WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,638
Date uploaded in London – 21 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
16-4-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
தெருவோரங்களில் தூங்கிய சிறுவன் – அமெரிக்க அதிபரை விட அதிக சம்பளம் வாங்கியது எப்படி?
ச. நாகராஜன்
சோகமான இளம் பருவத்தில் பூங்காக்களில் இரவில் படுக்க வேண்டி நேர்ந்த ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி சம்பளத்தை விட அதிகமாக வாங்கியதோடு உலகையே தனது அபார நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்தார் என்றால் நம்ப முடிகிறதா?
சார்லி சாப்ளின் என்ற பெயரைச் சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் சிரிப்பவர்கள் அவரது வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி அறிந்தால் ஆச்சரியப்படுவது நிச்சயம்.
லண்டனில் 1889ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதியன்று ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சாப்ளின் அனாதைகளுக்கான பப்ளிக் போர்டிங் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு ஐந்து வயதாகும் போது ஒரு அதிசய சம்பவம் நடைபெற்றது. மேடைப் பாடகியான அவரது
தாயார் ஒரு நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர் தொண்டை அடைக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். அப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் சாப்ளினை மேடையின் நடுவில் இழுத்துச் சென்று பாடு என்றார். சாப்ளினும் தனக்குத் தெரிந்த ஜாக் ஜோன்ஸ் என்ற பாட்டைப் பாடலானார். நல்ல கைதட்டல்.
மேடை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளலானார் அவர்.
அவரது தாயார் கொடுத்த ஊக்கத்தில் முன்னேறலானார். ஆனால் பின்னால் அவர் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஒரு சோகமான விஷயம்.
ட்ரம்ப் என்ற கதாபாத்திரம் அவரை ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகராக உலக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்த பாத்திரம் உருவானதே தற்செயலான ஒரு சம்பவத்தால் தான்.
கீஸ்டோன் ஸ்டுடியோவில் ஒரு நாள் ஹோட்டலுக்கான செட் போடப்பட்டிருந்தது. அனவரும் சாப்ளினை ஒரு காமடியன் டிரஸ் போட்டு வருமாறு வற்புறுத்தினர். மேக் அப் அறைக்குச் சென்ற சாப்ளின் தொளதொள என்று ஒரு பேண்டை மாட்டிக் கொண்டார். அதற்கு மாறுபாடாக இருக்கும் படி ஒரு கோட்டை அணிந்தார். முகபாவம் நன்கு தெரியும்படி ஒரு சின்ன மீசையை ஒட்டிக் கொண்டார். விசித்திரமான தொப்பி, பெரிய ஷூக்கள் இரண்டு. ட்ரம்ப் ரெடி. உலக மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது ட்ரம்பை.
7-2-1914ல் வெளியானது ட்ரம்ப் என்ற திரைப்படம்.
காலம் மாறவே தொழில்நுட்பம் வளர்ந்து பேசும் திரைப்படங்கள் உருவாக ஆரம்பித்தன. சாப்ளின் பயந்தார். இப்படிப் பேசினால் அது நடிப்பை ஒருபடி கீழே தள்ளி விடும் என்று நினைத்தார் அவர். ஆனால் முதலில் ஒரு மியூசிக்கை மட்டும் அறிமுகப்படுத்திய அவர் நாளடைவில் புதிய தொழில்நுட்பத்திலும் வல்லவராகி விட்டார்.
முதலில் வாரம் அவருக்கு சம்பளம் 150 டாலர். அது விரைவில் வாரத்திற்கு 1250 டாலராக ஆனது. அமெரிக்க ஜனாதிபதியின் சம்பளம் அப்போது வருடத்திற்கு 75000 டாலர். 1916ம் ஆண்டு ஆறுலட்சத்தி எழுபதாயிரம் டாலருக்கு ஒப்பந்தமாகி உலகின் அதிக சம்பளம் பெற்ற காமடியன் என்ற புகழைப் பெற்றார்.
