Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-21;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,728)

Written by London Swaminathan

Post No. 15,728

Date uploaded in London –12 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்

மூலவர் – த்ரிவிக்ரமன், தாடாளன், உலகளந்த திருவுருவம், நின்ற திருக்கோலம், கிழக்கே ஸகல வசதிகளும் உண்டு.

உத்ஸவர் – த்ரிவிக்ரம நாராயணன்.

தாயார் – மூலவர் – லோகநாயகி. உத்ஸவர் – மட்டவிழ்குழலி.

தீர்த்தம் – சங்கபுஷ்கரிணி, சக்ரதீர்த்தம்.

விமானம் – புஷ்கலாவர்த்த விமானம்.

ப்ரதயக்ஷம் – அஷ்டகோண மஹர்ஷி.

விசேஷங்கள் – பெருமாள் இடதுகாலைத் தூக்கி விண்ணை அளக்கிறார். இவ்வூரில் திருமங்கையாழ்வார் திருஞானஸம்பந்தரை வாதில் வென்று அவருடைய வெற்றி வேலைப் பரிசு பெற்றதுடன் “கடியுண்டநெடுவாளை” என்ற ஓர் அழகிய பாடலாலும் புகழப் பெற்றார். நாலுகவிப் பெருமாள் என்ற விருதையும் பெற்றார் என்று ஒரு செய்தி உள்ளது . ஆனால் இருவர் வாழ்ந்த காலமும் வெவ்வேறு என்பதால் சைவர்கள் இந்தக் கதையை மறுக்கின்றனர்  

செல்வ தெய்வநாயகன் ஸந்நிதியும் இங்கே உள்ளது.

சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். ‘தாள்’ என்றால் ‘பூமி அல்லது உலகம்’, ‘ஆளன்’ என்றால் ‘அளந்தவன்’ என்று பொருள். தன் திருவடியால் பெருமாள் மூன்று உலகங்களையும் அளந்தவர் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு “தாளாளன்’ என்ற பெயரை சூட்டினாள். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது.

ஒருசமயம் கோயில் இருந்த இடம் பாழ் பட்டுப்போனது. அப்போது கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து உற்சவ பெருமாள் விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.

மூலவர் பெருமாள் பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிற்கின்றார். அதனால் மூலவர் பெருமாளின் வலது பாதத்தை நாம் தரிசிக்க முடியாது. வைகுண்ட ஏகாதசியன்று  மட்டும், உற்சவரை அவருடைய இடத்திலிருந்து நகர்த்தி வைப்பார்கள். அன்றைய தினம் மட்டுமே, நாம் மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.

உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

ப்ருஹ்மாவுக்கு தன் ஆயுளைப்பற்றி கர்வம் ஏற்பட்ட பொழுது, ரோமசமுனிவர் “உன் ஆயுசும் என் ஒரு ரோமமும்” ஸமம் என்று சொல்லி அவர் கர்வத்தை அடக்கின ஸ்தலம்.

இங்கு விஷ்ணு திரிவிக்கிரம பெருமாளக காட்சியளிக்கிறார். வாமன அவதாரத்தில், வாமனன் மன்னன் மகாபலியிடம் மூன்றடி நிலத்தைக் கேட்டார், பின்னர் அவனது அளவை அதிகரித்து, ஒரு படியால் வானத்தையும், இரண்டாவது படியால் பூமியையும் மூடினான். இந்தக் கோவிலில், விஷ்ணு தனது இடது காலை உயர்த்திக் காட்டுகிறார் –

***

விஷ்ணு நகரம் அல்லது நித்திய இடத்தைக் குறிக்கும் ஆறு இடங்கள் விண்ணகரம் என்று அழைக்கப்படுகின்றன. அவை: திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோயில்), நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்), அரிமேய விண்ணகரம் (நாங்கூரில் உள்ள குடமாடு கூத்தன் கோயில்), வைகுண்ட விண்ணகரம் (நாங்கூரில் உள்ள வைகுண்டநாதர் கோயில்) பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சிபுரம்).

***

இக்கோயிலில் கோதண்டராமருக்கு தனி சன்னதி உள்ளது.

திருக்காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் தூரத்திலுள்ளது. பஸ்ஸில் சென்றால் கோயில் ஸந்நிதி வாசலிலேயே இறங்கலாம்.

மங்களா சாஸனம் -திருமங்கையாழ்வார் – 1178-1187 – 10 பாசுரங்கள்.

***

திவ்யதேச பாசுரங்கள்

1178.  

ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*

ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*

தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*

தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2)

1179.  

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*  நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*

நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*  ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*

உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*  தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*

எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1180.  

வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*  மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*

நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*  நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*

நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*  மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*

செய் அணைந்து களை களையாது ஏறும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1181.  

பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து*  முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*

நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*  நின்மலன் தாள் அணைகிற்பீர்*

நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*  தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*

செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1182.  

தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*  திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து*

வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*  அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*

செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.  

1183.  

பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள*  படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*

வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*  துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*

திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

1184.  

பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*  புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*

செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*  திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*

திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*  வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*

தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.        

