WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,909
Date uploaded in London – 24 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
மரங்களைப் போல உதவுவர் சத்புருஷர்கள்!
ச. நாகராஜன்
பிறவித் தலைவர்கள் எப்படி இருப்பார்கள்?
மாலதிகுஸுமஸ்யேவ த்வே வ்ருத்தி ஸ்தோ மனஸ்வின: |
மூர்த்னி வா சர்வலோகஸ்ய ஷீர்யதே வன் ஏவ வா ||
மாலதி புஷ்பமானது தெய்வங்களின் சிரத்தில் காணப்படவேண்டும் அல்லது காட்டில் (யார் காலிலும் படாதபடி) உதிர்ந்திருக்க வேண்டும். அதுபோலவே தனது சுய விருப்பத்தைக் கொண்டு வாழும் பிறவித் தலைவர்கள் ஒன்று தலைமை இடத்தைப் பெற வேண்டும் அல்லது சந்யாசிகளாக ஆசிரமங்களில் இருக்க வேண்டும்.
மரங்களும் சத்புருஷர்களும்!
சாயாமன்யஸ்ய குர்வந்தி ஸ்வயம் திஷ்டந்தி சாதபே |
பலான்யபி பரார்தாய வ்ருக்ஷா: சத்புருஷா இவ ||
மரங்களானவை வெயிலில் வெப்பத்தைத் தாங்கி மற்றவர்களுக்குத் தங்க இடத்தையும் நிழலையும் தருகின்றன. அத்தோடு அவை மற்றவர்கள் சுவைக்கப் பழங்களையும் தருகின்றன. இதைக் கருத்தில் கொண்டால் மரங்கள் நல்ல சத்புருஷர்களைப் போலவே உண்மையில் இருக்கின்றன. (சத்புருஷர்கள் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வாழ்கின்றனர்.)
சத்புருஷர்களின் செயல்!
க்ஷாரம் ஜலம் வாரிமுச: பிபந்தி ததேவ க்ருத்வா மதுரம் வமந்தி |
சந்தஸ்ததா துர்ஜனதுர்வசாம்ஸி பீத்வா ச சூக்தானி சமுத்கிரந்தி ||
மேகங்கள் கடலிலிருந்து உப்பு நீரை கிரஹித்து இனிமையான சுத்தமான நீராகப் பொழிகின்றன. சந்தபுருஷர்கள் அதே போல தீயவர்களின் கெட்ட வார்த்தைகளை உள்வாங்கி அதற்குப் பதிலாக இனிமையான ஆறுதல் தரும் வார்த்தைகளைப் பேசுகின்றனர்.
சிங்கம் பசித்தாலும் புல்லை உண்ணாது!
வனோபி சிம்ஹா: கஜமாம்ஸபக்ஷிணோ புபுக்க்ஷிதா நைவ த்ருணம் சரந்தி |ஏவம் குலீநா வ்யஸனாபிபூதா ந நீசகர்மாணி சமாசரந்தி ||
காட்டில் வாழும் சிங்கங்கள் யானையின் மாமிஸத்தையே உணவாகக் கொள்கின்றன. பசி எடுத்தாலும் புல்லை உண்ணுவதில்லை. அது போலவே மேலோர் தங்களுக்கு கஷ்டமான ஒரு காலத்தில் கூட சிறுமைத் தனமான வேலைகளைச் செய்ய மாட்டார்கள்.
இங்கு புலி பசித்தாலும் புல்லைப் புசிக்காது என்ற தமிழ்ப் பழமொழியை நினைவு கூரலாம்.
மேலோர் ஆரவாரமின்றி நல்லதைச் செய்வர்!
ஷரதி ந வர்ஷதி கர்ஜதி,, வர்ஷதி வர்ஷாஷு நிஸ்ஸ்வனோ மேக: |
நீசோ வததி ந குருதே, ந வததி சுஜன: கரோத்யேவ ||
குளிர்காலத்தில் மேகங்கள் கர்ஜனை செய்யும், ஆனால் மழையைக் கொண்டு வருவதில்லை. ஆனால் மழைக்காலத்திலோ அவை ஏராளமாக மழையைப் பொழிகின்றன, ஆனால் சத்தம் செய்வதில்லை. கீழ்குடியில் பிறந்த நீசர்கள் வாக்குறுதிகளைத் தருவர் ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில்லை. ஆனால் நல்ல மக்கள் வாக்குறுதிகளை வழங்குவதில்லை. செயலிலேயே செய்து காட்டுவர்.
**