத்திரங்கண்ணன் என்று சொல்லுவர். இவர் பிராமணர் வீடுகளில் என்ன என்ன ‘வெஜிடேரியன்’ உணவு கிடைக்கும் என்பதை மிக அழகாகச் சொல்லுகிறார். கோழியும் நாயும் அசுத்தம் செய்யாத இடம் அக்ரஹாரம் என்றும் புகழ்கிறார். அப்படிச் சொல்லும்போது, விறலியரே, பாணர்களே, புலவர்களே, அதோ அந்த ஐயர் வீட்டுக்குச் சாப்பிடப் போங்கள். அந்த வீட்டு அம்மாமி, அருந்ததி போன்று கற்புடையவள். உங்களுக்கு வெண்ணெயும், மாதுளைப் பொறியலும், மிளகுபொடியோடு “ பறவைப் பெயர்  கொண்ட சோற்றையும்” பரிமாறுவாள். இதுதான் காளிதாசன் ‘டெக்னிக்’. இராச அன்னம் என்னும் அரிசி வகை= பறவைப் பெயர்  கொண்ட சோறு.

 

5.நெடு. நக்கீரர் பாடியது, வரிகள் 82, 114 (உத்தரம், கர்பக் கிரகம்):- நக்கீரர் பாடிய நெடுநல்வாடையில், ‘‘நாளொடு பெயரிய விழுமரத்து கோள் அமை நெடு நிலை’’ என்பது உத்தர நட்சத்திரத்தைக் குறிக்கும். ஆனால் புலவர் சொல்ல வருவது வீட்டின் பகுதியான உத்தரம். இன்னொரு இடத்தில் கர்ப்பக்கிரஹம் என்பதை ‘’கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்’ என்றும் கூறுவர்.

6. கலி.25:1 வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்=திருதராஷ்டிரன்: ஆதித்த/சூரிய மண்டலத்துக்கு மற்றொரு பெயர் பகன்.அவனுக்குக் கண் கிடையாது. மகாபாரத திருதராஷ்டிரனுக்கும் கண் தெரியாது. ஆக திருதராஷ்டிரன் என்று சொல்வதற்காக பாலைக் கலி பாடிய பெருங் கடுங்கோ இப்படி’ வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்’ என்கிறார். தமிழ்ப் புலவர்கள் சங்க காலத்தில் எந்த அளவுக்குப் புராண இதிஹாசங்களையும், வடமொழியையும் கரைத்துக் குடித்திருந்தனர் என்பதற்கு கலித்தொகையில் நூற்றுக் கணக்காண சான்றுகள் உள.

இதே வரிக்கு வேறு உரைகளும் உள. வயக்குறு மண்டிலம் என்பது கண்ணாடி என்றும் அது பிறர் முகத்தைக் காட்டுமேயன்றி அதனால் காணமுடியாது என்றும் ஆகவே இது தர்ப்பண (கண்ணாடி) ஆனனன் (முகத்துடையோன்) என்பதே என்பர்.

7.வாடா வஞ்சி (மாறோக்கத்து நப்பசலையார், புறம்.39): இவரும் பிராமணப் பெண் புலவர். வாடா வஞ்சி என்பது வாடிப்போகாத வஞ்சி, அதாவது, கருவூர்.

 

8.கலி. 99-1,2 -அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவர் (சுக்ரன், பிருஹஸ்பதி) : தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இரண்டு பிராமணர்கள் குருவாக இருந்தனர். அதை சுக்ரன், பிருகஸ்பதி என்று பெயர் சொல்லாமல் அந்தணர் இருவர் என்கிறார் ஒரு தமிழ்ப் புலவர்.

9. பரி.3-31 கூந்தல் என்னும் பெயர் உடைய அசுரன்= கேசாசுரன். தலைமயிர்/ கூந்தல் பெயரை உடைய அசுரன் கேசாசுரன். கேசம் என்ற வட மொழிச் சொல்லுக்கு தலை முடி என்று பொருள்.

