ஞான சம்பந்தர் சிலை
பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!
Research Article Written by London swaminathan
Date: 4 November 2015
Post No:2299
Time uploaded in London :– 9-32 AM
(Thanks for the pictures)
ஞான சம்பந்தர் 16 வயதில் இறைவனடி சேர்ந்தார். அதற்குள் அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்து சைவ வரலாற்றில் அழியா இடம் பெற்றார். அவர் செய்த அற்புதங்களில் ஒன்று ஆண் பனை மரத்தைக் காய்க்க வைத்ததாகும். அதாவது ஆண்மரத்தின் ‘செக்ஸை’ மாற்றியதாகும்! இன்று காலையில் லண்டனிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் இதே போன்ற ஒரு அதிசயச் செய்தியை வெளியிட்டுள்ளன.
படம்:– யூ மரம்
பெர்த்ஷைர் வட்டத்தில் போர்டிங்கல் கிராமத்தில் ஒரு சர்ச்சில் ஒரு யூ மரம் இருக்கிறது. அது ஆண் மரம்; அது திடீரெனப் பழுக்கத் தொடங்கியது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகர தாவரவியல் வல்லுநர்கள், அந்த மரத்தில் காய்த்த பழங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துச் சென்றனர்
5000 ஆண்டுகளாக உயிரோடு வளர்ந்து வரும் புகழ் பெற்ற யூ மரம் ஆண் மரம் என்பது தாவரவியல் அறிஞர்கள் அறிந்த விஷயமே. இவ்வாண்டு அதில் பழங்கள் தோன்றின. அதாவது ஆண் மரம், பெண் மரமாக மாறிவிட்டது! இது எப்படி என்பது தாவரவியல் அறிஞர்களுக்குப் புலப்படவில்லை. மிகவும் கீழ்நிலையிலுள்ள சில உயிரினங்களில் ஆண்—பெண் மாற்றம் ஏற்படுவதுண்டு. 5000 வயதுடைய மரம் இப்படி ‘செக்ஸ்’ மாற்றம் அடைந்தது அதிசயத்திலும் அதிசயமே என்று தாவரவியல் அறிஞர்கள் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுத்துள்ளனர்.
ஞான சம்பந்தர் செய்த அற்புதத்தை சந்தேகித்தவர்களுக்கு இப்பொழுது பித்தம் தெளிந்துவிடும்.
சம்பந்தர் செய்த அற்புதம்!
சம்பந்தர் ஊர் ஊராக ஆலய தரிசனம் செய்துகொண்டு போகையில் திருவோத்தூர் கோவிலுக்கும் போனார். அங்கே ஒரு சிவனடியார் வருத்ததுடன் இருக்கக்கண்டார். காரணத்தை வினவிய போது அந்த பக்தர் சொன்னார்:–
“நான் நிறைய பனை மரங்களை வளர்த்தேன். அதன் காய்களை விற்று வரும் வருவாயில் கோவில் பணிகளைச் செய்யப் போவதாக எல்லோரிடமும் சொல்லி வந்தேன். ஆனால் எல்லாப் பனை மரங்களும் ஆண் மரங்களாக இருப்பதால் காயே காய்க்கவில்லை. இந்த ஊரிலுள்ள நாத்தீகர்கள் என்னை எள்ளி நகையாடி வருகின்றனர். உன்னுடைய சிவனிடம் போய்க்கேள்; எல்லாவற்றையும் பெண் மரங்களாக்கி காய்க வைத்துவிடுவார் – என்று கிண்டல் செய்கின்றனர்” என்று சொல்லி அழுதார். உடனே சம்பந்தர் பத்து பாடல்கள் அடங்கிய ஒரு பதிகத்தைப் பாடினார். அடுத கணமே பனை மரம் காய்த்துக் குலுங்கியது!!
இப்படி ஆண் மரங்கள், பெண் மரங்களாக மாற முடியுமா? என்பதற்கு இப்பொழுது மேற்கூறிய யூ மரச் செய்தி பதில் கொடுத்துவிட்டது. ஒரே வித்தியாசம். சம்பந்தர் அதை நொடிப் பொழுதில் செய்தார். பிரிட்டனில் அது சில ஆயிரம் ஆண்டுகளில் நடந்துள்ளது.
தமிழ் முனிவர்கள் காலத்தை வென்றவர்கள்; காலம் கடந்தவர்கள்; த்ரி கால ஞானிகள். அவர்கள் நினைத்தால் காலத்தை மாற்றவும் முடியும், நிறுத்தவும் முடியும்; காலத்தைக் கடந்து வெளியே நின்று முக்காலத்தையும் காணவும் முடியும். இவைகளை சுந்தரர், அப்பர், சம்பந்தர் செய்த அற்புதங்களில் காணலாம்.
முன்னரே, இரண்டு தமிழ் முனிவர்களின் காலப் பயணம் குறித்துக் கட்டுரை எழுதி இருக்கிறேன். பின்னால் நடக்கப் போவதை முன்னரே கூறிய சம்பவங்களையும் கொடுத்து இருக்கிறேன். பகவத் கீதையில் கிருஷ்ணன் காட்டும் விஸ்வரூப தரிசனம், இப்பொழுது விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் கருந்துளை ( BLACK HOLE பிளாக் ஹோல்) போன்றதாகும். கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி முடிவில் விஸ்வரூப தரிசனம் என்ன என்பது நமக்கு மேலும் தெள்ளிதின் விளங்கும்!!!
-சுபம்-
You must be logged in to post a comment.