மட்டக்களப்பில் அதிசய சிவன் கோவில்- இலங்கை ஆலயங்கள்-23 (Post No.12,570)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,570

Date uploaded in London – –  –  10 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 23

48.கொக்கட்டிச்சோலை சிவன் கோவில்

புல்லுண்ட கல் நந்தி” இக்கோவிலின் பெருமைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு நகருக்குக்கருகில் கொக்கட்டிச்சோலை  தான்தோன்றிய ஈஸ்வரன் கோவில் இருக்கிறது  கிறிஸ்தவ மதவெறியர்களிடம் இருந்து தப்பிக்க இறைவன் இங்கு ஒரு அதிசயம் நடத்தினார். மதுரையில் திருவிளையாடல் புராணம் சொல்லும் 64 திருவிளையாடல்களில் ஒன்று கல்யானை  கரும்பு தின்ன கதை ஆகும்;  அதே போல கல் நந்தி,  புல் தின்ற அதிசயத்தைக் கண்ட  போர்ச்சுக்கீசிய மத வெறியர்கள் கோவிலில் கை வைக்காமல் சென்று விட்டனர்.

இதே போல பல நிகழ்ச்சிகள் உண்டு. முஸ்லீம் மத வெறியர்கள் தென்னாட்டிலுள்ள எல்லா கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கி வந்தனர். திருப்பரங்குன்றம் கோவிலை இடிக்கவந்த போது சிற்பி, கோவில் கோபுரத்தில் நின்று குதித்து தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்த மத வெறியர்கள் ஓடிவிட்டனர்

கொக்கட்டிச்சோலை கதையைக் காண்போம்

மட்டக்கிளப்பிலிருந்து பத்து மைல் தொலைவில் கொக்கட்டிச்சோலை இருக்கிறது ; இங்குள்ள சிவன் கோவிலில் ‘தான் தோன்றிய/ ஸ்வயம்பூ  லிங்கம்’ (தான்தோன்றீஸ்வரம்) இருக்கிறது. கோவிலை இடிக்க வந்தவர்கள் முதலில் நந்தி சிலையை உடைக்க வந்தனர். குருக்களும் பக்கதர்களும் சேர்ந்து இடிக்காதீர்கள்; இது உயிருள்ள காளை ; புல்லையும் தின்னும் என்று சொன்னார்கள்; அப்படியா? புல்லைத் தின்னட்டும்! என்றனர். கோவில் குருக்கள் புல்லைக் கொடுக்கவே அது அழகாக சாப்பிட்டது; அதைப்  பார்த்த அவர்கள் பயந்தனர்; வியந்தனர்; கோவிலை இடிக்காமல் ஓடி விட்டார்கள்.

ஏன் சில இடங்களில் மட்டும் இப்படி அற்புதங்கள் நிகழ்கின்றன? என்று வாசகர்கள் வியக்கலாம். பக்தர்களின் நம்பிக்கை, அங்குள்ள கோவிலின் சக்தி, அர்ச்சகரின் சக்தி மூன்றும் கூடினால் அற்புதம் நிகழும். முத்துசுவாமி தீட்சிதர் மனம் உருகி அமிர்தவர்ஷனி ராகத்தைப்  பாடியபோது மழை பெய்தது; நாம் பாடினால் மழை பெய்வதில்லை. ஆதி சங்கரர் ஏழைப் பெண்மணி வீட்டின் வாசலில் நின்று கனக தாரா ஸ்தோத்திரம் சொன்னபோது தங்க நெல்லிக்காய் மழை பெய்தது; நாமும் நம்பிக்கையுடன், தூய்மையுடன், சுய நல நோக்கு இல்லாமல் பாடினால் அற்புதங்கள் நிகழும் .

இந்தக் கதைகளில்  எல்லாம் இழையோடும் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா ? தனக்கு என வேண்டாமல் பிறருக்காக வேண்டிய சம்பவங்கள் இவை.

இனி சுயம்பூ லிங்கம் கிடைத்த கதையைக் காண்போம். குண சிங்கம் என்பவர், கலிங்க நாட்டு இளவரசி உலக நாச்சி அம்மையார் / லோக நாயகி தேவி என்பவரை மணந்து கொண்டு ஆட்சி புரிந்தார். அக்காலத்தில் திலதன்  என்பவன் காட்டின் வழியாக வருகையில் ஒரு மரத்திலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டே  இருக்கும் அற்புதத்தைக் கண்டு மன்னரிடம் சொன்னான்.அவனும் அங்கே  சென்று மரத்துக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைத் தோண்டிப் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டான் ; எவ்வளவோ முயற்சி செத்தும் லிங்கத்தை பெயர்த்து எடுக்க முடியாததால்  கொக்கு நெட்டி மரத்தைச் சுற்றிக் கோவில் எழுப்பினான்.

