WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.645
Date uploaded in London – —9 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி?
ச. நாகராஜன்
இளம் தாய்மார்களும் நடுத்தர வயது பெண்மணிகளும் தங்கள் குழந்தைகளையும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியரையும்,, ‘படம் வரையாதே, கதை கேட்காதே! டி.வி. பார்க்காதே, படி, படித்து முன்னேறு’ என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதால் குழந்தைகளை எரிச்சலடையச் செய்வதுடன் அவர்களே தங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்தைத் தடுப்பதை அறியாமல் இருக்கிறார்கள்!
கற்பனை என்பது அற்புதமான ஒன்று! இளம் வயதிலேயே அவர்கள் போக்கில் மனச் சித்திரங்களை உருவாக்க விட்டுவிட்டால் அவர்கள் சிறந்த சாதனையாளர்களாக பிற்காலத்தில் உருவாவதோடு வகுப்பில் முதன்மை பெற்றவராகவும் வருவார்கள் என்பது கிரியேடிவிடி பற்றிய அறிவியல் ஆய்வுகளின் முடிவு!
பேப்பரையும், வண்ணத்தூரிகையையும், வண்ணங்களையும் தந்து குழந்தைகளை அவர்களின் படைப்புலகில் விட்டுவிட்டு அகன்று விட வேண்டும். நிஜத்தில் நாம் பார்க்கும் உருவங்களையும், விலங்குகளையும் போடுமாறு அவர்களை வற்புறுத்தக் கூடாது. தங்கள் கற்பனைக்கேற்ப உருவங்களையும், இயற்கைக் காட்சிகளையும் வரையும் அவர்கள் பிற்காலத்தில் பல்வேறு நிஜங்களைப் பார்க்கும் போது தங்கள் அனுபவத்தில் மெருகேற்றிக் கொள்வார்கள்.
‘கதை சொல்வது’ என்பது படைப்பாற்றலை மேம்படுத்தும் ஒரு அற்புத உத்தி! பல்வேறு நாடுகளுக்குச் சென்ற வீரர்களைப் பற்றிய வரலாறுகள்
எல்லா நாகரிகங்களிலும் உண்டு. அர்ஜுனனின் யாத்திரை, கலிவரின் யாத்திரை என கற்பனையைத் தூண்டிவிடும் வரலாறுகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. மகாபாரதமும் ராமாயணமும் சுட்டிக் காட்டாத கற்பனையே இருக்க முடியாது!
அதேபோல ‘தொல்லைக்காட்சி’ என்று செல்லமாகத் திட்டப்படும் தொலைக்காட்சியில் விலங்குகள் பற்றியும், பல்வேறு நாகரிகங்கள், கண்டுபிடிப்புகள் பற்றியும் காண்பிக்கப்படும் டிஸ்கவரி சானல் நிகழ்ச்சிகளை, சீரியலை ஒதுக்கிவிட்டு குழந்தைகளுக்குப் போட்டுக் காண்பிக்க வேண்டும். திரைப்படங்களிலும் சாகஸம், துணிச்சலைக் காட்டும் அற்புதப் படங்கள் ஏராளம் உள்ளன. அவற்றைப் பார்க்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்.
எந்த ஒரு தீமையிலும் ஒரு நன்மை இருக்கும். அதைக் கண்டு அதில் குழந்தைகளை ஈடுபடுத்தி விடலாம். தாழ்வு மனப்பான்மையை அகற்றி சாதனையாளர்களாகத் தங்கள் குழந்தைகளை உருவாக்குவது இளம் தாய்மார்களின் கையிலேயே உள்ளது.
கிரியேடிவிடி எனப்படும் படைப்பாற்றலையும், கல்வியையும் பற்றி ஆய்வு செய்துள்ள ஆய்வாளர்கள் சாண்ட்ரா டபிள்யூ ரஸ் மற்றும் ஜனஸ் சால்க் ஆகியோர் “குழந்தைகளின் கற்பனையும், அவர்களின் மனச் சித்திரங்களுமே அவர்களின் வருங்காலத்தை நிர்ணயிக்கின்றன” என்கிறார்கள்.
சினேகிதி மாத இதழில் 2005, ஜூன் மாதம் வெளியான கட்டுரை.
****