டர்பா (DARPA) காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!(Post No.3059)

 darpa 2

Article Written S NAGARAJAN

Date: 14th  August 2016

Post No. 3059

Time uploaded in London :– 6-31 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

12-8-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!

.நாகராஜன்

 

darpa 3

“இனி மேல் பிறக்கப் போகிறவர்களுக்கு நல்லவர்களாக இருங்கள். நீங்கள் வந்து சேர்ந்த இடத்தை விடச் சிறந்ததான இடத்தை அவர்களுக்காக உருவாக்குங்கள். அவர்கள் உங்களுக்கு நன்றியுடைய்வர்களாக இருப்பார்கள்.” – பங்காம்பிகி ஹப்யரிமானா

 

 

செயற்கை அவயவங்களைத் தயாரித்து மூளை செயல்பாட்டுடன் அதை ஒருங்கிணைக்க வைத்த அதிசயத்தை மட்டும் டர்பா (அமெரிக்க இராணுவத்தின் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பப் பிரிவு) செய்யவில்லை.

 

 

எதிர்கால உலகை எப்படி அமைப்பது என்பதையும் அது திட்டம் தீட்டி வருகிறது – இராணுவ நோக்கில்!

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு என்பதில் அது காட்டும் அக்கறையே தனி!

ஒரு வினாடிக்கும் கீழான நேரத்தில் எந்த ஒரு மொழியையும் இன்னொரு  மொழியில் கூற வல்ல மொழியாக்கத் தொழில் நுட்பம் அதனிடம் இப்போது தயார்! அதி நவீனமான காண்டாக்ட் லென்ஸுகளையும் அது தயாரித்து விட்டது.

அடுத்ததாக அதன் கவனம் செயற்கை அறிவு மற்றும் ரொபாட் வீரர்கள் ஆகியவற்றின் பயன்பாடு தான்!

2045ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் (அல்லது எப்படி இருக்க வேண்டும்) என்பதை அது தீர்மானித்து விட்டது!

எதிர்காலத்தை நோக்கி என்ற பொருள் படும் ‘ஃபார்வேர்ட் டு தி ஃப்யூச்சர்’ (Forward to the Future) என்ற ஒரு வீடியோ தொடரை அது யூ டியூபில் அண்மையில் வெளியிட்டுள்ளது

அதில் டர்பாவைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் எப்படி தொழில்நுட்பம் இன்னும் 30 வருடங்களில் (அதாவது ஒரு தலைமுறையை முப்பது வருடங்கள் என்று கணக்கிடும் தற்போதைய கணக்கை எடுத்துக் கொண்டால், அடுத்த தலைமுறையில்) உலகை மாற்றப் போகிறது என்பதை விளக்குகின்றனர்.

 

 

இதில் முதல் அதிசயக் கணிப்பை வெளியிடுபவர் பாம் மெல்ராய் (Pam Melroy) என்னும் விண்வெளி விண்கல எஞ்ஜினியர், இவர் ஏற்கனவே விண்வெளியில் பறந்த விண்வெளி வீரரும் கூட.. இப்போது டர்பாவின் துணை டைரக்டர். தந்திர உத்திகளைக் கையாளும் பிரிவில் ட்ரோன்களை உருவாக்கும் பிரிவில் இவர் பணியாற்றி வருகிறார்.

 

 

இராணுவத்திற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட ‘வாம்பயர் ட்ரோன்ஸ்’ (Vampire Drones) என்று ஒரு திட்டம் உள்ளது. சூரிய ஒளியில் இந்த வாம்பயர் ட்ரோன் பறக்கும் போது அது இருப்பதே யாருக்கும் தெரியாது. மாயாஜாலமாகப் பறக்கும் பிசாசு ட்ரோன் அது. நமது குரலை இனம் கண்டு ஆணைகளை நிறைவேற்றும் செயற்கை அறிவைப் பயன்படுத்தும் ட்ரோன்கள் இப்போது தயாரிக்கப்படும் நிலையில் உள்ளன1 சிக்கலான பல காரியங்களை இந்த ட்ரோன்கள் ஒரே சமயத்தில் செய்யும்!

எம்பதடிக் சிஸ்டம்  (Empathetic System) என்று ஒரு அமைப்பு. இதில் ரொபாட்டுகள் போர் புரிய போர்க்களம் செல்லும், அங்கு அந்த வினாடியில் எதிரிகளில் யார் என்ன உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்., அவர்களது உடல் தகுதி, திறன் எப்படி  இருக்கிறது என்பதை இவை நன்கு கணித்து அதற்குத் தக போரிடும்! 2030இல் மனிதர்கள் போர்க்களம் செல்ல மாட்டார்கள். கைகலப்பிற்காக ரொபாட்டுகள் களத்திற்குச் செல்லத் தயாராகிவிடும்.

 

DARPA_Logo

 

அடுத்து ஸ்டெஃபானி டாம்ப்கின்ஸ் (Stefanie Tompkins) என்ற நிலவியல் நிபுணர், 2045இல் நேனோ தொழில்நுட்பம் உலகை ஆளும் என்று கூறுகிறார். இவர் டர்பாவின் இராணுவ அறிவியல் அலுவலகத்தில் டைரக்டராக இருப்பவர். கற்பனைக்கு அப்பாற்பட்ட மிகச் சிறிய உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்கிறார் இவர். இப்போதே செயற்கை அங்கங்கள் வந்ததைச் சுட்டிக் காட்டும் இவர் அந்த அங்கங்களின் கனம் சில அணுக்களின் கனம் தான் என்கிறார். காண்டாக்ட் லென்ஸ்  உணரவே முடியாத அளவு மெலிதாக இருக்கும்1 எதிர்கால உலோகங்கள் மிக மெலிதாக இருக்கும். ஆனால் அதே சமயம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் வலிமையுடன் இருக்கும் என்பது இவர் தரும் கணிப்பு.

ஜஸ்டின் சான்செஜ் (Justin Sanchez) என்பவர் மூளையியல் விஞ்ஞானி. டர்பாவின் உயிரியல் துறையில் பணியாற்றுபவர். இவர் கூறுவது : 2045இல் எண்ணத்தின் மூலமாக இயக்கப்படும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விடும். 2045இல் நண்பர்களும் உறவினர்களும் மூளையின் மூலமாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள  முடியும். (அதாவது டெலிபோன் உள்ளிட்டவை அவுட் ஆஃப் டேட்!)

எலக்ட்ரானிக் ஆர்கிடெக்சர் எனப்படும் மின்னணுவியல் கட்டிடத் தொழில்நுட்பம் வீட்டைக் கட்ட உதவும். நினைத்தால் எண்ணம் மூலமாகவே பல்புகள் எரியும். சிறிய சென்ஸர்கள் தனக்குள்ளேயே சக்தியைக் கொண்டிருப்பதால் வயர்கள், மின்சாரம் என்பதெல்லாம் அவுட் ஆஃப் டேட்!

எதிர்கால வீடுகளுக்கும் இன்றைய வீடுகளுக்கும் துளிக் கூட சம்பந்தம் இருக்காது. அறிவியல் வீடுகளில் அடுத்த தலைமுறை வாழத் தொடங்கும்!

 

துள்ளிக் குதித்து ஓடி வரும் தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்குச் சேவை செய்யுமா அல்லது அவர்களை ஆளுமா?

 

முப்பதே வருடங்கள், பொறுத்திருங்கள்! முடிவு தெரிந்து விடும்!!

 

Wallace_Carothers,_in_the_lab

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

அமெரிக்க இரசாயன நிபுணரான வாலஸ் ஹ்யூம் கரொதர்ஸ் (Wallace Hume Carothers 1895-1937) 1935ஆம் ஆண்டு நைலானைக் கண்டுபிடித்தார். அதைக் கண்டுபிடிக்க ஏழு வருடங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டிய்தாயிற்று. ஒரு சிறிய அதிர்ஷ்டமும் அவருக்குத் துணை செய்தது. நைலானைப் போன்ற ஒன்றை அவர் முதலில் தற்செயலாகக் கண்டு பிடிக்கவே, அதை மேம்படுத்தி தான் நினைத்தவாறு நைலானைக் கண்டுபிடித்தார்.

பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து செய்யப்பட்ட பட்டு காலுறைகளின் விலை மிக அதிகம். ஆனால் நைலான் சாக்ஸ்களோ விலை  மிகவும் குறைவு. நைலான் முதன் முதலில் அமெரிக்காவில் 1940ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி உபயோகத்திற்கு வந்தது. 50 லட்சம் காலுறைகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்க்கப்பட்டது! இரண்டாம் உலகப் போர் மூளவே நைலானுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது. பாராசூட்டுகளில் நைலான் பயன்படுத்தப்படவே அதன் மதிப்பு இன்னும் அதிகமானது.

தான் கண்டுபிடித்த நைலான் சந்தையில் இப்படி சக்கைப் போடு போட்டு விற்பனை ஆவதைப் பார்க்க வாலஸ் ஹ்யூமுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

மிக்க மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட அவர் 1937இல் சயனைடைச் சாப்பிட்டுத் தன் உயிரைப் போக்கிக் கொண்டார். அவரது மனைவி அப்போது கர்ப்பிணி. வாலஸ் இறந்த பின்னர் அவருக்கு மகள் பிறந்தாள்.

