
Written by London Swaminathan
Date: 7 July 2017
Time uploaded in London- 20-29
Post No. 4060
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பசு மாட்டுக்கு கொம்பு முளைத்தது எப்படி/ குளம்புகள் வந்தது எப்படி?
வேத கால இலக்கியத்தில் ஒரு அருமையான கதை உள்ளது. இது ஐதரேய பிராமணத்தில் வரும் கதை.
பசுக்கள் எல்லாம் நமக்கு குளம்புகளும் கொம்புகளும் ஏற்பட நாம் ஒரு வேள்வி செய்வோம் என்று தீர்மானித்தன. என்ன அதிசயம்? பத்தே மாதங்களில் கொம்பும் குளம்பும் தோன்றின. நாம் எதற்காக இந்த வேள்வியில் ஈடுபட்டோமோ அந்த லட்சியம் நிறைவேறிவிட்டது. ஆகையால் எழுந்திருங்கள் என்று சொல்லி எழுந்துவிட்டன.

அப்போது கொம்புகள் இருந்தன.வேள்வி முடிந்துவிட்டது. இருந்தபோதிலும் ஒரு வருடத்தை முடிப்போம் என்று மீண்டும் வேள்வியைத் துவக்கின. இதிலிருந்த அவ நம்பிக்கை, அசிரத்தை (Lack of confidence and lack of interest) காரணமாக கொம்புகளும் குளம்புகளும் மறைந்துவிட்டன.
பிறகு மிக உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் 12 மாதங்கள் உட்கார்ந்து வேள்வியை முடித்தன. எல்லாப் பணிகளையும் பூர்த்தி செய்தன. இந்த உற்சாகம் உத்வேகம் மூலம் மீண்டும் அவைகளுக்கு கொம்புகளும் குளம்புகளும் தோன்றிவிட்டன. இவ்வாறு உலகத்தார் எல்லோர் மதிப்பையும் பெற்று பசுக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் இடம்பெற்றன. அவைகளை எல்லோரும் அலங்கரித்துப் போற்றினர். எவன் ஒருவனுக்கு இது விளங்குகிறதோ அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் .
ஐதரேய பிராமணம் 4-3-17
மிகவும் எளிய கதை! வேதங்களளைக் கேட்டுச் சொல்லியவர்கள் அதை மறைபொருளிலேயே கூறுவது வழக்கம். அதனால்தான் தமிழில் வேதங்களுக்கு அழகாக மறை என்று பெயரிட்டனர்.
பசுமாடுகளை அலங்கரிக்கும் வழக்கம் தமிழ் நாட்டிலும் வட நட்டிலும் இன்றும் உளது. கிருஷ்ணன் பிறந்த ஜன்மாஷ்டமி நாளிலும் மாட்டுப் பொங்கல் நாளிலும் மாடுகளை அலங்கரித்துப் பொங்கல் படைத்துப் போற்றுகிறோம். இது ஐதரேய பிராமண காலத்திலேயே இருந்ததை மேற்கூறிய மந்திரம் காட்டுகிறது.
ஒரு காரியத்தைச் செய்பவர்கள் வெற்றி கிடைப்பது போலத் தோன்றியவுடன் நிறுத்திவிடக் கூடாது; அது சரியாகப் பூர்த்தியாகும் வரை அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். பசுக்கள் அப்படிச் செய்யாததால் கொம்புகள் மறை ந்தன . பிறகு 12 மாதங்களும் திட்டமிட்டபடி வேள்வியைப் பூர்த்தி செய்தவுடன் கொம்புகள் தோன்றின. கொம்பு என்பது பெயரையும் புகழையும் குறிக்கும் சொல்.

அவன் என்ன பெரிய கொம்பனோ?என்று கேட்கும் வழக்கம் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் உண்டு. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கொம்பு பற்றி வருகிறது வேதத்தில் கொம்பு பற்றி வருகிறது (நைக ஸ்ருங்க, சத்வாரி ச்ருங்காகாஹா) சிந்து சமவெளி முத்திரையில் பசுபதியின் தலையில் கொம்பு இருப்பதைக் காணலாம்.
ஆகவே வேதத்தின் உட்பொருளை அறிய நாம் இந்திய — இந்து — அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்
ஆட்ண்டி பயாடிக(Anti Biotic ) மாத்திரை சாப்பிடுவோர் நோயின் அறிகுறிகள் நின்றாலும் அந்த (dosage) டோஸை முடிக்க வேண்டும் அல்லது பாக்டீரியா க்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டு அந்த மருந்துகளுக்கும் ‘டேக்கா’ கொடுத்து விடும். வள்ளுவனும் ஒரு குறளில் பகைமையையும், நெருப்பையும் அடியோடு அழிக்க வேண்டும் என்பான். எனவே ஒரு குறிப்பிட்ட செயலை, பணியை, வேலையை வெற்றி கிடைப்பது போலத் தோன்றினாலும் இறுதிவரை சென்றுமுடித்தாக வேண்டும் என்பதே கதையின் கருத்து.
வெளிநாட்டினரின் அறியாமை!
ஆங்கிலத்தில் யாராவது, எதையாவது எழுதினால் அது பெரிய ஆராய்ச்சி என்று அந்தக் காலத்தில் கருதினர்; அவர்களோ நம்முடைய பண்பாடு தெரியாமல் உளறு உளறு என்று உளறிவிட்டனர். ஆப்பிரிக்க காடுகளில் பல நாட்டுப் புற கதைகள் உண்டு. சிறுத்தைக்குப் புள்ளிகள் விழுந்தது எப்படி? புலியின் மீது வரிகள் தோன்றியது எப்படி? ஒட்டைச் சிவிங்கிக்கு நீண்ட கழுத்து எப்படி வந்தது? யானைக்கு ஏன் நீண்ட கை? என்றெல்லாம் கதைகள் சொல்லுவர். இதெல்லாம் காட்டுவாசிகளின் பொழுதுபோக்குக் கதைகள். இந்திய கலாசாரம் புரியாத வெளி நாட்டினர் ஐத்ரேய பிராமணக் கதையையும் அந்தக் கணக்கில் சேர்த்துவிட்டனர். அவர்களுடைய அறியாமைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனர்!
ஆனால் அவைகளுக்கும் வேத கால இலக்கியத்துக்கும் பெரிய வேறுபாடு உண்டு. நம்முடைய கதைகள் உயர்ந்த தத்துவங்கள், யாக குண்ட கணக்குகளுக்கு இடையே உள்ளன. ஆகையால் இவை நாட்டுப்புற கதைகள் அல்ல. மேலும் நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவைகளை வாய்மொழியாகக் காத்து வருகிறோம். மேலும் இவைகளுடைய மறை பொருள், சங்கேத மொழி — வேதம் முழுதும் விரவிக் கிடப்பதை நாம் அறிவோம்.
–Subham—
