Written by S NAGARAJAN
Date: 20 December 2015
Post No. 2407
Time uploaded in London :– காலை 6-23
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சம்ஸ்கிருதச் செல்வம்
இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!
ச.நாகராஜன்
சம்ஸ்கிருதம் அகன்ற, ஆழ்ந்த ஒரு பெருங்கடல். அதில் மூழ்கி கோடானு கோடி நல்முத்துக்களை எடுக்கலாம். இராவணனைப் பற்றிய சுவையான இரண்டு கவிதைகளைப் பார்க்கலாம்.
இராவணனின் இருபது கண்கள்
இராவணனுக்கு பத்துத் தலைகள். ஆகவே இருபது கண்கள் உண்டு என்பதை அறிவோம்.
அந்த இருபது கண்கள் என்ன செய்கின்றன – ஒரே சமயத்தில்? கவிஞர் தன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். பிறந்தது பாடல்.
இராவணனின் இருபது கண்களில் ஒன்று வளைந்து இருக்கிறது. இன்னொன்று குறுகி இருக்கிறது. அடுத்தது ஆவலுடையதாக இருக்கிறது. நான்காவது புன்சிரிப்புடன் இருக்கிறது. அடுத்ததோ ஏதோ அர்த்தத்துடன் ஒன்றைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. அடுத்ததோ அரைக் கண்ணாக முடியிருக்கிறது. அடுத்தது கறுப்பாக ஆகியுள்ளது ,அடுத்தது எதையோ தூரத்தில் பார்க்கிறது. ஒன்பதாவது கண்ணோ மகிழ்ச்சியுடன் திகழ்கிறது. பத்தாவது அரும்பு போல மூடியிருக்கிறது. அடுத்தது நடுங்குகிறது. பன்னிரெண்டாவது கண்ணோ நிலையாக நேர் பார்வையைக் கொண்டுள்ளது. அடுத்தது சுழல்கிறது. பதிநான்காவது கண்ணோ இமையோரத்தில் நகர்ந்துள்ளது; அடுத்தது நீர்த்துள்ளது பதினாறாவது கண்ணோ சோர்வைக் காண்பிக்கிறது. அடுத்தது அலை போன்ற இயக்கத்தைக் காண்பிக்கிறது. கடைசி மூன்று கண்களும் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது.
இப்படி ஒவ்வொரு கண்ணும் ஒரு குறிப்பிட்ட நிலைக்குத் தக்கபடி ஒவ்வொரு வித்தியாசமான விதத்தில் தன் நிலையைக் காண்பிக்கிறது!
கவிஞர் ஸ்வபாவோக்தி என்ற அலங்காரத்தைக் காட்டுமாறு இதை அமைத்துள்ளார்.
இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை – ரஸிக்லால் சி.பரீக் (Rasiklal C Parikh) செய்துள்ளதையும் – கீழே காணலாம்:
One of the twenty eyes of Ravana is bent,another is contracted, a third is eager, a fourth is smiling, the fifth is full of significance: the sixth is half-closed, the seventh is turned back; the eighth is having a long-range; the ninth is full of joy; the tenth is contracted like a bud; the eleventh is trembling; the twelfth is steady; the thirteenth is rolling’ the fourteenth is moving to its corner; the fifteenth is diluted; the sixteenth is drooping; the seventeenth is full of wave-like movements; the last three are full of tears.
(Thus owing to some particular condition every eye is working in a different way!)

An Indian girl watches as a man displays effigies of ten-headed demon king Ravana for the upcoming Dussehra festival in Hyderabad, India, Saturday, Oct. 17, 2015. The Hindu festival of Dussehra commemorates the triumph of Hindu God Rama over Ravana, marking the victory of good over evil. (AP Photo/Mahesh Kumar A.)
குபேரபுரியில் கொண்டாட்டம்
மஹா வீரனான இராவணன் இறந்து விட்டான். உடனே விழா எடுக்கப்பட்டு விட்டது.
வானர சேனைகள் இருந்த இலங்கைக் கடற்கரையிலா? இல்லை! சுக்ரீவனின் கிஷ்கிந்தையிலா, அங்கும் இல்லை!
குபேர புரியில் கொண்டாட்டம்!
குபேரனின் அளகாபுரியில் ஒரே கொண்டாட்டமாம். யட்சர்கள் வசிக்கும் நகரில் மாதர்களுக்கு ஒரே மகிழ்ச்சி!
பாடலைப் பார்ப்போம்:
கைலாஸாசகர்ணிகேயமளாகா நேத்ரைகபேயா புரோ
தேவஸ்ய த்ரவிணப்ரபோ: கிமபரம் ஸ்ருங்காரஸாரஸ்யம்: I
அஸ்யாமஸ்தமிதே ஹி ராக்ஷஸபதௌ யக்ஷாங்கநாநாமமீ
வர்தந்தே ப்ரதிசத்வரம் ப்ரதிக்ருஹம் ப்ரத்யாபணம் சோத்ஸதா: II
இதன் பொருள் :- கண்களுக்கு விருந்தளிக்கும் அளகாபுரி, செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் தலைநகர், மேலும் காமக்களியாட்டங்களின் மொத்த சாரத்தைக் கொண்டுள்ள நகர், கைலாஸத்தின் செவியில் உள்ள ஆபரணமாய் அமைந்துள்ளது. ராக்ஷஸர்களின் அதிபனான ராவணன் இறந்து விட்டான் என்று தெரிந்தவுட யட்ச பெண்மணிகள் ஒவ்வொரு நாற்சந்தியிலும் கூடிக் கொன்ண்டாடினர்.ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டம் தான்!
குபேரனின் புஷ்பக விமானத்தை அபகரித்ததிலிருந்து ராவணனின் ஒவ்வொரு செய்கையும் பாதித்தது அளகாபுரி மக்களைத் தான்! அவன் ஒழிந்தான் என்றவுடன் இன்ப புரியில் இன்ப லோகக் கொண்டாட்டம் தான்! குறிப்பாக மாதர்கள் ஸ்த்ரீலோலன் ஒழிந்தான் என்று மகிழ்ந்தனர்.
பெரும் வாழ்நாள் கொண்டிருந்தாலும், வேத விற்பன்னனாக இருந்தாலும், சிவ பக்தனாக இருந்தாலும் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டு அநியாயமாகத் தூக்கிக் கொண்டு வந்தவந் ஒழிவது தானே தர்மம்!
கவிஞரின் கற்பனையை நாம் கொண்டாட வேண்டியது தான்.சார்த்தூலவிக்ரிதித சந்தத்தில் அமைந்துள்ள இதை பகதத்த ஜலஹணர் என்பவர் தொகுத்த சுக்திமுக்தாவளியில் காணலாம்.
ராவணனைப் பற்றி இப்படி ஏராளமான தனிப் பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் மிகச் சுவையானது!
******
You must be logged in to post a comment.