அரசனின் குணநலன்கள்: கம்பனும் காளிதாசனும்

கம்பன்2

கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1185: தேதி:— 21 ஜூலை 2014.

நல்ல அரசர்கள் குணங்கள் என்ன என்று கம்பனும், காளிதாசனும் பட்டியல் இடுகின்றனர். கம்ப ராமாயணத்தையும், ரகு குல மன்னர் புகழ் பாடும் காளிதாசனின் ரகுவம்சத்தையும் நமது மந்திரிகளும், ஆட்சியாளர்களும் படிக்கவேண்டும்; பின்பற்றவும் வேண்டும்.

இதோ கம்பன் கூற்று:–
இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதி கடவான் எனின்,
அனைய மன்னர்க்கு அழிவும் உண்டாம் கொலோ?
(அயோத்யா காண்டம், மந்தரை சூழ்ச்சிப் படலம், பாடல் 111)

இவை அத்தனையும் ராமன், அவனது தந்தை தசரதன், அவனது முன்னோன் ஆன ரகு அத்தனை பேருக்கும் பொருந்தும்.

இனிய சொல்லினன்= இனிய சொற்களையே பேசுவான்
ஹிதபாசி என்று ராமனைப் புகஷ்வான் வால்மீகி;

ஈகையன் = வாரி வழங்கும் கொடையாளிகள்;

எண்ணினன் = எண்ணித் துணிக கருமம் என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க எந்தச் செயலையும் ஆராயாமல் துவங்கமடார்கள்;

வினையன் = தேனீக்கள், எறும்புகள் போல எப்போதும் சுறுசுறுப்பானவர்கள்; சோம்பேறித்தனம் என்பதே அவர்கள் அகராதியில் இல்லை;

தூயன் = கறைபடாத கரங்கள் உடையோர்; மனம், மொழி, மெய்—மனோ,வாக், காயம் என்னும் திரிகரண சுத்தி உடையோர்;

விழுமியன் = சிறப்புமிக்கவர்கள்; ஆயிரத்தோடு ஒன்று ஆயிரத்தொன்று என்று வாழாமல், ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான செயல் புரிந்து வரலாற்றில் அழியாத இடம் பெறும் “தோன்றின் புகழொடு தோன்றுக” வகையினர்;

வென்றியன் = தோல்வி என்பதே அவர்கள் அகராதியில் இல்லை; “எடுத்த காரியம் யாவினும் வெற்றி: என்ற பாரதி வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள்;

நினையும் நீதி கடவான் = எவரும் போற்றும் அரச நீதியில் இருந்து விலகாதவர்கள்.
இது கம்பன் தரும் சித்திரம்.

Ragu_big

ஆஜன்ம சுத்தானாம், ஆ பலோதய கர்மணாம், ஆசமுத்ர க்ஷிதீசானாம், ஆநாக ரத வர்த்மனாம்

ரகு குல மன்னர்கள் பற்றி நான்கு விஷயங்களை முதல் சர்க்கத்திலேயே காளிதாசன் (ஸ்லோகம் எண்:5) சொல்லி விடுகிறான்:

1.பிறவியிலேயே பரிசுத்தமானவர்கள் (( ஆஜன்ம சுத்தானாம்)).
2.பயன் கிடைக்கும் வரை முயற்சியை உடையவர்கள் (( ஆ பலோதய கர்மணாம்)) — (எடுத்த காரியம் யாவினும் வெற்றி)

3. இரு பக்கமும் சமுத்திரத்தின் கரைகள் வரை ஆட்சி புரிபவர்கள் (( ஆசமுத்ர க்ஷிதீசானாம்)). பரந்த சாம்ராஜ்யம்!

4.அவர்களுடைய தேர்கள் சுவர்க்கத்தின் வாசல் வரை செல்லத் தக்கன (( ஆநாக ரத வர்த்மனாம்)) !!

இனி காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் முதல் சர்க்கத்தில் என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்போம்:–

தெய்வ நம்பிக்கை உடையோர்; தேவ பூஜை செய்தனர்
தானம் கேட்டு வந்தவரின் மனம் வருந்தாத அளவுக்கு தானம் கொடுத்தனர்.

குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்கினர்.

பிறருக்குக் கொடுப்பதற்காக பொருள் ஈட்டினர்.

காலத்திற்கு ஏற்ற அறிவு பெற்றனர்; அதாவது காலத்திற்கு ஏற்ப புதுப்புது விஷயங்களைக் கற்றனர்.

குறைவாகப் பேசினர்; எதற்காக? அதிகம் பேசினால் வாய் தவறி சத்தியம் பிறண்டு விடுமோ என்று பயந்து சத்தியத்தைக் காக்க மிதமாகப் பேசினர்.

புகழிற்காக மற்ற மன்னர்களை வென்றனர். நாடு பிடிக்க அல்ல; மக்களைக் கொன்று குவிக்க அல்ல.

இளமையில் கல்வி கற்றனர்; “இளமையில் கல்” என்ற ஆத்திச்சூடி வசனம் அவர்களுடைய குறிக்கோள்

யௌவனப் பருவத்தில் (வாலிப வயதில்) இன்பம் துய்த்தனர்.

திருமணம் செய்து கொண்டனர்; எதற்காக—வம்ச விருத்திக்காக!! (செக்ஸுக்காக அல்ல)

வயோதிகப் பருவத்தில் காட்டிற்குப் போய் தவம் செய்து யோகத்தினால் உயிரை விட்டனர்.

குசன் மகன் ஆட்சி எப்படி இருந்தது?

big-kalidasa

ரகு வம்ச 17–ஆவது சர்க்கத்தில் ராம பிரானுடைய பேரன் அதிதி — (குசனின் மகன்) — ஆட்சியில் அவன் எப்படி இருந்தான் என்பதைக் கூறும் ஸ்லோகங்கள் மேலும் சில சுவையான தகவல்களைத் தருகின்றன:

நியாய சபையில் தானே அமர்ந்து நீதி வழங்கினான்.

வேலைக்காரர்களுக்கு வேலை முடிந்தவுடன் ஊதியம் அளித்தான்.
மழைக்கால நதிகளில் வரும் வெள்ளம் போல மக்களுக்கு செல்வம் கிடைத்தது.

சொன்ன சொல் தவறவில்லை; கொடுத்ததை ( வரிகள் என்ற பெயரில்) திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை.

வாலிபப் பருவம், அழகு, செல்வம் இருந்தும், கர்வம் இல்லை.

ஒற்றர்களைக் கொண்டு தன் நாட்டிலும் பிற நாடுகளிலும் நடப்பதை அறிந்தான்.

அவன் நாட்டைச் சுற்றி அரண்கள் அமைத்தான்; எதற்காக? பயத்தினால் அல்ல; ராஜ நீதிப்படி ஒரு நாடு அரணோடு இருக்க வேண்டும் என்பதற்காக.

மக்களுக்கு வருத்தம் தரும் எதையும் செய்யவில்லை.

raguvamsam

2000 ஆண்டுகளுக்கு முன் காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தைப் சம்ஸ்கிருதத்தில் படிக்கையில் அக்காலத்தில் வாழ மாட்டோமா என்ற எண்ணம் மனதில் எழும். பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்கும்போது ராஜ ராஜ சோழன் காலத்தில் வாழ நாம் ஆசைப்படுவது போல!—
முற்கால பாரதத்தின் எழுச்சியை வருணிப்பதில் காளிதாசனுக்கு நிகர் காளிதாசனே!!
சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம் முதலான ஏழு நூல்களையும் மல்லிநாதர் முதலியோரின் விரிவுரைகளுடன் பயில வேண்டும். அவைகளை சங்க இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ வேண்டும்!

-சுபம்-

ஆசை பற்றி அறையலுற்றேன்…..

கம்பன்1

கட்டுரையாளர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை:- 1183; தேதி:–20 July 2014.

கம்பன் பாடிய ராமாயணப் பாடலில் பால காண்டத்தில் மிகவும் பணிவோடு சொல்கிறான்:

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! (4)

பொருள்:– பெரிய புனிதமான திருப் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிப்பது போல, குற்றமற்ற, வீரம் மிக்க ராமன் கதையை சொல்லவேண்டும் என்ற ஆசையால் நான் சொல்கிறேன்.

பின்னர் ஒரு பாடலில் மூவர் பாடிய ராமாயணத்தில் முதல்வர் (வால்மீகி) பாடியதை வைத்துப் பாடியதாகக் கூறுகிறான். அந்த முதல்வர் வால்மீகி என்பதை அதற்குப் பின் வரும் பாடலில் பெயரைச் சொல்லியே உறுதிப் படுத்துகிறான். ஆனால் அந்த மூவர் யார் என்பதற்கு உரைகாரர்கள் வசிஷ்டர், போதாயனர், வால்மீகி ஆகியோர் எழுதியவை என்கின்றனர். நமக்குக் கிடைத்திருப்பதோ வால்மீகி ராமாயணம் ஒன்றுதான். காளிதாசன் ரகுவம்சத்தில் எழுதியதைக் கம்பன் திரும்பச் சொன்னானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. இதோ கீழ்வரும் பாடலைப் படித்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

கம்பன்3

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ –(பால. 8)

பொருள்:– முத்தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்த புலவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய அறிவிப்பு:– பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அரைவேக்காடுகள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமோ!!

தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ! (10)

பொருள்:– தேவ பாஷையான — (கடவுளரைப் போற்றும் வேதம் உள்ள மொழி) —-சம்ஸ்கிருதத்தில் மூவர் —-(வால்மீகி, வசிட்டர், போதாயனர்) — இராமன் கதையைப் பாடினர். அவர்களுள் முதன்மையான நாவல்லமை மிக்கோனைப் — (வால்மீகி) – பின்பற்றி தமிழில் நான் பாடுகிறேன்.

raghuvamsa_of_kalidasa

காளிதாசன் ரகுவம்சம்

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயோ மதி:
திதீர்ஷு:துஷ்தரம் மோஹாத் உடுபேனாஸ்மி சாகரம்

பொருள்:– சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அந்த வம்சத்தின் பெருமையோ சிறந்தது. நானோ மிகக் குறைவான அறிவுடையவன். கடக்க முடியாத சமுத்திரத்தை ஒரு சிறு படகின் மூலம் ஒருவன் கடக்க விரும்புவது போல என் சிறு மதியால் கடல் போன்ற இந்த சரித்திரத்தைக் கூறப் போகிறேன்.

மந்த: கவியச: ப்ரார்த்தி கமிஷ்யாம் உபஹாஸ்யதாம்
ப்ராம்சு லப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

பொருள்:– குறைந்த அறிவுடைய நான் கவியின் புகழை அடைய விரும்புகிறேன். உயரமான மனிதன் மட்டுமே அடையக்கூடிய பழத்தை குள்ளமான நான் கைகளை நீட்டிப் பறிக்க முயலும்போது பரிகசிக்கப்படும் நிலையை அடைவேன்.

அதவா க்ருதவாக் தூரே வம்சேஸ்மின் பூர்வசூரிபி:
மணௌ வஜ்ர சாமுத்கீர்ணே சூத்ரயேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாவிடினும் முன்னோர் சென்ற வழியில் சென்று என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வேன். எப்படி வஜ்ர ஊசியினால் துளைக்கப்பட்ட துவாரத்தில் நூல் எளிதில் செல்லுமோ அப்படி முன்னோர் —- (வால்மீகி) — போட்ட துளை வழியாகச் செல்வேன்.
—ரகுவம்சம் முதல் சர்கம் பாடல் 2, 3, 4

மேலும் இரண்டு ஸ்லோகங்களில் ரகுவம்ச மன்னர்களின் குணங்கள் தன் காதில் விழுந்துவிட்டதால், ஏற்பட்ட உந்துதலால் துணிச்சலாக இந்தக் காவிய முயற்சியில் இறங்கியதாகவும் தனக்கு சொற்செல்வம் குறைவே என்றும் பணிவுடன் கூறுகிறார். தங்கம் சுத்தமானதா இல்லையா என்பதை அக்னியில் (தீயில்) போட்டு பரிசோதிப்பது போல பெரியோர்கள் என் காவியத்தைப் பரிசோதிக்கட்டும் என்கிறார்.

கம்பனையும் காளிதாசனையும் படிக்கும்போது கம்பன் காளிதாசனைப் பின்பற்றினானோ ( அறிமுகப் பாடல்களில் மட்டும்) என்று எண்ண வேண்டி இருக்கிறது. ஆனால் இரு புலவர்களும் எவ்வளவு பணிவோடு துவங்கினர் ! அவை இரண்டும் எப்படி உலகப் பிரசித்தம் அடைந்து விட்டன!!

‘வித்யா விநயன்ன சம்பதே’= பணிவால் கிடைப்பதே கல்வி; கல்விக்கு இலக்கணம் பணிவு!

இந்த நேரத்தில் நினைவுக்கு வரும் மேலும் ஒரு பாடல் ஆதிசங்கரரின் அபூர்வ சௌந்தர்ய லஹரி (அழகின் அலைகள்) துதியில் வரும் ஒரு பாடலாகும்.

lahari

சௌந்தர்ய லஹரி

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய – க்ரமண – மசனாத்யாஹுதி – விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில – மாத்மார்ப்பண – த்ருசா
ஸபர்யா – பர்யாயஸ் – தவ பவது யன்மே விலசிதம்
–சௌந்தர்ய லஹரி பாடல் 27

ஆதிசங்கரர் கூறுகிறார்:

தாயே! நான் ஆத்மாவை உனக்கு அர்ப்பணித்துவிட்டேன். நான் என்ன பேசினாலும் அதையெல்லாம் உனது ஜபமாகக் கொள்ளவேண்டும். நான் என் கைகளால் செய்யும் அத்தனையையும் உனது முத்திரைகளின் விளக்கமாகக் கொள்ள வேண்டும். நான் நடப்பதையெல்லாம் உன்னை வலம் வருவதாகக் கொள்ள வேண்டும். நான் சாப்பிடுவதை எல்லாம் உனக்கு வேள்வித் தீயில் ஆகுதி செய்ததாகக் கொள்ள வேண்டும், நான் படுத்துக் கொண்டால் அதைக் கீழே விழுந்து வணங்கியதாகக் கொள்ள வேண்டும். எனது செயல்கள் அனைத்தும் உனது பூஜையாகக் கொள்ள வேண்டுகிறேன்.

இப்படிப்பட்ட ஒரு நிலை வந்துவிட்டால் — எதையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் நிலை வந்துவிட்டால் — எல்லோரும் சங்கரர் ஆகிவிடுவர்.

வாழ்க கம்பன், காளிதாசன், ஆதி சங்கரன்!!!

லண்டன் புறாவும் கம்பன் புறாவும்

pigeon1

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1181; தேதி:– 19 July 2014.

கம்பராமாயணப் பாடலைப் படிதவுடன் லண்டன் காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது. இங்கெல்லாம் ஒவ்வொரு சுரங்க ரயில் பாதை ஷ்டேஷனிலும் வீடுகளிலும் புறாக்கள் உட்காரக் கூடாது என்பதற்காக மேல் கூரையில் கூரான கம்பிகளைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் ஆட்களின் ‘கோட்டு- சூட்’டுகள் மீது புறாக்கள் எச்சம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக! லண்டனின் மத்தியப் பகுதியில் உள்ள டிரபால்கர் சதுக்கத்தில் புறாக்களுக்கு பொறி வாங்கிப்போடுவதை யும் தடுத்துவிட்டனர்.

லண்டன் முதலிய மேலைநாடுகளில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, சேவல் எல்லாவற்றையும் வளர்ப்பார்கள்; “மானே, தேனே, முத்தே, மணியே, கரும்பே, கற்கண்டே” என்று கொஞ்சுவார்கள். விருந்தினர் வரும் அன்று எல்லாம் “டைனிங் டேபிளில்” சாப்பாடாக மாறிவிடும். குழந்தைகள் கொஞ்சம் வருத்தப்பட்டால், அடுத்த விருந்து நடக்கும் வரை மரணத்தை ஒத்திப் போடுவார்கள். வெளிநாடு போகும்போது நாய் பூனைகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கான அறநிறுவனங்கள் அவற்றை வேறு யாரும் ஏற்காவிடில், ஒருவாரத்தில் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து ‘’கருணையோடு’’ கொன்று விடுவார்கள்.

இதைத் தவிர ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆடு மாடுகளின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில்!! லண்டனில் மட்டும்!!

கம்பன் பாடலில் அயோத்தி நகர மாளிகையில் புறவுக்கு மாடம் வைத்திருப்பதை ஒரு அழகு, ஒரு சிறப்பு என்று வருணித்ததைப் படித்தவுடன் இத்தனையும் நினைவுக்கு வந்தது!!!

pigeon2

புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி வெண் கிரிமிசை விரிந்த போலுமே
-பால காண்டம், பாடல் 121, கம்ப ராமாயணம்.

பொருள்: மாளிகைகளில் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. அவைகளை எளிதில் அகற்ற முடியாது. புள்ளிகளை உடைய மாடப் புறாக்கள் தங்குவதற்கு உரிய இடங்கள் இருந்தன. வெள்ளியிலான மலையில் காலை இளம் கதிரவனின் கிரணங்கள் பரவினால் எப்படி இருக்குமோ அப்படி அந்த மாளிகைகள் பிரகாசித்தன.

இதில் மாடப்புறாக்கள் தங்குவதற்கு இடம் இருந்தது என்பதைப் பெருமையாகக் கூறுகிறான் கம்பன். அதாவது மாடப் புறாக்கள் தங்குவதும் ஒரு அழகு. மாடங்களில் தங்குவதால்தான் அவைகளுக்கு மாடப்புறாக்கள் என்று பெயர். பறவைகளின் மீதுள்ள அன்புக்கு இதுவும் ஒரு சான்று.

beware pigeon

இந்தியப் புலவர்கள் இயற்கையின் மீது பற்று உடையவர்கள். காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதி சுயம்வரக் காட்சியில் ஒரு பாடல் வருகிறது. சூரசேன மஹாராஜாவை இளவரசி இந்துமதிக்கு தோழி சுநந்தை அறிமுகப்படுத்துகிறாள் —- ஒவ்வொரு அரசனையும் அறிமுகப்படுத்தும் போதும் ஒவ்வொரு இயற்கைக் காட்சியும் வருகிறது. சூரசேன மன்னனை நீ மணந்துகொண்டால் கோவர்த்தன மலையில் உள்ள பாறைகளில் அமர்ந்துகொண்டு மயில்கள் ஆடுவதைப் பார்த்து ரசிக்கலாம் என்று கூறுகிறான் காளிதாசன்.

