கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 4 (Post No.4324)

Written by S.NAGARAJAN

 

 

Date:22 October 2017

 

Time uploaded in London- 6–17 am

 

 

Post No. 4324

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அறிவியல் துளிகள் (ஏழாம் ஆண்டு 35வது கட்டுரை) தொடரில் பாக்யா 20-10-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 4

 

 ச.நாகராஜன்

 

“கோஹினூர் வைரம் ஒரு போதும் விற்கப்படவும் இல்லை; வாங்கப்படவும் இல்லை; ஆனால் அது எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு வைரம் – சாபி கோஷ்ரே  

 

 

     இங்கிலாந்து சென்ற துலிப் சஃபால்க் என்னுமிடத்தில் இருந்த எல்வெல்டன் ஹால் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார்.

 

அவருக்கு கார்டியனாக நியமிக்கப்பட் டாக்டர் ஜான் லோகின் என்ற சர்ஜன் தான் அவரை லண்னுக்கு அழைத்துச் சென்றார்.

முழு ஆங்கிலேயர் ஆகி விட்ட துலிப் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.

 

1864ஆம் ஆண்டு துலிப் ஜெர்மன் மிஷனரி ஒருவரின் மகளான வயதான பெண்மணியான பம்பா முல்லரை மணந்து கொண்டார். அவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன.

கோஹினூர் வைரமோ 1849 மே மாதத்தில் பத்திரமாக ஒரு லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது.

 

 

துலிப்பிற்கு அரண்மனைச் செலவு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. கடனுக்கு மேல் கடன். வங்கிகள் துலிப்பிற்கு எச்சரிக்கை நோட்டீஸ்களை அனுப்பிக் கொண்டே இருந்தன. அவற்றை எல்லாம் அப்படியே துலிப் விடோரியா மஹாராணியாருக்கு அனுப்பி வைத்தார்.

 

எல்லாம் ராணி பார்த்துக் கொள்ள மாட்டாரா என்ன!

ஆனால் ராணி ஒரு பக்கம் இருக்க வங்கிகள் இன்னொரு பக்கம் இருந்தன. கடன் எல்லை மீறிப் போனதால் எல்வெல்டன் அரண்மனையை விற்க வேண்டி இருந்தது.

இந்தச் சமயம் தான் துலிப்பிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.

பரம்பரை பரம்பரையாக வந்த ராஜ ரத்தம் சிந்தனையைத் தூண்டியது.

 

 

தான் வஞ்சிக்கப்பட்டதை நன்கு உணர்ந்தார் துலிப்.

தனக்கு திட்டமிடப்பட்டு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ராணியாருக்குக் கடிதம் எழுதினார். பலனில்லை.

பிறகு ஜெர்மனியில் இருந்த பிஸ்மார்க். ரஷிய ஜார் மன்னர், ஐரிஷ் விடுதலை வீரர்கள் ஆகியோரின் உதவியை நாடினார்.

பிரிட்டிஷாரை எதிர்க்க ஆரம்பித்தார்.

 

1886இல் பஞ்சாபில் நடந்த மதமாற்ற சடங்கு ஒன்றில் மீண்டும் தாய் மதம் திரும்பினார் துலிப்.

 

1887இல் மனைவி பம்பா இறக்கவே இருபது வ்யதே ஆன இளவயது மங்கையான அடாவெதரில் என்பவரை மணந்தார். அவர் மூலம் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

ராணி ஜிண்டானோ 1861இல் மகனைச் சந்தித்து அவரைப் பிரியவே மாட்டேன் என்று கூறி லண்டன் சென்றார். 1863இல் அவர் மறைந்தார்.

 

1893ஆம் ஆண்டு பாரிஸில் இறந்தார் துலிப்.

பஞ்சாபின் தீர மிக்க ரஞ்சித் சிங்கின் பரம்பரையின் கதை இப்படி முடிந்தது.

 

ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூரை விக்டோரியா மஹாராணியாருக்குத் தர விழைந்தது. அவரோ அதைப் பெற்று மனம் மிக மகிழ்ந்தார். அது அவ்ரது மேலடை அணிகலன்களில் ஒன்றாகச் (Brooch) சேர்ந்தது.

 

பின்னர் அதை ராஜ கிரீடத்தில் நடுவில் பதித்தார்.

விக்டோரியா மஹாராணியாரின் கணவரான பிரின்ஸ் ஆல்பர்ட் கோஹினூர் வைரத்தை மீண்டும் அறுத்து பாலிஷ் செய்தார். இப்போது வைரத்திலிருந்து அதிக பிரகாசமான ஒளி பிரதிபலித்து அனைவரையும் மயக்கியது

 

விக்டோரியாவின் மூத்த புதல்வரான ஏழாம் எட்வர்ட் மன்னரின் ராணியான க்வீன் அலெக்ஸாண்ட்ரியாவின் மகுடத்தில் அது பிரகாசித்தது. பின்னர் விக்டோரியாவின் பேரரான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியான க்வீன் மேரியின் மகுடத்தில் 1937இல் அது ஒளி வீசியது. க்வீன் மேரி தான் இரண்டாம் எலிஸபத்தின் தாயார்.

2002ஆம் ஆணு க்வீன் மதர் இறக்கவே அந்த இறுதிச் சடங்கில் சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் வைக்கப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தனர். கோஹினூரை அனைவரும் கடைசியாகப் பார்த்த தருணம் அது தான்!.

