இடையின எழுத்துப் பாட்டு! (Post No.10,808)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,808

Date uploaded in London – –     4 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

இடையின எழுத்துப் பாட்டு!

ச.நாகராஜன்

சித்திர கவியில் இனவெழுத்துப் பாட்டு  வகையில், இடையின

எழுத்துப் பாடலை இப்போது பார்க்கலாம்.

மெல்லினம் என்பது ய, ர, ல, வ, ழ, ள ஆகிய ஆறு எழுத்துக்களின் இனம் ஆகும்.

இந்த இடையினம் மட்டுமே வரும் பாடல் இடையின எழுத்துப் பாட்டு எனப்படும்.

எடுத்துக்காட்டாக யாப்பருங்கல விருத்தி தரும் ஒரு பாட்டு:

வில்லாள ருள்ளாரேல் வாளிலர் வாளாளர்

வில்லாள ருள்ளாரை வெல்வாரேல் – வில்லாளர்

வல்லாள ருள்ளாரை வைவ ரவர்வயின்

வல்லாள ருள்ளார் வலி

இதே போல இன்னொரு பாடலையும் யாப்பருங்கல விருத்தியில் காணலாம்:

வயலுழுவார் வாழ்வாருள் வாழ்வா ரயலுழுவார்

வாழ்வாருள் வாழா தவர்

உழவர் பெருமையைப் பற்றிக் கூறும் இந்தப் பாடலின் பொருளை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

மாறனலங்காரம் இதற்காகத் தரும் சூத்திரம் இது:

“இடையினமுழுதுறலிடையினப் பாட்டே”

இடையினப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக மாறனலங்காரம் தரும் பாடல் இது:

வேயாவலையால்வில்வேளாலயலவரால்

யாயாலுயிர்வாழ்வார்யாவரே -யோய்விலராய்

வாழ்வாருயிர்வழியேவாழ்வாரருளாள

ராழ்வாரருளிலரேயால்

இந்தப் பாடலின் பொருள்:

ஒழிவில்லாத வாழ்வினை உடையார், உயிரின் கண் நீங்காது வாழும் வாழ்வினை உடையார்.

கிருபையை ஆட்சியாக உடையார்

அவர் யார்?

எனில்,

ஆழ்வார் என்னும் திரு நாமத்தை உடையார்

(எமக்குத் தாரும் மார்பும் தர வேண்டும் என்னும்) கிருபை இல்லாதவர்.

ஆகவே   தோழீ!

வேய்ங்குழல் முதலான பகைவர்களால் புமான்களை எய்தாது

தனி இருந்தவருள் உயிர் வாழ்வார் ஒருவருமில்லை.

இந்தப் பாடலின் திணை : பெண்பால் கைக்கூற்றுக் கிளை

துறை : மெலிவொடு கூறல்

இப்படிப்பட்ட மெல்லின எழுத்துக்கள் மட்டுமே வருமாறு உள்ள மெல்லினப் பாடல்கள் ஏராளம் தமிழில் உள்ளன.

முயன்று ஒருவர் தொகுக்க வேண்டும்!

இதுவரை வல்லின எழுத்துப் பாடல், மெல்லின எழுத்துப் பாடல், இடையின எழுத்துப் பாடல் ஆகிய மூவகை எழுத்துப் பாடல்களையும் பார்த்து விட்டோம்.

தமிழ் என்னும் விந்தையில் இன்னும் பல விந்தைகளை அடுத்துக் காண்போம்!

***

tags- மாறனலங்காரம், மெல்லினப் பாடல்கள் , இடையின எழுத்து

Leave a comment

Leave a comment