
Post No. 9568
Date uploaded in London – – –5 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொண்டைமண்டல சதகம் பாடல் 16
பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சிபுரம்!
ச.நாகராஜன்
படிக்காசுப் புலவர் இயற்றிய நூல் தொண்டைமண்டல சதகம்.
தென்களத்தூரில் பிறந்த இவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர்.
நூறு பாடல்கள் கொண்ட இந்த சதக நூலில் தொண்டை மண்டலத்தின் அனைத்துச் சிறப்புகளும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று பரிமேலழகர் வாழ்ந்த இடம் தொண்டைமண்டலம் என்பது.
சதகத்தின் 16வது பாடல் இது:
வள்ளற்சிலைப்பெரு மாணச்சர்சாத்தர் வழுதிமுதற்
றள்ளுவனார்க்குந்த் தலையானபேரையுந் தன்னுரையை
விள்ளுவனார்க்குத் திருக்காஞ்சிவாழ்பரி மேலழகன்
வள்ளுவனார்க்கு வழிகாட்டினான்றொண்டை மண்டலமே
பாடலின் பொருள் :-
தனது கல்விப் பெருக்கத்தின் பயனாகிய நூல்களுக்கு உரை செய்கின்ற திறத்தால், வள்ளல்சிலைப்பெருமாள், நச்சர், சாத்தர், வழுதி முதலிய உரையாசிரியர்களை வென்றவனாகிய காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பரிமேலழகன் என்னும் உரையாசிரியர் திருவள்ளுவரின் நூலின் பொருளை உலகத்தினர் கண்டெடுத்து உய்யும் பொருட்டுச் சிறந்த உரையாகிய ஒரு வழியை ஏற்படுத்தினார். அப்பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சீபுரமும் தொண்டைமண்டலத்தில் உள்ள நகரேயாகும்.
திருவள்ளுவரின் திருக்குறளுக்குச் சிறந்த உரைகளை எழுதியவர்கள் பத்துப் பெரும் உரையாசிரியர்கள்.
தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்
பரிலேழகர் பருதி – திருமலையர்
மல்லர் கவிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்.
- தருமர் 2) மணக்குடவர் 3) தாமத்தர் 4) நச்சர் 5) பரிமேலழகர் 6) பருதி 7) திருமலையர் 8) மல்லர் 9) கலிப்பெருமாள் 10) காளிங்கர் ஆகிய பத்துப் பேரே திருக்குறளுக்கு உரை எழுதிய பேராசிரியர்கள் ஆவர்.
இந்தப் பத்துப் பேருடைய உரையில் பரிமேலழகர் உரையே சிறந்ததாக அமைகிறது என்பதை அனைவரும் உணர்ந்து அதைப் பாராட்டியுள்ளனர்.
இவர்களில் காலத்தால் பிற்பட்டவர் பரிமேலழகர். பரிமேலழகரின் உரை வந்த பின்னர் மற்ற ஒன்பது உரைகளும் அவ்வளவாகப் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை.
“பரித்த உரை எல்லாம் பரிமேலழகன்
தெரித்த உரையாமோ தெளி”
என்ற தெளிவு மொழி இதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஒவ்வொரு உரையாசிரியரும், அதிகார முறை வைப்பிலும் கூட மாறுபடுகின்றனர். சில பாட பேதங்களும் ஓலைச் சுவடிகளில் உண்டு.
ஆனால் பரிமேலழகர் உரை தெளிவான ஒரு பார்வையைக் காட்டுகிறது.
பரிமேலழகர் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பரிபாடலுக்கும் சிறந்த உரையை இவர் எழுதியுள்ளார். பரிமேலழகர், காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் அர்ச்சகராக இருந்த வைஷ்ணவர்.
தனது திருக்குறள் உரையில் ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்ற நம்மாழ்வார் பாசுரத்தை இவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். அத்துடன் கடவுள் வாழ்த்தில் வரும் ‘எண்குணத்தான்’ என்ற தொடரை இது சைவ ஆகமத்தில் கூறப்பட்டிருக்கிறது என்று கூறுவதால் இவர் சைவம், வைணவம் உள்ளிட்ட அனைத்து சமயப் பிரிவுகளையும் சமமாகக் கருதுவது குறிப்பிடத் தகுந்தது. உமாபதி சிவாச்சாரியாரும் பரிமேலழகரைப் பாராட்டியுள்ளார்.
மு.இராகவையங்கார் தனது ஆராய்ச்சிப்படி கி.பி. 1272இல் இவர் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்.
திருக்குறளைப் படிக்க பரிமேலழகர் உரை பெரிதும் உதவும். தற்கால உரைகளை (குறிப்பாக 1967க்கு பிற்பட்டு வந்த பெரும்பாலான உரைகள், உரை எழுதியவர் தனது முகத்தைத் திருக்குறள் என்னும் கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்து மகிழ்ந்து எழுதியது என்றே கூறி அவற்றை) விலக்கி விடலாம்.
***

tags-பரிமேலழகர் , காஞ்சிபுரம்,