இமயமலை புனிதத் தலங்கள், உத்தரகண்ட்! – 1 (Post No.14,596)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,596

Date uploaded in London – –6 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

31-5-2025 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது

இமயமலையில் எழில்காட்சிகள்புனிதத் தலங்கள்காட்சியகங்கள் : உத்தரகண்ட்! – 1 

ச. நாகராஜன்

உத்தரகாண்ட் மாநிலம் இந்தியாவின் வடபகுதியில் இமயமலையில் அமைந்துள்ள மாநிலமாகும். எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகள், பரவசமூட்டும் பனிமலை, ஏராளமான புனிதத் தலங்கள் என அனைவரையும் வரவேற்கும் அற்புதங்களைக் கொண்டுள்ளது இந்த மாநிலம். வடக்கில் திபெத், கிழக்கில் நேபாளம், தெற்கில் உத்தரபிரதேசம், மேற்கிலும் வடமேற்கிலும் புனிதமான இமயமலை என எல்லைகளைக் கொண்டுள்ள இதை தேவபூமி என்றே மக்கள் அழைக்கின்றனர். (இது 2007 முடிய உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்டு வந்தது)

இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

டேராடூன் உயிரியல் பூங்கா 

உத்தரகண்ட் மாநிலத்தில் தலைநகர் டேராடூன். இங்கு  நகர மையத்தில் உள்ள இந்த விலங்கியல் பூங்காவில் புலியில் ஆரம்பித்து மயில்கள் வரை அனைத்து விலங்கினம் மற்றும் பறவை வகைகளைக் காணலாம்.

 காந்தா கர்

பழைய கால மணிக்கூண்டு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் மணியைப் பார்க்கும் வகையில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னம் இது.

 ஷிகர் நீர்வீழ்ச்சி.

டேராடூனின் அழகிய நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மலையின் மீது அமைந்துள்ளது இது. மலை ஏறுவதில் விருப்பமுள்ளவர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம்.

 புலிகளை நெருக்கமாகப் பார்க்க உள்ள இடம் டைகர் வியூ ஜங்கிள் கேம்ப். காட்டில் சஃபாரி வசதியும் உண்டு.

 கொள்ளையர்  (ராபர்ஸ்) குகை

சிவபெருமானின் உறைவிடம் இதுவே. கொள்ளையர் பதுங்கி வாழ வசதியாக இது பயன்படுத்தப்பட்டதால் இது கொள்ளையரின் குகை என்று அழைக்கப்படலாயிற்று. இங்குள்ள அதிசயம் என்னவெனில் குகையின் நடுவிலிருந்து ஆறு பாய்கிறது.

 சஜஸ்த்ர தாரா

இது ஒரு சிறிய நீர்வீழ்ச்சித் தொடர். கந்தகம் உள்ள நீர். சில சிகிச்சைக்கு உகந்த இடமாகும் இது. இங்கு ரோப் வே உண்டு. இந்த வான்வழிப் பாதை வழியே டூன் பள்ளத்தாக்கு முழுவதையும் பார்க்கலாம். ஒரு மணி நேரம் இந்த வான்வழி சவாரி நீடிக்கும். அற்புதமான இயற்கைக் காட்சிகளை வானிலிருந்து பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான்!

 மைண்ட் ரோலிங் மடாலயம் : பௌத்த மடாலயமான இது மிக்க பழமையானது. இங்குள்ள ஸ்தூபி மிக்க உயரமானது.

 கேதார் கந்தா

இந்தச் சிகரம் டேராடூனிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மலையேறத் துடிப்பவர்களுக்கான இடம் இது. டன்ஸ் நதி பள்ளத்தாக்கில் உள்ள இந்த சிகரம் எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும். 

ஹரித்வார்ரிஷிகேஷ் 

ரிஷிகேசம் டேராடூனிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. \. நவம்பர் முதல் மே வரை கடும் குளிர் காலம் என்பதால் யாத்ரீகர்கள் மே முதல் வரத் தொடங்குகின்றனர். 

இராமாயணத்துடன் தொடர்பு கொண்டுள்ள இந்தத் தலத்தில் தான், ராமரும் லட்சுமணரும், ராவணனை வதம் செய்த பின்னர் வந்து தவம் செய்து தங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்டனர்.

 அத்துடன் பரதரும், சத்ருக்னரும் கூட இங்கு தான் வந்து தவம் செய்தனர்.

 ரிஷிகேசத்தில் உள்ள பரதர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. இது ரிஷிகேஷ் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. சத்ருக்னர் ஆலயம், 1986ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ராமர் பாலத்தின் அருகில், உள்ளது. ஹரித்வாரிலிருந்து இறங்கி ரிஷிகேசம் வரும் போது கூடவே கங்கையும் துணைக்கு வருவாள். சலசலத்து ஓடும் கங்கை நதியைக் கடந்து செல்ல இங்கு அற்புதமான ஒரு பாலம் அமைந்துள்ளது.

 அதன் பெயர் லட்சுமண ஜூலா. ஜூலா என்றால் ஊஞ்சல் என்று பொருள்.

இலேசாக அசைந்து ஆடும் இந்தப் பாலத்தில் நடந்து மட்டும் போகலாம்; அக்கரை சேரலாம். கீழே பொங்கிப் பிரவாகித்து ஓடும் கங்கை நதியை ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் பயத்துடனும் தரிசித்து அக்கரை செல்வோர், படகில் மீண்டும் இக்கரை வருவது வழக்கம். இந்தப் பகுதியில் தான் லட்சுமணர் தவம் செய்தார். 

 லட்சுமணருக்காகத் தனிக் கோவில் அமைந்துள்ள இடம் இது ஒன்று தான். லட்சுமண்ஜூலாவைக் கடந்து சென்றவுடன் அமைந்து இருப்பது கைலாச நாதர் ஆலயம்.

 இந்த ஆலயத்தில் திரிபுரசுந்தரி, மஹிஷாசுரமர்த்தனி, காயத்ரிதேவி ஆகிய மூன்று தேவியரின் சந்நிதிகள் உள்ளன. தத்தாத்ரேயர், விநாயகர் சந்நிதிகளும் இங்கு உள்ளன.

 இந்த ஆலயத்தை அடுத்துள்ள சுவர்க்கநிவாஸ் மந்திரில் உள்ள பத்ரிநாதரை வழிபட்டால் சுவர்க்க பதவி உண்டு என அனைவரும் நம்புகின்றனர்.

 சுற்றிலும் அழகிய சாந்தி தவழும் மலைப் பகுதி; பிரவாகம் எடுத்து ஓடும் தெய்வீக கங்கை நதி; தியானத்திற்கும் யோகப் பயிற்சிகளுக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உகந்த இடம் இதுவே!

 ரிஷிகேசம் யோகாவின் உலகத் தலைநகரம்  என்று  கொண்டாடப்படுகிறது.

to be continued

Leave a comment

Leave a comment