10.திருமுறுகு.18 (நக்கீரர்): “நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழை (ஜம்பூத்வீபம்) சேன் இகழ்ந்து விளங்கும் செயிர் தீர் மேனி” இந்தியாவின் பழம்பெரும் பெயர் நாவலந்தீவு. நாவல்பழ மரங்கள் நிறைந்த பூமி. எந்த வகை மரம் செடி கொடிகள் ஓரிடத்தில் செழிப்பாக இருகிறதோ அதை வைத்து அந்த நாட்டுக்குப் பெயர் சூட்டுவது புராண மரபு. இதையே பின்பற்றி தமிழர்களும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று நிலப் பாகுபாடு செய்தனர். நக்கீரர் என்ற பிராமணப் புலவர் இதே உத்தியை தங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். பலவகை தங்கங்களில் ஒன்று சம்பூநதம் (ஜம்பூத்வீப தங்கம்)= நாவலொடு பெயரிய பொலம்புனை.

 

காளிதாசன் உலகம் புகழும் மகா கவி. அவனுடைய ரகுவம்சம் உவமைக் கருவூலம்! ரத்தினக் களஞ்சியம்! அவனுடைய உவமைகளில் முக்கால்வாசியை அதில் கொட்டிவிட்டான். எடுத்தஎடுப்பிலேயே

‘வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ’

என்று துவங்குகிறான். பொருள்: பார்வதியும் பரமசிவனும் உலகத்துகே தாய் தந்தையர். அவர்கள் சொல்லும் பொருளும் சேர்ந்திருப்பது போல இணைந்து இருப்பவர்கள். அவர்களை வணங்குகிறேன். இந்த உவமைக்கு ஈடு இணை இல்லை. இந்திய மக்களின் மொழி அறிவுக்குச் சான்று பகரும் மாபெரும் உவமை இது!

இன்னும் தொடரும்………………… (காளிதாசன்– சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவன் என்பதைக் காட்ட அவ்வரிசையில் வரும் ஏழாவது கட்டுரை இது. பழைய கட்டுரைகளையும் படித்துப் பயன்பெறுக.)

Old Posts: 1.Indra Festival in the Vedas and Tamil Epics2. Sea in Kalidasa and Tamil Literature 3. Ganges in Kalidasa and Sangam Tamil Works 4.Gem Stones in Kalidasa and Tamil Literature 5. Bird Migration in Kalidasa and Tamil Literature 6. Kalidasa’s Age: Tamil Works confirm 1st Century BC + Same Articles in Tamil

For further information contact author at   swami_48@yahoo.com

 

Hindu Vahanas in Kalidasa and Tamil Literature

Picture shows Meenakshi on Kamadhenu vahana

 

I have posted at least six articles on Kalidasa and Sangam Tamil Literature to prove that the greatest poet of India, Kalidasa, lived in the first century BC or before that. A lot of similes, metaphors, expressions in Tamil literature are echoes of Kalidasa. Now I give a lot of Vahana (Mounts of Gods) references from Tamil and Kalidasa. Sangam Tamil literature belongs to the first three centuries of our era.

Tamil poets were well versed with Hindu mythology and iconography. They had so much belief in Hinduism that they can’t avoid using Vahana references even in secular verses.

Poet Nakkirar of Puram verse 56 sings about four Hindu Gods in one verse referring to their flags or Vahanas. My research in to Vahanas shows that the origin of Vahanas lied in the symbols or flags of Gods. First we see the references of flags which are slowly turned in to Vahanas in course of centuries. I will give you some examples.

The Gayatri verse on Sanaischara (Planet Saturn) says that he has Kakadwaja (Flag with crow on it). Later we see crow as his vehicle. This shows that the myths about vahanas were later developments to cater to the popular tastes. When rational minds questioned whether an elephant god (Ganesh) can travel on a little mouse, then all philosophical explanations were given. Most of the vahanas are considered symbols of evils, which the god subdued and made them as their vehicles.

Some western scholars tried to bring Aryan Dravidian controversy even into the vahanas saying that the Dravidian gods were subdued and made vahanas for Aryan gods. But anyone who has read my previous posts of Sumerian, Greek and Babylonian vahanas would easily dismiss this western theory as absurd. Other cultures also used animals as vahanas. We didn’t have much detail about how the foreign deities got their vahanas.

Kalidasa also described Shiva as one who rides a bull or a person with a bull on his flag (Vrushapaarootan or Vrshabadwajan). Lord Vishnu also had Garutadjwaja or Garudavahana.

Tamil Poet Bharatham Padiya Peruntheanar (Mahadevan who sang Mahabharata) of Purananuru prayer song also described Shiva with Bull vehicle and with Bull flag. Needless to say that this was an echo of Kalidasa.

