லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள் (Post.11,543-part 5)  

WRITTEN BY Dr A. Narayanan, London

Post No. 11,543- Part 5

Date uploaded in London – 1 January 2023              

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மார்கழித்திங்கள் 13

    கொக்காய் தோன்றிய கொடிய அரக்கனின்

    கூறிய அலகுகள் கூடிய வாய் பிளந்தழித்தோனும்

    கொடுங்கோல் கொற்றவன் இலங்கை சீமான் சிரங்கள்

    கொய்தது புறங்கையறியாப் புகழோன் பேர் பாட

    கூடமொன்றில் குழுமிய கெழுவுடைய மங்கையர் 

    குரு சாய்ந்து சுக்கிரனெழ திறந்த வானில் புட்கள் கூவிட

    மான் விழியும் மலர் போல் கண்களுமுடைய பாவையே!

    நீண்ட நித்திரை நின் கண் வளர நீராடாது பள்ளி இருந்து   

    நீலவண்ணனின் லீலையனுபவம் கண்ட கனவினை கூடி

    எம்முடனும் பகிர வேண்டின  நங்கை வாழியே

    வெண்ணெயுண்ட வாயாலே

    மண்ணையுண்டு மண்டலத்தை 

    கண்டத்தில் காட்டியோனே

    மண்ணுலக மங்கையொருத்திக்கு 

    கண்ட இடமெலாம் கண்ணனாக

    கண்ணனெங்கே கோதையங்கே    

     நாராயணன்

Xxx

மார்கழித்திங்கள் 14 

புறக்கடை வாவியுள் மலர்ந்த செங்கழுநீரும்

கூம்பிய ஆம்பலும் புலர்ந்த காலையில்   

காவி ஆடை மேனி தழுவிய வெண் பல்

மாதவர் ஊதிய சங்குடன் ஊர் கோயிலடைய

தோழிகளெம்மை முன்போதெழுப்ப

செப்பிய வாக்கு சப்பிட்டுப்போக

நாணமின்றி துயிலும் நங்கை நீ!

செங்கமலக்கண்ணும் சங்குமாழியும்

ஏந்திய தடக்கையோன் புகழ் பாட

எழுந்தெம்முடன் சேர்வாயென அழைத்த

ஆயிழையின் அணியியலோ திருப்பாவை

மறையுள் நிற்கும் மாயவனே

சிறையுள் பிறந்த மாதவனே

குறையொன்றில்லா கோவிந்தனே

முறையாக கோபியரின் கோபாலனே

உறைவதோ அவனுள்ளம் கோதையே

நாராயணன்  

Xxx

மார்கழித்திங்கள் 15

எம் தோழியே ! கிளி போல் சொன்னதைச்   

சொல்லும் இள நங்கையே! இன்னுமா உறக்கமென

வாயில் நின்ற தோழி மாரின் உரப்பலோடு கனிந்த

மொழியில் கூவியழைத்தோர் திறனறிந்துமிழைத்த       

தவற்றுக்குத் தானே காரணமென புறந்தோன்றிப் 

போந்தாருடன் பொருந்தி,கடுங்கண் களிரின்

கழுத்தைத் திருகியும் மாறா மாற்றானையும்

மாய்த்த மாயனைப் போற்றிப் பாடப் பாவைகளம்    

புக்கிய பெரு நங்கை வாழியே

ஆயிழையாள் ஆழ்வான் கை தவழ்ந்து

ஆயன் மாயன் தூயோனே அவளுள்ளுறைந்து

ஆயிரம் நாமமும் மேலும் பல பேருடையானை

ஆறைந்து பாசுரங்களாய் தொடுத்த பாமாலையே          

ஆதியும் அந்தமுமில்லாதோனை ஆனந்தத்தில்     

ஆழ்த்திய ஆண்டாளின் திருப்பாவை.

நாராயணன்

XXX

மார்கழித்திங்கள் 16

நாயகனான நந்தகோபனின் கோயிலும் 

நீண்டோங்கிய கொடிமரமும் தோரண

நெடு வாயிலும் காப்போர்களே!  நேற்றே 

நிரை வாய் அறை பறை தர மொழிந்த

குறையிலா மாயன் மணிவண்ணனைத்

துயிலெழப் பாட தூயோராய் வந்த ஆயர்

சிறுமியரெமக்கு ஆயன் அறை வாய் மூடிய

சீரான மணிக்கதவு தாள் திற வென வேண்டிய

சரணநெறியறிந்த சிறுமியர்கள் வாழியே.               

                    (16 முடிவு) 

xxx

அலரும் கன்றின் அரும்பசி நீக்க

ஆவின் மடி கனத்து முலை சொரிய

அம்மாவின் முலை தீண்டாப் பருகிய

பாலில் கடும்பசி தீர்ந்த கன்று போல்

காலின் சிலம்பொலிக்கக் கை வளை 

குலுங்கிய வேய்ங்குழலோனை கோதையின்

கலையாப் பூங்குழலில் வீசிய நறுமணம்

தொலைவிலுள்ளத் தேனீ போலீர்த்தது

நீரும் சோறும் உடுக்கையுமுற்றார்க்குப் பற்றுமளவு       (மார்கழித்திங்கள் 17)

ஈன்ற ஆயர் கோமான் நந்த கோபரே எழுவீரோ

வஞ்சியர் குலக்கொழுந்தும் குலதீபமான 

ஆய்ச்சியர்குல அரசி யசோதையே எழுவீரோ

ஆகாயத்தினூடே ஓங்கி உலகளந்து அமரர்க்கும்

அதிபதியோனே உறங்காதெழுவீரோ

அன்றைய இளையோனே இன்று முத்தோனாய்

கன்றோட்டிடும் கண்ணனுடன் பிறந்த பலராமா

எழுவீரோ வென குலத்தோருக்குப் பள்ளி

எழுச்சிப் பாடிய நிலமங்கை வாழியே                                           17

கோடி தேவர்கள் கூடி வந்தாலும்

நாடிய நாரணனைத் தேடிய கோதை

சூடிய மாலையோடு வாடிய முகத்தில்

பாடிய பாக்களைப் பழரசமாய் பருகிட

ஓடி வந்தானோ ஓங்கி உலகளந்தோன்

நாராயணன்

 —-to be continued…………………………

Leave a comment

Leave a comment