
உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?
முதல் முதலில் ஒரு விண்கலத்தில் இந்தப் பூமியை வலம் வந்தவர் யார்? என்று கேட்டால் பலரும் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் என்றே சொல்லுவார்கள். கலைக் களஞ்சியங்களும் அப்படியே சொல்லும். அது சரியல்ல. த்ரிலோக சஞ்சரியான நாரதர் கிரஹங்களுக்கிடையே பயணம் செய்ய வல்லவர். ஆயினும் பூமியை வலம் வந்ததாக தெளிவான குறிப்புகள் இல்லை. ஆனால் முருகப் பெருமான பூமியை வலம் வந்த குறிப்பை அருணகிரிநாதர் எழுதிய திருவகுப்பில் தெளிவாகக் காணலாம். அவர் ஒரு நொடிப் பொழுதில் உலகை வலம் வந்ததை அருமையாகப் பாடி இருக்கிறார். இதை கற்பனை என்று யாராவது கருதுவார்களானால் குறைந்தது இந்தக் கொள்கையை முதலில் சொன்ன பெருமையையாவது அவருக்குக் கொடுக்க வேண்டும்.
அருணகிரிநாதர் 500 அண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்போது உலகம் உருண்டை என்பது கூட மேலை நாட்டினருக்குத் தெரியாது. நாமோ வட மொழியிலும் தமிழிலும் பூகோளம் முதலிய சொற்கள் மூலம் துவக்க காலத்திலிருந்தே இதை உருண்டையானது என்று சொல்லிவருகிறோம்.

இதோ திருவகுப்பு பாடல்:
“ ஆகமம் விளைத்து அகில லோகமும் நொடிப்பொழுதில்
ஆசையொடு சுற்றும் அதிவேகக் காரனும்
இலகு கனி கடலை பயறொடியல் பொரி அமுது செயும்
இலகு வெகுகட விகட தட பார மேருவுடன்
இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற
எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்” (திருவகுப்பு)
ஒரே நொடியில் உலகம் முழுதையும் சுற்றி வந்தார் முருகன். 1961 ஆம் ஆண்டில் ககாரின் ஒரு முறை பூமியை வலம் வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று!!

Picture of Yuri Gagarin on Stamps
இசைகேட்கும் ‘ஐ பாட்’ கருவியும் சிவபெருமானும்
ஐபாட் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எல்லோரும் காதுகளில் இயர்போனை (ear phone) வைத்துக் கொண்டு இசை கேட்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அந்தக் காலத்தில் விமானத்தை ஓட்டும் பைலட்டுகள் இசைத்துறை இயக்குனர்கள் அல்லது டெலிபோன் துறையினர் பெரிய இயர் போன்களை காதுகளில் வைத்திருப்பதை பழைய திரைப்படங்களில் பார்த்தோம். இன்றோ இசைக் கருவி காதில் சொருகாத இளஞர்களே இல்லை.


சோனி நிறுவனத்தார் (Sony’s Walkman) வாக்மேன் கண்டுபிடித்த பின்னர் இப்படி எல்லோரும் இசைகருவியும் இயர் போனும் வாங்கினர். பின்னர் எம் பி 3 கருவிகள் ஐ-பாடுகள் வந்தன. உண்மையில் இந்தக் காதில் இசை கேட்கும் வழக்கத்தை உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவர் சிவபெருமான் தான். சம்பந்தர் தேவாரத்தின் முதல் பாடலான ‘தோடுடைய செவியன்’ பாடல் உரையில் இச் செய்தி உள்ளது.
கிருபானந்தவாரியார் ஒரு கதையை அடிக்கடி சொல்லுவார்.: அஸ்வதரன், கம்பதரன் என்ற இரண்டு கந்தர்வர்கள் மிக அழகாகப் பாடுவர். ஆனால் அவர்களுக்கு ரசிகர்களே இல்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்து சிவ பெருமானை நோக்கி தவம் செய்தனர். சிவனோ வீணை வாசிப்பதிலும் சாம கானம் கேட்பதிலும் அதி சமர்த்தர். ஆகவே கந்தர்வர்கள் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க அவர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் எங்கள் இசையை நீங்கள் கேட்க வேண்டும் என்றனர். சிவன் அதற்கு இசைந்தார். ஆனால் நடை முறையில் இவர்களோடு எப்போதும் இருக்க முடியாதே!
சிவனுக்கு ஒரு யோசனை உதித்தது. உங்கள் இருவரையும் தோடுகளாகச் செய்து காதில் அணிந்து கொள்கிறேன். பாடிக்கொண்டே இருங்கள் என்றார். அவர்களுக்கு எல்லை இலா மகிழ்ச்சி. இப்போதும் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த எம் பி-3 பிளேயரையும் விட அதிக பேட்டரி அந்த தோடுகளில் இருக்கிறது. ஆண்டு முழுதும் சிவன் பாட்டுக் கேட்கிறார். இந்த ‘ஐடியா’தான் வாக் மேனாகவும் ஐ பாடாகவும் பிற்காலத்தில் பரிணமித்தது என்றால் பிழை ஏதும் இல்லையே!
உலக வலம் பேடண்ட் உரிமையும் எம்பி 3 இசைக் கருவி, இயர் போன் (காது ஒலிக் கருவி) பேடண்ட் உரிமையும் கந்தனுக்கும் அவன் தந்தை முக் கண்ணனுக்குமே உரித்தானவை.
வாழ்க கந்தன்! வாழ்க சிவன்!
முந்தைய கட்டுரைகளில் லேசர் ஆயுதம் கண்டு பிடித்த பெருமையும் ஸ்டார் வார் ஆயுதங்கள் கண்டு பிடித்த பெருமையும் சிவனுக்கே உரித்தானவை என்று நிலை நாட்டி இருக்கிறேன். பறக்கும் செம்பு, வெள்ளி தங்கம் கோட்டைகளை நெற்றிக் கண்ணில் உள்ள லேசர் ஆயுதம் மூலம் தகர்த்தவர் சிவன்.. இதே போல பூமராங் ஐடியாவும் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தில் இருந்தே வந்தது என்பதையும் நிலை நாட்டி இருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரைகளில் முழு விவரமும் காண்க.
Contact swami_48@yahoo.com














“From ant to elephant” is an expression found in Hindu scriptures.













Picture of Star War Plan
You must be logged in to post a comment.