Kalidasa’s references:

Raghu. VI-4, Meghaduta verse 46: Lord Skanda’s peacock vahana

Mega.54, Raghu-III-23, Kumara.III-14, VII-29, II-35, III-62, VIII-20, Raghu-II-35=Bull Vehicle or Bull flag of Lord Shiva.

Raghu.III-56=Vajra flag of Indra

We have lot of references to God of Love Manmatha with Makaradwaja or Makaravahana.

Ragu. 10-13, 10-61=Garudavahana

 

Picture shows Karpaka Vrksha vahana

Tamil References:

Kalitokai-101-24, 103-43= Yama’s buffalo vahana

Lord Skanda (Murugan) had an elephant by name Pinimukam as his vehicle. This was referred to in various places:Pari.5-2, Pathirru.11-6, Pari.21-1, Murugu.78-82, Puram-56,Murugu-247,

Indra’s elephant with four tusks- Murugu155-59

Kali.150-13, Palaikali-26-5,Murugu151= Bull Vehicle

Pari. 1-11,13-41, 4-37, 3-18,8-2, Kuru.prayer song= Garudavahana

Sesha vahana of Vishnu is referred to in Perum.372

Balarama’s Palmyra flag was referred to in Tolkappiyam and Puram.58

Tamil poets also spoke about Manmatha, God of Love, and his Shark flag or Shark vahana.

 

Please read my other articles on Vahanas in my blogs:

Iraq: 7 Gods Procession on Vahanas

Deer Chariot: Rig Veda to Santa Claus

Hindu Vahanas around the World

Vahanas in Kalidasa and Tamil Literature

உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்

வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?

எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?

Who Rides What Vahanas?

Contact: swami_48@yahoo.com

வீரத் தாயும் வீர மாதாவும்

 

படம்: ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி. அலாவுதீன் கில்ஜியின் கைகள் தன்மீது பட்டுவிடக் கூடாதென்பற்காக ஆயிரம் மங்கைகளுடன் தீயில் பாய்ந்த உத்தமி (இது கி.பி.1303 ஆம் ஆண்டில் நடந்தது)

English version of this article is already posted in the blog: London Swaminathan)

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்!” என்று சும்மாவா சொன்னார் பாரதி? வீரத் தாய், வீர மாதா என்ற புகழுரையை உலகிலேயே மிகப் பழமையான ரிக்வேதத்திலும் காண முடிகிறது. அதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வந்த காளிதாசன், புறநானூற்றுப் புலவர் காவற்பெண்டு, பாரதி பாடல்களிலும் காண முடிகிறது.

புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:

புறம் 86 (காவற்பெண்டு)

சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.

உலகில் எந்த ஒரு பெண்ணும் கோழையைப் பெற விரும்புவதில்லை. ஆனால் அதைக் கவிதையில் வடித்த பெருமை இந்தியர்களுக்கே உண்டு.

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.

காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.

ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).

உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:

“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி

விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”

பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:

“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”

படம்: ஜான்சி ராணி லெட்சுமிபாய், ஆங்கிலேயரால் கொல்லப்பட்டாள்.

போரில் இறந்தால் சொர்க்கம்

தமிழ், வட மொழி நூல்களில் காணப்படும் மற்றொரு ஒற்றுமை போரில் இறப்பவர்கள் சொர்க்க லோகத்துக்குப் போவார்கள் என்பதாகும். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மேல் உலகம், துறக்கம், தேவர் உலகம் பற்றிய குறிப்புகள் ஏராளம். ஆனால் போரில் இறந்தால் சொர்க்கத்துக்கு “நேரடி டிக்கெட்” கிடைக்கும் என்ற செய்தி சில பாடல்களில் தெளிவாகவே உள்ளது (புறம்.26, 62, 93, 287, 341, 362 பதிற்றுப் பத்து 52):

வாடாப் பூவின் இமையா நாட்டத்து

நாற்ற உணவினோரும் ஆற்ற

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்து பெற்றனரால்; (புறம்.62)

அவ்வையார் தரும் ஒரு சுவையான செய்தி இதோ:

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி

மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என

வாழ் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறம்.93)

