Written by London Swaminathan
Post No. 15,853
Date uploaded in London –10 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 50
ஸ்ரீரங்கம் திருவரங்கம்
விஷ்ணுவின் எட்டு ஸ்வயம் வியக்த ஷேத்திரங்களுள் முதன்மை ஆனது ஸ்ரீரங்கம். தமிழ் பேசும் வைணவர்களுக்கு கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம்தான் . வழிபடப்படும் கோயில்களில் உலகிலேயே பெரிய கோவில் இதுதான் ; கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட் போன்ற விஷ்ணு கோவில்களில் வழிபாடு, பூஜை, புனஸ்காரங்கள் கிடையாது.
156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள திருவரங்கம் கோவில் 108 வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். இந்தக் கோவில் திருவரங்க திருப்பதி, பெரியகோவில், பூலோக வைகுண்டம் மற்றும் போக மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலைச் சுற்றி அரண் போன்ற சுற்றுச் சுவர்கள் உள்ளன. இங்கு கம்பீரமான பெரிய 21 கோபுரங்கள் உள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.
இது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே தீவு போல உள்ள நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர்கள், சேரர்கள் , பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் திருப்பணியில் மேலும் மேலும் பொலிவுபெற்றதுl
புகழ்பெற்ற ஸ்ரீரங்கத்துக்கும் முந்தியது ஆதி ரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கபட்டணம் ஆகும் . கர்நாடகத்தில் மைசூருக்கு அருகில் உள்ளது .காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள மூன்று பெருமாள் கோவில்களில் முதலில் உள்ளது ஸ்ரீரங்கபட்டணம் /ஆதி ரங்கம். இரண்டாவது ரங்கம் சிவ சமுத்திரத்தில் இருக்கிறது ; கடைசி ரங்கம் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள ஸ்ரீ ரங்கம் ஆகும் . இவை முறையே ஆதி, மத்யம, அந்த்ய ரங்க க்ஷேத்ரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிலப்பதிகாரம், அகநானூறு போன்ற சங்க இலக்கியத்தில் போற்றி புகழப்படும் தலமாக இருப்பதால் இதன் பழம் பெருமை நன்கு விளங்கும்.
sriranagam3.jpg)
பெயர்: அரங்கநாத சுவாமி கோயில்
மூலவர்: அரங்கநாதர்
உற்சவர்: நம்பெருமாள்
தாயார்: ரங்கநாயகி
தல விருட்சம்: புன்னை
தீர்த்தம்: சந்திர தீர்த்தம் உட்பட எட்டு தீர்த்தங்கள்
ஆகமம்: பாஞ்சராத்திரம்
மங்களாசாசனம் செய்தவர்கள்: பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்,
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (ஆழ்வார்)
தல வரலாறு
திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.
குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.
–ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார்
பஞ்சரங்க தலங்கள்
பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்.
ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில் : ஸ்ரீரங்கப்பட்டணம்
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் : திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில் : கும்பகோணம்
திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில் : திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் : மயிலாடுதுறை
கோயில் ஒழுகு
கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் (“வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்” என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
திருச்சுற்றுகள்
இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
நவ தீர்த்தம்
சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், புன்னாக தீர்த்தம்.
கல்வெட்டுகள்
9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. ‘கோவில் ஒழுகு’ 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.
இஸ்லாமியப் படையெடுப்பால் அழிக்கப்பெற்றதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. (கி.பி.1415). 15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது.
ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான விபீஷணர் இப்பொழுதும் இலங்கையிலிருந்து இங்கு இரவில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.
கோயிலின் வடபுறத்தில் தாயார் சந்நிதியும் ராமர் கோவிலும் உள்ளன.
இந்தக் கோயிலில் உள் விமானம் பிரணவ ரூபமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும். அந்த விமானத்தில் பர வாஸுதேவருடைய சிலா விக்ரஹம் இடுப்பு வரையிலும் காணப்படுகிறது.
தாயாரின் திரு நாமம் அரங்க நாயகி. தாயார் சந்நிதியின் மூல ஸ்தானத்தில்
இரண்டு தாயார்களின் விக்ரஹங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
துலுக்க நாச்சியார் அரங்கனின் மீது ப்ரேமை கொண்டு முக்தியடைந்ததாக வரலாறு ஒன்றும் உண்டு.
இங்கு தான், தாயார் கோவிலின் முன் புறம், அழகிய சிங்கர் முன்னிலையில் உள்ள ஓர் மண்டபத்தில், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றினார். கம்பர் மண்டபம் என்ற பெயருடன் இது விளங்குகிறது.
சுக்ர தோஷம் உடையவர்கள் அரங்கநாதரை தரிசித்தால் அந்த தோஷம் நீங்கி விடும் என ஜோதிட சாஸ்திரம் உறுதி கூறுகிறது
வைகுண்ட ஏகாதசி திருநாளில் ஸ்ரீரங்கநாதருக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
–subham—
Tags- கல்வெட்டுகள், Part 50,Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-50; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், ஸ்ரீரங்கம், திருவரங்கம்