மேலை நாட்டு, கீழை நாட்டு அணுகுமுறைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

trafalgar sq
Trafalgar Square in London. Now feeding pigeons is not allowed.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்-
நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம் — (பாரதி)

புறவுக்காக உயிர் கொடுக்க முன்வந்த சிபிச்சக்ரவர்த்தியின் புகழைப் பாடும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. சோழநாட்டுக் கண்ணகியும் இதைக் குறிப்பிட்டு பாண்டிய மன்னனை வசைபாடுகிறாள்.

வாழ்க பறவைகள்!! வளர்க அஹிம்சை!!

-சுபம்-

தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில்

akaththi

கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1177; தேதி:- 17 ஜூலை 2014.

தமிழ் தலைவன் யார் என்று தமிழ் கூறு நல்லுலகில் ஒரு ‘சர்வே’ நடத்தினால், சிறை சென்ற தியாகிகள் பட்டியல், மறியல் போராட்ட தியாகிகள் பட்டியல், அரசியல் தலைவர்கள் பட்டியல், ஏ.கே. 47 துப்பாக்கி சுழற்றியோர் பட்டியல், ரயில் பாதையில் படுத்துப் போராட்டம் செய்தோர் பட்டியல் என்று ஆயிரம் ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் வந்து நம்மைத் திக்கு முக்காடச் செய்து விடும்!

கம்பனிடம் போய் ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார். அவர் நாலே வரிகளில் தெளிவான பதில் கொடுத்து நம் குழப்பத்தை எல்லாம் போக்கிவிட்டார்.

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே

-கம்ப ராமாயனம், அயோத்தியா காண்டம், பாடல் 969

பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.

Agasthiar
அகத்தியர் என்ன செய்தார்?

அகத்தியர் கடலைக் குடித்தார்: அதாவது வங்கக் கடல் வழியாக பாண்டியனின் படைகளை வழி நடத்திச் சென்று வியட் நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோநேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இந்துப் பண்பாட்டைப் பரப்பினார். இதைக் “கடலைக் குடித்தார்” என்று அழகாகாகச் சொல்லுவர். அகத்தியர் கடலைக் குடித்தாரா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும், பிரம்மாஸ்திரா—ஒரு அணுசக்தி ஆயுதமா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.

அகத்தியர் பூமியை சமநிலைப்படுத்தினார்: இது திருவிளையாடல் புராணத்தில் உள்ள கதை. மக்கட் தொகைப் பெருக்கம் காரணமாக அகத்தியன் தலைமையில் 18 குடிகளை சிவ பெருமான் தெற்கே அனுப்பிவைத்தார். “உலகின் முதல் மக்கட் தொகைப் பெருக்கப் பிரச்னை”– என்ற ஆங்கிலக் கட்டுரையில் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.

விந்திய மலையை மட்டம் தட்டினார்:- அகத்தியர் தென்னாட்டிற்கு வருவதற்கு முன், மக்கள் அனைவரும் கடலோரமாக நடந்தோ, படகுகளிலோ தென்னாட்டு நகரங்களுக்கு வந்து சென்றனர். காரணம் இல்வலன், வாதாபி போன்ற, நர மாமிசம் சாப்பிடும் பயங்கரக் காட்டுவாசிகளும் காட்டு மிருகங்களும் மக்களை அச்சுறுத்தி வந்தன. அகத்தியர் தவ வலிமை பெற்றதால் தைரியமாக 18 குடி மக்களை, துவாரகை நகரில் இருந்து, விந்திய மலையின் நடுவிலுள்ள அடர்ந்த காடுகள் வழியே அழைத்து வந்தார். அன்றுமுதல் இன்று வரை நாம் அந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகிறோம். இதையே “மண் உற அழுத்தலால்” என்று குறிப்பிடுகிறார். புராணங்கள் கத்தியர் விந்திய மலையின் கர்வத்தைப் பங்கம் செய்தார் என்று அழகாகக் கூறுகின்றன. “பழங்கால இந்தியாவின் புகழ்மிகு எஞ்சினீயர்கள்”– என்ற கட்டுரையில் இது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி விட்டேன்.
Agathiyar_hemanth thiru

இத்தகைய அரிய பெரிய செயல்களைச் செய்து இந்திய பூகோள புத்தகத்தில் அழியா இடம் பெற்ற அகத்தியனை, தமிழ்த் தலைவன் என்று கம்பன் அழைத்ததை எல்லோரும் ஏற்பர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ?

இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.

பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.

இனி தமிழ்த் தலைவன் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அரசியல்வாதிகள் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியதுதான்!!
529_Kambar
contact swami_48@yahoo.com

31 முக்கிய கம்ப ராமாயணப் பாடல்கள்

ram nam, fb

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 ஜூலை மாத காலண்டர்
(( முக்கிய 31 கம்ப ராமாயணப் பாடல்கள் ))

Post No. 1139 Date: 30 June 2014
Prepared by London swaminathan (copyright)

கம்பன் பாடல்களில் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகியவற்றில் இருந்து முக்கிய 31 பாடல்கள் இந்த ஜூலை மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

முக்கிய நாட்கள்: ஜூலை 4 வெள்ளி ஆனி உத்தரம் ; 12 சனி வியாச பூஜை; 17 வியாழன் தட்சிணாயன புண்யகாலம்; 26 சனி ஆடி அமாவாசை; 29 செவ்வாய் ரம்ஜான்; 30 புதன் ஆடிப்பூரம்.
சுபமுஹூர்த்த நாட்கள்:– 7, 9, 11, 14, 16. பௌர்ணமி — ஜூலை 12, அமாவாசை– ஜூலை 26,; ஏகாதசி ஜூலை 8 & 22.

ஜூலை 1 செவ்வாய்
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே–(பாலகாண்டம் பாயிரம் 1)

ஜூலை 2 புதன்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். –(பால. காப்பு 13)

ஜூலை 3 வியாழன்
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே. –(பால. காப்பு 12)

ஜூலை 4 வெள்ளி
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் —(பால.காப்பு 2)
hanuman with hill

ஜூலை 5 சனி
முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ –(பால. 8)

ஜூலை 6 ஞாயிறு
கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறைவளம் நல் மணி
பிலம் சுரக்கும்பெறுவதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம் –(பால. 70)

ஜூலை 7 திங்கள்
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை,பல் கேள்வி ஒங்கலால். –(பால. 85)

ஜூலை 8 செவ்வாய்
இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய் வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்–(பாலகாண்டம் 481)

ஜூலை 9 புதன்
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான் ;அவளும் நோக்கினாள் –(பால. 519)

ஜூலை 10 வியாழன்
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர்
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ –(பால. 522)

hey ram

ஜூலை 11 வெள்ளி
கருதல் அரும் பெருங் குணத்தோர் இவர் முதலோர் கணக்கு இறந்தோர்
திரிபுவனம் முழுது ஆண்டு சுடர்நேமி செல நின்றோர்
பொருது உறை சேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன்–(பால. 590)

ஜூலை 12 சனி
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நான் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் –(பால. 648)

ஜூலை 13 ஞாயிறு
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்
–(பால. 1028)

ஜூலை 14 திங்கள்
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைத்தான்
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன்
நச்சுடை வடிக்க கண் மலர் நங்கை இவள் என்றால்
இச்சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ–(பால. 1099)

ஜூலை 15 செவ்வாய்
முப் பரம்பொருளிற்குள் முதலை மூலத்தை
இப்பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை
அப்பனை அப்பினுள் அமிழ்தை தன்னையே
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ
–(பாலகாண்டம் 1174)

ram on rock

ஜூலை 16 புதன்
சிலையொடு கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர்
முலை இடை முகிழ்ப்ப தேரின் மீமிசை முளைத்தது அன்னாள்
அலை கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள
மலையிடல் உதிக்கின்றால் போல் மண்டபம் அதனில் வந்தாள்.
–(பாலகாண்டம் 1185)

ஜூலை 17 வியாழன்
இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ
துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின்
பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ –(அயோத்தியா காண்டம் 20)

ஜூலை 18 வெள்ளி
“புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகழ்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்து, யாவையும் காத்து அவை பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத் திறலோன். –(அயோத்தியா 36)

ஜூலை 19 சனி
மண்ணினும் நல்லள் மலர்மகள் கலைமகள் கலை ஊர்
பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்.– (அயோ.39)

ஜூலை 20 ஞாயிறு
ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய்
தாழ் இருஞ் சடைகள் தாங்கித் தாங்க அருந்தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்–(அயோ.288)

ram targets

ஜூலை 21 திங்கள்
மன்னவன் பணி அன்றாகின் நும் பணி மறுப்பெனோ என் பின்னவன்
பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்–(அயோ.291)

ஜூலை 22 செவ்வாய்
“குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மௌளி கவித்தனன் வரும் என்றென்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்” –(அயோ.293)

ஜூலை 23 புதன்
சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் –(அயோ. 313)

ஜூலை 24 வியாழன்
கண்ணோடாதே கணவன் உயிரோடு இடர் காணாதே
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்னப் புகல்வாய்
பெண்ணோ தீயோ மாயப் பேயோ கொடியாய் நீ இம்
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் –(அயோ.336)

ஜூலை 25 வெள்ளி
கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத உரு அறியாப்
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் –(அயோ.388)

ram profile

ஜூலை 26 சனி
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது என்றான்–(அயோ.421)

ஜூலை 27 ஞாயிறு
நன்சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்
தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்–(அயோ.428)

ஜூலை 28 திங்கள்
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையனொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் –(அயோ.610)

ஜூலை 29 செவ்வாய்
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்–(அயோ.677)

ஜூலை 30 புதன்
ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ (999)

ஜூலை 31 வியாழன்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா (1019)

contact swami_48@yahoo.com

மாரி, பாரி, வாரி: காளி.,கம்பன் கபிலன்!!!

