புராணங்களில் காலப் பயணம் TIME TRAVEL & TIME DILATION (Post No.8909)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8909

Date uploaded in London – – 10 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

-11-2020 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் கேள்வி-பதில் பகுதியில் இடம் பெற்ற உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி, “புராணங்களில் கூறப்படும் கதைகள் அறிவியல் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறதா? ஆம் எனில் உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்ல முடியுமா? என்பதாகும்.”

விஞ்ஞானம் முன்னேற முன்னேற புராணங்கள் கூறும் கொள்கைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஆமோதித்து வருகிறது.

ஸ்வாமி விவேகானந்தர் நமது ரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள் அவர்கள் ஞானத்தை அறிந்து பாராட்ட உலகம் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆகவே விஞ்ஞானம் வளர வளர அவர்கள் கண்ட அனைத்துமே விஞ்ஞான உரைகல்லில் தீட்டப்பட்டு உண்மையே என ஆமோதிக்கப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு ஏராளமானவற்றைச் சொல்ல முடியும் என்றாலும் ஒன்றே ஒன்றை இங்கு பார்ப்போம்.

TIME TRAVEL எனப்படும் காலப் பயணம் விஞ்ஞானிகள் அனைவருக்கும் ஆர்வமூட்டும் ஒரு கொள்கை.

இதை புராணம் சொல்கிறதா என்று பார்ப்போம்.

அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய கதையைக் கொண்டவை. இவற்றுள் ரேவதி நட்சத்திரம் 27வது நட்சத்திரமாக – கடைசி நட்சத்திரமாக – அமைகிறது. ரேவதியின் கதை ஆச்சரியமான ஒன்று!

ரைவதன் என்ற மன்னனுக்குப் பிறந்த பெண்ணின் பெயர் தான் ரேவதி. அவன் காலத்தில் மனிதர்கள் இன்று இருப்பதை விட அதிக உயரத்துடன் இருந்தார்கள். தன் பெண்ணுக்கு ஏற்ற நல்ல மணாளனைத் தேட ஆரம்பித்த ரைவதன் யாருமே சரியாக அமையாததால் கவலைப்பட ஆரம்பித்தான். மனம் வருந்தினான்.

ரேவதியைப் படைத்த பிரம்மாவையே நேரில் பார்த்து மணாளன் யார் என்று கேட்டு விடலாமே என்று அவனுக்கு யோசனை தோன்றியது. நேராக சத்திய லோகத்துக்கே தன் பெண் ரேவதியுடன் அவன் சென்றான். அவன் பிரம்ம லோகம் சென்ற சமயம் அங்கே ஒரு யாகம் நடந்து கொண்டிருந்தது. ஆகவே அது முடியும் வரை அவன் காத்திருக்க நேர்ந்தது. யாகம் முடிந்தவுடன், பிரம்மா ரைவதைனை அழைத்து, “விஷயம் என்ன?” என்று கேட்டார். ரைவதன் தன் கவலையை வெளியிட்டான்.

பிரம்மா சிரித்தார்.

“மன்னனே! ஏமாந்து விட்டாயே! பூலோகத்தைப் பார்” என்றார். அங்கே மனிதர்கள் மிகக் குறைந்த உயரத்துன் அங்கும் இங்கும் போவதைக் கண்ட ரைவதன் துணுக்குற்றான். “என்ன இது! இப்படி இருக்கிறது பூலோகம்” என்று கேட்டான்.

பிரம்மா கூறினார்: “ ரைவதா! நீ இங்கே வந்த போது பூமியில் இருந்த யுகம் வேறு. நமது யாகம் நடந்து முடிந்த இப்போதோ அங்கே கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறு. இனி இவளை பூமியில் உள்ள எவரும் மணம் செய்து கொள்ள முடியாது. 10 அடி உயரம் உள்ள பலராமன் என்பவர் பிறப்பார். இவளைத் தன் கலப்பையால் உயரத்தைக் குறைத்து மணப்பார். கவலைப்படாமல் செல்” என்றார் பிரம்மா.

ரேவதியும் பலராமனை பிரம்மா சொன்னபடியே அவர் தன் தலையில் ஒரு தட்டு தட்டி உயரத்தைக் குறைத்த பின்னரே மணந்தாள்.

இவ்வாறு புராணக் கதை சொல்கிறது.

இனி அறிவியலுக்கு வருவோம்.

பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் போது பயண காலத்திற்கும் பூமியில் உள்ள காலத்திற்கும் பெருத்த மாறுபாடு ஏற்படுகிறது என்பதை அறிவியல் இந்த விண்வெளி யுகத்தில் நன்கு விளக்குகிறது!

இதற்கு TIME DILATION என்று பெயர்.

பூமியிலிருந்து ராக்கட்டில் புறப்பட்ட விண்வெளி வீரர் பயணம் செய்யும் வருடமும் அப்போது பூமியில் நாம் கழிக்கும் வருடமும் ‘Meyers Handbook on Space” என்ற நூலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.


அட்டவணை

விண்வெளி வீரர் பயணத்தில் கழிக்கும்     பூமியில் நாம் கழிக்கும் ஆண்டுகள்

           ஆண்டு

  1. 1
  2. 2.1

5                            6.5

                10                              24

               20                               270

               30                               3100

               40                               36000

50                            4,20,000 (கலி யுக வருடங்கள்)

———————————————————————–

ரைவதன் சுமார் 50 ஆண்டுகள் விண்வெளியில் பயணப்பட்டிருப்பான் எனில் பூமியில் 4,20,000 ஆண்டுகள் அதாவது ஒரு யுகம் கழிந்திருக்கும்.

இதைத் தான் ‘Meyers Handbook on Space தருகிறது.

புராணம் கூறும் கதைக்கு அறிவியல் டைம் டைலேஷன் என்ற கொள்கை மூலம் விளக்கம் தருகிறது.

இப்படி ஒவ்வொரு நட்சத்திர கதைக்கும் ஒரு அறிவியல் விளக்கம் உண்டு.

ரேவதை நட்சத்திரத்தை மேலை நாட்டு வானவியல் Zeta Piscum எனக் குறிப்பிடுகிறது.

இனி ரேவதி நட்சத்திரம் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.

ரேவதி பற்றி நமது ஜோதிட நூல்கள் செல்வம் மற்றும் வளத்தைக் குறிக்கும் நட்சத்திரம் என்று புகழ்கின்றன. இறை நம்பிக்கையுடன் இந்த நட்சத்திரம் இணைத்துப் பேசப்படுகிறது. பராசக்தியின் கருவாக இது குறிப்பிடப்படுவதால் ஜனனத்தையும் முடிவையும் குறிக்கிறது.

ரேவதி நட்சத்திரத்தை நல்ல பயணத்திற்கு உகந்த நட்சத்திரமாக நமது முன்னோர்கள் கூறுகின்றனர்.

சக்தியை மிகுதியாகத் தரும் இதை க்ஷீரத்துடன் அதாவது பாலுடன் ஒப்பிட்டுப் பேசுவர். மீன ராசிக்குரிய ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இசை, நடனம்,பாட்டு, நாடகம் உள்ளிட்ட அனைத்தும் தண்ணீர் பட்ட பாடு தான்!

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கான் அதிர்ஷ்ட தேவதை பூஷா தேவதை. வணங்க வேண்டிய தெய்வம் ரங்கநாதர்.

மீனைப் போன்ற தோற்றமுடைய 32 நட்சத்திரங்களின் தொகுதி இது என நமது அறநூல்கள் கூறுகின்றன.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சில பெரியார்களைப் பார்ப்போம். 63 நாயன்மார்களில் ஏயர்கோன் கலிக்காமர், கலிக்கம்பர், வாயிலார் ஆகிய மூவர் ரேவதி நட்சத்திரத்தில் உதித்தவர்கள். வைணவப் பெரியார்களில் பெரிய பெருமாள், எரும்பில் அப்பா ஆகிய இருவரும் ரேவதி நட்சத்திரத்தில் உதித்தவர்கள். மஹாபாரத வீரன் அபிமன்யுவின் நட்சத்திரம் ரேவதி. பிரபலங்கள் என்று சொல்லப்போனால் ரவீந்திரநாத் தாகூர், மார்லன் பிராண்டோ ஆகியோரும் அடங்குவர்.

இனி ஒரு குட்டி விஷயம் – ஐன்ஸ்டீன் ஜாதகத்தில் சுக்ர கிரஹம் ரேவதியில் இருக்கிறது. அவர் சுக்ர தசையின் போது தான் தியரி ஆஃப் ரிலேடிவிடியைக் கண்டு பிடித்தார்.

ஆக ரேவதிக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு நன்கு விளங்குகிறது இல்லையா!

வாழ்க நமது புராணங்கள்; வளர்க புராணங்களை விளக்கும் அறிவியல்!

tags– புராணங்களில்,  காலப் பயணம், ரேவதி

***