தமிழ் மொழி பற்றி ஞான சம்பந்தர் போடும் புதிர் (Post No.14,737)

Written by London Swaminathan

Post No. 14,737

Date uploaded in London –  7 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விளங்கும் பிறை சடைமேல் உடை விகிர்தன்வியலூரை, 

தளம் கொண்டது ஓர் புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்

துளங்குஇல் – தமிழ் பரவித்தொழும் அடியார் அவர்,என்றும் 

விளங்கும் புகழ் அதனோடு,உயர்விண்ணும் (ம்) உடையாரே.

பல பாடல்களில் அவர் தன்னைத் தமிழ் ஞான சம்பந்தன் என்றும் தமிழ் விரகன் ன்றும் அழைத்துக்கொள்கிறார்.

****

தமிழுக்கு எத்தனை பெயர்கள் ? என்று பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரை எழுதினேன். இப்பொழுது ஞானசம்பந்தரின்  முதல் திருமுறையை மீண்டும்  படிக்கத் துவங்கியபோது அவர் போடும் புதிர்களைக் கண்டேன் . நமது காலத்தில் தமிழையே மூச்சாகக்கொண்டு வாழ்ந்தவர் பாரதியார்; ஆனால் அவருக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஞானசம்பந்தருக்கும் தமிழே மூச்சு என்று சுந்தரமூர்த்தி நாயனார் சொன்னதை நாம் அறிவோம். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் என்று அவர் புகழ்ந்தார் .

புதிர்கள் என்ன ?

தேவார முதல் திருமுறையில் ஞானசம்பந்தர்  வண்டமிழ் , தேன் நேர் ஆர் தமிழ், இன்றமிழ் , ஞானத்தமிழ் , தமிழ் மாலை என்றெல்லாம் பல பதிகங்களில் சொல்லிவிட்டு கலை மலி தமிழ் , படமலி தமிழ்  என்று இரண்டு பதிகங்களில் சொல்கிறார்

இவற்றில் தமிழ் மாலை என்பதை ஆண்டாளும் முப்பதாவது திருப்பாவையில் செப்பியதை எல்லோரும் அறிவார்கள் .

சம்பந்தருக்கு சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாணிக்கவாசகர் தண்ணார் தமிழ் (அளிக்கும் தென் பாண்டி நாட்டானே) என்று சொன்னார் .

சம்பந்தர் சொன்ன தேனுக்கு நிகரான தமிழ் என்றால் புரிகிறது; கலை மலி  தமிழ் என்று அவர் என் சொன்னார் ? ஏனெனில் தமிழ் மொழியில் ஆடல் பாடல் சோதிடக்கலைகள் பற்றி நிறைய இருப்பது அவருக்குத் தெரியும் ; அவருக்குப்பின்னர் வந்த வரத்தருவா ர் போன்றோர் ஆய கலைகள் அறுபத்து நான்கு  என்று சொன்னதால் நமக்கு 64 கலைகள் பற்றித் தமிழர்களும் அறிந்திருந்தது தெரிகிறது. இந்த 64 கலைகளை பெண்கள் படிக்க வேண்டிய சிலபஸில் காம சூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் சொல்லியிருக்கிறார் ; அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். கரிகாற் சோழன் அவைக்கள புலவர் மதுரைக்கு வந்து ராஜ சேகர பாண்டியனைப் பார்த்து எங்கள் கரிகாற்சோழனுக்கு 64 கலைகள் தெரியும்; உங்களுக்குத் பரதக் கலை தெரியுமா? என்று சவால் விட்டவுடன் அவர் இறைவனிடம்   மன்றாடி வெள்ளியம்பலத்தில் மன்றாடியவனை, கால் மாறி ஆட வைத்ததாக பரஞ்சோதியார் எழுதுகிறார் ஆகவே கலை மலி  தமிழ் என்பது பொருத்தமே.

தேவாரத்தில் முதல் திருமுறையில் சம்பந்தர் பயன்படுத்திய மேலும் சில சொற்கள்:-

பல ஓசைத் தமிழ் – வல்லோசை,மெல்லோசை,இடையோசை முதலிய வேறுபாடுகளை உடைய தமிழ்

குன்றாத் தமிழ்-  அருள் அல்லது மதிப்பு என்றும் குறையாத மொழி.

அது என்ன படமலி தமிழ் ?

இதற்குப் பொருள் எழுதியோர், பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பேசுகின்றனர்

திருவிடைமருதூர் பதிகத்தில் வரும் படம் மலி தமிழ் என்பதற்கு தருமபுரம் வெளியிட்ட பதிப்பில் படம் மலி தமிழ்= படமெடுத்தாற்போலச் சிறந்த தமிழ் என்று இருக்கிறது .