06TH_WEATHER2_1937233g
Written by London Swaminathan
Post No.1125 ; Dated :– 23 June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You have to get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

மாரி என்றால் மழை;
பாரி என்பவன் கடை எழு வள்ளல்களில் ஒருவன்;
வாரி என்றால் கடல்.

காளிதாசன், கபிலன் என்பவர்கள் 2000 ஆண்டுகளு க்கு முன் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உதித்தவன் கம்பன் என்னும் கவிஞன். இம்மூன்று கவிஞர்களும் சொல்லேர் உழவர்கள்; ஒரே விஷயத்தை தமக்கே உரித்தான பாணியில் நயம்பட உரைப்பதைப் படித்து மகிழ்வோம்.

கி.மு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன். அவனது ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200—க்கும் மேலான உவமைகளை சங்கப் புலவர்கள் கையாண்டிருப்பதை ஏற்கனவே ஆறு, ஏழு கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறேன்.

barcelona mediterranean sea

ரகுவம்சம் (17—72) என்னும் காவியத்தில் வரும் ஸ்லோகம் இது:

வறுமையில் வாடிய புலவரும் ஏழைகளும் அதிதி என்ற அரசனை அடைந்தனர். அவன் அள்ளி அள்ளிக் கொடுத்தான். அந்தப் பொருளை வாங்கி ஊருக்குத் திரும்பி வந்தவுடன் அவர்களும் எல்லோருக்கும் வாரி வழங்கி வள்ளல் என்ற பெயர் எடுத்துவிட்டனர். இதன் உட் பொருள்:–அப்பொருளைப் பெற்றோர், அப்பொருளுக்கு மூல காரணமான அதிதி என்னும் மன்னனையே மறந்துவிட்டனர். மேகங்களும் இப்படித்தான் கடல் நீரை மொண்டு எல்லோருக்கும் மழையாகத் தருகிறது. இதன் உட்பொருள்:–எல்லா கவிஞர்களும் மேகங்களை வள்ளல் என்று புகழ்கின்றனர். ஆனால் அந்த மேகங்களுக்கும் நீர் கொடுத்தது கடல் என்பதை மறந்துவிட்டனரே!!

ரகுவம்சம் 1-18ல் திலீபன் என்னும் மன்னனின் கொடைத் தன்மையை வருணிக்கையில் ‘’சூரியன் கடல் நீரை உறிஞ்சுவது ஆயிரம் மடங்கு திருப்பித் தருவதற்கன்றோ! அதே போல திலீபன் வரி வாங்கியதும் ஆயிரம் மடங்கு மக்களுக்குத் திருப்பித் தருவதற்கன்றோ!!’’ – என்பான்.

ரகுவம்ச அரசர்கள் எப்படிக் கொடுத்துக் கொடுத்து வறியவர் ஆயினரோ அதே போல பாரியும் ஆய் என்ற வள்ளலும் வறியவர் ஆனதை முடமோசியாரும் கபிலரும் பாடுகின்றனர்.

kadal-B_Id_428828_cyclone

புறம் 127 முடமோசியார் பாடிய பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி ( ஈகை அரிய இழையணி மகளிரொடு ) மட்டுமே கொடுக்க இயலாது. மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய் என்பார்.

கபிலன் பாடல்
பாரியினுடைய 300 ஊர்களும் ஏற்கனவே இரவலர்க்கு வழங்கப்பட்டு விட்டது என்பதை முற்றுகையிட்ட மூவேந்தரிடம் கபிலர் கூறினார்.
புறம் 107 கபிலர் பாடிய பாடலில், மேகம் உவமை வருகிறது.:-
பாரி பாரி என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே.

எல்லோரும் பாரியையே புகழ்கின்றனரே. உலகத்தைக் காப்பதற்கு மாரி (மழை/மேகம்) யும் உள்ளனவே. இது பழிப்பது போல பாரியைப் புகழ்வதாகும்.

கம்பன் பாடல்
கம்பனும் ராமாயண பால காண்டத்தில் இதே உத்தியைக் கையாளுகிறான்:
புள்ளி மால் வரை பொம் எனல் நோக்கி, வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின் , வழங்கின் மேகமே (ஆற்றுப் படலம், பால காண்டம்).

மற்றவர்களுக்கு தானம் செய்யும்போது ஏற்படும் இன்பத்தைக் கருதி தம்மிடமுள்ள செல்வத்தை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களைப் போல மேகங்களும் கோசல நாட்டில் மழையைக் கொட்டித் தீர்த்தனவாம்! இது கடைசி இரண்டு வரிகளின் பொருள்.

முதல் இரண்டு வரிகளின் பொருள்:– பெருமையுடைய இமயமலை பொலிவுடையதாக இருக்க வேண்டும் என்று கருதி வெள்ளி நிறக்கம்பிகள் போல தாரை தாரையாக மழை இறங்கியது.

kadal blue

ஆக மேகத்தையும் கடலையும், மழையையும் கொண்டு மன்னர்களின் வள்ளல் தன்மையை புலவர்கள் விளக்கும் நயம் மிகு பாடல்கள் படித்துச் சுவைப்பதற் குரியனவே!

உலகில் இப்படி வள்ளன்மைக்கு உவமையாக மழை, மேகம், கடல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை பாரதம் முழுதும் வடமொழி, தென்மொழிப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். இது பாரதீயர்களின் ஒருமுகச் சிந்தனையைக் காட்டுகிறது, ஆரிய—திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோருக்கு இதுவும் ஒரு அடி கொடுக்கும்!

–சுபம்–

கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள்

Waitomo-glow-worm-New-Zealand
Glow worms in New Zealand Waitomo Caves

தமிழ் இலக்கியம், காளிதாசனில் மின்மினிப் பூச்சி

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1110; தேதி 16 ஜூன் 2014.

கம்பனும் காளிதாசனும் புகழ் பெற்ற கவிஞர்கள். வடமொழியில் ஏழு நூல்கள் எழுதிய காளிதாசனின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. எப்படி சங்கத் தமிழ் நூல்களைக் கல்லாதோருக்கு, இந்திய கலாசாரம் பற்றிப் பேச அருகதை இல்லையோ அப்படிக் காளிதாசனைக் கல்லாதோரும் இந்தியப் பண்பாடு பற்றிப் பேச அருகதை இல்லாதோர் ஆகிவிடுகின்றனர். ஆயிரம் உவமைகளுக்கு மேலாக அள்ளித் தெளித்து அறுசுவை உண்டி – செவிக்கு உணவு—படைத்திருக்கிறார் காளிதாசர்!!

கம்பன் புகழைப் பாரதியார் பல இடங்களில் பாடிப் பரவியதில் இருந்து அவனுடைய மேன்மையை நாம் உணரலாம். கம்பனும் காளிதாசனும் ‘’மின்மினிப் பூச்சி’’ பற்றி சில அதிசயச் செய்திகளைக் கூறுகின்றனர். இது தவிர அகநானூற்றுப் புலவர்களும் நற்றிணைப் புலவர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சில பாடல்கள் காளிதாசன் சொல்லும் ரகசியப் புதிரை விடுவிக்கிறது. இயற்கை வரலாற்று நிபுணரும், பி பி சி டெலிவிஷன் படத் தயாரிப்பாளருமான டேவிட் அட்டன்பரோ காட்டிய சில காட்சிகளைப் பார்த்தோருக்கு காளிதாசன் சொன்னது இதுதானோ என்று வியக்கவும் செய்வர்.

Fairies-nagoya city
Fireflies in Nagya City, Japan.

கம்பன் சொன்ன செய்தி
இந்திய கிராமப் புறங்களில் இரவு நேரத்தில் பயணம் செய்வோர் மின்மினிப் பூச்சிகளைக் கண்டிருப்பர். இந்த மின்மினிப் பூச்சிகளை, குருவிகள் பிடித்துச் சென்று தனது கூடுகளில் வைத்து மகிழும். கூடுகளுக்கு மின்சார விளக்குப்போடுவது போல இவைகள் வெளிச்சம் தருவதால் அவைகள் இப்படிச் செய்கின்றன போலும். இந்தக் காட்சியை கம்பன் பால காண்டத்தில் வருணிக்கிறான்:–

அயோத்தி மாநகரம் செல்வச் செழிப்பில் மிதக்கிறதாம். அங்கே கோழிகள் குப்பையைக் கிளறினால் கூட ரத்தினக் கற்கள்தான் வருமாம். அவை களைக் கண்ட குருவிகள் , மின்மினிப் பூச்சிகள் என்று எண்ணி அவை களைக் கூடுகளில் கொண்டு வைக்குமாம். இதோ அந்தப் பாடல்:–

சூட்டுடைத் தலைத் தூநிற வாரணம்
தாள் தனைக் குடைய தகைசால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ
(கம்ப ராமாயணம், பால காண்டம், பாடல் 59)

பொருள்: வாரணம்=கோழி, மணி= ரத்தினக் கற்கள், குரீஇ=குருவி.