இதை இன்று உலகின் 100 அதிசயங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்ட மதுரை மீனாட்சி கோவிலுடன் ஒப்பிட்டுப்பார்த்ததால் இந்தக் கதையின் உண்மை தெள்ளிதின் விளங்கும்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தனபதி என்ற பெயருள்ள வணிகர்/ செட்டியார் அடுத்த ஊரில் பிஸினஸ் Business  விஷயங்களை முடித்துவிட்டு கடம்பவனக்  காட்டின் வழியாக மதுரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். காட்டின் நடுவே இரவு நேரத்தில் பேரொளி வீசுவதைக் கண்டு அருகில் சென்று பார்த்தபோது இந்திராதி தேவர்கள், ஒரு சிவலிங்கத்தைப்  பூஜிப்பதைக் கண்டார். மறு நாள் பாண்டிய மன்னரிடம் இதைச் சொன்னவுடன், அவரும் மந்திரிகள் புடை சூழ காட்டிற்குள் வந்து பார்த்த போது சிவலிங்கத்தைக் கண்டு ஆனந்தித்து கோவில் எழுப்பினார். இன்றும் உலகப் புகழ்பெற மதுரை மீனாட்சி கோவிலில் துர்க்கை சந்நிதிக்கு முன்னர் ஒரு கடம்ப மரம் வெள்ளிக்கவசத்துடன் இருப்பதைக் காணலாம். கோவிலுக்கு வரும் மதுரை மக்கள் அந்த மரத்தை வலம் வந்தே அடுத்த சந்நிதிக்குப் போவார்கள் .

இதிலும் சில பல விஷயங்கள் இழையோடிச் செல்லுவதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். கிழக்கு இலங்கையில் கலிங்க நாட்டு ராணி இருந்ததை கொக்கட்டிச்சோலை நிரூபிக்கிறது.விஜயன் காலத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் – கலிங்கர் (விஜயன்) கலப்பு மணம் நடந்த தை மஹாவம்சம் காட்டுகிறது. அது மட்டக்களப்பு மன்னர் ஆட்சியிலும் நீடித்ததைக் காண்கிறோம். மற்றும் ஒரு விஷயம்  ஸ்வயம்பூ  லிங்கங்கள் இமயம் முதல் கண்டி- கதிர்காமம் வரை பூஜிக்கப்பட்டதையும் அறிகிறோம். மதுரையைப் பொறுத்தமட்டில் குறைந்தது 2300 ஆண்டு வரலாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக சிவலிங்க வழிபாடு இந்திய- இலங்கை நிலப்பரப்பில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவதையும் இது காட்டுகிறது.

யாழ்ப்பாண  ராஜ்யம் பற்றி புஸ்தகம் எழுதிய எஸ். பத்மநாதன் எழுதிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அவர் சொல்கிறார் ,

“இந்த ஆலயத்தின் விமானம், ஸ்தூபி, செங்கல் கட்டிடம்  ஆகியவற்றின்  அமைப்பு 13-ஆம் நூற்றாண்டு  பாண்டியர்கால பாணியில் அமைந்துள்ளது”.

கலிங்க மஹா 1215-1255 என்ற மன்னன், தீவிர சைவன் என்பதையும் வரலாற்றிலிருந்து அறிகிறோம்.

தற்போது  பூஜைகள், விழாக்கள் ஆகியன முறையாக நடக்கின்றன உள்ளூர் மக்கள், தான் தோன்றி அப்பன் என்று இறைவனை அன்போடு அழைக்கின்றனர். ஆகஸ்ட்/ ஆவணி பெளர்ணமியில்  15 நாள் உற்சவம் நிறைவு பெறுகிறது தேர்த் திருவிழா நாளில் 2 பெரிய ரதங்கள் பவனி வருகின்றன மறுநாள் தீர்த்தத் திருவிழா, வேட்டைத் திருவிழா நடைபெறுகிறது .விழாக்காலத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

–சுபம் — 

TAGS- கொக்கட்டிச் சோலை, சிவன் கோவில், தான் தோன்றி ஈஸ்வரன் , மட்டக்களப்பு , தான்தோன்றீஸ்வரம்

Leave a comment

Leave a comment