WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,387
Date uploaded in London – 2 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்!
எந்தச் செயலையும் யோசித்துச் செய்!
ச. நாகராஜன்
க்ருதஸ்ய கரணம் நாஸ்தி ப்ராகேவாத: பரீக்ஷியதாம் |
அவிசிந்த்ய க்ருதம் சர்வம் பச்சாத்தாபாய கல்பதே ||
செய்த ஒரு செயலை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. ஆகவே ஒரு செயலை முன்னதாகவே யோசித்துச் செய்ய வேண்டும். சரியான ஆலோசனை இன்றி செய்யப்படும் அனைத்துச் செயல்களுமே பின்னால் மன வருத்தத்திற்கு இட்டுச் செல்லும்.
க்ருதஸ்ய கரணம் நாஸ்தி ம்ருத்ஸ்ய மரணம் ததா |
கதஸ்ய ஷோஸனா நாஸ்தி ஹ்ரேதத் வேதவிதாம் மதம் ||
செய்த ஒரு செயலை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. இறந்தது மீண்டும் உயிர் பிழைத்து மரணத்தை அடைய முடியாது. எது இழக்கப்பட்டதோ அதை நினைத்து வருத்தப்பட முடியாது. இதுவே வேதத்தைக் கற்றறிந்தோரின் பார்வையாகும்.
கும்பம் நிர்மாதி சக்ரேண கும்பகாரோ ம்ருதா முவி |
ததைவ கர்மசூத்ரேண பலம் தாதா ததாதி ச ||
பூமியிலிருந்த களிமண்ணை எடுத்து தனது சக்கரத்தில் ஒரு குயவன் பானையைச் செய்கிறான். அதுபோலவே படைப்பானது (அதாவது விதியானது) கர்ம விதியின் படி கர்ம பலனைத் தருகிறது.
கும்ப: பரிமிதம்ப: பிபத்யசௌ கும்பசம்பவோப்மோதிம் |
அதிரிச்யதே சுஜன்மா கஸ்சித் ஜனகம் நிஜேன சரிதேன ||
ஒரு பானையானது குறிப்பிட்ட அளவே தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் கும்பத்திலிருந்து பிறந்த கும்பமுனியானவர் (அதாவது அகத்தியர்) முழுக் கடலையுமே குடித்து விட்டார். ஒரு நல்ல மகனானவன் தனது செயல்களால் தந்தையையே மிஞ்சுகிறான்.
கும்பா: பயோநிதிபயோஹரணப்ரவூத்தா
நித்யம் வஹந்தி கில யே விபலதமத்வம் |
சித்ரம் க்ஷணாதிஹ ததேகசமுத்பவேண
சந்தர்ஷிதா நிகில வாரிதிபானலீலா ||
கடலிலிருந்து நீரை எடுக்கப் பயன்படுத்தப்படும் பானையானது பயனற்ற விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், என்ன ஆச்சரியம், அதிலிருந்து பிறந்த ஒருவர் விளையாட்டு லீலையாக கடலையே குடித்து விட்டார்!
அகத்திய முனியைப் புகழ்ந்து பாடப்பட்ட சுபாஷிதம் இது!
குமுதேஷ்வதிகம் பாந்தி பதிதாஷ்சந்த்ரமய: |
அதிப்ரக்ருஷ்ட சீலேஷு குலேஷ்விவ சம்ருத்தய: ||
வெள்ளை நிற குமுத மலர்களின் மீது படும் சந்திர கிரணங்கள் அதன் பிரகாசத்தைக் கூட்டுகின்றன. அது போலவே மிக மிக ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்களின் நடத்தை மிக அதிகமாகப் பாராட்டப்படுகிறது.
**