பொருள்: போரில் இறக்காமல் வேறு காரணங்களால் இறந்த மன்னர்களை வேதம் படித்த பிராமணர்கள் வந்து, தர்ப்பைப் புல்லைப் பரப்பி, மன்னரின் சடலத்தை அதன் மீது வைத்து, வாளால் வெட்டி போரில் இறந்தவர்கள் செல்லும் வீர சுவர்க்கத்துக்கு நீயும் போவாயாக என்று மந்திரம் சொல்லுவர். (இதைப் போரில் விழுப்புண் தாங்கி இறக்கும் தருவாயில் இருக்கும் அதியமானிடம் அவ்வையார் கூறி ‘நீ அதிர்ஷ்டசாலி அப்பா! உன்னை இப்படி வாளால் வெட்டி சுவர்க்கத்து அனுப்ப வேண்டாமல் நீயே உன் வீரத்தால் வீர மரணத்தைத் தழுவிக்கொண்டாய்’  என்று பொருள்படப் பாடுகிறார்.)

பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்லுவதும் இதுதான்:

குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ ஸ்வர்க்கத்தை அடைவாய்;ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு! (கீதை 2-37)

படம்: கிட்டூர் ராணி சென்னம்மா

 

ரத்த கோஷம் !!

இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் தீவிர பக்தர்கள்/ தொண்டர்கள் அந்தத் தலைவர்களுக்கு ஆதரவாக இரத்தத்தில் கோஷங்களை எழுதுவதைப் பார்க்கிறோம். இது ஆதிகால வழக்கம் என்னும் சுவையான செய்தியை காளிதாசன் நமக்குச் சொல்லுகிறான் (ரகு.7-65):

அஜன், ரகு ஆகிய சூரியகுல மன்னர்கள் எதிரிகளை வென்ற பின்னர் அவர்கள் நாட்டு வீரர்களை இரக்க உணர்ச்சி காரணமாக கொல்லாமல் விட்டு விடுவார்களாம். ஆனால் மன்னர்களின் தீவிர விசுவாசிகள் அம்புகளை எடுத்து அவைகளை ரத்தத்தில் தோய்த்து கொடிகளில் கோஷங்களை எழுதுவார்களாம்: “இப்பொழுது ரகுவின் புத்ரன் அஜனால் உங்கள் கீர்த்தி/ புகழ் கவரப்பட்டுவிட்டது; ஆனால் தயை காரணமாக உங்கள் உயிர் கவரப்படவில்லை” என்ற கோஷம் எழுதப்படும்!

காளிதாசன் இன்னும் ஒரு சுவையான தகவலையும் தருகிறான். ராவணனே நேருக்கு நேர் சண்டை போட வந்தவுடன் நாமனுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம் (ரகு 12-89). ராவணனை மஹா பராக்ரமசாலி என்று ராமன் மதிக்கிறான். ராமனைப் போன்ற வீரர்கள் பலம் குறைந்தவர்களுடனோ, கோழைகளுடனோ சண்டை போடமாட்டார்கள்.

சங்க இலக்கியப் புலவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஆறு கட்டுரைகளில் எழுதினேன். இந்தத் தலைப்பின் கீழும் இதற்குப் பல உதாரணங்கள் கிடைத்தன. வீரம் பற்றி நாடு முழுதும் ஒரே கொள்கை நிலவிய காலத்தில் இப்புலவர்கள் வாழ்ந்தனர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.

*************

Veera Matha–‘Mother of Heroes’ in the Vedas and Tamil literature

Greatest of the Hindu Heroines Rani Padmini of Chittoor. When lustful Alauddin Khilgi wanted to take her she entered fire with hundreds of women to save her honour in 1303 AD.

Veera Matha–‘Mother of Heroes’ in the Vedas and Tamil literature

Rig Veda, the oldest religious book in the world, and the 2000 year old Sangam Tamil books praise Hindu women as mother of heroes- Veera Matha. They agree on one more point. They say that those who die in the battle field will go to heaven. Bhagavad Gita and Purananuru are very clear about it. Women are blessed with Vedic mantras to give birth to heroes. Lalitha Sahasranama praises Goddess Sakthi as Veera matha. Tamil poet Bharathi goes one step further and says this country will call a woman Maladi (infertile woman) only if she doesn’t give birth to heroes. This is a novel concept.