நைலான் என்ற பெயர் வரக் காரணம் டூ பாண்ட் நிறுவனத்தின் இரு தலைமையகங்களான நியூ யார்க் மற்றும் லண்டன் ஆகியவை இணைக்கப்பட்ட வார்த்தை (New York LONdon) என்று சொல்வது வழக்கம். ஆனால் உண்மை அதுவல்ல. அனைவராலும் சுலபமாகச் சொல்லும் வார்த்தை எது என்று கண்டு பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அமைத்த வார்த்தையே இது. ஆனால் இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களும் உண்டு. நுசில்க், வகாரா(வாலஸை கௌரவிக்கும் பெயர் இது) என்ற பெயர்களெல்லாம் பரிசீலிக்கப்பட்டு நைலான் என்ற பெயர் பின்னால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது நைலானின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 54 லட்சம் டன்கள் என்ற அளவையும் தாண்டி விட்டது!

நைலான் இன்று பயன்படாத இடமே இல்லை!

******

 

5 சம்ஸ்கிருத உணவும், 6 தமிழ் உணவும்! (Post No.3058)

adi 18 food

Written by london swaminathan

Date: 13th    August 2016

Post No. 3058

Time uploaded in London :– 18-29

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

boli

உணவில் சைவ உணவு, அசைவ உணவு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

 

குஜராத்தி உணவு, வங்காளி உணவு, தென்னிந்திய சமையல், வட இந்திய சமையல் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளால் உணவு கேள்விப்பட்டது இல்லை அல்லவா?

 

ஆனால் ஏதோ காரணத்தால் சம்ஸ்கிருத அறிஞர்கள் உணவை ஐந்து வகையாகவும், தமிழ் அறிஞர்கள் உண்வை ருசியின் அடிப்படையில் ஆறு வகையாகவும் பிரித்து இருக்கின்றனர்..

நளன், பீமன் போன்ற புகழ் பெற்ற புராண, இதிஹாச சமையல் நிபுணர்கள் “பஞ்ச பக்ஷ பரமான்னம்” படைத்ததாகப் படிக்கிறோம்.

 

பிராமணர்கள் வீட்டில் சாப்பிடுவோர் , அடடா! பஞ்சபக்ஷ பரமான்னம் கிடைத்தது என்பர். அவர்களே தமிழ் உணவு சாப்பிடும்போது அடடா! அறுசுவை உணவு என்பர்.

 

அது என்ன பஞ்ச பக்ஷ பரமான்னம்?

fruits 2

பக்ஷ்யம், போஜ்யம், சோஷ்யம், லேஹ்யம், பேயம் என்று ஐந்து வகையாக பிரித்ததற்குக் காரணம் அந்த உணவும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டவே.

 

1.பக்ஷணம் என்ற சொல் நம் எல்லோருக்கும் தெரிந்ததே; இது நொறுக்குத் தீனி வகை; கருக்கு முறுக்கென்று சப் தம் போட்டுச் சாப்பிடும் திட உணவுப் பொருட்கள். எடுத்துக் காட்டு: முறுக்கு, காராச் சேவை, காராபூந்தி

 

2.போஜ்யம்: போஜனம் (Bois in French) என்ற சொல்லும் தமிழர்களுக்குத் தெரிந்த சொல்லே. என்ன போஜனம் ஆயிற்றா? என்றால் சாப்பிட்டாகிவிட்டதா? என்று பொருள். அதாவது சாதம், சாம்பார், குழம்பு முதலியன. பெரும்பாலும் திட வடிவில் வாயில் எடுத்துப் போட்டுக் கொள்ளும்படி இருக்கும்.

 

 

3.லேஹ்யம்: இந்தச் சொல்லும் எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த சொல்லே; சித்த, ஆயுர்வேத வைத்தியர்கள் லேகியம் என்று சொல்லிக் கொடுத்தால் அதைக் கையில் வாங்கி நக்கிச் சுவைப்போம். ஆங்கிலச் சொல் LICK ‘லிக்’ (நக்கு) என்ற சொல்லும் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்த சொல்லே.

 

 

சோஷ்யம் என்ற வகை உணவுகள் உறிஞ்சிக் குடிக்க வேண்டிய பானங்கள். சக் SUCK (உறிஞ்சு) என்ற ஆங்கிலச் சொல் இதிருந்து பிறந்த சொல்லே. ரோஸ் மில்க் முதல் பட்டர்மில்க் (மோர்) வரை எல்லா பானங்களும் பாயசங்களும் இதில் அடக்கம்..

 

 

பேயம் என்பனவும் திரவ நிலையிலுள்ள உணவு வகைகளே. ஆனால் இவைகளை உறிஞ்சத் தேவை இல்லை. அன்னாந்து அப்படியே குடிக்கலாம். பால், தண்ணீர், நீர்மோர் போன்றவை.

 

கம்ப ராமாயண காலத்திலேயே ஸ்ட் ரா STRAW இருந்தது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். இலைகளின் காம்பிலுள்ள ஓட்டைகளைக் கொண்டு அவைகளை ஸ் ட் ரா போல தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கம்பன் தரும் தகவல்!

 jilebi, jangri

அறு சுவை உண்டி

பொருள்கள் திட நிலையில் இருக்கிறதா, திரவ நிலையில் இருக்கிறதா என்ற அடிப்படையில் சம்ஸ்கிருத வல்லுநர்கள் பிரித்தனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் சுவையின் அடிப்படையில் உணவு வகைகளை ஆறு பிரிவுகளாகப் பயன்படுத்தினர்.

 

அறு சுவை யாவை?

தித்திப்பு= இனிப்பு (சர்க்கரை, வெல்லம், கரும்பு, பழச்சுவை)

கைப்பு= கசப்பு ( பாகற்காய், வேப்பிலை)

புளிப்பு= புளியங்காய், மாங்காய், எலுமிச்சை

உவர்ப்பு= உப்புச் சுவை (உப்பு)

துவர்ப்பு= பாக்கு முதலியன தரும் ருசி

கார்ப்பு= காரம், உறைப்பு (மிளகாய், மிளகு)

 

தமிழர்கள் இதை 1200 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியமைக்கு நாலடியாரில் சான்றுளது.

 

அறுசுவையுண்டி யமர்ந்தில்லாளூட்ட

மறுசிகை நீக்கியுண்டாரும் — வறிஞராய்ச்

சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன்

றுண்டாக வைக்கற்பாற்றன்று

(நாலடியார் பாடல் 1)

fruit salad

அறு சுவை உண்டி = ஆறு சுவையுடைய உணவை

இல்லாள் அமர்ந்து ஊட்ட = பெண்சாதி அன்புடன் பரிமாற

மறு சிகை நீக்கி = மற்றொரு கவளத்தை  வேண்டா ம் என்று தள்ளி

உண்டாரும் = உண்ட செல்வர்களும்

வறிஞராய் = வறுமையுற்று

ஓர் இடத்துச் சென்று =  வேறு ஒரு இடத்துக்குப் போய்

கூழ் இரப்பர் எனில் = கூழை பிச்சையாக கேட்பார்களானால்

செல்வம் ஒன்று = செல்வம் என்கிற ஒரு பொருள்

உண்டு ஆக = நிலையாக இருப்பதாக

வைக்கல் பாற்று அன்று = வைக்க வேண்டாம் (நினைக்க வேண்டாம்)

 

செல்வம் நிலையாமை தலைப்பில் வரும் பாடல் இது.

 

ஆக 5 உணவு, ஆறு உணவு — எதைச் சாப்பிட்டாலும் வயிறு நிறையும்.

 

கண்ணனோவெனில் பகவத் கீதையில் உணவு வகைகளை மூன்றாகப் பிரிக்கிறார். சத்துவ குணம், ராஜச குணம், தமோ குணம் கொடுக்கும் உணவு எவையென்று செப்பியதை முன்னரே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.

 

–subham–

மனு ஸ்மிருதியில் மூன்று மர்மங்கள் – பகுதி 3 (Post No.3048)

BlackBuckAntelope

black buck antelope

Research Article Written by london swaminathan
Date: 10th August 2016
Post No. 3048
Time uploaded in London :– 17-12
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்! – Part 3

உலகின் முதல் சட்டப் புத்தகமாகிய மனு ஸ்ம்ருதி யாருக்காக எழுதப்பட்டது, எப்போது எழுதப்பட்டது என்பதெல்லாம் அந்த நூலிலேயே நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதில் மூன்று மர்மங்கள் இருக்கின்றன: கங்கை நதி மர்மம், சரஸ்வதி நதி மர்மம், கறுப்பு மான் மர்மம்.
ஒவ்வொன்றாகக் காண்போம்.