 

1947இல் இந்தியா சுதந்திரம் அடையவே நமது நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவற்றின் பட்டியலைப் பற்றி நமது நாட்டு மக்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

 

எப்படியேனும் கோஹினூரை இந்தியாவிற்கு மீட்பது குறித்துப் பலரும் ஆலோசித்தனர்.

 

இந்தியாவிலிருந்து திருடப்பட்ட புத்தூர் நடராஜரை மீட்க உதவி செய்த பாஸ்கர் கோர்ப்படே என்பவர் இதில் தீவிரமான முயற்சியை எடுத்தார்.

இப்போது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் தாலிபான் ஆகியவையும் கோஹினூரின் மீது உரிமை கொண்டாடுகின்றன.

ஆனால் அனைவருக்கும் இது இந்தியாவின் சொத்து என்பது நன்றாகவே தெரியும்.

 

 

2010இல் இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரான் கோஹினூர் இங்கிலாந்தில் தான் இருக்கும். ஒருவருக்குத் திருப்பிக் கொடுக்க இசைந்தால் பிரிட்டிஷ் மியூசியமே காலி ஆகி விடும் என்று கூறினார்.

இருப்பினும் நீதி மன்றத்தில் வாத பிரதிவாதங்கள் அவ்வப்பொழுது நடந்து கொண்டே இருக்கின்றன.

 

 

இந்திய அரசு உறுதியான நிலைப்பாடு எடுத்து பிரிட்டனுடன் பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே ஒளி மலை நமக்கு மீண்டு வரும்!

 

வரலாற்று ரீதியாக கோஹினூரை ஆராய்ந்து ஆனந்த் மற்றும் டால்ரிம்பிள் ஆகியோர் எழுதிய “கோஹினூர்: தி ஹிஸ்டர் ஆபஃப் தி வோர்ல்ட் மோஸ்ட் இன்ஃபேமஸ் டயமண்ட் (Koh-i-noor: The History of the World’s Most Infamous Diamond by Anand and Dalrymple) என்ற நூல் இப்போது விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

 

இந்த நூல் கோஹினூர் வைரத்தின் சரித்திரத்தை முழுமையாகத் தந்துள்ளது என்று கூறும் பெண்மணியான நூலாசிரியை ஆனந்த், அது இந்தியாவிற்கு வந்தே தீர வேண்டும் என்று கூறுகிறார்.

இவரை இந்தியர்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர்.

சொந்த நாட்டிற்கு கோஹினூர் வந்து சேருமா? காலம் செய்யும் ஜாலத்தை உற்று நோக்கினால் ஆம் என்ற விடை தான் மனதில் தோன்றுகிறது!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

பிரிட்டிஷ் வானவியல் விஞ்ஞானியான  சர் ஜான் ஹெர்ஷல் (Sir John Herschel)  ஒரு அபூர்வமான பெரிய டெலஸ்கோப்பைக் கண்டு பிடித்திருப்பதாக நியூயார்க்கிலிருந்து வெளிவந்த பத்திரிகையான நியூயார்க் சன்னில் அதன் நிருபரான ரிச்சர்ட் ஆடம்ஸ் லாக் (Richard Adams Locke) என்பவர் பரபரப்பான ஒரு செய்தியை வெளியிட்டார்.

 

பத்திரிகையின் சர்குலேஷன் சொல்லும்படியாக இல்லை.

அந்த டெலஸ்கோப்பை வைத்து ஹெர்ஷல் சந்திரனை ஆராய்வதாக அடுத்த செய்தி வெளியானது. மக்கள் ஆவலுடன் அதைப் படித்தனர்.

 

 

அடுத்த நாள் ஹெர்ஷல் சந்திரனில் மலர்களைப் பார்த்ததாகவும் அருமையான கடற்கரை பீச்களைப் பார்த்ததாகவும் செய்தி வெளியானது

 

இரண்டு கால் மிருகங்கள், அழகிய கொம்புள்ள கரடிகள் என்று இப்படி பலவற்றைச் சந்திரனில் ஹெர்ஷல் பார்த்ததாக அடுத்து செய்திகள் வந்தன.

 

இன்னொரு நாள் அரை மனிதன்அரை வௌவாலாக உள்ள மனிதர்கள் சந்திரனில் இருப்பதாகச் செய்தி வெளியானது.

பத்திரிகையின் சர்குலேஷன் எகிறியது.

ரிபோர்ட்டர் லாக் தனது மனதில் தோன்றியதை எல்லாம் செய்தியாக ஆக்கினார்.

 

ஹெர்ஷல் கேப் ஆஃப் குட் ஹோப்பிலிருந்து சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்த போதும் லாக் கூறிய எதையும் பார்க்கவில்லை.அவருக்கே தான் பார்த்ததாகக் கூறப்படும்சந்திர செய்திகள் புதுமையாக இருந்தன.

 

கடைசியில் லாக் தான் கூறியதெல்லாம் பொய் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் இதில் சுவையான விஷயம் என்னவென்றால் மக்கள் லாக் முதலில் சொன்னதைத் தான் நம்பினர். தான் பொய் சொன்னதாக அவர் கூறியதை யாரும் நம்பவில்லை.

 

நியூயார்க்கின் நம்பர் ஒன் பத்திரிகையாக நியூயார்க் சன் ஆக லாக்கின் சந்திரன் பற்றிய பொய்ச் செய்திகள் உதவின.

அறிவியலில் சந்திரனைப் பற்றிய செய்தியைத் தருவதில் ஒருபுதிய பாதையை வகுத்தார் லாக்!

 

 

 

Leave a comment

Leave a comment