They were all forerunners to Swami Vivekananda who thundered that Fear and Cowardice are to be shunned most. He always advocated youths to go forward by quoting the Upanishad mantra, “Uhthishta, Jagratha, Prapyavaran Nibodhatha”-Arise, Awake, Stop not till the goal is reached!

Poet Kalidasa says in Kumara sambhava (Canto VII-87):

“The bride was greeted by the Creator with the words: “Blessed one, be you the mother of a Hero” (In Sanskrit : Veeraprasavaa Bavethi).

A Tamil poet puts it beautifully in a verse in Purananuru:

What a Hero’s Mother (Veera Thay in Tamil) said:

“ You stand against the pillar

Of my hut and ask me:

Where is your son?

I don’t really know.

My womb is only a lair

For that tiger.

You can see him now

Only in the battlefields” —(Purananuru Verse 86 by Kavarpendu)

(Purananauru is part of Sangam Tamil Literature. It is an anthology of 400 poems).

There a hymn in the Rig Veda praising Veera Matha:

Rig Veda: Tenth Mandala ,Hymn 86

10-86-43

So may Prajapati bring children forth to us; may Aryaman adorn us till old age come nigh.

Not inauspicious enter thou thy husband’s house. Bring blessings to our bipeds and quadrupeds.

10-86-44

Not evil eyed, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted;

Loving the gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds

Heroes go to Heaven

Krishna in Bhagavad Gita (II-37) says:

“Either slain thou shalt go to Heaven; or victorious thou shalt enjoy the earth; therefore arise, O son of Kunti, resolved on battle.

Puram verses 26, 62, 93, 287, 341, 362;PathiRRu Pathu 52 give the same message to the heroes. There are more Tamil verses where in the poets talk about kings reaching heaven after dying. There are even special funeral ceremonies conducted by Brahmins for the kings who die elsewhere. If the kings die due to natural causes Brahmins spread the dharba grass under the king’s body and cut them into pieces by saying ‘let you go to heaven where the heroes go’. Avvaiyar describes this ceremony in a praise to Athiyaman Anji (Pura Nanuru verse 93): you escaped from this ceremony because you are a hero wounded in the battle field.

All these are echoes of Kalidasa who lived a few centuries before the Sangam poets. Kalidasa sings about wounds that happened in the battle fields throughout his works. In Raghuvamasam 14-4 he says Kausalya and Sumitra were fond of the word ‘Veeramatha’. But having seen the wounds inflicted by the Rakshasas on young Rama and Lakshmana , their mothers Kausalya and Sumithra did not want to hear that sound of Veera matha.

Pictre: Rani Lakshmibhai of Jhansi was killed by the British

Slogans on the Flags

“The kings of Surya Vamsa (solar race) Raghu and Ajan took all your name and fame, but not your lives– were written with blood on the flags with arrow heads”. That is, out of mercy, Raghu and Aja let you all run alive. The interesting message Kalidasa gives in this sloka (Raghu.7-65) is that devoted workers of politicians (Kings) wrote slogans like this 2000 years ago!

So political workers writing with their blood for their leaders is nothing new!

Ascetics bless Sakuntala Veera Prasavini Bhava (Be a mother of heroes)”.

In Sakuntala 7-28,  Sakuntala was blessed by the elders:

“ With a husband the equal of The Breaker of Dark Clouds (Indra)

With a son like his son, Jayanta, no other blessing fits you but this;

Ravana was equal to Rama

Rama was so happy to meet a great hero like Ravana in the battle field, says Kalidasa in Raghu 12-89. Heroes never favour unequal fights.

Like Tamil poets Kalidasa used words like battle wounds on the chest (not on the back), wounds or injuries due to arrow and bow in the hands in several places (Raghu III-68, II-64,  18-48, 16-84, VII-65, 12-89, 13-73, 16-1).

In the Asvameda Yagna (Horse Sacrifice), Kshatriya women(Kings’ wives) have to cut the horse into pieces.