மனு சொல்கிறார்:–
இரண்டு தெய்வீக நதிகளான சரஸ்வதி, த்ரிஷத்வதி ஆகியவற்றின் இடையே இறைவனால் உருவாக்கப்பட்ட பூமி பிரம்மாவர்த்தம் எனப்படும் (வேத பூமி)
மனு 2-17
வேத பூமியை அடுத்துள்ள குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன நாடுகள் பிரம்மரிஷி தேசம் எனப்படும்.
மனு 2-19

 

25d24-talageri-rivers

எனது கருத்து:–

ஜீவ நதியான சரஸ்வதியைக் குறிப்பிடுவதால் அவர் நீண்ட நெடுங்காலத்துக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும். சரஸ்வதி ஆறு வற்றிப் போய் 5000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும் கங்கை நதியை விட்டுவிட்டு வேறு இரண்டு நதிகளை தெய்வீக நதிகள் என்று சொல்லுவதிலிருந்து இந்த நூல் வேத கால நூல் என்று தெரிகிறது. மேலும் ஒரு அதிசயமான ஒற்றுமை அவர் சொல்லும் பூமிகள், சிந்து சமவெளி நாகரீக பூமியாகும். ஆக வேத காலமும், சிந்து சமவெளி நாகரீகமும் ஒன்று என்று கருத இடமுண்டு.

கீழைக்கடல் முதல் மேலைக் கடல் வரையுள்ள, இரண்டு மலைகளுக்கு (இமயமும்,விந்தியமும்) இடைப்பட்ட பூமி, ஆர்யாவர்த்தம் எனப்படும்.
மனு 2-22

(ஆர்ய என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்திலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பண்பாடுடைய மக்கள், வடக்கில் இமய மலையில் வாழும் தவசீலர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது. இது கு றித்த எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க)

எங்கு கிருஷ்ண மிருகம் எனப்படும் கறுப்பு மான்ன்கள் காணப்படுகின்றனவோ அந்த இடமெல்லாம் யாக யக்ஞங்கள் செய்வதற்குரிய பூமி. அதற்கப்பாலுள்ள இடமெல்லாம் மிலேச்சர் (வெளிநாட்டுக்காரர், பண்பாடற்றவர்) பூமி.
மனு 2-23

வெளிநாட்டினர் சதி:–
மனு ஸ்மிருதியை மொழிபெயர்த்த வெளிநாட்டுச் சதிகாரகளும், அரைவேக்காடுகளும் வேண்டும் என்றே ஆரிய, மிலேச்ச என்ற சொற்களை அப்படியே வைத்துக்கொண்டனர். ஏனெனில் இரண்டுக்கும் இப்போது கெட்ட, தவறான பொருள் கையாளப்படுகிறது. இதை வைத்து மக்களைக் குழப்பலாம் என்பது அவர்கள் செய்த சதி.
மிலேச்ச (யவன) என்பதை அராபியர், ரோமானியர், கிரேக்கர் என்ற பொருளிலேயே 2000 ஆண்டுப் பழமையான பழந்தமிழ் இலக்கியமும் அதற்கு முந்தைய சம்ஸ்கிருத இலக்கியமும் பயன்படுத்துவதை உரைகளிலும், முதல் நூல்களிலும் காணலாம் (மிலேச்ச/ யவனர் பற்றிய எனது முந்தைய ஆய்வுக்கட்டுரைகளில் ஆதாரங்கள் உள).

 

ganges-map-simple

கங்கை நதி மர்மம்

சங்க இலக்கியத்தில் கங்கயின் புனிதத்தை தமிழர்கள் போற்றுவர். இது 2000 ஆண்டுக்கு முந்தியது. ஆனால் மனுவோ கங்கையின் புனிதம் பற்றிப் பேசாமல் சரஸ்வதி நதியின் புனிதத்தைப் போற்றுகிறார். ஏன்?

சரஸ்வதி வற்றி, மறைந்து போன பின்னர்தான் கங்கையின் புகழ் பரவத் தொடங்கியது என்று கொள்ளலாம் அல்லது உலகின் முதல் நீரியல் விஞ்ஞானி, எஞ்சினீயர் பகீரதன் கங்கையை, இப்போதுள்ள கங்கைச் சமவெளிக்குப் திசை திருப்பிய பின்னர் அதன் புகழ் பரவி இருக்கலாம். அதற்கும் முந்தையது சரஸ்வதியும் வேத காலமும்.

பகீரதன் யார்?
ரிக் வேதம் குறிப்பிடும் வைவஸ்வத மனு எட்டாவது மனு. அவருக்கு அடுத்து வந்தவன் இக்ஷ்வாகு. அவனுடைய சூரிய குலத்தில் 54 ஆவது மன்னன் பகீரதன். மாபெரும் பொறியியல் வல்லுநன். பல மன்னர்கள், கங்கையை திசை திருப்பி நீர்ப்ப சனம் செய்ய முயன்றனர்; தோல்வியுற்றனர். ஆனல் பகீரதன் தனது எஞ்சினீயரிங் திறமையால கங்கையத் திசை திருப்பினான். இந்தியாவின் பழங்கால எஞ்சினீயர்கள் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் முழு விவரம் காண்க.

இந்த பகீரதன் இட்சுவாகுவுக்கு 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவன். அப்போதுதான் கங்கையின் பெருமை உலகிற்குத் தெரிந்தது என்றும் கொள்ளலாம். ஆக மனு , கங்கயின் பெயரைச் சொல்லா ததன் மர்மம் துலங்கிவிட்டது. மனுச் சக்ரவர்த்தி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். இட்சுவாகுவோ சிந்து சம்வெளிக்கும் முன்னர் வாழ்ந்தவன். அதியமானை கரும்பு கொண்டுவந்தவனின் வழித்தோன்றல் என்று அவ்வையார் புகழ்வது ஏன்? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இது பற்றி விளக்கியுள்ளேன்.

 

yavana-in-bharhut

மிலேச்சனின் படம்

கறுப்பு மான் மர்மம்

இரலை என்றும் கலைமான் என்றும் போற்றப்படும் கறுப்புமானுக்கு மனு கொடுக்கும் முக்கியத்துவம் வியப்புக்குரியது. அது இருக்கு மிடத்தில்தான் இந்துக்கள் வாழலாம் என்கிறார். ஆனால் கறுப்பு மானோ இன்றும் இந்தியா, நேபாளம் ஆகிய இடங்களில் உள்ளது ஆக தமிழ் நாடும் யாக பூமியே, வேத பூமியே. பல் யாக சாலை முது குடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட பெரு நற்கிள்ளி முதலிய தமிழ் மன்னர்கள் இதற்கு எடு த்துக்காட்டு.

இதைவிட அதிசயம்! சிந்து சமவெளியில் இந்த வகை மானின் எலும்புகள் கா ப்படுகின்றன. வேத கால முனிவர்கள் இதை ஆஸ்ரமங்களில் வளர்த்ததை புற நானூறும், காளிதாசன் காவியங்களும் விதந்து
ஓதுகின்றன. ஆகவே சிந்து சமவெளியில் வேத முனிவர்கள் ஆசிரமங்களை வைத்து மான்களை வளர்த்தமையும் வெள்ளிடை மலையென விளங்கும்!
–Subham–

 

கம்ப ராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’ (Post No.3033)

Big-Crunch-to-Be-the-

Written by london swaminathan

Date: 4th    August 2016

Post No. 3033

Time uploaded in London :–  6-00 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

From the book, “Life and Labour of The People of India” by Abdullah Yusuf-Ali, Barrister at Law, Year 1907, London)

 

 

வால்மீகி என்னும் ஆதி கவி சம்ஸ்கிருத மொழியில் எழுதிய ராமாயணத்தை கம்பன் தமிழில் எழுதியதை நாம் அறிவோம்.

 

காஸ்மாலஜி/ COSMOLOGY-யை பெரும்பாலோர் அறியோம். காஸ்மாலஜி என்றால் என்ன? பிரபஞ்ச இயல். அதாவது இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? அதன் அமைப்பு என்ன? அதன் தற்போதைய நிலை என்ன? என்பனவற்றை ஆராயும் ஒரு துறை. முதலில் பட்டாணி அளவுக்கு இருந்த பிரபஞ்சம் திடீரென  வெடித்து (BIG BANG) பல்வேறு உலகங்களை உருவாக்கி, இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது என்பது இதில் விளக்கப்படுகிறது.

bigbang_expansion

இப்படி விரிந்துகொண்டே போக்கும் பிரபஞ்சம் ஒரு நாள் சுருங்கிவிடும் (BIG CRUNCH-பிக் க்ரஞ்ச்) என்று இப்பொழுது எழுதத்துவங்கியுள்ளனர். ஆனால் இதை கம்பனும் அவனுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புராண முனிவர்களும் செப்பிவிட்டனர்.

 

உலகில் முதல் முதலில் காஸ்மாலஜி பற்றிப் பாடியவர்கள் ரிக்வேத முனிவர்களே! ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 129, 130 ஆகிய இரண்டு மந்திரங்களும் (நாசதீய சூக்தம்) இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தைக் கண்டு வியக்கும் பாடல்கள் —  விளக்கும் பாடல்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இப்படி ஒரு அருமையான கவிதை இருப்பதைப் பற்றி நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகின.