_mycena_chlorophanos_33 species

Fungi with luminescence. 35 Fungal speecies emit light

காளிதாசன் சொன்ன செய்தி
காளிதாசன் அவனது பாடல்களில் ( குமார சம்பவம் 1-30; ரகு வம்சம் 9-70 ) பல இடங்களில் ஒளிவீசும் தாவரங்கள் (ஜோதிர்லதா) பற்றிப் பகருவான்.
தசரதர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது காட்டில் தனியே தங்க நேரிட்டது என்றும் அப்பொழுது ஒளிவீசும் தாவரங்களே அவருக்கு விளக்குகளாக இருந்து உதவின என்றும் காளிதாசன் கூறுகிறான். (ரகு வம்சம் 9-70).

உமை அம்மை பற்றி வருணிக்கும் இடத்தில் குமார சம்பவத்தில் (1-30) மூலிகைகள் இரவு நேரத்தில் ஒளிவிடும் என்றும் சொல்கிறான்.

மேகதூத காவியத்தில் (பாடல் 80) மேகத்துக்கு வழங்கும் அறிவுரையில், “நீ மலைச் சிகரத்தில் குட்டி யானை அளவுக்கு உன் வடிவத்தைச் சுருக்கிக் கொள். மின்மினிப் பூச்சிகள் எந்த அளவுக்கு ஒளி சிந்துமோ அந்த அளவுக்கு ஒளி வீசி வீட்டிற்குள் எட்டிப் பார்” என்கிறான்.
கம்பனும் கூட “உம்பர் வானத்து நின்ற ஒளிவளர் தருவின்” – என்று தேவலோக ஒளி உமிழும் கற்பக தரு பற்றிப் பாடுகிறான் (பால காண்டம் 793)

glowing_plant_genetically engineered
Light emitting tobacco plant.

விஞ்ஞானிகள் சொல்லும் செய்தி:-
சில வகை மீன்கள், பூச்சிகள், கடல் வாழ் ஜெல்லி மீன்கள், தாவரங்களில் காளான் வகைகள் ஆகியன மட்டுமே ஒளி வீசக்கூடியவை. பெரிய மரங்களோ, செடி கொடிகளோ ஒளி வீசக்கூடியவை அல்ல. தற்காலத்தில் செயற்கை முறையில் புகையிலைத் தாவரத்துக்கு ஒளி ஊட்டி செயற்கையாக ஒளிரச் செய்துள்ளனர். ஆனால் இயற்கையில் உள்ள சில அதிசயங்கள் டெலிவிஷன் மூலம் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளன. நியூசிலாந்தில் ஒரு குகை முழுதும் மின்மினிப் பூச்சி வகைகள் வாழ்கின்றன. இரவு நேரத்தில் அந்தக் குகை ஜெகஜ் ஜோதியாகச் ஜொலிக்கிறது. விழா நாட்களில் கட்டிடங்களில் அலங்கார விளக்கு போடுவது போல அவை அணைந்தும் ஒளிவீசியும் ஜாலவித்தைகள் செய்கின்றன. பி.பி.சி போன்ற சில இயற்கை பற்றி ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோருக்கு இது தெரியும்.

காளிதாசன் கம்பன், சொல்லும் ஒளிவிடும் தாவரங்கள், இது போல மின்மினிப் பூச்சிகளால் சூழப்பட்ட மரங்களாக இருக்கக்கூடும் அல்லது இபோது நாம் காணும் ஒளிவிடும் மீன்கள் போல அந்தக் காலத்தில் ஒளிவிடும் தாவரங்களும் இருந்திருக்கலாம்.
சங்கப் புலவர்கள் அகநானூற்றிலும் நற்றிணையிலும் (அகம். 67-16, 72-3, 202-7, 291-8; நற் 44-10)) வரும் சில பாடல்கள் மூலம் பலா மரம் முழுதும் மின்மினிப் பூச்சிகள் இருந்ததையும் குறவர்கள் இரவு நேரத்தில் மேகங்களைப் பார்க்க மின்மினிப் பூச்சிகள் விளக்காக இருந்து உதவி செய்வதையும் பாடிவைத்துள்ளனர்.

பாலை நில பருக்கைக் கற்கள், மின்மினிப் பூச்சிகள் போல இருப்பதாக நோய்பாடியார் என்னும் புலவர் கூறுகிறார் (அகம்.67)

எருமை வெளியனார் மகனார் கடலனார் பாடிய பாடலில் ஒரு அரிய உவமை தருகிறார். இரவு நேரத்தில் காட்டில், கரடிகள் பாம்புப் புற்றில் கையை விட்டுக் கறையான்களைப் பிடிக்கப் போகும்போது மின்மினிப் பூச்சிகள் பறக்கும் காட்சி கொல்லன் பட்டறையில் பறக்கும் தீப்பொறிகள் போல இருக்கும் என்கிறார். கரடியை இரும்புவேலை செய்யும் கொல்லனுக்கும் கறையான் புற்றுகளை பட்டறைக்கும் ஒப்பிட்டது ஒரு நல்ல உவமை. (அகம்.72)

ஆவூர்க் கிழார் மகனார் கண்ணகனார் பாடிய பாடலிலும் இதே கொல்லன் உலைக்கள உவமையைத் தருகிறார்.
நற்றிணைப் பாடல் (44) ஒன்றில் பெருங் கௌசிகனார் வேறு ஒரு காட்சியை வருணிக்கிறார்: குறவர்கள் இரவு நேரத்தில் மின்மினிப் பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் மேகத்தின் செயல்பாட்டைக் கவனிப்பர் என்கிறார்.

குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து….

தமிழ் நிகண்டுகளில் மின்மினிப் பூச்சிக்குப் பல பெயர்கள் உள்ளன அவை:–நிசாமணி, ஞவல், நுளம்பு, கத்தியோதம், அலகு, கசோதம், அலத்தி.

இயற்கையோடியைந்த வாழ்க்கை நடத்திய நம் முன்னோர்கள், மின்மினிப் பூச்சி மூலம் வழங்கும் செய்திகள்தாம் எத்தனை எத்தனை !!
–சுபம் —

ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது யார்?

rama's anger at ocean

Post No 1031
Dated 9th May 2014
Written by my brother S Nagarajan

ஞான ஆலயம் ஏப்ரல் 2014 இதழில் வெளிவந்த கட்டுரை

வடநாட்டில் பிரஸித்தமாக வழங்கி வரும் ஹனுமத் புராணத்திலிருந்து ஒரு கதை!

ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது யார்?

By ச.நாகராஜன்

நாரதர் கலகம்

ஒரு முறை ஹனுமான் தன் அன்னை அஞ்சனா தேவியை தரிசிக்க ஆவலுற்று ராமரிடம் அனுமதி பெற்றுக் கிளம்பினார். அதே தருணத்தில் காசி மஹாராஜன் ராமரின் தரிசனத்திற்காகக் கிளம்பினான். வழியில் நாரதர் காசிராஜனைப் பார்த்து,” நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.” நான் ராமசந்திர மஹாபிரபுவைத் தரிசிக்கச் சென்று கொண்டிருக்கிறேன்” என்றான் காசிராஜன்.

“எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டுமே!”என்றார் நாரதர்.
“தங்கள் கட்டளை என் பாக்கியம்” என்றான் காசி ராஜன்.
அங்கு அரச சபையில் எல்லோருக்கும் வந்தனம் செய். ஆனால் அங்கு இருக்கும் விஸ்வாமித்திரருக்கு மட்டும் வந்தனம் செய்யாதே. அவரைக் கண்டு கொள்ளாதே!” என்றார் கலக நாரதர்.

காசிராஜனுக்குத் தூக்கி வாரிப் போட்ட்து. மஹாமுனிவரான விஸ்வாமித்திரரை நமஸ்கரிக்கக் கூடாதா! ஐயோ! இது என்ன கோரம்!! விக்கித்து நின்ற அவன் நாரதரை நோக்கி,”மஹரிஷி விஸ்வாமித்திரரை நமஸ்கரிக்கக் கூடாதா?ஏன், ஸ்வாமி” என்றான்.

hanuman bhajan

“ஏன் என்பது பின்னால் தெரியும். சொன்னதைச் செய்வாயா?” என்று கேட்டார் நாரதர். கலக்கமுற்ற காசிராஜன் இருதலைக் கொள்ளி எறும்பானான். நாரதரிடம் அவர் சொல்லியபடி செய்வதாக வாக்களித்து விட்டு, ராமரது அரச சபைக்குச் சென்று ராமரை ஆனந்தக் கண்ணீர் வழியக் கண்டு ஆனந்தமுற்று வணங்கினான்.அங்குள்ள வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரையும் வணங்கி ஆசி பெற்றான். ஆனால் விஸ்வாமித்திரரை மட்டும் வணங்கவில்லை. சபையில் இந்த அவமரியாதையை நன்கு கவனித்த விஸ்வாமித்திரர் அங்கு சும்மா இருந்தார்.பின்னர் ராமரைத் தனியே சந்தித்தார். “ராமா! உன்னை எல்லோரும் “மர்யாதா புருஷோத்தமன்” என்கின்றனர். மஹரிஷிகளை வணங்கும் மாண்பு மிக்க உன் அரச சபையில் எனக்கு இன்று மரியாதை கிடைக்கவில்லையே!” என்று வருத்தமுற்றுக் கூறினார்.