Picture of Kittoor Rani Chennamma

தமிழ் REFERENCES:

1.பாரதி பாடல் Bharathi Poems:

“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”—பாரதி

***

2.புறம் 86 (காவற்பெண்டு)

சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

***

3.Lalitha Sahsranama லலிதா சஹஸ்ரநாமா

Praneswari pranadatri panjasatpeedarupini

Visrungala vivikthasdha veeramatha viyathprasuhu:

ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி

விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:

****************

பகுதி 5–தொல்காப்பியர் காலம் தவறு

 

Picture shows Yaalpaanan (Musician with Yaaz)

தொல்காப்பியர் பயன்படுத்திய மேலும் பல சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன். இவை சங்க இலக்கிய நூல்களைவிட பிற்கால நூல்களிலேயே அதிகம் வருகின்றன. சங்க இலக்கியச் சொல்லடைவு, தொல்காப்பியச் சொல்லடைவு, பதினெண்கீxக்கணக்கு நூல்களின் சொல்லடைவு ஆகியவற்றைக் கொண்டு ஒப்பிட்டால் நான் சொல்லுவது நன்கு விளங்கும் ஒரு சில சொற்களை வைத்து மட்டும் இப்படி முடிவு செய்யவில்லை. நூற்றுக் கணக்கான சொற்களை ஆராய்ந்தே இந்த முடிவுக்கு வந்தேன்.

முதல் நாலு பகுதிகளையும் படித்துவிட்டு இப்பகுதியைப் படிக்க வேண்டுகிறேன்.

அரில்தப (குற்றமற) : அரிஷ்ட என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இதைப் பாயிரத்திலும், நூலிலும் காணலாம்

உயிர்த்தல்: இச் சொல் தொல்.(1-33, 3-104-3, 14) தவிர, கலி.யில் (54-11) மட்டுமே வரும்.

என்பதனால்: இது தொல். (3-145-23), கலி.(39-5) மற்றும் நாலடியார், ஐந்திணை எழுபது போன்ற பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளன.

‘வை’ யில் முடியும் சொற்கள்: அனையவை, என்றவை, மறைந்தவை போன்ற சொற்கள் பிற்கால நூல்களில் மட்டுமே அதிகம் உள்ளன.

நூறாயிரம், நுனி, நுவலுக்காலை,புணருங்காலை,நீட்டம், நீட்டல் ஆகியனவும் பிற்கால வழக்கில் அதிகம்.

மை—இல் முடியும் சொற்கள்: இவ்வகைச் சொற்கள் குறளில் பரவலாக உள்ளன. புறநானூற்றில் ஓரிடத்தை தவிர தொல். (3-138-1) மற்றும் பிற்கால வழக்கில் அதிகம்.

முதலில், முடிவினது, முடிவு, முடிபு ஆகியனவும் இப்படிபட்டவை.

மானம்: இது தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளது. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

மறுதலை, விழைவு, கொற்றவை நிலை, பல்லவை, பல்முறை, பல்வகை, புரிதல், புல்லா, புல்லாது, பெருநெறி, பாங்கன், மடிமை, மடன்மா, வரைதல், கொள்ப ஆகிய சொற்களையும் காண்க.

 

குறிலும் நெடிலும்

சங்க இலக்கியத்தில் குறில் ஒலியுடன் வரும் சொற்கள் நமது காலத்தில் நெடில் ஒலியுடன் வழக்கத்தில் உள்ளன. பழங்காலத்தில் வந்தனன், வந்தனர், வந்தனள் என்றால் இப்பொழுது நாம் வந்தான், வந்தார்கள், வந்தாள் என்று நீட்டு முழங்குவோம். அதாவது ஆன், ஆர், ஆள் விகுதி பிற்காலத்தில் அதிகம். இதை தொல். இல் நிறைய காணலாம்.

விழிப்ப, பொச்சாப்பு, பெருமிதம், மூவகை இவைகளும் தொல். இல் 3 அதிகாரங்களிலும் பரவலாக உள்ளன. இது தவிர பிற்கால நூல்களில் மட்டுமே காணமுடியும்.

சிவண: இந்த ஒலி தொல்காப்பியரின் முத்திரை. சிவணல், சிவணிய, சிவணி, சிவணாது, சிவணும் போன்று 20க்கும் மேலாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் 27000 வரிகளில் மூன்று இடத்தில் மட்டுமே காணலாம். ஆக மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரு கைப்பட எழுதியவை என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

இதே போல காரணம், கருமம், வெறுப்பு, கல்வி போன்ற சொல் வழக்குகளும் குறளிலும் பிற்பட்ட நூல்களில்ம் மட்டுமே உள்ளதால் தொல்காப்பியரையும் அவர்களோடு வைத்தே காணவேண்டும்.

