
Post No. 12,238
Date uploaded in London – – 7 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
This is 32nd part in Tamil Quiz Series
1.நால்வரில் ஒருவரான அப்பர் பெருமானுக்கு இருந்த வேறு பெயர்கள் என்ன ?
XXXX
2.அப்பர் பாடிய தேவார பாடல்கள் எந்த திருமுறையில் உள்ளன?
XXXX
3.அப்பருக்கு என்ன நோய் ஏற்பட்டது ? அது நீங்க அவர் பாடிய முதல் பதிகம் எது ?
XXXX
4.அப்பருக்குப் பல கொடுமைகள் செய்த மன்னர் யார் ?
XXXX
5.அப்பர் எனும் திருநாவுக்கரசரின் பெற்றோர்கள் யாவர்?
XXXX
6.திருநாவுக்கரசருக்கு , ஞான சம்பந்தர் கொடுத்த பெயர் என்ன?
XXXX
7.சைவ மத முத்திரைகள் என்ன? அவை அப்பருக்குக் கிடைத்தது எப்படி?
XXXX
8.திருவீழிமிழலை , திருமறைக் காடு, திருவையாற்றில் அப்பர் செய்த அற்புதங்கள் என்ன?
XXXX
9. மாசில் வீணையும், கற்றூணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சினும் , நாமார்க்கும் குடியல்லோம் என்ற பிரபல பாடல்களை எப்போது பாடினார் ?
XXXXX
10.நால்வர் சிலைகளில் அப்பரை அடையாளம் காட்டும் சின்னம் என்ன ?
XXXX

விடைகள்
1.மருள்நீக்கியார், தருமசேனர், திருநாவுக்கரசர், தாண்டக வேந்தர், வாகீசர்
XXXXX
2.நாலாம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளில் உள்ளன.
XXXX
3.அவருக்கு சூலை நோய் ஏற்பட்டது? திருவதிகையில் கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்ற பதிகத்தைப் பாடியவுடன் நோய் நீங்கியது.
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. என்று துவங்கும் பதிகம்.
XXXXX
4.பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் (600 CE )
XXXXX
5.தந்தை பெயர்- புகழனார்; தாயார் பெயர்- மாதினியார்; தமக்கை பெயர்- திலகவதியார். பிறந்த ஊர்- திருவாமூர்
XXXX
6.சீர்காழிக்கு வந்து ஞான சம்பந்தரைக் கண்டு வணங்கியபோது , அவர் திருநாவுக்கரசரின் கைகளைப் பிடித்துக்கொண்டு அப்பரே என்று அழைத்து வணங்கினார்.
XXXXX
7.பெண்ணாடகத்துக்கு வந்து சிவனை வணங்கிய போது ஒரு சிவ பூதம் தோன்றி, அவருடைய தோள்களில் சூல , இடப இலச்சினைகளைப் பொறித்தது.
XXXX
8.திருவீழி மிழலையில் மக்களின் பசி, பட்டினி தீர பதிகம் பாடியபோது அவருக்கு படிக்காசுகள் (தங்கக் காசுகள்) கிடைத்தன .
திருமறைக் காட்டு உறை சிவபெருமானைப் பாடியபோது வேதங்கள் அடைத்திருந்த கதவை பாடல்கள் பாடி திறக்கச் செய்தார் .
கயிலை செல்ல முயன்றபோது உடல் வருத்தவே, சிவபெருமான் ஒரு முனிவர் வடிவத்தில் வந்து, தோன்றி இக்குளத்தில் மூழ்கி திருவையாற்றில் கைலைக் காட்சியைக் காண்க என்றார் . அவர் அவ்வாறு செய்ய டெலி ட்ரான்ஸ்போர்டேஷன் TELE TRANSPORTATION மூலம் அவர் திருவையாற்றில் நின்றார். மாதர் பிறைக்கண்ணியானை என்ற பாடல் பாடி கயிலை தரிசனம் பெற்றார் .
xxxxx
9.சமணர்களின் துர் போதனையால் அப்பரை சுண்ணாம்புக் காளவாயில் போட, அவர் மாசில் வீணையும் பாடியவு டன் , அது இனிமையான சோலை போல குளிர்ந்தது.
அவரைக் கற்களைக் கட்டி கடலில் வீசியபோது ,கற்றூணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயமே என்று பாட, கல் தூண்களும் மிதந்தன . மகேந்திர பல்லவன் அவரை அழைத்துவர காவலர்களை ஏவிய போது அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று வீர முழக்கம் செய்தார்
xxxxx

10.அவர் கையில் உழவாரப்படை இருக்கும்.. அதைக் கொண்டு கோவில்களில் முளைக்கும் செடிகொடிகளை அகற்றி அவர் திருப்பணி செய்தார். இறுதியில் எண்பதாவது வயதில் சித்திரை மாத சதய நன்னாளில் சிவனடி சேர்ந்தார் .
xxxx
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
XXX
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
XXXX
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.
XXXX
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்!கண்டறியாதன கண்டேன்!!
— சுபம் —
TAGS- அப்பர், திருநாவுக்கரசர் , தரும சேனர் , சம்பந்தர் , சந்திப்பு, மகேந்திர பல்லவன் , மாசில் வீணையும், நற்றுணை ஆவது நமச்சிவாயமே