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்த அவர் தனி ஸ்டுடியோவையே அமைத்தார். 1914 முதல் 38 ஆண்டுகள் அங்கேயே தங்கி இருந்தார். அவரது படங்களில் சுமார் 90 படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன. சிடி லைட்ஸ் (1931), தி க்ரேட் டிக்டேடர் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தகுந்தவையாகும்.
அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என்று கடுமையாக விமரிசிக்கப்பட்டார். அத்தோடு செனட்டர் ஒருவர் அவரை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார். அவருக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்படவே நேரடியாக ஸ்விட்சர்லாந்து வந்து அங்கு வசிக்க ஆரம்பித்தார்.
நார்ன் என்ற நகரில் அவர் வசித்தபோது அங்குள்ள மக்களுக்கு உலகின் மிகப் பிரபலமான ஒருவர் தங்களுடன் வசிக்கிறார் என்பதே தெரியவில்லை. இனிமையாகக் காலத்தைக் கழித்தார் சாப்ளின்.
நான்கு முறை தன்னை விட மிகவும் குறைந்த வயதுள்ள மங்கையரை அவர் மணந்தார். மூன்று திருமணங்கள் முறிந்தன. நான்காவது மட்டும் நீடித்தது. அவருக்கு 11 குழந்தைகள் உண்டு.
ஐன்ஸ்டீனிடம் அவர், “நான் சொல்வது எல்லோருக்கும் நன்கு புரிவதால் அவர்கள் எனக்குக் கைதட்டுகிறார்கள். நீங்கள் சொல்வது ஒருவருக்கும் புரியாததால் வியந்து உங்களுக்குக் கை தட்டுகிறார்கள்” என்றார்.
மகாத்மா காந்தி 1931ம் ஆண்டு இங்கிலாந்து வந்த போது அவரைப் பார்க்க ஆசைப்பட்டார் சாப்ளின். சரோஜினி தேவியார் இந்த சந்திப்பிற்கு ஒத்துழைத்தார். காந்திஜியை சந்தித்த சாப்ளின் இயந்திரமயமாக்குவதற்கு அவர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று கேட்டார். காந்திஜியோ அதற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அதற்கு அடிமையாவதையே தான் எதிர்ப்பதாக விளக்கினார். இதனால் வெகுவாகக் கவரப்பட்ட சாப்ளின்
இதை தனது படத்தில் பின்னால் புகுத்தினார்.
பிரபல டைம் பத்திரிகையில் அட்டைப்படத்தில் முதன் முதலாக இடம் பெற்ற நடிகர் படம் அவருடையதே. 1925 ஜூலை 6ம் தேதி இதழின் அட்டைப்படத்தில் அவர் படத்தை வெளியிட்டு அவரை கௌரவித்தது டைம் பத்திரிகை.
1952ல் அமெரிக்காவிலிருந்து வெளியேறிய அவர் 1972ம் ஆண்டு ஆஸ்கார் (அகாடமி) விருது வாங்க ஒரே ஒரு முறை அமெரிக்கா வந்தார்.
இங்கிலாந்து மகாராணி அவருக்கு க்னைட் பட்டத்தை தந்த போது அவர் முன்னால் சிலை போல நின்றார் அவர். அவரால் பேசக் கூட முடியவில்லை. ராணியார் அவரது இரு தோள்களையும் தட்டி சர் பட்டத்தை வழங்கினார்.
1977ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் மறைந்தார்.
1978 மார்ச் மாதம் இரண்டு பேர் அவரது சடலத்தைத் திருடிக் கொண்டு சென்றனர். அதற்கு ஈடாக 60000 டாலரை அவர் மனைவியிடம் கேட்க அவர் கொடுக்க மறுத்தார். ஆனால் நல்ல வேளையாக அவர்களை போலீஸார் பிடித்து விட்டனர். 11 வாரத்தில் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் கான்கிரீட்டால் அவரது கல்லறை பாதுகாப்புடன் புதுப்பிக்கப்பட்டது.
“சிரி; உன்னுடன் உலகம் சிரிக்கும்” என்பதை மெய்ப்பித்து வாழ்ந்து காட்டிய நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினை உலகம் மறக்குமா என்ன!