தொல். கூறும் ஔ, ஃ முதலியன சங்க இலக்கியத்திலும் பழைய கல்வெட்டிலும் இல்லை அல்லது குறைவு. இதுவும் அவரது காலத்தை கணக்கிட உதவும். தொடர்பு கொள்ள: swami_48@yahoo.com

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு

Picture shows the greatest of the Choza Kings: Karikalan

தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் ஆகியனவும் வடமொழி நிபுணர்களால் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொண்டு தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிட வேண்டும்.

தொல்காப்பியத்தில் வடமொழி, மறை (வேதம்), ஐயர் முதலியன இருப்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். தமிழ் நாட்டில் வேத நெறி தழைத்தோங்கி இருந்ததால்தான் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் தலைமையில் காப்பியம் அரங்கேறியது.

தொல்காப்பியர் கடவுள் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிடுகிறார். ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது)

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் தமிழின் பெருமைக்கும் பழமைக்கும் எந்த இழுக்கும் வராது. தமிழ் மொழி தொல்காப்பியருக்கு குறைந்தது 500 முதல் 1000 ஆண்டுக்கு முன்  தமிழகத்தில் பேசப்பட்டிருக்கவேண்டும். இவர் இலக்கணம் வகுத்தவர் என்பதைவிட முன்னோரின் இலக்கணத்தைத் தொகுத்தவர் என்பதே சாலப் பொருந்தும்.

தொல்காப்பியர் 38 உவம உருபுகளைத் தருகிறார். இவற்றில் 14 சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. ஆனால் வேறு 28 புதிய உவம உருபுகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் இதை வைத்தே கால இடைவெளி அதிகம் இருந்தால் தானே இப்படி நடக்கமுடியும், ஆகையால் தொல்காப்பியர் காலத்தால் முற்பட்டவர் என்று வாதாட முயல்வர். ஆனால் தொல்காப்பியர் தனக்கு முன்னால் இருந்த விதிகளை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தார் என்றே சொல்லவேண்டி இருக்கிறது. இப்படி நான் சொல்லக் காரணம், அவர் பயன்படுத்திய சொற்கள் சிலப்பதிகாரத்திலும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களிலுமே அதிகம் காணப் படுகின்றன.

நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம்.  தொல்காப்பியர் பயன்படுத்திய சொற்களை கம்ப்யூட்டரில் போட்டு பிற்காலச் சொற்களுடன் ஒப்பிட்டால் உண்மை புலப்படும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத காலத்திலேயே வையாபுரிப் பிள்ளை போன்றோர் தக்க சான்றுகளுடன் காலத்தைக் கணித்தனர். ஆனால் நான் சொல்லும் முறை எல்லா சொற் பிரயோகத்தையும் ஆராய்ந்து விகிதாசாரக் கணக்கில் புள்ளி விவரங்களைக் கொடுத்துவிடும்.

அவர் பயன்படுத்தும் குற்றம், குடிமை, குன்றும் போன்ற சில சொற்களே இதை நிரூபித்துவிடும்

தமிழ் சுடர் மணிகள் என்ற நூலில் 40 பக்கங்களுக்கு தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் திரு. வையாபுரிப்பிள்ளை அலசி ஆராய்ந்து விட்டார். அதற்கு வெள்ளைவாரனார், இலக்குவனார் போன்றோர் கொடுத்த பதிலகள் திருப்தியாக இல்லை. வ. சுப. மாணிக்கம் போன்றோர் தொல்காப்பியத்தின் புகழ் பாடுவதை நாம் ஏற்கலாம். ஆனால் காலக் கணக்கீடு என்று வரும்போது அவரை எங்கே வைப்பது என்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனபதே கட்டுரையின் நோக்கம்.

இது காறும் நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் காலத்தை உறுதி செய்கிறதோ இல்லையோ. ஆனால் மூன்று அதிகாரங்களையும் எழுதியவர் ஒருவரே அல்லது மூன்று அதிகாரங்களும் ஒரே கலத்தவையே என்பதை உறுதி செய்துவிட்டது. நேரம் கிடைக்கும்போது திரு. வையாபுரிப் பிள்ளையாரின் 40 பக்க வாதங்களைச் சுருக்கி வரைகிறேன்.

தொடர்பு கொள்ள: லண்டன் சுவாமிநாதன் swami_48@yahoo.com