துணுக்குற்ற ராமர்,” என்ன விஷயம்?” என்றார். இன்று அரச சபைக்கு வந்த காசிராஜன் என்னைத் தவிர அனைவரையும் வணங்கினான்! வேண்டுமென்றே என்னை அவமானம் செய்து விட்டான்! இது சரியா?” என்றார் விஸ்வாமித்திரர்.

ராம பிரதிக்ஞை

“ராம ராஜ்யத்தில் பெரும் முனிவரான தங்களுக்கு ஒரு அவமானம் என்றால் அது அனைவருக்குமே அவமானம் தான்! உங்களை இப்படி அவமதித்த காசி ராஜனை என் மூன்று பாணங்களால் இன்று மாலைக்குள் கொல்கிறேன்” என்று வாக்களித்தான் ராமன்.

ராமரின் இந்த சபதம் காட்டுத்தீ போல எங்கும் பரவி காசிராஜனையும் அடைந்தது. அவன் ஐயோ என்று அலறியவாறே நாரதரை நோக்கி ஓடினான். ”நீங்களே எனக்கு அபயம்! உங்களால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது!” என்று அலறினான்.

நாரதரோ புன்முறுவலுடன் கூறினார்:” பிரதிக்ஞையை நானும் கேட்டேன். மூன்று பாணங்கள் சும்மா விடுமா, என்ன? ஆனாலும் நீ பயப்படாதே! உடனடியாக அஞ்சனா தேவியிடம் சென்று அவரின் காலைக் கெட்டியாகப் பற்றிக் கொள்! அவர் உனக்கு அபயம் அளிப்பதாகச் சொன்னாலும் விடாதே! மூன்று முறை அபயம் அளிக்குமாறு கேள்! மூன்று முறை அவர் அப்படி உறுதி அளித்ததும் காலை விடு; கவலையையும் விடு” என்றார் நாரதர்.

ramaya nama
அஞ்சனாதேவியும் ஆஞ்சநேயனும்

காசிராஜன் கணம் கூடத் தாமதிக்கவில்லை.உயிர் பிரச்சினை ஆயிற்றே. ஓடினான், அஞ்சனா தேவியின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உயிர்ப் பிச்சை தருமாறு வேண்டினான். “காலை விடு! குழந்தாய்! அபயம் கேட்டு வந்த உன் உயிருக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். என்ன விஷயம்? ஏன் இப்படி பயப்படுகிறாய்?என்றார் அஞ்சனாதேவி.

“மூன்று முறை அபயம் அளித்து வாக்குறுதி தாருங்கள்.அப்போது தான் கால்களை விடுவேன்” என்றான் காசி ராஜன். அஞ்சனாதேவியும் மூன்று முறை வாக்குறுதி அளித்தார். காசிராஜன் நடந்த விஷயம் அனைத்தையும் சொன்னான். அஞ்சனாதேவிக்கு தூக்கிவாரிப் போட்டது. ராமரின் மூன்று பாணங்கள் இன்று மாலைக்குள் உன்னைத் தாக்குமா!அதிலிருந்து உன்னை யார் காப்பாற்றுவது?” என்றார் அஞ்சனா. ஆனால் தான் அளித்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்து ஒரு கணம் மயங்கி நின்றார். அப்போது உற்சாகத்துடன் அனுமார் உள்ளே நுழைந்து.” அம்மா! “ என்று கூவி அவர் கால்களில் பணிந்து வணங்கினார். அஞ்சனாதேவியின் திடுக்கிட்ட முகத்தைப் பார்த்த அனுமன், “என்ன விஷயம் தாயே ! நான் வந்ததில் கூட உற்சாகம் காண்பிக்கவில்லையே!” என்று வினவினான்.

அஞ்சனா காசிராஜனுக்குத் தான் அளித்த வாக்குறுதியைக் கூறி ராமரின் பிரதிக்ஞையையும்கூறி ,” இப்போது என்ன செய்வது? மகனே! நீ தான் காசிராஜனைக் காப்பாற்ற வேண்டும்.உன் அன்பான அம்மாவின் வேண்டுகோள் இது” என்றார்.

அனுமன் பதறிப் போனான். பிரபுவின் பாணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல மூன்றிலிருந்து யாரேனும் பிழைப்பார்களா, என்ன? “ஆனால், தாயே! இது வரை என்னிடம் நீங்கள் ஒன்று கூடக் கேட்டதில்லையே! முதல் முறையாக ஒன்றைக் கேட்கிறீர்கள்! அதைச் செய்யாமல் இருந்தால் நான் உண்மையான மகன் அல்லவே! வருவது வரட்டும்! காசிராஜன் உயிருக்கு நான் உத்தரவாதம். ராமரின் பாணங்களே வந்தாலும் சரி தான்!”, என்றான் உறுதியான குரலில் அனுமன். அஞ்சனாதேவியும் காசிராஜனும் மகிழ்ந்தனர்.

“அம்மா! விஷயம் கஷ்டமான ஒன்று! உடனே போக எனக்கு அனுமதி கொடுங்கள்!”” என்று கூறிய அனுமன், காசிராஜனை நோக்கி,”உடனே நீங்கள் சரயு நதி சென்று கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி ராம ராம என்று ஜபிக்க ஆரம்பியுங்கள்! இன்று மாலை வரை நமக்கு நேரம் இருக்கிறதே!” என்று கூறினான்.

மூன்று பாணங்கள்! மூன்று நாமங்கள்!!

காசிராஜன் சரயு நதிக்கு ஓடோடிச் சென்று கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி பயபக்தியுடன் ராம நாமத்தை ஜபிக்கலானான் விஷயம் வெகு சீக்கிரம் பரவி மக்கள் கூட்டம் சரயு நதிக் கரையில் கூடியது. இங்கே அனுமன் ராமரிடம் திரும்பி வந்து அவர் சரண கமலங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.”ஸ்வாமி! எனக்கு ஒரு வரம் அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான்.

“இது என்ன அதிசயம்! காலம் காலமாக நான் வரம் தருகிறேன் என்று சொல்வது வழக்கம்! நீ மறுப்பதும் வழக்கம். இன்று நீயே கேட்கிறாயே. வரத்தைத் தந்து விட்டேன். கேள் எது வேண்டுமானாலும்” என்றார் ராமர்.

“ஸ்வாமி! தங்கள் நாமம் பாவனமானது. அதைச் சொல்லும் எந்த பக்தனுக்கும் எப்படிப்பட்ட தீங்கும் வராமல் நான் காக்க வேண்டும்.அதில் எப்போதும் வெற்றி பெற வேண்டும். இந்த வரத்தை அருளுங்கள்” என்றான் அனுமன்.

“வரம் தந்தோம். நீ ராம நாமத்தை ஜபிப்பவனை எப்போதும் காக்க முடியும்! இதில் தோல்வியே உனக்கு ஏற்படாது!”என்று வரத்தை ஈந்தார் ராமர்.

ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து சரயுவுக்குத் தாவிய அனுமன் காசிராஜனிடம்,”விடாதே! தொடர்ந்து ராம நாமத்தை ஜபி! நான் உன் பக்கத்தில் இருக்கிறேன்!” என்றான்.விஷயம் விபரீதமானதை மக்கள் அனைவரும் உணர்ந்து விட்டனர்.சரயுவில் முழு ஜனத்திரளும் திரண்டு விட்டது.

ராமர் காசிராஜன் சரயு நதியில் இருப்பதை அறிந்து கொண்டார். “எதுவானாலும் சரி! என் பிரதிக்ஞையை நிறைவேற்றுவேன்! இதோ, எனது முதல் பாணத்தைத் தொடுக்கிறேன்” என்று தன் முதல் அம்பை எடுத்து காசிராஜனை நோக்கி விட்டார்.

அம்பு காசிராஜனை நோக்கி வந்தது. ஆனால் காசிராஜன் ராம நாமம் ஜபிக்க அனுமான் அருகில் நிற்க செய்வதறியாது திகைத்த ராமபாணம் இருவரையும் வலம் வந்து வணங்கி ராமரிடமே திரும்பியது. திடுக்கிட்ட ராமர்,” என்ன ஆயிற்று?” என்று வினவினார். “ என்ன ஆயிற்றா! அங்கு காசிராஜன் உங்கள் நாமத்தை ஜபித்தவாறே இருக்க அனுமனோ அவன் அருகில் நிற்கிறார். இருவரையும் வலம் வந்து வணங்கி வந்து விட்டேன்” என்றது பாணம்.

paritala,AP,136 ft hanuman
ராமர் சினந்தார். தனது அடுத்த பாணத்தை எடுத்து ஏவினார். அது காசிராஜனை நோக்கி வந்தது. இப்போது அனுமன் காசிராஜனை நோக்கி, “ இதோ பார்! இப்போதிலிருந்து சீதாராம்! சீதாராம் என்று ஜபிக்க ஆரம்பி” என்றார். காசிராஜனும் சீதாராம் சீதாராம் என்று மனமுருகி ஜபிக்க ஆரம்பித்தான்.வேகமாக வந்த இரண்டாவது பாணம் மலைத்து நின்றது. அன்னையின் பெயரைக் கேட்டவுடன் காசிராஜனை வலம் வந்து வணங்கித் திரும்பியது.