 

 

நாம் கம்ப ராமாயணப் பாடலுக்கு வருவோம்:–

 

ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி

உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி

சென்று ஆசறும் காலத்து அந்நிலையது ஆகி

திறத்து உலகம்தான் ஆகி செஞ்சவே நின்ற

நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே எங்கள்

நவைதீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி

நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே

–ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 

பொருள்:–

 

ஆதிகாலத்தில் ஒன்றாக இருந்து, பின்னர் பலவேறு (BIG BANG) வடிவங்களாகி, அவ்வடிவங்களில் அறிவும், உயி ரும் வெவ்வேறாகி, ஊழிக் காலம் மஹா பிரளயத்தால் முடியும் போது, முதலில் இருந்த ஒன்றாகும் நிலையைப் பெற்று (BIG CRUNCH) , மீண்டும் படைப்பு நிகழும்போது பலவகைப்பட்ட உலகங்களாகி, செம்மையாய் நின்ற ஞானக் கொழுந்தே! நீ புண்ணிய செயல்களை மேற்கொண்டவர்களைக் காக்கின்றாய், பாவம் செய்பவர்களை அழிக்கின்றாய் (பரித்ராணாய சாதூனாம், விநாசாய ச துஷ்க்ருதாம் – கீதை 4-8). நிலையில்லாத அப் பாவமும் நீ படைத்தது அல்லவா?

 

big-crunch-theory-big-bounce

உலக விஞ்ஞானிகள் சொல்லாததை எல்லாம் இந்து மதம் முன்னரே சொல்லிவிட்டது. நாம் சொன்ன பேரண்ட வெடிப்பு, பேரண்டச் சுருக்கம் (மஹா பிர்ளயம்) ஆகியவற்றை பிரபஞ்சவியல் (COSMOLOGISTS) அறிஞர்கள் இப்போது ஒப்புக் கொண்டனர். இனி இது சுழற்சியாக நடை பெறும் ஒரு செயல் பாடு (CYCLICAL) என்பதையும் ஒப்புக்கொள்வர்!

 

–subham—

 

நாசதீய சூக்தம், காஸ்மாலஜி, ரிக் வேதம்,பேரண்ட வெடிப்பு, சுருக்கம், மகா பிரளயம்

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10 (Post No.3022)

nps2000buddha_colored

Article Written S NAGARAJAN

Date: 31 July 2016

Post No. 3022

Time uploaded in London :– 5-38 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10

ச.நாகராஜன்

 

coin buddha

ஆலயத்தை புனருத்தாரணம் செய்வதற்காக பல காத தூரம் நடந்து ஹேமு மரம் என்ற இடத்தை ஸு யுன் அடைந்தார்.

அங்கு செல்லும் சாலை மிகவும் கரடு  முரடாக இருந்தது. ஒரே வளைவுகள். பல வருடங்களாக அது கேட்பாரற்று கவனிப்பாரற்று இருந்திருக்கிறது போலும்!

அங்கிருந்த உள்ளூர்வாசிகள் அங்கு ஒரு துறவி இருக்கிறார் என்றும் தனியாக தான் ஒருவராகவே அந்த சாலையை அவர் சீர் படுத்தி வருகிறார் என்றும் ஸு யுன்னிடம் கூறினர்.

அவர் எந்த ஒரு நன்கொடையையும் கேட்பதில்லை என்றும் தான் உயிர் வாழத் தேவையான குறைந்த ப்ட்ச உணவை  மட்டும் அவர்களிடமிருந்து பெற்று வருகிறார் என்பதையும் ஸு யுன் அறிந்தார். பல பத்து ஆண்டுகளாக அந்த நீண்ட நெடுஞ்சாலையை அவர் சீர் படுத்தி வருகிறாராம்!

இப்போது 90 சதவிகிதம் அந்தப் பணி முடிந்து விட்டதாம்!

அங்குள்ள ஆலயத்தை உள்ளூர்வாசிகள் புனருத்தாரணம் செய்வதாகச் சொன்ன போதும் அவர் தன் வேலையான சாலைப் பணியில் ம்ட்டுமே ஈடுபட்டு வந்தாராம்.

அவரைப் பார்க்க ஸு யுன் விரைந்தார்.

ஒரு மண்வெட்டி கூடையுடன் அந்தத் துறவி சாலையில் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கூப்பிய கரங்களுடன் ஸு யுன் அவரிடம் விரைந்து சென்றார். நமஸ்கரித்தார்.

அவர் ஸு யுன்னைக் கண்டு கொள்ளவே இல்லை.. ஸு யுன்னைப் பார்த்த அவர், எதுவும் பேசாமல் தனது தங்குமிடமான ஆலயம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்.

ஆலயத்தில் தன் கருவிகளை வைத்த அவர் அமர்ந்தார். ஒன்றுமே பேசவில்லை. அவர் எதிரேயே ஸு யுன்னும் அமர்ந்தார்.

அடுத்த நாள் காலையில் அரிசியைக் களைந்து உலையில் போட்ட போது ஸு யுன் அடுப்பை மூட்டினார்.

சாப்பிடும் போது அவர் ஸு யுன்னை அழைக்கவில்லை. ஸு யுன்னோ தனக்கு வேண்டிய உணவைத் தானே எடுத்துக் கொண்டு உண்டார்.

மண்வெட்டியை  எடுத்துக் கொண்டு அவர் சாலையை நோக்கி விரைய ஸு யுன்னும் கூடையை எடுத்துக் கொண்டு அவர் பின்னால் போனார்.

சாலையில் பள்ளங்கள் சீராக்கப்பட்டன. வேலை தொடர்ந்தது.

 

இப்படியாக 10 நாட்கள் கழிந்தன. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

ஒரு நாள் மாலை ஆலயத்திற்கு வெளியே இருந்த பாறை ஒன்றில் அமர்ந்த ஸு யுன் தியானம் செய்ய அமர்ந்தார்.நேரம் கழிந்தது.

ஆனால் ஸு யுன் உள்ளே செல்லவில்லை. வயதான அந்த துறவி பின்னால் வந்து கூப்பிட்டார்: “அங்கே நீங்கள் என்ன செய்து  கொண்டிருக்கிறீர்கள்?”

கண்ணை மெதுவாகத் திறந்து பார்த்த ஸு யுன் பதில் கூறினார் இப்படி:-“ நான் சந்திரனைப் பார்க்க விரும்பி இங்கு அமர்ந்திருக்கிறேன்.”

 

“சந்திரன் எங்கே இருக்கிறது?”

“அற்புதமான ரோஜா வண்ண ஒளியாக இருக்கிறது!”

அவர் கூறினார்: “பொய்மைக்கு இடையில் மெய்யை அரிதாகவே தான் காண முடியும்!  வானவில்லைப் பார்த்து பிரகாசமான ஒளி என்று தவறாக நினைத்து விடக் கூடாது!”

ஸு யுன் பதில் கூறினார்:” என்னைத் தழுவும் ஒளி இறந்த காலமும் அல்ல; நிகழ்காலமும் அல்ல, இடையறாமல் வரும் அது எதிர்மறையானதும் அல்ல; உடன்மறையானதும் அல்ல!”

 

அதைக் கேட்ட அவர் கலகலவென்று சிரித்தார்.

ஸு யுன்னின் கரங்களைப் பற்றினார். “மிகுந்த நேரம் ஆகி விட்டது. ஆலயத்தினுள் செல்ல்லாம்” என்றார் அவர்.

மறு நாள் உற்சாகமாக அவர் பேசத் தொடங்கினார்.

அவர் பெயர் சான் ஸியூ.24 வயதிலேயே அவர் உலகைத் துறந்து விட்டார்.  ஜின் சான் மடாலயத்தில் சேர்ந்த அவர் தன் அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்தினார்.

பின்னர் சீனாவில் உள்ள புனித மலைத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

திபெத்திற்குச் சென்ற அவர் பர்மா வழியே மீண்டும் சீனா திரும்பினார்.

 

இங்குள்ள சாலை மிக மோசமாக இருந்ததைப் பார்த்த அவர் அங்குள்ள மக்கள் மீது மிகுந்த இரக்கம் கொண்டார். தரணிம்தார போதிசத்துவரால் நிர்மாணிக்கப்பட்ட அந்த சாலையை சீர்திருத்த கங்கணம் பூண்டார்.

பல பத்து வருடங்கள் ஓடி விட்டன. சாலை சீரடையும் பணி முடியும் தருவாய் வந்து விட்டது. இப்போது அவருக்கு வயது 83!

 

எந்த ஒரு நல்ல நண்பரையும் அவர் இதுவரை காணவில்லை.

நல்ல கர்ம பலன்களைக் கொண்ட ஸு யுன்னை இப்போது அவர் கண்டு விட்டார்.

ஆகவே மனம் திறந்து தன்னைப் பற்றி இது வரை யாரிடமும் கூறாத விஷயங்களை ஸு யுன்னிடம் அவர் கூறினார்.

ஸு யுன்னும் மகிழ்ந்து தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறினார்.

மறு நாள் காலை. பொழுது புலர்ந்தது. காலை உணவை அருந்தி விட்டு ஸு யுன் விடை பெற்றார். இருவரும் கலகலவெனச் சிரித்தனர். சிரித்தவாறே ஸு யுன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

-தொடரும்

உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்! (Post No.3017)

Gallant

Article Written S NAGARAJAN

Date: 29 July 2016

Post No. 3017

Time uploaded in London :– 6-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

29-7-16 பாக்யா  இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்!

