சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர், பெரியோர் எல்லாம்……….. (Post No.3911)

Written by London Swaminathan

 

Date: 15 May 2017

 

Time uploaded in London: 20-03

 

Post No. 3911

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வெற்றி வேற்கை என்றும் நறுந்தொகை என்றும் அழைக்கப்படும் –கொற்கை வாழ் பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் யாத்த–  நூல் நம் எல்லோருக்கும் அறிமுகமானதே.

 

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்

கல்விக்கழகு கசடு அற மொழிதல்

…………………………………………………………………..

என்று தொடரும் செய்யுளில்

 

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

உற்றோர் எல்லாம் உறவினர்அல்லர்

நீண்டுகொண்டே போகும்.

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர் — என்ற ஒரு வரியை மட்டும் ஆராய்வோம். ஏனெனில் இதை கம்பன், வள்ளுவன் போன்ற பல புலவர்கள் கையாளுகின்றனர்.

 

பாமர மக்களும்கூட

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே

–என்று பலவகையாகச் சொல்லுவர்.

 

இது எல்லாம் பெரும்பாலும் திருமாலின் வாமனாவதாரத்தை அடிப்படையாக வைத்தெழுந்த பழமொழிகள் போலும்.

 

வாமனனாக (குள்ளனாக) வந்து மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையே பாதாள உலகத்துக்கு அனுப்பினான் ஓங்கி உலகலந்த ‘உத்தமன்’

 

.சுருக்கமாக, இதன் மூலம் சொல்லவரும் செய்தி:

உருவத்தை வைத்து ஆளை எடை போடாதே.

 

வாமனாவதாரம் (த்ரிவிக்ரமாவதாரம்) திருக்குறளிலும் (610), ரிக் வேதத்திலும் (1-22-7; 1-155-4) கூட இருக்கிறது.

பெருமாளுக்கு வெட்கம் – கம்பன் வியப்பு

கம்ப ராமாயணம், சுந்தர காண்டம், உருக்காட்டு படலத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் அனுமனின் உருவத்தைக் கண்டு விஷ்ணுவே வெட்கம் அடைந்தார் என்கிறான் கம்பன்.

 

ஏண் இலது ஒருகுரங்கு ஈது என்று எண்ணலா

ஆணியை அனுமனை அமைய நோக்குவான்

சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்றுஎனா

நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன்

 

பொருள்:-

திரிவிக்ரம அவதாரத்தால் எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்த திருமால், ‘வலிமையற்ற சாதாரண குரங்கு இது’ என்று அலட்சியம் செய்ய முடியாத அச்சாணி போல உள்ளவனாகிய அனுமனைக் கண்டு, மிக உயர்ந்த பெருமை ஒரே இடத்தில் இருப்பது அன்று என்று எண்ணி நாணமடைந்தான்.

 

இலங்கையில் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்ட சீதையிடம் அனுமன் தன் தோளிலேயே சுமந்து சென்று ராம பிரானிடம் ஒப்படைக்கிறேன் என்று சொன்னான். சின்னக் குரங்கு போல உள்ள அனுமனால் அதைச் சாதிக்க முடியுமா என்று சீதை சந்தேகப்பட்ட போது அனுமன் விஸ்வரூபம் எடுத்து ஓங்கி வளர்ந்து சீதைக்கு முன் நின்றான். அதைப் பார்த்து, அனுமனுக்கும் முன்னால் இப்படி வளர்ந்து விஸ்வரூப தரிசனம் எடுத்த திருமாலுக்கு வெட்கம் வந்து விட்டதாம்

அடடா! ஓங்கி வளர்வதில் எனக்கு நிகரில்லை; அந்தப் பெருமை முழுதும் என்னுடைத்தே என்று எண்ணினேனே; மிக உயர்ந்த பெருமைக்கு ‘பேடன்ட்’ (Patent) வாங்கி விட்டதாக நினைத்தேனே. இப்பொழுது இந்தச் சின்னக் குரங்கு அரிய பெரிய செயலைச் செய்ததால் சிறியோர் எல்லாம் சிறியோர் அல்ல என்று புரிகிறது என்று சொல்லி திருமாலே வெட்கப்பட்டாராம்.

 

என்னே கம்பன் காட்டும் அற்புத சித்திரம்!

–சுபம்—-

Leave a comment

Leave a comment