“ ஏன் திரும்பி வந்தாய்?”என்று கேட்ட ராமரிடம் அன்னையின் பெயரையும் தங்களின் பெயரையும் உச்சரிப்பவரை வணங்குவது அன்றி வதை செய்வது முடியுமா?” என்று பதில் சொன்னது பாணம். கோபமடைந்த ராமர், “நானே நேரில் வந்து காசிராஜனை வதம் செய்கிறேன்” என்று மூன்றாவது பாணத்துடன் சரயு நதிக்கு வந்தார்.

ராமரே வேகமாக வரவிருப்பதை அறிந்த அனுமன் காசிராஜனை நோக்கி, “ ராமருக்கு ஜயம்! சீதைக்கு ஜயம்! ராம பக்த ஹனுமானுக்கு ஜயம்!” என்று ஜபிக்க ஆரம்பி என்றார். காசிராஜனும்,”ஜய ராம் ஜயஜய சீதா ஜயஜயஜய ஹனுமான்!” என்று ஜபிக்க ஆரம்பித்தான். ஆனால் களைத்திருந்த அவனது குரல் கம்மியது. உடனே அனுமன் தன் ஒரு அம்சத்தை அவன் குரலில் புகுத்தினார். இப்போது கம்பீரமாக அவன் குரல் ஒலித்தது. இதையெல்லாம் பார்த்த வசிஷ்டர் பெரும் கவலை அடைந்தார்.ஒரு புறம் ராமர், மறு புறம் அவரது பக்தனான அனுமன்! வேகமாக அனுமனிடம் வந்த அவர்,” ஹே! அனுமன்! ராமரின் பிரதிக்ஞையைப் பற்றி உன்னை விட வேறு யார் நன்கு அறிந்திருக்க முடியும். இந்த காசிராஜனை விட்டு விடு. ராம பாணத்தால் அவன் பெறப் போவது யாருக்கும் கிடைக்க முடியாத மோக்ஷமே!” என்று அறிவுரை பகர்ந்தார்.
ramachandra swami

அனுமனின் விரதம்
அனுமனோ அவரை நோக்கி,” மா முனிவரே! நமஸ்காரம்! ராம நாமத்தை ஜபிப்பவனைக் காப்பது என் விரதம்! இதில் என் உயிர் போனால் தான் என்ன! காசிராஜனைக் காப்பது என் தர்மம்” என்றான். ராமர் பாணத்துடன் அருகில் வந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் விஸ்வாமித்திரர் நடக்கும் அனைத்து லீலையையும் பார்த்துக் கொண்டிருந்தார். வசிஷ்டர் காசிராஜனை நோக்கி, “மன்னா! இதோ இருக்கிறார் விஸ்வாமித்திரர். இவரை வணங்கு!” என்றார்.

காசிராஜன் ராமசீதா ஹனுமானுக்கு ஜயம் என்று கூறியவாறே விஸ்வாமித்திர்ரை அடிபணிந்து வணங்கினான். விஸ்வாமித்திர்ர் மனமகிழ்ச்சியுடன் காசிராஜனுக்கு ஆசி அளித்து “நீடூழி வாழ்வாயாக” என்றார். அருகில் வந்த ராமரை நோக்கி,” இதோ, காசி ராஜன் என்னை வணங்கி ஆசி பெற்று விட்டான்! என் மனம் குளிர்ந்தது. உன் அம்பை விட வேண்டாம்!” என்று கட்டளை இட்டார். குருதேவரை வணங்கிய ராமர் தன் மூன்றாம் அம்பை அம்பராதூணியில் வைத்தார். ராமருடன் நடந்த போட்டியில் பக்த ஹனுமான் வென்றதைக் கண்ட மக்கள் அனைவரும் ராமருக்கும் ஜயம்! ராம பக்த ஹனுமானுக்கு ஜயம் என்று கோஷமிட்டனர்.

நாரதர் உணர்த்திய ராம பக்தனின் மஹிமை
நடந்ததை எல்லாம் பார்த்த அஞ்சனா தேவி ஆஞ்சனேயனை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தார். கலக நாரதரோ ராம நாம மஹிமையையும் பக்த ஹனுமானின் சிறப்பையும் அனுமனின் அன்னை மீதான பக்தியையும் விஸ்வாமித்திரரின் மஹிமையையும் உலகிற்கு உணர்த்திய வெற்றியில் புன்முறுவல் பூத்தார்.

contact Swami_48@yahoo.com

********************

ராமாயணத்தில் அந்தணர்கள்

21-gurukulam-tv-serial-2-600

எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1005 தேதி—-27th April 2014.

கம்பன் காலத்தில் பிராமணர்கள் புகழ் ஓங்கியிருந்தது என்பதை அவன் பாடல்களில் இருந்து அறிய முடிகிறது. வால்மீகி, போதாயனர், வஷிஷ்டர் ஆகிய மூவர் எழுதிய ராமாயணங்களில் தேவபாஷையில் எழுதப்பட்ட வால்மீகி முனிவரின் கவிதைகளையே—காவியத்தையே அடிப்படையாகக் கொண்டு எழுதியதாக அவனே ஒரு பாடலில் கூறிகிறான். ஆக வால்மீகி முனிவன் பிராமணர்கள் பற்றிச் சொன்னதைத் தானே அவனும் சொல்லியிருப்பான் என்று சிலர் எண்ணலாம். அது சரியல்ல. எவ்வளவோ இடங்களில் அவன் வால்மீகி ராமாயணத்தில் சொன்னதை எழுதாமல் விட்டிருக்கிறான். இன்னும் பல இடங்களிலும் மாற்றியும் எழுதி இருக்கிறான். ஆக கம்பன் கூறுவதை அவன் நம்பிய ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. கம்பன் என்ன சொன்னான்?

வசிட்ட முனிவன் இராமனுக்குக் கூறிய உறுதிப்பொருள்

அயோத்தியா காண்டம்—மந்தரை சூழ்ச்சிப் படலம்

பாடல் 99
என்று பின்னும் இராமனை நோக்கிநான்
ஒன்று கூறுவது உண்டு உறுதிப்பொருள்
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான்

பொருள்: நான் உனக்குச் சொல்ல வேண்டிய உறுதிப்பொருள்
ஒன்று இருக்கிறது. அதை நீ நன்றாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாலை அணிந்த ராமனுக்குச் சொல்லத் தொடங்கினான்

பாடல் 100
கரிய மாலினும் கண்ணுதலானினும்
உரிய தாமரைமேல் உறைவானினும்
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யினும்
பெரிய அந்தணர் பேணுதி உள்ளத்தால்

அந்தணர்களை மனமார ஆதரிக்கவேண்டும். ஏன் தெரியுமா? அவர்கள்
பிரம்மா (தாமரைமேல் உறைவான்), விஷ்ணு (கரிய மால்), சிவன் (கண்ணுதலான்) ஆகிய மூவரைக் காட்டிலும், ஐந்து பூதங்களையும், சத்தியத்தைக் காட்டிலும் பெரியவர்கள்.

பாடல் 101
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள்
நொந்து உளாரையும் நொய்து உயர்ந்தாரையும்
மைந்த எண்ண வரம்பும் உண்டாம் கொலோ

மகனே! அந்தணர்கள் கோபித்தபோது எத்தனை தேவர்கள் கஷ்டப் பட்டார்கள் என்று சொல்லி மாளாது; கணக்கே இல்லை. அது போல அவர்கள் மகிழ்ந்தபோது எத்தனை தேவர்கள் இன்பம் அடைந்தார்கள் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்க இயலாது. இல்லையா?

GURUKULAM Water color 10x13in

பாடல் 102
அனையர் ஆதலின் ஐய இவ் வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்

மகனே! அந்தணர்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது புரிகிறதல்லவா? கொடிய பாவங்களில் இருந்து விலகி நிற்கும் மேன்மை உடையவர்கள் அந்தணர்கள் .ஆகவே அவர்கள் திருவடிகளை உன் முடிமேல் தாங்கி, இனிய சொற்களைக் கூறி அவர்களை வாழ்த்து. அவர்கள் ஏவும் செயல்களை உடனே முடிப்பாயாக.

பாடல் 103
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவநிற்கும் விதியும் என்றால் இனி
ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்தே

ஒருவனை உச்சாணிக் கொம்பில் வைப்பதும், அதள பாதாளத்தில் வீழ்த்துவதும் ஒருவனுடைய தலைவிதி ஆகும். அந்த விதிகூட, அந்தணர் ஏவலின் படி நடக்கும் என்றால் பார். அவர்களைக் காட்டிலும் சிறந்தவர் உண்டா? எதுவுமே இல்லை. ஆகவே இப்பிறவியிலும் மறு பிறவியிலும் பூலோக தேவர்களாகத் திகழும் அவர்களைப் போற்றுவதே சிறப்புடைய செயல்.

இதைத் தொடர்ந்து நல்லாட்சி, அமைச்சர் சொல் கேட்டல், அன்புடன் இருத்தல் ஆகியவற்றையும் வசிஷ்டர் உபதேசிக்கிறார்.