.நாகராஜன்

vision

மனதில் நினைப்பதை அறிவது என்பது குழந்தைகளின் மாயாஜாலக் கதைகளிலிருந்து இப்போது நிஜமாக ஆகிறது’                    – டெய்லி மெயில் பத்திரிகை                 

உலகம் மாறுகிறது! வேகமாக!! விளையாட்டாக முன்பு பேசியதெல்லாம் வினையாக ஆகிறது.

‘ஆமாம், இவரு நாம நினைச்சதை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாரில்லை!’ என்று கேலியாகப் பேசியதெல்லாம் பழைய கதையாக ஆகி விடப் போகிறது.

ஒருவர் என்ன நினனக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமில்லை. அதை திரையிலும் பார்க்க முடியும், இனிமேல்!

அறிவியல் காட்டும் அற்புதங்களில் இதுவும் ஒன்றாகச் சேரப் போகிறது!

அமெரிக்காவில் புரட்சிகரமான கண்டுபிடிப்பு வரிசைகளில் ஒன்றாக நினைத்ததைப் படமாகக் காட்டும் முயற்சி வெற்றியை நோக்கி பீடு நடை போடுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகளின் குழு ஒன்று, இரு தன்னார்வலர்கள்  வீடியோ ஒன்றைப் பார்க்கும் போது அவர்களின்  மூளைகளை ஸ்கேன் செய்து அந்த முடிவுகளை வைத்து அவர்கள் பார்த்தனவற்றை மறுபடியும் உருவாக்க முய்னறு வெற்றி பெற்றுள்ளது!

இந்தக் குழுவினரின் கண்டுபிடிப்பு இப்போது துல்லியமாக இல்லை என்றாலும், இந்த உத்தியின் மூலமாக ஒருவர் மனதில் நினைப்பதைச் சித்திரமாக திரையில் படமிட்டுக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து விட்டது!

ஒரு மனிதனை நினைத்த போது விஞ்ஞானிகள் ஒரு மனிதனின் படத்தையும் அவன் பின்னணியில் ஆகாயத்தையும் உருவாக்க முடிந்திருக்கிறது.

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாக் காலண்ட் (Professor Jack Gallant) இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

 

how it works

“நீங்கள் பார்க்கும் எதையாவது விவரிக்க வேண்டுமென்றால் இப்போது வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அல்லது அதைப் படமாக வரைந்து காட்ட வேண்டியிருக்கிறது. இது சில சமயம் சரிப்பட்டு வருவதில்லை. இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப உத்தியானது குற்றம் ஒன்றைப் பார்த்த ஒருவர் என்ன பார்த்தார் என்பதைத் துல்லியமாக மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர உதவும்” என்கிறார் அவர்.

இது பற்றிய ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் இந்த சோதனை எப்படி மூளை ஸ்கேன்கள் ஒருவரின் உள்ளார்ந்த எண்ணங்களைப் படமாகக் காட்ட முடியும் என்பதற்கான முத்தாய்ப்பான சோதனையாக அமைந்துள்ளது.

இன்று சர்வ சாதாரணமாக மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் (Functional magnectiv resonance imaging – fMRI) ஸ்கேனரை வைத்து அமெரிக்க குழுவினர் இரண்டு தன்னார்வலர்கள் ஒரு வீடியோவைப் பார்க்கும் போது  அவர்களின் மூளைகளை ஸ்கேன் செய்ததன் விளைவே இந்த சோதனையை வெற்றியாக்கியது.

ஒரு கணினியில் அவர்கள் தங்கள்  முடிவுகளை ஏற்றினர். அதில் அவர்கள் நினைத்த எண்ணங்களுக்கான வண்ணங்கள், உருவங்கள், இயக்கங்கள், செயல்பாடுகளில் ஏற்படும் பாட்டர்ன் எனப்படும் ஒழுங்குகள் ஆகியவற்றைத் தொகுத்தனர்.

பிறகு கம்ப்யூட்டர் மென்பொருளில் தன்னார்வலர்கள் இன்னொரு வீடியோவைப் பார்த்து அதனுடைய ஸ்கேன் முடிவுகளை ஏற்றினர்.

இப்போது கணினியிடம் அவர்கள் பார்த்ததைப் படமாக வரையுமாறு ஆணையிட்டனர்.

கணினி தந்த முடிவைப் பார்த்த பேராசிரியர் காலண்ட் அசந்து போனார்.

அவரது முடிவுகள் இன்னும் பரம இரகசியமாக உள்ளன என்றாலும் அவர் பெற்ற வெற்றியை உலகம் அறிந்து விட்டது!

துல்லியத்திற்கு மிக நெருங்கியவையாக கணினியில் படங்கள் அமைந்துள்ளன!

இன்னொரு சோதனையில் காமடி நடிகர் ஸ்டீவ் மார்டின் வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்ததை அப்படியே கணினி சித்தரித்துப் படமாக்கிக் காண்பித்தது. ஆனால் அவர் முகத்தைக் காண்பிக்க முடியாமல் அது திணறியது. ஆனால் எதிர்காலத்தில் அதனுள் உள்ளிடும் தகவல்கள் துல்லியமாக் அனைத்தையும் காட்டும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து மகிழ்கின்றனர்.

jack-gallant-engineering-thoughts

இன்னொரு சோதனையில் அதில் கலந்து கொண்டவர்களிடம் வானத்தின் பரப்பையும் அதில் விமானம் ஒன்று பறந்து செல்வதையும் காண்பித்தனர்.

கணினி வானத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. விமானத்தை அதனால் படம் பிடித்துக் காட்ட முடியவில்லை. ஆனால் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டால் எதையும் கணினி காண்பிக்கும் என்பது உறுதி.

‘நீங்கள் நினையுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பிடித்துத் திரையில் காட்டுகிறோம்’, என்கின்றனர் விஞ்ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடன்!

இந்த் புது விதமான உத்தி உலகில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை நினைத்தாலேயே பிரமிப்பு ஏற்படுகிறது, இல்லையா!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜப்பானில் பிறந்து அமெரிக்க  குடிமகனாக இன்று வாழ்பவரான ஷுஜி நகாமுரா (Shuji Nakamura – தோற்றம் 22-5-1954) ஒரு பெரிய விஞ்ஞானி. இயற்பியலில் 2014ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பெற்றார். லைட் எமிட்டிங் டையோடுகளைச் சுருக்கமாக நாம் இப்போது எல் இ டி (LED) என்கிறோம். ப்ளூ எல் இ டி கண்டுபிடிப்பிற்காக நகாமுரா நோபல் பரிசைப் பெற்றார்.

1979 ஆம் ஆண்டு மாஸ்டர் டிகிரியைப் பெற்ற அவர் டோகுஷிமா என்ற சிறிய நகரத்தில் இருந்த  நிசியா கெமிக்கல் (Nichia chemical) என்ற கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பலத்த போட்டியின் காரணமாக அந்த கம்பெனி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

 

ucsb_nakamura

1988இல் நகாமுரா நிறுவனத்தின் உரிமையாளரான் ஒகவா நொபுவோவிடம் நேரடியாகச் சென்றார். 30 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தருவதோடு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் ஆராய்ச்சி செய்ய அனுமதியையும் வேண்டினார். அவரே ஆச்சரியப்படும்படி உரிமையாளர் சரி என்று சொல்லி விட்டார்,

நகாமுரா தனது இடைவிடாத ஆராய்ச்சியினால் ப்ளூ எல் இ டிக்களை உருவாக்கும் உத்தியைக் கண்டு பிடிக்கவே கம்பெனி பெருத்த லாபம் அடைந்தது. கற்பனைக்கு எட்டாத அளவு லாபம்! ஆனால் நிறுவனமோ நகாமுராவைக் கண்டு கொள்ளவே இல்லை.

2000ஆம் ஆண்டில் நிறுவனம் நகாமுராவிடம் தனது கண்டுபிடிப்பை யாரிடமும் சொல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.

கலிபோர்னியா பல்கலைக் கழகமோ இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று நகாமுராவுக்கு அறிவுரை வழங்கியது.

நகாமுராவின் மீது நிசியா, வணிக ரகசியங்களை வெளியிடுவதாக வழக்கு ஒன்றைத்  தொடர்ந்தது. நகாமுராவும் பதில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

1930 லட்சம் டாலரை (ஒரு டாலர் சுமார் 67 ரூபாய்கள்) த்னது கண்டுபிடிப்பிற்கான தொகையாக நகாமுரா கேட்டார். கம்பெனி வழங்கியதோ வெறும் 180 டாலர்கள் தான்!

இறுதியாக 81 லட்சம் டாலர் தர கம்பெனி சம்மதித்தது. நகாமுராவிற்கு இதில் ஏமாற்றம் தான்! என்றாலும் வெறும் 180 டாலரிலிருந்து 81 லட்சம் டாலரைத் தர கம்பெனி சம்மதித்ததை வழக்கின் வெற்றியாக அவர் ஏற்றுக் கொண்டார்.

