Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-4 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,654)

Written by London Swaminathan

Post No. 15,654

Date uploaded in London –25 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 4

திருக்கூடலூர் பாசுரங்கள்

திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோவில், ஸங்கம க்ஷேத்திரம்)

சோழநாட்டு திருப்பதி’

திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோவில், ஸங்கம க்ஷேத்திரம்)

கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உத்சவருக்கும் அதே திருநாமம் தான்! மூலவ மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர் என்பது விசேஷம். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும்.ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது. அவர்களின் வேண்டுதலே, எம்பெருமான் வராஹ அவதாரம் எடுக்கக் காரணமானது !

கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மாள் மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.

திருமங்கையாழ்வார்,  பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார்.

தக்கன்வேள்வி* தகர்த்ததலைவன்*

துக்கம் துடைத்த* துணைவரூர்போல்*

எக்கலிடு* ஞுண்மணல்மேல்* எங்கும்

கொக்கின் பழம்வீழ்* கூடலூரே

**

காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்

மேவித்திகழும்* கூடலூர்மேல்*

கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*

பாவைப் பாடப்* பாவம் போமே (5.2.10)

**

1364

கருந்தண் கடலும்* மலையும் உலகும்*

அருந்தும் அடிகள்* அமரும்ஊர்போல்*

பெருந்தண் முல்லைப்* பிள்ளையோடி*

குருந்தம் தழுவும்* கூடலூரே (5.2.7)

**

மூலவர் – வையங்காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்) , உய்யவந்தார், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – அதே பெயருடன் கையில் செங்கோல் தாங்கி நிற்கிறார்.

தாயார் – பத்மாஸனி, புஷ்பவல்லி.

தீர்த்தம் – சக்ர தீர்த்தம், காவிரி நதி.

விமானம் – சுத்தஸத்வ விமானம்.

ப்ரத்யக்ஷம் – நந்தகமுனி.

தஞ்சாவூரிலிருந்து பஸ்மார்க்கமாய் திருவையாறு சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் 7 மைல் தூரம் சென்று இவ்வூரை அடையலாம். அல்லது தஞ்சாவூர் – கணபதி அக்ரஹாரம் மார்க்கம் டவுன் பஸ்ஸிலும் செல்லலாம். இவ்வூருக்கு ஐயம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 4 மைல் வண்டியில் செல்லவும் முடியும்.

–SUBHAM—

TAGS- திருக்கூடலூர், part 4, Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-4 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள், ராணி மங்கம்மாள்

Leave a comment

Leave a comment