இங்கு ஒரு கேள்வி எழும். அந்தணர்கள் என்பது பிராமணர்களா? அல்லது முனிவர்களா என்று. புறநானூற்றிலும் ஏனைய சங்க நூல்களிலும், அதற்குப்பின் வந்த சிலப்பதிககரத்திலும் ‘நான்மறை அந்தணர்கள்’, ‘முத்தீ வழிபடும் அந்தணர்கள்’ என்று வருவதை நோக்குங்கால் இது பிராமணர்களையே குறிக்கும் என்பது வெள்ளிடை மலையென விளங்கும். வள்ளுவனும் (543) குறளில் அந்தணர் என்பவரை வேதத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவதைக் கண்கிறோம்.

பிராமணர்களை பூவுலக தேவர்கள் (பூசுரர்) என்றும் அழைப்பர். பாடல் 103–ல் பூலோக தேவர்கள் என்ற சொல்லைக் குறிக்கும் விளக்கம் வருகிறது. உரைகாரர்களும் பூலோக தேவர் என்றே உரை செய்கின்றனர். ஆக இந்தப் பாடல்களில் கம்பன் குறிப்பது பிராமணர்களைத் தான் என்பதில் ஐயமில்லை.
பாலகாண்டத்தில்

“அருந்தவ முனிவரும் அந்தணாளரும்” (பாடல் 183) என்று பிராமணர்களையும் முனிவர்களையும் கம்பன் வேறுபடுத்திப் பாடி இருப்பதையும் காண்கிறோம்.

மற்றொரு பாடலில்
மாதவத்து ஒழுகலம்; மறைகள் யாவையும்
ஓதலம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலம்;
மூதெரி வளர்க்கிலம்; முறையும் நீங்கினேம்;
ஆதலின் அந்தணரேயும் அல்லாமால் (பாடல் 2644)

மா தவம் செய்தல், வேதங்களை ஓதுதல், ஓதுவித்தல், முத் தீ வளர்த்து யாகம் செய்தல் ஆகியன் அந்தணர் பணியாக மேல் கூறிய பாடலும் கூறுகிறது.

ஒரு காலத்தில் பிராமணர்களும் துறவியரும் சத்தியம், ஒழுக்கம் என்பனவற்றில் சம நிலையில் இருந்தனர். ஆகவே இரண்டு பொருள்களிலும் சில நூல்களில், இச் சொல் பயன்படுதப்பட்டது என்பதும் உண்மையே.

contact swami_48@yahoo.com

சீதை சொன்ன காகாஸுரன் கதை!

ram gem

By S Nagarajan
Post No.986; Dated 18th April 2014.
அத்தியாயம் 23

சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையைக் கண்டு மன மகிழ்ச்சி கொண்டு தன் விஸ்வரூபத்தைக் காண்பித்துத் தன்னுடன் உடனடியாக ராமரிடம் வருமாறு வேண்ட அதற்குச் சீதை மறுத்து ஸ்ரீராமரே தன்னை வந்து மீட்டுச் செல்ல வேண்டும் என்று தன் திருவுள்ளக் கருத்தை வெளியிடுகிறார். அப்போது ஹனுமான் சீதையிடம் ஒரு அடையாளம் தர வேண்டுமென்று விண்ணப்பிக்கிறார் உடன் சீதை தன் சூளாமணியைத் தருகிறார். அத்தோடு முன் நிகழ்ந்த காகாசுரனின் கதையையும் அடையாளமாக ஹனுமானிடம் சொல்கிறார். 38வது ஸர்க்கமாக அமையும் சீதை சொன்ன காகாசுரனின் கதை இது தான் :-

சித்திரகூடமலையில் வடகீழ் தாழ்வரையில் உள்ளதும் மந்தாகினிக்கு ஸமீபத்தில் உள்ளதும் ஏராளமான கிழங்குகளும், கனிகளும், தீர்த்தங்களும் அமைந்த சித்தாஸ்ரம்ம் என்னும் ஆஸ்ரமத்தில் ஒரு ப்ரதேசத்தில் ஜலத்தில் பலவகை மலர்களால் நறுமணம் வீசிகிற நெருங்கிய சோலைகளிலும் அலைந்து களைத்து தபஸ்விகளின் ஆசிரமத்திலிருந்து வந்த நீர் என் மடியில் படுத்திருந்தீர்,
அப்போது மாமிசம் உண்பதில் ஆசையுற்ற ஒரு காகம் கூரான மூக்கால் என்னைக் குத்திற்று. அந்தக் காகத்தை மண்ணாங்கட்டியால் பயமுறுத்தி விரட்டினேன்.
ஆனால் மாமிசத்தை விட விரும்பாத அந்தக் காகம் என்னைக் குத்திய வண்ணமே அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. நான் காகத்திடம் சினந்து என் அரைநூல் மாலையை மாத்திரம் கழற்றவும் அதனால் ஆடை நழுவி வீழ்கையில் உம்மால் பார்க்கப்பட்டேன்.

தீனியில் ருசி கொண்ட காகத்தால் குத்தப்பட்டு கோபம் மூட்டப்பட்டுக் களைத்திருந்த நான் உம்மால் பரிஹாஸம் செய்யப்பட்டேன். அதனால் மிகவும் வெட்கம் அடைந்தேன். அப்படியிருந்தும் உம்மிடமே வந்து சேர்ந்தேன். உமது மடியில் வந்து உட்கார்ந்தேன்.முகம் மலர்ந்திருந்த உம்மால் கோபமுற்றிருந்த நான் தேற்றப்பட்டேன்.

நாதா! முகமெல்லாம் கண்ணீர் நிரம்பி இருக்கக் கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டிருந்த என்னை அதிகம் கோபம் கொண்டவளாக அறிந்தீர்.

ram in frame

நான் மிகவும் களைப்பால் அப்படியே உமது மடியில் படுத்து உறங்கினேன் நீரும் என் மடியில் கண் வளர்ந்தீர். அப்போது அதே காகம் மறுபடியும் வந்தது. தூங்கி எழுந்திருந்த என்னை மார்பில் கீறிற்று.
அப்படிப் பல தடவை பாய்ந்து பாய்ந்து என்னைக் கீறவே அப்போது சொட்டிய ரத்தத் துளிகளால் ஸ்ரீ ராமர் எழுந்தார்.

அவர் என் மார்பகங்களில் காயப்பட்டதை அறிந்து சினம் கொண்டு,” “உனது மார்பு எவனால் புண்படுத்தப்பட்டது? ஐந்து தலை நாகத்துடன் எவன் விளையாடுகிறான்?”, என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்து காகத்தைக் கண்டார்.

அந்த காகம் இந்திரனுடைய மைந்தன். கதியில் வாயுவுக்கு நிகரானது. அது அங்கே உடனே அங்கிருந்து மறைந்து விட்டது. கோபம் கொண்ட ராமர் தர்ப்பாஸனத்திலிருந்து ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தை மந்திரித்தார்.அது ஊழித்தீயெனப் பற்றி எரிந்தது. காகத்தைத் துரத்தியது.
உலகனைத்தும் ஓடி ஓடிக் களைத்த அது ராகவரையே சரணம் அடைந்தது.சரணம் என்று தம்மை வந்து அடைந்த காகத்தை நோக்கி,”பிரம்மாஸ்திரத்தை வீணாகச் செய்ய முடியாது. ஆகையால் வழி சொல்” என்றார் அவர்.

காகம், ‘அஸ்திரம் என் வலது கண்ணை அழிக்கட்டும்’ என்று கூறவே பிரம்மாஸ்திரம் அதன் வலது கண்ணை அழித்தது.

அது முதல் காக்கைகளுக்கு ஒற்றைக் கண் என்பது தெரிந்த விஷயம் என்று இப்படி காகத்தின் நீண்ட வரலாற்றை சீதை கூறி அருளினார். பின்னர் தன் சூடாமணியை ஹனுமானிடம் தந்தார்.

ததௌ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம் I
ப்ரதேயோ ராகவாயேதி சீதா ஹனுமதே ததௌ II

-சுந்தர காண்டம், முப்பத்தெட்டாவது ஸர்க்கம், எழுபதாவது ஸ்லோகம்

தத: – அப்பொழுது வஸ்த்ரகதம் – வஸ்த்ரத்தில் முடிந்திருந்த சூடாமணிம் – சூடாமணி என்னும் திவ்யம் சுபம் – திவ்ய ஆபரணத்தை முக்த்வா – அவிழ்த்தெடுத்து ராகவாய – ராகவருக்கு ப்ரதேய – சேர்த்து விட்டேன் இதி – என்று சொல்லி சீதா ஹனுமதே ததௌ – சீதை ஹனுமானிடம் தந்தாள்

இந்த சூடாமணியைக் கண்டவுடன் தான் ராமருக்கு உயிர் வந்தது. முக்கியமான ஒரு கட்டத்தை வால்மீகி விளக்குகையில் சூடாமணி தரப்பட்ட இந்த ஸ்லோகம் அர்த்தமுள்ள ஸ்லோகமாக அமைகிறது. காலம் காலமாக கேட்பவரின் மனத்தை உருக வைக்கும் கவிதையாகவும் ஆகி விட்டது.
contact swami_48@yahoo.com