உலக வரலாற்றில், குறிப்பாக ஜப்பானிய வணிக நிறுவன வரலாற்றில் இந்த வழக்கு குறிப்பிடத்தகுந்த வழக்காக அமைந்து விட்டது.நகாமுரா இன்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மட்டுமல்ல; பெரிய பணக்காரரும் கூட!

*********

 

 

உருக்கமான உண்மைக்கதை; யாதும் ஊரே யாவரும் கேளிர்! (POST No.3016)

baby kiran

Written  by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3016

Time uploaded in London :–  17-30

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

எந்த ஊரும் எமது ஊரே; எல்லோரும் உறவினரே – என்று புறநானூற்றில் கனியன் பூங்குன்றன் செப்பினான். உலகமே ஒரு குடும்பம் = வசுதைவ குடும்பகம் – என்று சம்ஸ்கிருத புலவர்கள் இயம்பினர். ஆனால் இந்தக் கருத்து உலகம் முழுதும் பல மொழிகளில் உளது; செயல்முறையில் இதைப் பின்பற்றுவோரும் உளர்.

 

லண்டனில் தினமும் இலவசமாக விநியோகிக்கப்படும் METRO மெற்றோ பத்திரிகையில் ஒரு உருக்கமான உண்மைக் கதை இன்று வெளியாகியது. இதோ அந்த உண்மைச் சம்பவம்.

joe and baby

“1994 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-ஆம்தேதி.

அதாவது 22 ஆண்டுகளுக்கு முன்னர், ஜோ கேம்ப்பெல் என்ற இளைஞர் கிழக்கு லண்டனில் ஒரு டெலிபோன் ‘பூத்’துக்குப் போனார். கீழே ஒரு பொட்டலம் கிடந்தது. யாரோ உருளைக் கிழங்கு வதக்கலை (சிப்ஸ்) போட்டுவிட்டனர் என்று அதை ஒதுக்கித் தள்ளியபோது அது பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தை என்பதை அறிந்தார். உடனே போலீசுக்குப் போன் செய்தார்.

 

அந்தக் குழந்தை ஒரு பெண் குழந்தை. இப்போது அவள் பெயர் கீரன் ஷேக்.

 

பெற்ற மனம் சும்மா இருக்குமா? அந்தக் குழந்தையைப் பொட்டலம் கட்டிப்போட்ட தாயும் சமாரிட்டன்ஸ் (Samaritans) என்னும் அமைப் புக்குப் போன் செய்து ஒரு குழந்தை ஒரு டெலிபோன் பூத்தில் இருக்கிறது என்று பகரவே எல்லோரும் உஷாராயினர்.

 

குழந்தையைப் பெற்ற தாயாருக்கு அந்தப் பெண்குழந்தை முறை தவறிய உறவால் பிறந்ததால் அப்பெண் குழந்தையை எறிந்துவிட்டார். அக்குழந்தை சமூகநலப் பிரிவின் (Social Services) பார்வையில் வளர்க்கப்பட்டது.

 

குழந்தையைக் காப்பாற்றிய, ஜோ கேம்ப்பெல்(Joe Campbell) ஆண்டுதோறும் அக்குழந்தைக்கு பரிசுப் பொருட்களையும், வாழ்த்து அட்டைகளையும் அனுப்பிவந்தார். சமூக நலப்பிரிவு அதை நிறுத்தும்படி அவருக்குக் கட்டளையிட்டது. காப்பாற்றிய ஜோ கேம்ப் பெல் கறுப்பின இளைஞர். இந்தப் பெண்ணோ ஆசிய நாட்டவருக்கும் வேறு கலப்பின மனிதருக்கும் பிறந்தவள்.  ஐந்து வயதுச் சிறுமியை சுவீகாரம்/ தத்து எடுக்க அவர் முன்வந்த போது அதையும் சோஷியல் சர்வீஸ் (சமூக நலப் பிரிவு) நிராகரித்துவிட்டது. காரணம் ஜோ, திருமணமாகாதவர்.

joe

கடைசியாக ஒரே ஒரு முறை அந்தச் சிறுமியுடன் புகைப்படம் எடுக்க மட்டும் சமூக நல அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். ஆனால் ஜோவுக்கோ அந்தச் சிறுமியை மறக்கவே முடியவில்லை. எப்போதும் அவர் மீதான அன்பு வளர்ந்தது. ஜோவுக்குக் கல்யாணம் ஆகி ஐந்து வயது முதல் 17 வயது வரையுள்ள ஐந்து குழந்தைகள் இப்போது உள்ளனர். அவர் தன் குழந்தைகளிடம் தான் ஒரு குழந்தையை மீட்ட கதையைச் சொல்லி உங்களுக்கு வளர்ப்பு சகோதரி ஒருவரும் உண்டு  அவள் எங்கோ இருக்கிறாள் என்று இயம்புவார்.

 

திடீரென சில நாட்களுக்கு முன்னர் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜோ, வேலை பார்க்கும் கூரியர் (Courier) கம்பெனியில் சக ஊழியர் ஒருவர், மெற்றோ பத்திரிக்கையில் வந்த ஒரு அறிவிப்பைக் காட்டினார். ஜோ அல்லது ஜான் என்ற ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும், அவரைப் பார்க்கத் தான் ஏங்குவதாகவும் அந்த பெண்மணி கூறியிருந்தாள். முதலில் ஜோ அது தான் இல்லை என்றார். ஆனால் அப்பெண்ணின் படத்தைப் பார்த்தவுடன், மெற்றோ அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். இருவரும் சந்திக்க மெற்றோ தனது அலுவலகத்திலேயே இடம் கொடுத்தது. இப்போது அபெண்மணிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.

kiran

கீரன் ஷேக் சொன்னார்: ஜோ கேம்பெல் எனது ‘ஹீரோ’ (உதாரண புருஷர்). நாங்கள் இருவரும் கிழக்கு லண்டனில் பாரெஸ்ட் கேட் பகுதியில்தான் பல்லாண்டுகள் வசித்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் கட்டாயம் சந்தித்திருப்போம். ஆனால் அறிந்தும் அறியாதவராக நடந்து போயிருப்போம்..

 

ஜோ கேம்ப்பெல் கூறினார்: என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் இந் நாள். இப்படி ஒரு நாள் அக்குழந்தையைச் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்ல. என் மனைவி ஊர்சுலாவுக்கும் என் ஐந்து குழந்தைகளுக்கும் கீரன் ஷேக்கை அறிமுகப்படுத்தி வைப்பேன்.

 

 

(இந்த சம்பவத்தில் சில விஷயங்களை பத்திரிக்கை கூறாமல் விட்டதற்குக் காரணம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே)

 

Xxx  SUBHAM XX

 

இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய அதிசயம்!! (Post No.3007)

450px-agastyaprambananindonesia

Agastya in Indonesia

Research Article written by London Swaminathan

Date:26 July 2016

Post No. 3007

Time uploaded in London :–  16-45

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

agastya-in-london

Agastya in London V and A Museum

 

இலக்கியமின்றி யிலக்கணமின்றே

எள்ளின்றாயினெண் ணெயுமின்றே

எள்ளின் றெண்ணெயெடுப்பது போல

இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்

 

என்று பேரகத்தியத்தில் ஒரு பாட்டுளது.

பொருள்:-

இலக்கியம் இல்லாமல் இலக்கணம் வராது. எள் இல்லாமல் எண்ணை வராது. எள்ளில் இருந்து எண்ணை எடுப்பது போல இலக்கியத்திலிருந்தே இலக்கணம் வரும்.

 

இது மிக அருமையான கருத்து. கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில்  வந்ததா? பதில் சொல்லுவது கடினம். கோழி இல்லாமல் முட்டை வராது. முட்டை இல்லாமல் கோழி வராது.

 

ஆண் முதலில் பிறந்தானா? பெண் முதலில் பிறந்தாளா? ஆணில்லாமல் பெண்ணில்லை; பெண்ணில்லாமல் ஆண் இல்லை. பதில் சொல்வது கடினம்.

 

ஆதாம், முதலில் வந்ததாகவும், அவரது இடது விலா எலும்பிலிருந்து ஏவாள் வந்ததாகவும் பைபிள் கூறும். இது இந்து மதக் கதை. ஆதாம் = அத்மா, ஈவ் (ஏவாள்)= ஜிவ்+ஆத்மா. அர்த்தநாரீஸ்வர ர்- சிவனின் இடப்பாகம் உமா. அதுதான் ஏவாள் .

 

சதரூபா-  பிரம்மா கதையிலும் இது வருகிறது. பிரம்மா தனது சொந்த மகள் மீதே காதல் கொண்டதாக புராணம் கூறும். இதன் உட்பொருள் ஆதாம் தானே உருவாக்கிய ஒரு பெண்ணுடன் கூடி மனித இனத்தை உருவாக்கினான் என்பதே இதன் உட்கருத்து.

 

முட்டையோ கோழியோ ஏதோ ஒன்று முதலில் வந்திருக்கவேண்டும். அதே போல் ஆணோ பெண்ணோ யாரோ ஒருவர் முதலில் வந்திருக்கவேண்டும்..

 

இலக்கணம் முதலில் வந்ததா?

