WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,840
Date uploaded in London – 7 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (57) இந்திரன் மயிலுக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் மயிலுக்கு இந்திரன் அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.
ஒரு சமயம் புஷ்பக விமானத்தில் ராவணன் பூமி முழுதும் சுற்றி வருகையில் கந்தஹார் என்று விளங்கும் க்ஷேத்திரத்திற்குச் சென்று அங்கு யாகம் செய்து கொண்டிருந்த மருத்தர் என்ற மன்னனைக் கண்டான்.அவருக்கு சம்வர்த்தர் என்ற மஹரிஷி யாகத்தைச் செய்வித்து வந்தார்.
யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் ராவணன் ஜெயிக்க முடியாதவன் என்பதை உணர்ந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டார்கள்.
இந்திரன் மயிலாக ஆனான். தர்மராஜர் காக்கையாக ஆனார். குபேரன் ஓணானாகவும் வருணன் ஹம்ஸமாகவும் ஆனார்கள்.
இராவணன் மருத்த மன்னரை யுத்தத்திற்கு அழைத்தான் . அவனும் யுத்தத்திற்கு ஆயத்தமானான். ஆனால் யாகத்தை நடத்திய சம்வர்த்த ரிஷி மருத்த மன்னனிடம், “நீ யாகதீக்ஷை கொண்டிருப்பதால் போர் புரிதல் தகாது” என்றார். அவனும் அதை ஏற்று தனது வில்லை கீழே விட்டெறிந்தான்.
இதனால் ராவணன் வெற்றி பெற்று விட்டதாக சுகன் என்பவன் கூச்சலிட்டான்.
யாகத்திற்கு வந்திருந்த மஹரிஷிகள் புசித்துத் தின்னப்பட்டனர். ராவணன் பூமியில் சுற்றலானான்.
இராவணன் போய்விடவே இந்திரன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சுய உருவத்தை அடைந்தனர்.
அந்தக் காலத்தில் மயில்கள் கருநிற தோகையையே கொண்டிருந்தன.
மயிலைப் பார்த்து இந்திரன் சந்தோஷத்துடன் கூறினான் இப்படி:
ப்ரீதோஸ்மி தவ தர்மக்ஞ உபகாரார்த்திவிஹங்கம|
உத்தரகாண்டம் பதினெட்டாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 23
தர்மக்ஞ – தர்மம் தெரிந்த விஹங்கம – பறவையே தவ – உனது உபகாராத் – பேருதவியால் ப்ரீத: – திருப்தி அடைந்தவனாக அஸ்மி – இருக்கிறேன்
மம நேத்ர ஸஹஸ்ரம் து யத்த்வபஹர்ஹே பவிஷ்யதி |
வர்ஷமாணே மயி முதம் ப்ராப்யஸே ப்ரீதிலக்ஷணாம் ||
ஏவமிந்த் ரோ வரம் ப்ராதான்மயூரஸ்ய சுரேஸ்வர: ||
உத்தரகாண்டம் பதினெட்டாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 24
மம – எனது நேத்ர ஸஹஸ்ரம் – கண்களில் அநேகம் யத் து – எதுவோ அதெல்லாமே த்வதபர்ஹே – உன் தோகையில் பவிஷ்யதி – விளங்கட்டும் மயி – நான் வர்ஷமாணே – மழை பொழிகையில் ப்ரீதிலக்ஷணம் – ப்ரீதிக்கு அடையாளமாய் முதம் – ஆனந்தத்தை ப்ராப்யஸே – பெற்று விளங்குவாய்! சுரேஸ்வர – தேவராஜனான இந்த்ர – இந்திரன் மயூரம் – மயிலுக்கு வரம் – வரத்தை ஏவம் – இப்படி ப்ராதாத் – தந்தருளினான்.
கருநிறம் கொண்ட தோகைகளையே இது வரை கொண்டிருந்த மயில்கள் வண்ண மயமான தோகைகளைப் பெறலாயின. அது பற்றிய வரம் தான் இது!
இது மயில்கள் கேட்காமல் அவற்றிற்குக் கிடைத்த வரமாகும்!
**