இன்று நான் ஒரு மாணவனிடம் சொன்னால் சார், எந்த சினிமாப்படம் போல என்று சொல்லுங்கள் சார்? என்பான். ஒரு பெரியவரிடம் சொன்னால் , பாம்பு படம் எடுத்தாற்போல அ கானதா , ஐயா? என்று கேட்பார். .பத்திரிகையாரிடம் சொன்னால் இந்தப் படம் எந்தப் போட்டோவைப் போல? என்று கேட்பார்  ஒரு கவிஞரிடம் சொன்னால் சித்திரம் போல சொற்சித்திரங்கள் நிறைந்த மொழி தமிழ் என்பார். 

வர்த்தமானர் தேவாரப்பதிப்பில் இச்சொல்லுக்குப் பொருள் தரப்படவில்லை. சொல் ஓவியமாக’ என்று சைவம் இணையதளத்தில் உள்ளது .With wordy pictures என்று ஆங்கிலத்தில் உள்ளது. ‘ அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

****

இசை மலி தமிழ் – இசை மலிந்தபாடல்கள் உள்ள மொழி

செந்தமிழ் – செம்மையான மொழி ; சிறந்த மொழி

வண்டமிழ் = வளமான சொற்களுடைய மொழி

ஒண்டமிழ் – ஒளி போல  பிரகாசமான

தண்டமிழ் – குளிர்ச்சி மிக்க

தனித்தமிழ் – ஒப்பற்ற ,உவமை சொல்ல முடியாத

தெய்வத்தமிழ், ஞானத்தமிழ் – அருட்கவிகள் உடைய பாக்கள் நிறைந்த

இன்றமிழ் – இனிய , என்றுமுள்ள தமிழ்

கன்னித்தமிழ் – என்றும் புதுமை ,இளமையோடு திகழும்

****

தமிழுக்கு எத்தனை பெயர்கள்?  My Old Article

எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:–1094 ; தேதி ஜூன் 9, 2014.

தமிழுக்குத்தான் எத்தனை பெயர்கள்?

தெய்வத் தமிழ், செந்தமிழ், முத்தமிழ், கன்னித் தமிழ், தென் தமிழ், தேன் தமிழ், பழந்தமிழ், ஞானத் தமிழ், திருநெறிய தமிழ், அமுதத் தமிழ், அருந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் இசைத் தமிழ், தன்னேரிலாத தமிழ், இயற்றமிழ், தீந்தமிழ், இருந்தமிழ், நாடகத் தமிழ், பசுந்தமிழ், கொழிதமிழ், பாற்றமிழ், சொற்றமிழ், பைந்தமிழ் – இப்படி எத்தனையோ பெயர்களை உடையது நம் தாய்த் தமிழ்.

ஆயினுமிவைகளில் இன்று பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தும் பாடல்கள் தெய்வத் தமிழ் பாடல்களே! ஆழ்வார்களும் நாயன் மார்களும், மாணிக்கவாசகர் போன்ற அடியார்களும் பாரதி போன்ற தெய்வீகக் கவிஞர்களும் பாடிய பாடல்களே காலத்தை வென்ற கவிதைகளாக மிளிர்கின்றன. திரைப்படப் பாடல்கள் எல்லாம் நேற்று முளைத்து இன்று மறையும் காளான்கள் போல மறைந்து விடு கின்றன. அவைகளில் பொருள் பொதிந்த தத்துவப் பாடல்கள் மட்டுமே காலத்தை எதிர்த்து நீச்சல் அடிக்கின்றன. அவைகளையும் சற்று ஆராய்ந்தால் அவை ஒரு தெய்வீகக் கவிஞரின் கருத்துகளை சிறிது எளிமைப் படுத்திய பாடல்கள் என்பது புரியும்!!

இதோ தமிழைப் போற்றும் சில பெரியோர்களின் பாடல்கள்:ஞானத் தமிழ்

கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுள்தன்னை

நல்லுரை ஞான சம்பந்தன் ஞானத்தமிழ் நன்குணரச்

சொல்லிடல் கேடவல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்

செலுவர் சீரருளாற்பெற லாஞ்சிவ லோகமதே

திரு ஞான சம்பந்தர் 1-117-12

பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்

துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்

பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்

தன்மாலை ஞானத் தமிழ்.

நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்.

பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி பாடல் ௨௧௮௨

திருநெறிய தமிழ்

அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய

பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன்றன்னை

ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த

திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

முதல் திருமுறை

அருந்தமிழ்

அலைபுனல் ஆவடுதுறையமர்ந்த

இலைநுனை வேற்படை யெமிறையை

நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன

விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்

முதல் திருமுறை, சம்பந்தர்

கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது

அறியாது அருந்தமிழ்ப் பழித்தனன் அடியேன்

ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ் நின்று

வேண்டு மதுவினி வேண்டுவன விரைந்தே (பெருந்தேவபாணி)

செந்தமிழ்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறும் நல் உலகத்து

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

………….. ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே (பனம்பாரர் – பாயிரம்)

பிறந்த பிறவியிற் பேணியெஞ்செல்வன் கழலடைவான்

இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்

திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங்கூடுவரே

முதல் திருமுறை, சம்பந்தர்

செந்தமிழ்த்திறம் வல்லிரோ?

அந்திவானமும் மேனியோ? – (சுந்தரர் தேவாரம்)

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)தென் தமிழ்

தென் தமிழ் நன்னாட்டு தீது தீர் மதுரை

— சிலப்பதிகாரம்

வடதிசை மருங்கின் மன்னர்க்கெல்லாம்

தென் தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி

மண்தலை ஏற்ற வரைக — சிலப்பதிகாரம்

தென் தமிழ் உரைத்தோன் (கம்பன்)

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்

கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்

–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்தண்டமிழ்

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை (மணிமேகலை)

தள்ளாப் பொருள் இயல்பின்

தண் தமிழாய் வந்திலார்

கொள்ளார் இக்குன்று பயன் –(பரிபாடல் 9)

தண்டமிழ் நூற் புலவாணர்க்கோர் அம்மானே –(சுந்தரர்)

குழுவு நுண்தொளை வேயினும் குறிநரம்பு எறிவுற்று

எழுவு தண்தமிழ் யாழினும் இனிய சொற்கிளியே –(கம்ப இரா.அயோத்தி.சித்திர 28)

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை (மாணிக்கவாசகர், திருவாசகம்)

தன்னேர் இலாத தமிழ்

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ் — (தண்டி அலங்காரம்)பசுந்தமிழ்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து

பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை

மண்ணிடைச்சில இலக்கணவரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ – (திருவிளையாடல், நாடு.57)

முத்தமிழ்

எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்

முத்து முத்தமிழும் தந்து முற்றுமே –(கம்பன்)

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)

அலகிறந்தனை தலை சிறந்தனை

அருள் சுரந்தனை இருள் துரந்தனை

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை

ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை

( காசிக் கலம்பகம் )சொற்றமிழ்

மற்றுநீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை; நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார் — (பெரியபுராணம், சேக்கிழார்)

தமிழ்

தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென

வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ்

ஆனாப் பெருமை அகத்தியன்………………. (பன்னிருபடலம்)

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை

-யாபதியும்,கருணை மார்பின்

மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்

மேகலையும், சிலம்பார் இன்பப்

போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ

ளாமணியும் பொலியச் சூடி,

நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்

தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்

மொழியிருக்கச் சேக்கி ழாரின்

பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்

திரமிருக்கப் பகலே போன்று

ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்

குறளிருக்க, நமது நற்றாய்,

காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்

கனிபெருகக் கண்டி லோமோ !

-சுத்தானந்த பாரதியார்தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை (சிறுபாணாற்றுப்படை)

இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் (பிங்கலந்தை)

இன் தமிழ் இயற்கை இன்பம் (சிந்தாமணி 2063)

தமிழ் தழிய சாயலவர் சிந்தாமணி சுர.32)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமூலர் திருமந்திரம்)கடவுள் தந்த தமிழ்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி

நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

சாறு சுவை எனக் கூற நின்று இட்ட

ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே

ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்

கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் (பொய்கையார்)தமிழால் வைதாரையும் வாழவைப்போன் (கந்தர் அலங்காரம்-22, அருணகிரிநாதர்)

பாரதியார், பாரதி தாசன் ஆகியோரின் பொன்மொழிகள் பாரதி பற்றிய கட்டுரைகளிலும், பாரதியுடன் 60 வினாடி பேட்டி, பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி ஆகிய கட்டுரைகளிலும் காண்க.

—Subham—

Tags- தமிழுக்கு எத்தனை பெயர்கள் , தமிழ் மொழி , பெயர்கள், சம்பந்தர், புதிர், படமலி தமிழ் 

Leave a comment

Leave a comment