 

இலக்கணம் முதலில் வந்ததா, இலக்கியம் முதலில் வந்ததா? என்பது மற்றொரு புதிரான கேள்வி இதற்குப் பேரகத்தியம் என்னும் நூலே பதில் சொல்லும்

agastyanepal-carole-r-bolon

Agastya in Nepal

 

இலக்கியமின்றி யிலக்கணமின்றே

எள்ளின்றாயினெண் ணெயுமின்றே

எள்ளின் றெண்ணெயெடுப்பது போல

இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்

 

 

இலக்கியம்தான் முதலில் வந்தது. இலக்கணம் அதன் பின்னரே எழுந்தது. அப்படியானால் முதலில் எழுதியோர் இலக்கணமில்  லாமல் எழுதினரா? ஆமாம் அப்படித்தான். பின்னர் இதைப் பார்த்து இதிலுள்ள பொதுவான அம்சங்களை வைத்து இலக்கணம் எழுதினர். அதற்குப் பின் வந்தவர்கள் அதைப் பார்த்து, அதில் எல்லோரும் பின்பற்றிய விதிகளை வைத்து இலக்கணம் கற்பித்தனர். அதை ஒட்டி எல்லோரும் பிற்காலத்தில் எழுதினர்.

இந்தக் கருத்து சம்ஸ்கிருதத்திலும் உளது. மேலும் இலக்கணம், இலக்கியம் என்பன லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் வடமொழிச் சொற்களில் இருந்து பிறந்தவை!

 

தமிழ் மொழிக்கு அகத்தியர் என்னும் வடபுல முனிவர் இலக்கணம் எழுதினார். அவருக்கு முன்னரே தமிழ் மொழி இருந்தது . இலக்கியங்களும் இருந்தன. அதைப் பயன்படுத்தி அகத்தியர் இலக்கணம் யாத்தார். அகத்தியர் காலம் குறித்து பல கருத்துகள் உள்ளன. முதல் அகத்தியர் கி.மு 1000 வாக்கில் அல்லது கி.மு 700 வாக்கில் தமிழ் நாட்டிற்கு வந்தார். அப்படியானால் அவர் காலத்திலேயே தமிழ் மொழியும் இருந்தது; இலக்கியங்களும் இருந்தன. ஆயினும் அவை அனைத்தும் அழிந்து போயின. பிற்கால அகத்தியரின் சீடரே தொல்காப்பியர் எனக் கொள்ளல் வேண்டும் ஏனெனில் தொல்காப்பியர் காலத்தை கி.மு முதல் நூற்றாண்டு என்றே மொழியியல் காட்டுகிறது. ஆயினும் அவர் சொல்லும் ஏராளமான உவம உருபுகள் சங்க இலக்கியத்தில் இல்லாததால் அவருக்கு முந்தியிருந்த இலக்கியத்தில் இருந்தவற்றையே அவர் எழுதியிருக்கவேண்டும்.

 

பல அகத்தியர்கள் இருந்ததை சம்ஸ்கிருத இலக்கியமும் ஒப்புக்கொள்கிறது.

agastya

Agastya Statue

உலக மஹா இலக்கிய அதிசயம்!

இதே கருத்தை வடமொழிக்கும் பயன்படுத்தினால் உலக மஹா அதிசயம் வெளியாகும்.

 

தமிழ் மொழி இலக்கியத்தின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு. ஆனால வ்வேத இலக்கியத்தின் காலமோ கி.மு.1400 முதல் கி.மு,.6000 வரை என்று அறிஞர்கள் ஒப்புவர். அதற்குப் பின் ஏராளமான இலக்கண ஆசிரியர்கள் தோன்றினர். வேத இலக்கியத்திற்குப் பின் எழுந்த பாணினி என்னும் முனிவரின் இலக்கன்ணமே என்று எஞ்சி நிற்கிறது. அவர் கி.மு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இன்றுள்ள இலக்கணங்களில் அவர் எழுதியதே பழமையான இலக்கணம். அவரே பத்து இலக்கணகர்த்தாக்களின் பெயர்களைச் சொல்லுகிறார்.

அபிசாலி, கார்க்ய,காஸ்யப, காலவ, சக்ரவர்மண,பாரத்வாஜ, சாகடாயன, சாகல, சேனக, ஸ்போடாயன.

 

இவர்களில் ஒருவர் எழுதிய இலக்கணமும் நமக்குக் கிடைக்கவில்லை. வேதங்களின்  பெரும்பாலான பகுதிகளும் ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களும் அழிந்துவிட்டன.

 

ஆயினும் வேதங்களில் இந்த முனிவர்கள் சிலரின் பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஆனால் ரிக்வேதத்திலேயே இலக்கணம் பற்றிய சொற்கள் இருக்கின்றன. இதனால் கி.மு 1400 அல்லது அதற்கு முன்னரே இலக்கணம் இருந்ததை அறிகிறோம். இன்றுள்ள மொழிகளில் மிகவும் பழமையான சம்ஸ்கிருதத்தில் இப்படி இருப்பது உலக அதிசயம் மட்டுமல்ல. உலக நாகரீகம் தோன்றியது இந்தியாவே என்பதை  ஐயம் திரிபற, உள்ளங்கை நெல்லிக்கனி எனக் காட்டும். ஏனெனில் ஒரு நாட்டின் மொழி வளர்ச்சி அந்நாட்டின் நாகரீக வளர்ச்சியின் அளவு கோலாகும். இலக்கியமும் இலக்கணமும் வேத காலத்திலேயே தோன்றியது என்றால் அதற்கு முன்னரே சம்ஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும்.

 

உலகில் மிகப்பரிய மொழி அதிசயம் இது;

உலகில் மிகப்பரிய இலக்கண அதிசயம் இது;

உலகில் மிகப்பரிய இலக்கிய அதிசயம் இது;

உலகில் மிகப்பரிய மொழி இயல் அதிசயம் இது.

 

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!
–Subham–

அதிசயத் துறவி ஸு யுன் – பகுதி 9 (Post No.3003)

$_35

Article Written S NAGARAJAN

Date: 25 July 2016

Post No. 3003

Time uploaded in London :– 5-49 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 9
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 65
க்வி மிங் ஆலயத்தில் இருந்தோர் அவரைத் தனிமைத் தவத்தை விட்டு விட்டுத் தங்களிடம் வருமாறு வேண்டினர். அங்கு அவர்கள் அழைப்புக்கு இணங்கிச் சென்ற அவர், சூத்திரங்களின் விளக்கங்களை சொல்ல ஆரம்பித்தார். இப்போது அவருக்கு சிஷ்யர்களாக 300 பேர் இருந்தனர்.
அடுத்து, யாங்-சு ஆலயம் அவரை அழைத்தது சுராங்கம சூத்திரங்களையும் .ஹான் –ஷான் எழுதிய கவிதைகளையும் ஆலயத்தில் அவர் ம்ரப் பலகைகளில் ஓவியமாக வரைய ஏற்பாடு செய்தார்.
அவற்றை விளக்குமாறு அனைவரும் அவரைக் கேட்டுக் கொண்டனர்.
கூட்ட முடிவில் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் லு பு சிங் மற்ற அதிகாரிகளுடன் வந்து ஸு யுன்னைத் தரிசித்தார்.
சான் டா ஆலயத்திற்கு வருமாறு பணிவுடன் அவர்கள் வேண்டினர்.
அங்கு சென்றார் ஸு யுன்.
நகரங்களில் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறிய ஸு யுன் காக் ஃபுட் மலையில் உள்ள ஜிங்-டிங் மலை உச்சியில் உள்ள ஆலயத்தைத் தான் புனருத்தாரணம் செய்ய விரும்பியதையும் அங்குள்ளோர் அதைத் தடுத்ததையும் நினைவு கூர்ந்தார். (அத்தியாயம் 7இல் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது)
அந்த இடத்தில் சிறிது இடம் தந்தால் நன்றாக் இருக்கும் என்ற கருத்தை ஆள்வோரிம் அவர் கேட்டுக் கொள்ள அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
போ யு என்ற இடத்தில் ஒரு ஆலயம் இருந்தது. ஜியா குங் வமிசம் (1796-1820) ஆண்ட போது செழிப்பாக இருந்த ஆலயம் இப்போது பாழடைந்து கிடந்தது. ஏன் அதை விட்டு விட்டு எல்லோரும் போய் விட்டார்கள்?
ஆலயத்தின் வலது புறம் பெரிய ஒரு பாறை இருந்தது. அந்தப் பாறையிலிருந்து ‘வெள்ளைப் புலி’ யின் செல்வாக்கு இருந்ததாம். மக்கள் பயந்து ஓடி விட்டனர்.
பாறையை உடைக்க விரும்பினார் ஸு யுன். பாறையோ மிகவும் பெரிது. ஒன்பது அடி நான்கு அங்குலம் உயரம். ஏழரை அடி குறுக்களவு.
பாறையை இடது புறமாக 280 அடி தள்ளி விட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய ஸு யுன் ஒரு மேஸ்திரியைக் கூப்பிட்டு ஆள்களை அழைத்து வருமாறு கூறினார். 100 பேர்கள் குழுமினர். மூன்று நாட்கள் இடை விடாமல் உழைத்தனர். ஒரே சமயத்தில் அனைவரும் முயற்சி செய்தும் கூட பாறை அசையக் கூட இல்லை!
முயற்சியில் தோல்வி அடைந்த அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
ஸு யுன் அங்கு இருந்த காவல் தெய்வங்களை நோக்கிப் பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார். மந்திரங்களை ஜெபித்தார்.
பின்னர் பத்து துறவிகளை அழைத்தார். இடது புறம் பாறையைத் தள்ளுங்கள் என்றார்.
பாறை நகர்ந்தது! அனைவரும் ஆரவாரித்தனர்.
ஒருவர் பாறையில் ‘யுன் யி ஷி’ என்று எழுதியே விட்டார். மேகத்தால் நகர்த்தப்பட்ட பாறை என்பது அதன் பொருள்.
(மேகம் என்பது இங்கு ஸு யுன்னைக் குறிக்கிறது)
அதிகாரிகளும் அறிஞர்களும் நடந்ததைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்து வந்தனர். நடந்ததை பாறையில் கல்வெட்டாக்க முனைந்தனர்.
ஸு யுன் ஒரு கவிதையைப் புனைந்தார்.
அதன் சுருக்கம்:
“இந்த விசித்திரமான பாறை தைரியமாக நின்றது
புலிகள் நடமாடும் இடத்தில் ஆலயத்தை புனருத்தாரணம் செய்ய விரும்பினேன்
ஆயிரக்கணக்கான தடைகளைக் கடந்து இந்த மலைக்கு வந்தேன்
அப்போது – பிரகாசமான சந்திர வெளிச்சம்
மீன்கள் விளையாடும் அழகிய நேரம்
மாயா உலகத்தை மேலிருந்து பார்க்கும் அவன்
இனி சுவர்க்கத் தென்றல் தவழ்ந்து வர
மணிகளின் ஓசையைக் கேட்பான்”
ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது.எல்லா யாத்ரீகர்களும் அங்கு வருவதென்றால் அவர்களை நன்கு கவனிக்க பணம் வேண்டுமே
ஸு யுன் நிதி திரட்ட முனைந்தார்
– தொடரும்

