திருவில்வாமல ராம, லட்சுமண கோவில்-31 (Post No.12,826)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,826

Date uploaded in London – –   12 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 31

கோவில் எண்–31  

31.திருவில்வாமல ராம லட்சுமண கோவில்

கேரளத்தில் 3 ராமர் கோவில்கள் சிறப்புடையவை ; அவை

1.திருபிரையார் / த்ரிப்ரயார்  ராமர்  கோவில்

2.திரு வண் வண்டூர்  ராமர் கோவில்

3.திரு வில்வாமல ராம லட்சுமண  கோவில்

இன்று திரு வில்வாமல ராம லட்சுமண  கோவில் பற்றிக் காண்போம்

எங்கே இருக்கிறது ?

த்ரி சூரிலிருந்து 29 கி.மீ.; பாலக்காட்டிலிருந்து 20 கி.மீ

சிறப்பு அம்சங்கள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது தமிழ்ப் பழமொழி ; இங்கு ஒரே இடத்தில் இரண்டு கோவில்கள்; உள்ளே உறையும் ஆண்டவன் பெருமாள் என்றாலும் ஒன்றை ராமராகவும் மறறொன்றை லட்சுமணராகவும் பார்க்கிறோம்.

ஒரு கிலோ மீட்டர்  தொலைவில் கேரளத்தின் கங்கை எனக் கருதப்படும் பரத நதி ; மலையாளிகள், பரதப்புழா என்பார்கள் .அருகில் பிரபல மலையாளக் கவிஞர் குஞ்சசன் நம்பியார் பிறந்த கிள்ளிக் குறிச்சி மங்கலம் இருக்கிறது

இது ஒரு மலைக் கோவில்; ஆயினும் கோவில் வரை சாலை வசதி இருக்கிறது.

கோவிலின் பெயர்—திருவில்வாமல/  வில்வாத்ரிநாத கோவில் Thiruvilwamala Vilwadrinatha Temple

சதுர வடிவிலான 2  அடுக்கு கோவில்களும் தனித்தனியே உள்ளன; ஆனால் பிரதட்சிணம் செய்கையில் இரண்டையும் சேர்த்தே  வலம் வரவேண்டும் என்பது சம்பிரதாயம் .

ஒரு காலத்தில் இது பணக்கார கோவிலாக இருந்தது; ஆண்டுக்கு ஒரு லட்சம் பரா நெல்லை முன்னோர்கள் விட்டுச் சென்றனர் ஆயினும் இந்து விரோத அரசுகள்  வந்து கோவிலை மொட்டை ஆண்டி ஆக்கிவிட்டன .

ஒரு காலத்தில் 7 நிலைக் கோபுரத்துடன் இந்தக் கோவில் விளங்கியது; இடி விழுந்த பின்னர் மொட்டை ஆனது ; இப்போது முறையான கோபுரமோ கொடிமரமோ இல்லாத கோவில் இது;  அந்தக் காலத்தில் 40 கி.மீ தொலைவிலும் இந்தக் கோவிலின் விளக்குகளைப் பார்க்க முடிந்ததாம்

பெரிய அரசமரம்

இந்தக் கோவிலின் இன்னுமொரு சிறப்பு, மண்ணே இல்லாத பாறைப் பிரதேசத்தில் பிரம்மாண்டமான அரச மரம் தழைத்து வளருவதாகும் .

கிழக்கு வாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் 5 அடி அனுமன் சிலை வெள்ளிக் கவசத்துடன் ஜொலிக்கிறார்; எங்கெல்லாம் ராமன் நாமம் ஓலிக்கிறதோ  அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீர் சொரிய அனுமன் கைகூப்பிய வண்ணம் அமர்ந்திருக்கிறான் என்று பிரபல சம்ஸ்க்ருத ஸ்லோகம் சொல்லும் ; அது உண்மையே.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் = எங்கெங்கெல்லாம் ராமனின் புகழ் பா டப்படுகிறதோ

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் = எங்கெங்கெல்லாம் கை கூப்பிய வண்ணம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்= கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய வண்ணம் உள்ள

 மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’= ராக்ஷஸர்களின் எமனான மாருதியை/ அனுமனை வணங்குவோமாக.

கிழக்கு நோக்கிய கோவில் லட்சுமணப் பெருமாள்; மேற்கு நோக்கிய கோவில் ராம பிரான் ; ஆயினும் இரண்டு மூர்த்திகளும் நான்கு கைகள் உடைய விஷ்ணுவே; சங்கு சக்ர கதா தாரி ; நாலாவது கையில் தாமரை..

