
Wikipedia picture of Nammalvar
Written by London Swaminathan
Date:11 October 2017
Time uploaded in London- 11-59 am
Post No. 4291
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
இந்துக்களுக்கு வரலாறே எழுதத் தெரியாது என்று எள்ளி நகையாடுவது மேல் நாட்டு “அறிஞர்களின்” வாடிக்கை. இதைக் கிளிப்பிள்ளை போல திருப்பிச் சொல்லுவது மார்கஸீயவாந்திகளின் மற்றும் ஆங்கிலத்தில் வரலாறு படித்த சுயபுத்தி இல்லாத நம்மவர் சிலரின் வாடிக்கை. ஒத்து ஊதுவதில் சிறந்தவர்கள்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், காஷ்மீரி பிராமணன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினிதான் இந்தியாவின் முதலாவது வரலாற்று நூல் எனபர் வெள்ளையர்.
ஆனால் நம்மவர்கள் மிகத் தெளிவாக வரலாற்றை அறிந்திருக்கிறார்கள் என்பதற்கு புற நானூறும் பிருஹதாரண்ய உபநிஷத்தும், கோ கருநந்தடக்கன் போன்றோர் கல்வெட்டுகளும் சான்று; நம்மாழ்வாரும் (800 CE) ஒரு பாசுரத்தில் பாரத நாட்டை ஆண்டு போன மன்னர்களின் எண்ணிக்கை கடல் மணல் துகள்களுக்குச் சமம் என்கிறார். பல ஆயிரம் , பல ஆயிரம் மன்னர்களைக் கண்டது பாரதம்!
நினைப்பான் புகின்கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்தோர் உகன்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்குற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ
–பாடல் 3010
பொருள்:-
பல யுகங்கள் இவ்வுலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போன அரசர்கள் மிகப்பலர். நினைக்கப்பு குந்தால் கடல் மணல்திட்டிலே உள்ள நுண்மையான மணலைக் காட்டிலும் அவர்கள் பலர் ஆவர். அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாமல் அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றையும் பார்த்தோம் இல்லை. ஆதலால் பனைமரம் போன்ற பெரிய கால்களை உடைய மதயானையைக் கொன்ற கண்ணபிரானது திருவடிகளை வணங்குங்கள்.
மேல்நாட்டோர் போல குறுகிய கால எல்லை பற்றிக் கவலைப் படாதவர்கள் இந்துக்கள். அவர்கள் எல்லாம் மாபெரும் யுகக் கணக்கில்தான் (eras and eons) எதையும் பார்ப்பார்கள். சின்னக் குழந்தைகூட சூர்ய கோடி சமப்ரபா என்றும் சஹஸ்ர கோடி யுகதாரிணே நம: என்றும் தினசரி வழிபடுவர். ஆக இவர்கள் சொல்லும் கி.மு. கி.பி. எல்லாம் இந்துக்களுக்கு கொசு அல்லது — கொசுறு!!

Picture from Wikipedia
எகிப்திய, மாயன், சுமேரிய, பாபிலோனிய, சீன ,கிரேக்க வரலாறுகள் எதுவும் கி.மு 3000-ஐத் தாண்டுவதில்லை. ஆனால் கி.மு 3102ல் வாழ்ந்த வியாசர் எழுதிய மஹாபாரதமோ நூற்றுக் கணக்கான அரசர்கள் பெயர்களைச் சொல்லுகிறது. கோ கரு நந்தடக்கனின் எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கலியுகம் துவங்கி இத்தனையாவது நாள் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது என்று நாள் கணக்கில் சொல்லுகிறது! ஆக மஹாபாரதம் சொல்லும் காலக் கணக்கு சரியே என்பது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் பொறித்த கல்வெட்டில் உளது. பிருஹதாரண்யக உபநிஷத் ஐம்பதுக்கும் மேலான ஆசிரியர் பரம்பரையை அப்படியே தருகிறது. இது கி.மு 850ல் எழுதப்பட்டது என்று மேல் நாட்டு “அறிஞர்களும்’ ஒப்புக்கொள்வர். கபிலரோ புற நானூற்றின் 201 ஆவது பாடலில் இருங்கோவேள் என்ற குறு நில மன்னனின் 49 தலை முறை பற்றிப் பேசுகிறார்.
அவ்வையாரோ புற நானூற்றுப் பாடலில் அதியமானின் முன்னோர்கள் கரும்பு கொண்டுவந்த வரலாற்றைப் (இக்ஷ்வாகு வம்சம்) பற்றிப் பாடுகிறார். ஒரு சதுர் யுகத்தில் பிரம்மாவின் ஆயுட்காலமே முடிந்து வேறு ஒரு பிரம்மா வருவார்; இது போல பல பிரம்மாக்களைக் கண்டது இந்து மதம். ஆகையால்தான் புற நானூற்றுப் புலவர்களும் நம்மாழ்வாரும் மன்னர்களின் எண்ணீக்கயை மணல்துகளுக்கு ஒப்பிடுகின்றனர்.
இதோ புறநானூற்றுப் பாடல்:
சேற்றுவளர் தாமரை பயந்த, ஒண்கேழ்
நூற்றிதழ் அலரின் நி ரை கண்டன்ன
வேற்றுமை இல்லாத விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந்தோரை எண்ணுங்காலை
–புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்
இந்த உலகத்தில் ஆண்ட மன்னர்கள் தாமரைக் குளத்தில் மாரும் தாமரை போன்ற எண்ணிக்கை உடையவர்கள்….
இதோ இன்னும் ஒரு பாடல்:-
இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே
–புற நானூறு 363, ஐயாதிச் சிறுவெண் தேரையார்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர் பாடிய பாடல் இது
கரிய கடலால் சூழப்பட்ட இப்பெரிய இடத்தையுடைய மண்ணுலகத்தை– வேல மரத்தின் அளவு இடமும் மற்றவர்க்கு விடாதபடி— தாமே ஆண்ட மன்னர்களின் எண்ணிக்கை கடல் அலைகள் ஒதுக்கும் மணலை விடப் பலர் ஆகும்.
அவர் காலத்தில் இருந்த மன்னர்கள் எண்ணிக்கையே அவ்வளவு!
புராணங்களும் ஒரு வம்சத்தில் மட்டும் 140 தலை முறைகளுக்கு மேலாக பட்டியல் இட்டுள்ளது. இது போல நாடு முழுதும் பல வம்சங்கள். ஆக இவ்வளவு பெயர்களும் ஒரு தூசுக்குச் சமானம் என்பதால் இந்துக்கள் அதைத் தனித் தனியாக எழுதி இருந்தாலும் அவை இன்று அர்த்தமில்லாத வெறும் குப்பையே.
கிரேக்க ஆசிரியர்கள் இந்திய வரலாறு அலக்சண்டருக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடையது என்று எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
–Subham–












