1185.  

பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*  பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்*

மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்*  மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*

அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ*  நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*

பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே.

1186.  

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து*  பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*

கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்*  கலந்தவன் தாள்அணைகிற்பீர்*

கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று*  கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி*

சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.   

1187.  

செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை*

அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*

கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன*

சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)

***

திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்

திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு அருகே உள்ள ஒரு பழைமையான வைணவத் தலம். இது 108 திவ்ய தேசங்களில் 7-வது தலமாகவும், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தொடர்புடைய சிறப்பான தலமாகவும் விளங்குகிறது.

:தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும், திருவையாறிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் குடமுருட்டி மற்றும் வெண்ணாறு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

வேறு பெயர்கள் கண்டன ஷேத்ரம், பஞ்சகமல ஷேத்ரம்

***

மூலவர்: ஹர சாப விமோசன பெருமாள் (நின்ற கோலம்).

தாயார்: கமலவல்லி நாச்சியார்.

சிவன், பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெருமாளை வணங்கிய தலம். எனவே, இத்தலம் ‘கண்டன க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.மூர்த்திகள்: இங்கு மும்மூர்த்திகளான சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருப்பது சிறப்பாகும்.

தீர்த்தம்: கபால மோட்ச புஷ்கரணி.

திருக்குளம் / ஆறு    கபால மோட்ச புஷ்கரிணி, ஹத்யா விமோசன தீர்த்தம், பத்ம தீர்த்தம் (பலி தீர்த்தம்)

ஆகமம்   வைகானச ஆகமம்

வழிபாடு  நான்கு கால பூசை

திருவிழாக்கள்  பங்குனியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீபம்

சிற்பங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றச் செய்யும் வரப்பிரசாத வடிவமான, ஸ்ரீ லட்சுமி நரசிம்மன், ஸ்ரீ மகா சுதர்சனன், சிலைகள் .

தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது.

சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்முகமாக தானும் இவ்விடத்தே கோவில் கொண்டார். எனவே இது ஒரு மும்மூர்த்திதலம். தற்போது இங்குள்ள பிரம்மாவின் கோவில் மூடப்பட்டு பிரம்மா மற்றும் ஸரஸ்வதி சிலைகள் சிவபெருமானின் தலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூலை எழுதிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்னும் மஹான் கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சார்ந்தவர். கண்டியூர் பெருமான் மீது அளவு கடந்த பக்தி பூண்டவர்.

திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். ஒரே ஒரு பாடலில் இத்தலத்துப் பெருமை பற்றிக் கூறுகிறார். இத்தலத்தோடு சேர்ந்து ஸ்ரீரங்கம், கச்சி (காஞ்சி) பேர் (திருப்பேர் நகர் என்னும் கோயிலடி) மல்லை என்னும் திருக்கடன்மல்லை என்னும் நான்கு ஸ்தலங்களையுஞ் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.

. மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஒரு சமயம் இக்கோவிலின் முகப்பில் நின்று சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் உண்டாக அப்போது இப்பெருமான் திப்புசுல்தானை ஆட்கொண்டார் எனவும். இப்பெருமான் மீது பக்திகொண்ட திப்பு, கோவிலை வலம் வந்து போர் முடித்து வென்றார் என்பதும் கர்ண பரம்பரையான பழங்கால வாய்வழிக் கதையாகும்.

***

 

திருக்கண்டியூர்   பாசுரங்கள்

பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர்மனை திரிதந்துண்ணும்-

உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்,* உலக மேத்தும்-

கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சிபேர் மல்லை என்று-

மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே? (2)

***

திருவையாறில் அமைந்துள்ள (தேவாரத்தில்) பாடப் பெற்ற பஞ்சனாதீஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தானங்களில் ஒன்றாகவும் திருக்கண்டியூர் போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே திருக்கண்டியூர் வீரட்ட சிவாலயம், சைவ-வைணவ ஓற்றுமைக்கு சான்றாக அமைந்துள்ளது ! சிவாலயத்தில் பிரம்மனுக்கும், சரஸ்வதி தேவிக்கும் சன்னிதிகள் உள்ளன.

***

திருக்கண்டியூருக்கு அருகே கல்யாணபுரம் என்ற பசுமையான கிராமத்தில் கல்யாண வேங்கடசுவரர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னனின் துணைவியின் (பெயர்: கல்யாணி) நினைவாகவே கல்யாணபுரம் என்ற பெயரை இக்கிராமம் பெற்றது என்று கூறப்படுகிறது.

வருடம் முழுதும், இக்கோயிலில் விழாக்களும், உத்சவங்களும் நடைபெறுகின்றன. சித்திரையில் வசந்த உத்சவமும், அட்சய திருதியையும், வைகாசியில் விசாக உத்சவமும், நவராத்திரியும், தீபாவளியும், கார்த்திகையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தினமும் கருடசேவை நடைபெறுகிறது!

To be continued……………………………….

Tags- சீர்காழி , திருக்கண்டியூர், ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தாடாளப் பெருமாள் கோவில், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-21, திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Leave a comment

Leave a comment