பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு

Picture shows the greatest of the Choza Kings: Karikalan

தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் ஆகியனவும் வடமொழி நிபுணர்களால் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொண்டு தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிட வேண்டும்.

தொல்காப்பியத்தில் வடமொழி, மறை (வேதம்), ஐயர் முதலியன இருப்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். தமிழ் நாட்டில் வேத நெறி தழைத்தோங்கி இருந்ததால்தான் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான் தலைமையில் காப்பியம் அரங்கேறியது.

தொல்காப்பியர் கடவுள் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிடுகிறார். ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது)

தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் தமிழின் பெருமைக்கும் பழமைக்கும் எந்த இழுக்கும் வராது. தமிழ் மொழி தொல்காப்பியருக்கு குறைந்தது 500 முதல் 1000 ஆண்டுக்கு முன்  தமிழகத்தில் பேசப்பட்டிருக்கவேண்டும். இவர் இலக்கணம் வகுத்தவர் என்பதைவிட முன்னோரின் இலக்கணத்தைத் தொகுத்தவர் என்பதே சாலப் பொருந்தும்.

தொல்காப்பியர் 38 உவம உருபுகளைத் தருகிறார். இவற்றில் 14 சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. ஆனால் வேறு 28 புதிய உவம உருபுகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் இதை வைத்தே கால இடைவெளி அதிகம் இருந்தால் தானே இப்படி நடக்கமுடியும், ஆகையால் தொல்காப்பியர் காலத்தால் முற்பட்டவர் என்று வாதாட முயல்வர். ஆனால் தொல்காப்பியர் தனக்கு முன்னால் இருந்த விதிகளை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தார் என்றே சொல்லவேண்டி இருக்கிறது. இப்படி நான் சொல்லக் காரணம், அவர் பயன்படுத்திய சொற்கள் சிலப்பதிகாரத்திலும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களிலுமே அதிகம் காணப் படுகின்றன.

நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம்.  தொல்காப்பியர் பயன்படுத்திய சொற்களை கம்ப்யூட்டரில் போட்டு பிற்காலச் சொற்களுடன் ஒப்பிட்டால் உண்மை புலப்படும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத காலத்திலேயே வையாபுரிப் பிள்ளை போன்றோர் தக்க சான்றுகளுடன் காலத்தைக் கணித்தனர். ஆனால் நான் சொல்லும் முறை எல்லா சொற் பிரயோகத்தையும் ஆராய்ந்து விகிதாசாரக் கணக்கில் புள்ளி விவரங்களைக் கொடுத்துவிடும்.

அவர் பயன்படுத்தும் குற்றம், குடிமை, குன்றும் போன்ற சில சொற்களே இதை நிரூபித்துவிடும்

தமிழ் சுடர் மணிகள் என்ற நூலில் 40 பக்கங்களுக்கு தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் திரு. வையாபுரிப்பிள்ளை அலசி ஆராய்ந்து விட்டார். அதற்கு வெள்ளைவாரனார், இலக்குவனார் போன்றோர் கொடுத்த பதிலகள் திருப்தியாக இல்லை. வ. சுப. மாணிக்கம் போன்றோர் தொல்காப்பியத்தின் புகழ் பாடுவதை நாம் ஏற்கலாம். ஆனால் காலக் கணக்கீடு என்று வரும்போது அவரை எங்கே வைப்பது என்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனபதே கட்டுரையின் நோக்கம்.

இது காறும் நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் காலத்தை உறுதி செய்கிறதோ இல்லையோ. ஆனால் மூன்று அதிகாரங்களையும் எழுதியவர் ஒருவரே அல்லது மூன்று அதிகாரங்களும் ஒரே கலத்தவையே என்பதை உறுதி செய்துவிட்டது. நேரம் கிடைக்கும்போது திரு. வையாபுரிப் பிள்ளையாரின் 40 பக்க வாதங்களைச் சுருக்கி வரைகிறேன்.

தொடர்பு கொள்ள: லண்டன் சுவாமிநாதன் swami_48@yahoo.com