இரண்டு கோவில்களிலும் தாமிரத்தகடுகளால் கூரையை வேய்ந்துள்ளனர்

வில்வாத்ரி கோவில்

பரசுராமர் தன்னுடைய பித்ருக்களை (நீத்தார்) கடைத்தேற்ற சிவபெருமானை வேண்டினார்.  அவர் கொடுத்த விஷ்ணு மூர்த்தியை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்; பின்னர் பூத மலையில் தவம் செய்து  முக்தி அடைந்தார்; அந்த பூதன்மலா அருகில் இருக்கிறது

ராமபிரான் என்று வணங்கப்படும் மேற்கு நோக்கிய சிலை தங்கத் தகட்டால் கவசம் இடப்பட்டுள்ளது ; ஒரு முறை அர்ச்சகர், அபிஷேக ஆராதனைகளைச் செய்கையில் சிலை சேதமுற்றதாகவும் ஆகையால் இரண்டு துண்டுகளை கவசத்தால் போர்த்தி  இணைத்து விட்டனர் என்பதும் இதன் பின்னுள்ள கதை ஆகும்.

வில்வ ஆமலக பெயர்க் காரணம்

சிலைக்குக் கீழ் ஒரு பள்ளம் இருந்ததாகவும் அதிலுள்ள தீர்த்தமே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஒரு முறை அந்த தீர்த்தப்பள்ளத்தில் விழுந்த கதலி (வாழை) பழத்தை அர்ச்சகர் எடுக்க முயன்றபோது பெரிய சப்தம் எழும்பி எல்லாம் பூமிக்கடியில் சென்றதால் இப்போது அந்த இடம் வறண்டு விட்டதாகவும் சொல்லுவார்கள்; கோவிலுக்கு அடியில்  குகை இருப்பதாகவும் அங்கே தங்க வில்வ மரம் இருப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்

(இலங்கை கோவில்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளிலும் இது போன்ற விஷயங்களைக் காணலாம்.; பல கோவில்கள் மலைக்குகைகளின் மேல் அமைந்துள்ளன; அவற்றின் கீழ் சுண்ணாம்புப் பாறைகளினால் ஆன குகைகள் இருக்கின்றன; அவற்றில் தேங்கும் தண்ணீர், அவற்றைக் கரைக்கும்போது அவை இடி ஓசையுடன் பள்ளங்களை ஏற்படுத்துகின்றன. ; இது விஞ்ஞான விளக்கம்).

பக்தர்கள் சொல்லும் கதை

வில்வாத்ரி நாத பெயருக்கு வேறு ஒரு கதையும் உண்டு

விஷ்ணுவின் சக்தி பெருகியவுடன் அசுரர்கள் பயந்து போய் ஒரு தந்திரம் செய்தனர்; ஒருவன் பிராமண உருவத்தில் வந்து மற்றவர்களுடன் உலவினான் ; இரவு நேரத்தில் தன்  கைவரிசையைக் காட்டினான். பசுக்களைக் கொன்று சாப்பிட்டுவிட்டு  எலும்புகளை ஓரிடத்தில் தூக்கி எறிந்தான் ; அவை மலைபோலக் குவிந்த இடம் மூரி குன்னு ( மாடுகள் குன்று ) என்று அழைக்கப்படுகிறது ; கும்ப மாதத்தில் ஒரு நாள் அந்த அசுரன் விக்கிரகத்தையே உடைக்க முயன்றபோது பெருமாள், நரசிம்மாவதாரம் எடுத்து அசுரனை வதைத்தார் ; நரசிம்ம மூர்த்தியின் பயங்கர ஓசையை அடக்கி அவரை சாந்தப்படுத்துவதற்கு வில்வமங்கள் சுவாமிகள் துதி பாடினார் . அப்போது அவரை வில்வ அத்ரி நாத என்று புகழ்ந்தால் வில்வாத்ரி நாத என்ற நாம கரணம் சூட்டப்பட்டது .

தொடரும் ………………………..

Tags– வில்வாத்ரிநாத, திருவில்வாமலக , ராம லட்சுமண கோவில் , அரசமரம் , அனுமன் சிலை, யத்ர யத்ர ரகுநாத , கேரள கோவில் எண் 31

Leave a comment

Leave a comment