போஜன குதூகலம் – 2 (Post No.14,164)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,164

Date uploaded in Sydney, Australia – –2 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் ஜனவரி 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 போஜன குதூகலம் – 2

ச. நாகராஜன் 

நூலில் உள்ள சில அருமையான செய்திகளைக் கீழே காணலாம். முழு விவரத்திற்கும் நூலைப் படிப்பதே சாலச் சிறந்தது.

நெல்

பழைய நெல் எளிதில் செரிக்கும். உடலுக்கு இதமானது.

யவம் (பார்லி)

கருஞ்சிவப்பு கலந்த யவம் இனிப்புள்ளது. குளிர்ச்சியுள்ளது. இது சிறுநீர் சம்பந்தமான நோய்களைப் போக்க வல்லது.

சோளம்

நல்ல வலிமை தரும். வாதம் முதலிய மூன்று குறைகளையும் போக்கும்.

தோலுள்ள தானியம்

பயறு, துவரை, மொச்சை ஆகியவை தோலுள்ள தானியங்கள். இவை மலத்தைக் கட்டும்.  சுவையுள்ளது. காம உணர்ச்சியைத் தூண்டும் தன்மையுள்ளவை.

உளுந்து

உளுந்து பசையுள்ளது. மலத்தை அதிகரிக்கச் செய்வது. வரட்சி தரும்

வீரியத்தை அளிக்கும். உடலில் பளபளப்பையும் நல்ல நிறத்தையும் தரும்.

கடலை

இனிப்புள்ளது. சிறுநீர் பற்றிய நோயையும் வாயுவையும் பித்தத்தையும் வெல்லும்.

புல்வகை தானியங்கள்

தினை, சாமை, வரகு, நிவாரம் முதலிய புல் வகையைச் சேர்ந்த தானியங்கள் குளிர்ச்சி பொருந்தியவை. இலேசானவை. இவற்றால் வாயு அதிகரிக்கும். ஆனால் கபமும் பித்தமும் போகும்.

பத்து வகை காய்கறிகள்

மூலம் (வேர்), பத்ரம் (இலை), கரீரம் (மூளை), அக்ரம் (தளிர்), பலம் (பழம்), காண்டம் (தண்டு),அதிரூடம் (கொழுப்பு), த்வக் (தோல்), புஷ்பம் (பூ), கவசம் (பட்டை) என காய்கறிகள் பத்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பால்

முற்பகலில் பால் குடித்தால் உற்சாகமும் செரிமானமும் அதிகரிக்கும். நண்பகலில் குடித்தால் வலிமை வளரும். களைப்பு நீங்கும். இரவில் குடிக்கப்பட்டால் பல நோய்களைப் போக்கும். ஆகவே இது எப்பொழுதுமே உட்கொள்ளத் தகுந்ததாகும்.

நதிகளில் ஓடி வரும் நீரின் பயன்கள்

இந்தப் பகுதியில் கங்கை, யமுனை, நர்மதை, சந்திரபாகா, சோணபத்ரா, காவேரி உள்ளிட்ட பல நதிகளின் நீரின் தன்மை தரப்படுகிறது. ஒவ்வொரு நதியின் நீரும் தரும் நன்மைகளும் விளக்கப்பட்டுள்ளது.

நீரைப் பருகுதல்

இரவில் உட்கொள்ளப்படும் வெந்நீர் வாயுவைப் போக்கும். கபத்தை விரைவில் அகற்றும் சுவை இன்மையை நீக்கும். உணவைச் செரிக்கச் செய்யும். செரிமானத்தை அதிகமாக்கும்.

செரிமானத்தை அதிகரித்துக்கொள்ள அடிக்கடி குறைவாக நீர் குடித்தல் வேண்டும். 

உணவுக் கலங்கள்

தங்கப் பாத்திரம் தோஷங்களைப் போக்கிக் கண்ணுக்கு நன்மை தரும்.

வெள்ளி கண்ணுக்கு நன்மை தரும். பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைப் போக்கும். வெண்கலம் அறிவையும் சுவையையும் தரும். இரத்த நோயையும், பித்தத்தையும் தெளிய வைக்கும்.

பித்தளை வாதத்தையும் உஷ்ணத்தையும் தரும். வரட்சி தரும். கிருமிகளையும் கபத்தையும் போக்கும்

இரும்பு சங்குப் பாத்திரங்களில் உண்டால் செரிக்கும். வீக்கம், பாண்டு ஆகியவற்றையும் போக்கும். வலிமை தரும். காமாலையை அகற்றும்.

வாழை இலையில் உணவு உட்கொண்டால் மனதுக்கு திருப்தி ஏற்படும். சுவை மிகும். காமம் அதிகரிக்கும். வலிமையும் செரிமானமும் தோன்றும். நஞ்சு, களைப்பு வாயு, இரத்த நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு உகந்தது. பாண்டு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரங்களும் அவற்றை உண்ணக் கூடாதென்பதும்.

