WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,779
Date uploaded in London – 24 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
13-5-26 மங்கையர்மலரில் வெளியான கட்டுரை
எல்லன் ஓச்சுவா – அதிசயப் பெண்மணி!
ச. நாகராஜன்
உலகின் அதிசயப் பெண்மணி என்றும், விண்வெளி வீராங்கனை என்றும் புகழப்படும் எல்லன் ஓச்சுவா உலகப் பெண்மணிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் ஒளி நட்சத்திரம் அல்லது விண் நட்சத்திரம்!
லடினா கேர்ல் என்றும் ஹிஸ்பானிக் உமன் என்றும் அழைக்கப்படுகிறார் இவர். லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களின் வழி வந்தவர் என்பதால் இவர் லடினா பெண்மணி ஆகிறார். ஸ்பெயினை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தின் வழி வந்தவர் என்பதால் ஹிஸ்பானிக் பெண்மணி ஆகிறார் இவர்.
விண்வெளியில் பறக்க ஆசை கொண்ட இவர் பலமுறை நாஸாவிற்கு தனது விண்ணப்பதை அனுப்பினார். மூன்று முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. விண்வெளிக்கு பெண்மணிகளை அனுப்பும் திட்டமே இல்லை என்றது நாஸா.
ஆனால் இவர் விடவில்லை. நான் ஒரு ஸ்டெம் கேர்ள் என்றார் இவர்.
ஸ்டெம் என்றால் – STEM – Science, Technology, Engineering, Math – – ஸயின்ஸ், தொழில்நுட்பம், எஞ்ஜினியரிங், மேதமேடிக்ஸ் – பெண்மணி என்றார் இவர்.
1958ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி பிறந்த இவர் 1990ம் ஆண்டு நாஸாவால் விண்வெளி செல்லும் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாண்டியாகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் ஒரு ஆராய்ச்சியாளர்.
1991ம் ஆண்டு ஜூலை மாதம் முதன் முறையாக விண்வெளி சென்றார். கம்ப்யூட்டர் மென்பொருள், ரொபாடிக்ஸ் போன்றவற்றிற்கு விண்வெளிக்கான தொழில்நுட்பத்தில் இவர் பொறுப்பாளராக இருந்தார்.
நான்கு முறை வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்ற இவர் மலைக்க வைக்கும் ஆயிரம் மணி நேரங்களை விண்ணில் கழித்தார். மிஷன் ஸ்பெஷலிஸ்ட் என்று போற்றப்பட்டார்.
2007ல் பணி ஓய்வு பெற்ற ஓச்சுவா நாஸாவின் ஜான்ஸன் ஸ்பேஸ் சென்டரில் துணை இயக்குநராகப் பதவி பெற்றார். விண்வெளி செல்லும் வீரர் குழுவினருக்கும் விண்வெளி பயண இயக்கத்திற்குமான பணியகத்தில் இவர் இயக்குநராகவும் ஆனார்.
பத்துக்கும் மேற்பட்ட உயரிய அமெரிக்க விருதுகளைப் பெற்ற பெண்மணி இவர்.
இவர், பெண்மணிகளுக்கு உத்வேகமூட்டும் விதத்தில் நட்சத்திரங்களை அடைய பயப்படாதீர்கள் என்ற பொன்மொழியை உதிர்த்தார்.
பெரிதாகக் கனவு காணுங்கள் என்ற அறைகூவலை விடுத்த இவர் அனைத்துப் பெண்மணிகளும் ஸ்டெம் கேர்ள் ஆக வேண்டும் என்றார்.
பெரிய குறிக்கோளை முன் வைத்து ஒவ்வொரு படியாக முன்னேறுங்கள் என்று கூறும் இவர் பெண்களைப் பார்த்து, “உங்களால் முடியும்” என்று அடித்துச் சொல்கிறார்.
எதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள் என்பது தான் இவர் தரும் விசேஷ உத்தியாகும்.
இவர் புகழ் இன்னும் பெருகிக் கொண்டே போகிறது!
**