Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-36; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,792)

Written by London Swaminathan

Post No. 15,792

Date uploaded in London –27 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 36

திருவைகுண்டம்

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்

திருவைகுண்டம் (ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று)

பன்னிரண்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில், நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக விளங்கும் வைகுண்டநாதர் கோவில் இங்கு அமைந்துள்ளது.

மூலவர் – ஸ்ரீ வைகுண்டநாதன், கள்ளப்பிரான், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – வைகுந்தவல்லி, பூதேவி (இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள்)

தீர்த்தம் – ப்ருகு தீர்த்தம், தாம்பரபரணி நதி.

விமானம் – சந்த்ர விமானம்.

ப்ரத்யக்ஷம் – ப்ருகு சக்ரவர்த்தி, இந்த்ரன்.

விசேஷங்கள் – ஆதிசேஷன் குடைபிடிக்கபெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிச்சிறப்பு.

காலதூஷகன் என்ற சோரன் (திருடன்) தான் திருடிய பொருளில் பாதி வைகுண்டநாதனுக்கு ஸமர்ப்பித்ததாகவும், ஒருசமயம் அரண்மனையில் திருடுகையில் பிடிபட்டு வைகுண்டநாதனை த்யானம் செய்ய, பகவான் திருடன் வேடம் பூண்டு அரசனுக்கு தத்வங்களை உபதேசித்து, காலதூஷகன் திருடன் அல்ல யோகி என்று அரசன் நினைக்க, பகவான் ப்ரத்யக்ஷமாகி திருடனுக்கும் அரசனுக்கும் நட்பு உண்டாக்கி அரசன் பிரார்த்தனைப்படி பகவான் “கள்ளப்பிரான்” என்ற திருநாமம் பெற்றார்.

ஸோமகன் என்னும் அசுரன் சதுர்முகனடைய ஞானத்தை அபஹரித்ததாகவும், ப்ருஹ்மா இவ்விடத்தில் தவம் செய்து, பகவான் ப்ரத்யக்ஷமாகி, அசுரன் அபஹரித்த ஸ்ருஷ்டிஸாமர்த்திய ஞானத்தை கொடுத்ததாக வரலாறு.

மணவாளமாமுனிகள் மங்களாசாஸனம் செய்த இடம்.

மங்களாசாஸனம் –

நம்மாழ்வார் – 3571, 3575 – 2 பாசுரங்கள்.

வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்

மணித்துளி தரிசனம் தந்து பிறவா நிலை தரும் பெருமாள்

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நகரமே திருவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்). புகழ்பெற்ற நவதிருப்பதி தலங்களில் முதன்மையானது.

இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது சிறப்பம்சமாகும்.

கைலாசநாதர் கோவில்’

தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மற்றொரு முக்கிய சிவஸ்தலமான கைலாசநாதர் கோயிலும், குமரகுருபரர் அவதரித்த தலமும் இதுவேயாகும்.

தூத்துக்குடியிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இது திருநெல்வேலி – திருச்செந்தூர் லைனில் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் இருந்து 1 1/2 மைல் தூரம் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸிலும் வரலாம்.

****

புராண வரலாறு


பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம் புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.

மூலவர் வைகுண்டநாதர் ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும். தாயார் திருநாமம் வைகுண்டநாச்சியார்.

உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார். இவருக்குரிய தாயாரின் திருநாமம் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதி உள்ளன.

வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்

மணித்துளி தரிசனம்

இந்த வைகுண்டநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் மற்ற பெருமாள் கோவில்களை விட சற்று வித்தியாசமாக அனுசரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வார்கள். அதே தருணம் மூலவர் வைகுண்ட பெருமாள் சன்னதியை அடைத்து விடுவார்கள்.

பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இதற்கு மணித்துளி தரிசனம் என்று பெயர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால், பிறப்பில்லா நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.

உற்சவர் கள்ளபிரானுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம்

ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளில் உற்சவர் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜை செய்வது வழக்கம். பின், உற்சவர் கள்ளபிரான் கொடிமரத்தைச் சுற்றி வருவார்.

அதன்பின், ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

சூரிய தோஷ நிவர்த்தி தலம்

பாண்டிய நாட்டு நவதிருப்பதி என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒன்பது வைணவத் திவ்ய தேசங்களைக் குறிக்கும். நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது.

சித்திரை மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும். இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

ஒரே தலத்திலேயே வைகுண்டநாதர் கோவிலும், கைலாசநாதர் கோவிலும் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு

இந்த தலத்திலேயே, கைலாசநாதர் கோவிலும் உள்ளது. ஒரே ஊரில் கைலாசநாதர் கோவிலும், வைகுண்ட நாதர் கோவிலும் அமைந்திருப்பது வைகுண்டம்கயிலாயம் என இரண்டையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

கண்களை கவரும் சிற்பங்கள்


இக்கோவிலில் கண்களையும், கருத்தையும் கவரும் வகையில் ஏராளமான சிற்பங்கள் அமைந்துள்ளன. சிற்பக்கலை ரசிகர்களுக்கு இக்கோவில் ஒரு அரிய பொக்கிஷமாகும். நவநாரி குஞ்சரம் என்னும் யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள், பஞ்ச நாரி துரகம் என்னும் குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

–subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-36; திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள் , சூரிய தோஷம், மணித்துளி தரிசனம் திருவைகுண்டம், யானை வடிவில் ஒன்பது பெண்கள், குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள்

Leave a comment

Leave a comment