மதுரையில் ஒரு மர்மப் பெண்ணின் சிலை! புதிரை விடுவிக்க வாருங்கள்! (Post.15,814)

Written by London Swaminathan

Post No. 15,814

Date uploaded in London –1 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நான் செய்த ஆராய்ச்சியில் திரு விளையாடல் புராணத்தில் வரும் கதைதான் பொருத்தமாக உள்ளது ஆயினும் படத்தை வெளியிட்ட ஓவியர் சில்பி அவர்களோ  இது பற்றிப் பல கதைகள் சொல்லப்படுகின்றன என்ற வரியுடன் முடித்துவிட்டார்; விவரங்கள் எதையும் சேர்க்கவில்லை ; உங்களுக்குத் தகவல் தெரிந்தால் எழுதுங்கள்! மதுரைப் பெண்ணின் மர்மத்தை விடுவிப்போம்

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணக் கதை ஓரளவுக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது:

விருத்த குமாரன் பாலரான படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 23வது படலமாகும்.

 விருத்த குமாரன் பாலரான படலம்

விக்கிரம பாண்டியன் ஆட்சி செய்து வரும் நாளில் மதுரையில் விரூபாக்ஷன் என்னும் வேதியன் ஒருவன் இருந்தான்.

(விரூபாக்ஷன்—சிவனின் பெயர்;மாறுபட்ட கண்களை உடையவன்; அதாவது மூன்று கண்களை உடையவன் அல்லது அப்பர் சொல்வது போல ஒன்றரைக் கண்ணன் ; ஏனெனில் சிவபெருமான் பாதிக்கண்ணை பார்வதிக்குக் கொடுத்துவிட்டான் அர்த்நாரீஸ்வர வடிவத்தில்)

அவன் மனைவி சுபவிரதை; இருவரும் நெடுங்காலம் குழந்தைகளின்றிப் பின் தான தருமங்கள் செய்ய ஒரு குழந்தை பிறந்தது. கெளரி என்பது அவள் பெயர்; இளம் வயது முதல் சிவனிடம் சிந்தை கொண்டு சைவ நெறியினைப் போற்றி வழிபட்டு வந்தாள். மணப்பருவம் வந்தது.

வேதியர் குலத்து இளைஞன் ஒருவன் இவர்கள் வீட்டுக்கு விருந்தினனாக வந்தான். கோத்திரம் குலம் விசாரித்துச் சாத்திரப்படி அவனுக்கு மணம் முடித்தார்கள்  ; அவனோ வைணவ குலத்தைச் சார்ந்தவன்.

ஐயர்- ஐயங்கார் மோதல்

வாழ்க்கைப்பட்ட இடத்தில் சிக்கல் ஏற்பட்டது; அவளை அவர்கள் மதித்து நடத்தவில்லை. வீட்டை விட்டு வெளியேறும் போது அவள் சமையல் கட்டுக்குப் போகாதபடி தடுக்கப் பேரறையில் விட்டுப் பூட்டி வைத்தனர். ஏனெனில் சைவப்பெண் கையால் சமைக்கக் கூடாது என்பது அவர்கள் விதி. சமையல் அறைக்குப் பூட்டுப்போட்டனர்.

சிவனடியாருக்குச் சோறு போட்டுப் பழகிய அவள் இப்பொழுது வெறும் சடமாக அறையில் கிடப்பதை வெறுத்தாள்.  ஒருநாள், வயது முதிர்ந்த சிவனடியார் ஒருவர் பசியால் இளைத்து இவள் வீட்டுக்கு வந்தார் வெளிக்கதவைத் திறந்து அவரை உள்ளே விட்டாள்.

சமைக்க முடியாதபடி பூட்டும் தாளும் அவளைத் தடுத்து நிறுத்தின. சிவனடியார் இதை உணர்ந்து அவர் ஒரு பார்வை பார்த்தார். தாளும் பூட்டும் தாமாகக் திறந்து கொண்டன; இலை போட்டுச் சோறு பரிமாறி அவர் பசியையும் போக்கினாள்

வெளியூருக்குச் சென்றிருந்த அவள் மாமனும் மாமியும் கணவனும் அலுத்துக் களைத்து திடீரென்று வீட்டுக்குள் நுழைந்தனர்.அவளுக்கு அச்சம் மேலிட்டது அவளுடைய அச்சத்தைப் போக்கும் வகையில் முதியவாகராக  வந்தவர் சிறு குழந்தையாக மாறினார் !

 அவர் குழந்தையாகத் தவழ்வதைக் கண்டு கெளரி வியப்படைந்தாள்; இறைவன் திருவிளையாடல் இது என்பது அவள் அறிந்து கொண்டாள்.யார் இந்தக் குழந்தை? என்று கோபத்தோடு கூச்சலிட்டார்கள் மாமனும் மாமியும்.

“பக்கத்து வீட்டுத் தத்தனுடைய குழந்தை அது; பார்த்துச் கொள்ளச் சொல்லிச் சென்றார்கள்” என்று அவள் சொன்னாள். எனினும் அக்குழந்தை சைவ வீட்டுப் பிள்ளை என்பதால் அவர்கள் திட்டினார் கள் “தூக்கி வெளியே எறி” என்று சொல்லி அக்குழந்தையை வெளியே போட்டார்கள். அவளையும் வீட்டைவிட்டு வெளியே போகச் சொன்னார்கள்.

குழந்தையோடு வெளியே நடந்தாள். சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டு அழுதாள்; அவள் காணும்போதே குழந்தை உருவம் மாறிப் பரம் பொருளாகிய சிவனார் பார்வதியோடு காட்சியளித்தார்.

இது திருவிளையாடல் புராணக் கதை ; ஒரு அதிசயம் என்னவென்றால் சைவப்பெரியார்கள் நால்வரும் பாடிய அதிசய நிகழ்ச்சி இது; ஆகவே 1500 ஆண்டுகளுக்கு அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மைச் சம்பவம் இது .

சிலையில் உள்ள பெண் நகை நட்டுக்களைப் பார்க்கையில் அவள் தெய்வீகப்பெண் அல்லது மஹாராணி போலத் தோன்றுகிறார்; ஆகவே வேறு ஏதேனும் கதை அல்லது சம்பவத்துடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்; தெரிந்தால் எழுதுங்கள் .

–subaham-

Tags- விருத்த குமாரன் பாலரான படலம், மதுரையில் ஒரு மர்மப் பெண்ணின் சிலை, புதிரை விடுவிக்க வாருங்கள், திருவிளையாடல் புராணம்

Leave a comment

Leave a comment