அசுவினி முதல் உள்ள நட்சத்திரங்களின் வரிசையில் கீழ்க்கண்டவற்றின் தொடர்பைக் கண்டு கொள்க. (அசுவினிக்கு விஷத்ரு, பரணிக்கு நெல்லி என்று வரிசைப்படுத்திக் கொள்க)

விஷத்ரு,  நெல்லி, அத்தி, நாவல், கருங்காலி, பாதிரி, மூங்கில், அரசு, நாகமென்ற பெருமுத்தம், ஆல், பலாசம் எனப்படும் முள்ளுமுருங்கை, பிலட்சம் என்ற கல்லொளி மரம், அம்பஷ்டம், வில்வம், அர்ஜுனம் என்ற மருத மரம், நருமுருங்கை, சுரபுன்னை,எலி, ஆல், தேக்கு, வஞ்சுளம் என்கிற தினிசி மரம், பலா, எருக்கு, வன்னி மரம், கடம்பம், மா, வேம்பு, இலுப்பை ஆகிய மரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரியனவாகும்.

தன் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை ஒருவன் கண் மூடித்தனமாக மருந்து முதலியவற்றுக்காக உபயோகப்படுத்தினால் அவனது ஆயுள், செல்வம்,  மனைவி மக்கள் அனைத்தும் அழியும். இவற்றை வளர்த்தல் முதலியன செய்தால் வளரும்., (இங்கு முதலியவற்றுக்காக என்பதற்கு வெட்டுதல், உண்ணுதல் என்று பொருள் கொள்க)

சாப்பிட்ட பின் எப்படி இருக்க வேண்டும்?

சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே இருந்தால் தொந்தி அதிகரிக்கும். படுத்தால் உடல் பருக்கும். நடப்பவனுக்கு ஆயுள் வளரும். ஓடுபவனைக் கண்டு மரணம் ஓடும்.

எப்படிப் படுக்க வேண்டும்?

மல்லாந்து படுப்பவன் எட்டு பங்கு மூச்சையும், வலது புறம் ஒருக்களித்துப் படுப்பவன் அதன் இரண்டு பாகங்களை (பதினாறு மடங்கு) மூச்சை இழக்கிறான். ஆகையால் இரட்டைப் பங்கு மூச்சை செலவாக்கும் வகையில் சுகமாகப் படுக்க வேண்டும். எல்லாப் பிராணிகளுக்கும் தொப்புளுக்கு மேல் இடப்புறத்தில் செரிமானத்திற்குரிய உஷ்ணமுள்ளது. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்க இடது பக்கத்தில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

தெய்வ பூஜை செய்வது எப்படி?

தெய்வங்களைப் பூஜித்தல், சாப்பாடு, தூக்கம் ஆகியவற்றை வெளிப்படையாகச் செய்தல் கூடாது. இருட்டிலும், சந்தியா காலங்களிலும் மேல் கூரையற்ற இடங்களிலும் செய்யலாகாது.

சாப்பிடும் முன்

சாப்பிடும் முன் இஞ்சியையும் உப்பையும் உட்கொள்ளுவது மிகவும் நன்மை தரும். உப்பு கடலுப்பாக இருத்தல் வேண்டும்.

உண்ணும் போது நினைக்க வேண்டிய தெய்வங்கள்

உணவு உட்கொள்ளும் போது பிரமன் முதலியோரை நினைக்க வேண்டும்.

உணவு பிரம்மா, அதன் சுவை திருமால் உண்பவன் சிவன் என எண்ணி உண்பவனுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாது.  திருஷ்டியினால் உண்டாகும் துன்பங்களைத் தீர்க்கும் படி கோரி நான் நினைக்கிறேன் என்று அனுமனையும் நினைக்க வேண்டும்.

இறைச்சி

சைவ உணவு மட்டுமே இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அசைவ உணவு வகைகள் பற்றிய ஏராளமான விஷயங்களை  இந்த நூலில் காணலாம். மீனிலிருந்து ஆரம்பித்து பன்றி இறைச்சி முடிய அனைத்து இறைச்சி வகைகளையும் பற்றி நூல் அலசி ஆராய்கிறது.

அசைவப் பிரியர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.

முயல் இறைச்சி, மீன் இறைச்சி, லாவக இறைச்சி என்று நூலின் பின்னால் உள்ள உணவுப் பொருள்களின் அகர வரிசைப் பட்டியலில் தேடிப் பார்த்தால் குறிப்பிட்ட பக்கத்தில் அது பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

அருமையான ஆராய்ச்சி நூல்

இது உணவு வகைகளைப் பற்றிய ஒரு கலைக் களஞ்சியம். கையேடு.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான விஷயங்களை நவீன ஆய்வு உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் கிடைக்கும் முடிவுகளை நூல் குறிப்பிடும் பயன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இதற்காக ஆகும் பொருள் செலவை அரசே ஏற்க முன் வர வேண்டும். இதில் ஈடுபட ஆர்வமுள்ள அறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். சமூக ஊடகங்கள் இதற்குப் பெரும் முக்கியத்துவம் தர வேண்டும்.

ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க அறிவுக் களஞ்சியமாகத் திகழும் இந்த நூலையும் இது போன்ற நூல்களையும் தமிழ் உலகம் மனமார வரவேற்க வேண்டும்.

சரஸ்வதி மகால் நூல்நிலையம் போன்ற நிறுவனங்களை ஆதரித்துப் போற்றி அதில் பணியாற்றும் அறிஞர்களை வாழ்த்தி அவர்களுக்கு உரிய விதத்தில் இந்தியத் திருநாட்டின் மக்கள் ஆதரவு தர வேண்டும்.

குதூகலமாக வாழ்வோம் – போஜன குதூகலத்தைப் படித்து!

***

நன்றி : சரஸ்வதி மகால் நூல் நிலையம்

,போஜன குதூகலம்

—subham—-

Tags- ,போஜன குதூகலம், part 2

Leave a comment

Leave a comment