சிதையும், சிந்தையும்; சுவையான பாடல் (Post No.2828)
Article written by London swaminathan
Date: 21 May 2016
Post No. 2828
Time uploaded in London :– 7-34 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நம் எல்லோருக்கும் தெரிந்த சொற்கள் சிதை, சிந்தை; இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள்; இவைகளை வைத்து ஒரு கவிஞன் அழகான பாடல் யாத்துள்ளான்.
சிதைத் தீ, ஒருவர் இறந்த பின்னர் வெறும் உடலை மட்டும்தான் எரிக்கும்; சிந்தனையில் சோகமிருந்தால் அது நீங்கள் உயிருடன் இருக்கும்போதே உங்களை எரித்துக் கொன்றுவிடும்!
சிதா சிந்தா சமாக்ஞேயா சிந்தா வை பிந்துநாதிகா
சிதா தஹதி நிர்ஜீவம், சிந்தா தஹதி சஜீவகம்
பொருள்:–
சிதை, சிந்தனை பற்றி அறிந்துகொள்ளுங்கள்; இரண்டும் அழிக்கக்கூடியதே. ஆனால் சிதைத் தீயைவிட, சிந்தனை ஒரு சொட்டு (கொஞ்சம்) அதிகம்தான். ஏனெனில் சிதைத் தீ, செத்த பிறகு நம்மை எரிக்கும்; சிந்தனையோ/ கவலையோ உயிருள்ளபோதே நம்மை அழிக்கும்!
கொன்றழிக்கும் கவலை: பாரதி
இப்போது இதை பாரதி பாடலுடன் ஒப்பிடுவோம்:–
சென்றது இனி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்
தீமை எல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா.
இதற்குப் பொருள் எழுதத் தேவையே இல்லை; தூய தமிழ்; எளிய தமிழ்; போனதைப் பற்றி கவலைப் படாதே; ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறந்த்து போல எண்ணி அனுபவி (பழைய கஷ்டங்களை எண்ணி கவலைப் படாதே; பயப்படாதே)
கவலை – ஒரு பகைவன்!
மொய்க்கும் கவலைப் பகை போக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கி
பொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண் முன்னே
மொய்க்கும் கிருதயுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதியிஃதே.
பாரதி பாடல் முழுதும், வேதங்களைப் போல பாஸிட்டிவ்/ ஆக்கபூர்வ எண்ணங்களே இருக்கும்.
கவலையை ஒழித்து, உள்ளத்தையும் உடலையும் எஃகு போல வலிமைப் படுத்தி, கிருத யுகத்தையே உண்டாக்குவேன் என்று சொல்கிறான் பாரதி. அவன் உடல் எரிக்கப்பட்டுவிட்டது; ஆனால் அவனது சொற்கள் நமக்கு ஒளியூட்டுகின்றன.
சங்கடம் வந்தால்
ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தியென்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு
ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தண்ணருளென்றே மனது தேறு.
கவலையைக் கொல்; அப்படியும் சங்கடம் நீடித்தால், ஏதோ ஒரு நன்மைக்காகத்தான் இதுவும் என்று உணருங்கள் என்கிறான்.
சஞ்சலக் குரங்குகள்
கவலை, யோஜனை, பயம் ஆகியன குரங்குகள் போல ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தாவித்தாவி நம்மை கலக்கும் என்பதால்,கலைமகளை வேண்டுதல் என்ற பாடலில் ‘சஞ்சலக் குரங்குகள்’ (மனம் ஒரு குரங்கு) என்ற அருமையான பதப் பிரயோகம் செய்கிறான். அவன் ஒரு சொல் தச்சன்!
கவலையைக் கொல்லுவோம்; எல்லா நலன்களையும் வெல்லுவோம்; அனைவருக்கும் இதைச் சொல்லுவோம்!
–சுபம்–
You must be logged in to post a comment.