கடிதமும் பதிலும்: சுகமான கல்யாணி ராகம் (Post No.2996)

RAMA BEFORE THYAGARAJA

Article Written S NAGARAJAN
Date: 23 July 2016
Post No. 2996
Time uploaded in London :– 5-26 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சுகமான கல்யாணி , ராகங்களின் ராணிக்கு வந்த ஒரு அற்புதமான கடிதம்! (எனது பதிலும் கூட!!)
ச.நாகராஜன்
திரு ஆர். நஞ்சப்பா அவர்கள் ஒரு நல்ல ரஸிகர். விஷயம் தெரிந்தவர். நல்லதைப் பாராட்டும் பெரிய மனமுள்ளவர். பக்குவமாக விஷயங்களை எடுத்துச் சொல்பவர். நேரில் அவரைப் பார்த்ததில்லை; எந்த ஊரில் இருப்பவர் என்பதும் தெரியாது. இந்த ப்ளாக் மூலமாக பரிசயம் அவ்வளவே!
அவர் கல்யாணி ராகம் பற்றிய கட்டுரைக்கு அனுப்பியுள்ள ஒரு அற்புத விளக்கம் இதோ; (அனைவரும் படித்துப் பயனடைய வேண்டும் என்பதாலேயே தனிக் கட்டுரையாகத் தந்துள்ளேன். அத்துடன் ரமண மஹரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அற்புதமான் சங்கீதம் பற்றிய விளக்கத்தையும் என் பதிலில் இணைத்துள்ளேன்).

 

thyagaraja brown

திரு ஆர்.நஞ்சப்பா அவர்களின் கடிதம் இதோ:

பயனுள்ள விஷயங்கள் சொல்லும் கட்டுரை.
பொதுவாக ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு முக்கிய “பாவம்” ( Bhava )உண்டு என்பார்கள்.கல்யாணி போன்ற ஸம்பூர்ண ராகங்கள் .பலவித பாவங்களை வெளிப்படுத்தும். இதற்கு பாடகரின் குரல், அல்லது வாத்யத்தின் “tonal quality ” முக்கியமானது. இதற்கும் மேலாக, சாஹித்யத்தின் பங்கு. ராக ‘பாவம்’, ஸாஹித்ய ‘பாவம்’. பாடகரின் குரல் வளம் ஆகியவை ஒன்று சேரும்போதுதான் நாம் அந்த ராகத்தின் முழு ஸ்வரூபத்தையும், அது வெளிப்படுத்தும் உணர்ச்சிப் பெருக்கையும் அனுபவிக்க முடியும்.

 
ஸ்ரீ தீக்ஷிதரின் க்ருதிகள் ராக ‘பாவத்தை” முக்கியமாகக் கொண்டவை. ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் ராகத்துடன், தன் இறைஅனுபவத்தின் பல கூறுகளையும், நிலைகளையும் (mystical experiences and moods ) குழைத்து ஸாஹித்யமாக்கித் தந்திருக்கிறார். அதனால் அவர் க்ருதிகளில் ஸாஹித்ய ‘பாவம் ‘ மேலோங்கி நிற்கிறது! இதுவே நம்மை ஈர்க்கிறது! ஸ்வாமிகள் கல்யாணி ராகத்தில் 18 கீர்த்தனைகள் அருளியுள்ளார். ஓவ்வொன்றும் ஒவ்வொரு வித ‘பாவ’த்தை வெளிப்படுத்துகின்றன. இது ஒர் அற்புதம். ஆனால் பாடகர்கள் பொருள் உணர்ந்தும், ராக ‘பாவ’த்தில் ஊறியும் இருக்கவேண்டும்.

 
கச்சேரி ஃபேஷன் வந்துவிட்டபிறகு இப்போது யாரும் நிதானித்து, அனுபவித்துப் பாடுவதில்லை. தானே அனுபவிக்கவிட்டால், அதைப் பிறருக்கு எப்படி அளிப்பது? ” தன சௌக்யமு தா நெருகக யொருலகு தகுபோதன ஸுகமா ” என்கிறார் ஸ்ரீ த்யாகராஜர். ( ராமா நீயெட ). இப்போது பல வித்வான்களும் புத்தகம்/ நோட்டைப் பார்த்தே படிக்கிறார்கள். யாரும் எந்த ராகத்திலும் specialise செய்வதாகத் தெரியவில்லை. பின், ஸாஹித்ய ‘பாவ’மோ, ராக ‘பாவ’மோ எங்கிருந்து வரும்? ஏதோ இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில விதிவிலக்குகள் இல்லாமலில்லை.

 
பழைய சினிமா பாடல்களில், எம்.எல்.வி. பாடிய ” கொஞ்சும் புறாவே ” கல்யாணி ராகத்தில் அமைந்த மிக அருமையான பாடல். இதில் வயலின் பங்கும் அபாரம். இசை சித்தூர் வி, நாகையா. விஷயம் தெரிந்தவர் !

கடிதம் கண்டவுடன் மகிழ்ச்சி கொண்டேன். அதற்கான எனது பதிலையும் உடனே பதிவு செய்து விட்டேன். அது இது தான்:

அடடா! அற்புதமான விளக்கம்! உங்களின் விளக்கத்தைப் பார்த்தவுடன் ரமண மஹரிஷியின் வாழ்வில் நடந்த ஒரு சிறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.
வீணை வாசிக்கும் ஒரு பெண்மணி ரமண மஹரிஷியிடம் வந்தார். “தியாகராஜ ஸ்வாமிகளும் மற்ற சங்கீதம் பாடிய பெரியோர்களும் பாடித் தானே மோட்சம் பெற்றார்கள். நானும் அவர்களைப் போல சங்கீதம் பாடி மோட்சத்தை அடைய இயலுமா?” என்று கேட்டார் அவர். அதற்கு மஹரிஷி, “தியாகராஜரும் மற்ற பெரியோரும் பாடிப் பெறவில்லை. பெற்றதைப் பாடினார்கள். அதனால் தான் அவர்களின் கீர்த்தனைகள் இன்னும் உயிருள்ளதாக இருக்கின்றனர்: என்றார்.
என்ன அற்புதமான் பதில்! இசையில் உள்ளம் உருகி லயித்துப் பாடினால் அனைத்து ராகங்களின் நல்ன்களையும் பாடகர் தர முடியும். நஞ்சப்பா அவர்களுக்கு ‘வழக்கம் போல’ எனது நன்றி! – நாகராஜன்

 
ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளும் முத்துசாமி தீட்சிதரும் அவர் போன்ற இசை மேதைகளும் மகான்களும் ‘பெற்றதைப் பாடினார்கள்’. தாங்கள் பெற்ற பெரும் பேறை இசையில் குழைத்துத் தந்தார்கள்.
கேட்க மனம் உருகுகிறது. பல நலன்களையும் தருகிறது.
இசையின் முழு குணநலன்களை அள்ளி அள்ளித் தரும் அவர்களது இசை பற்றிப் போற்ற வார்த்தைகளே இல்லை.

*******