Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-51; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,857)

Written by London Swaminathan

Post No. 15,857

Date uploaded in London –11 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மதுரை கூடல் அழகர் கோயில்

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அஷ்டாங்க விமானத்துடன், மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது இது ;  பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழ்கிறது.

வேறு பெயர்கள்–    இருந்தையூர், திருக்கூடல், நியமம், வெள்ளை நகரம், நான்மாடக்கூடல்

தாயார் / அம்மன் பெயர்   மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி

திருக்குளம் / ஆறு   கிருதமாலா நதி, ஹேமபுஷ்கரிணி

இங்கே பெருமாள் கிழக்குத் திசை நோக்கியவாறு வீற்றிருந்த கோலத்தில்  காட்சியளிக்கிறார். தாயாருக்கு மதுரவல்லி நாச்சியார், வரகுணவல்லி, மரகதவல்லி, என்னும் திருநாமங்கள் உண்டு. இங்குள்ள தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி, கிருதமாலா . பிருகு முனிவர், வல்லபர், பெரியாழ்வார், ஆகியோருக்குக் கூடலழகர் காட்சியளித்துள்ளார்.

.இத்திருக்கோயிலில் பூஜைகள் வைகாணச ஆகம விதிகளின்படி நடைபெறுகிறது, இத்திருக்கோயிலின் சிறப்பு என்பது அட்டாங்க விமானமாகும்,  நவகிரக சன்னதி அமைந்துள்ள வைணவ திவ்ய தேசமாகும். இத்தலமிருந்த பகுதி  இருந்தையூர் என சங்க காலத்தில் அழைக்கப்பட்ட.து

ஸ்ரீவல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாரால் ஸ்ரீமந் நாராயணனே பரம் பொருள் என மெய்பித்துக் காட்டிய திருத்தலமாகும்.

திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற திருத்தலம். திவ்ய பிரபந்த பாசுரங்களுள் முதன்மையாக விளங்கும் திருப்பல்லாண்டு பாடப்பெற்ற திருத்தலமாகும்.

சங்ககாலத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்கு ஆவணி திருவோணத்தில் விழாக்கள் பல செய்து கூடலழகரை வழிபட்டார் .

வைகை நதி இரண்டாகப்பிரிந்து மதுரை நகருக்கு

மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு

கிருதமால் எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில்

இப்பெருமாள் எழுந்தருளினார். ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ என்பார்கள்; இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

சத்தியவிரதன் எனும் பெயர் கொண்ட பாண்டிய மன்னன் ஒருவன் இக்கூடலழகர்பால் மிக்க பக்தி கொண்டு கடும் விரதம் மேற்கொண்டான். அவன் ஒரு நாள் மாலை வேளையில்  சந்தியாவந்தனம் செய்யும்போது அந்த நீரில் பெருமாள் மச்சாவதராமாய் மீனாக எழுந்தருளினார். அவனுக்கு அருள் செய்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது..

சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க

விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும்

கொண்டு (அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது.

அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை.

இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் நாயக்க மன்னர்களின்

திருப்பணியைத் தெரிவிக்கிறது.

இக்கோவிலின் உட்புறம் சுவர்களில் 108 திவ்ய தேசத்து

எம்பெருமான்கள் அந்தந்த ஸ்தலங்களில் எவ்வித ரூபமாய்

எழுந்தருளியுள்ளரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால்

தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இங்கு இருக்கும் ஆண்டாள் சன்னதி சிறப்புடையது.

திருவிழாக்கள் வைகாசிப் பெருவிழா, தைலக்காப்பு, பகல் பத்து, இராப்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கனு விழா, பங்குனி திருக்கல்யாண உற்சவம்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர், தனது தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அஷ்டதிக் பாலகர்கள் ஓவிய வடிவில் அருளுகின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் இங்கு உள்ளன. மதுரை கூடல் அழகர் கோயில் விமானத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் தொடர்பான கதைகள் சுதைச் சிற்பங்களாகச் செய்து வைக்கப் பட்டுள்ளன. இதில் இராமர் பட்டாபிடேகம், மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. இராவண வதைக் காட்சியும், கிருஷ்ணர் வஸ்த்ர அபகரண மூர்த்தியாகக் கோபியரின் ஆடைகளை மரத்தின் மீது எடுத்து வைத்திருக்கும் காட்சியும் அழகாக வண்ணம் தீட்டி வைக்கப் பட்டுள்ளன. ஒரு தளத்தில் இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு தளத்தில் கிருஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

–subham—

Tags– Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-51; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், மதுரை கூடல் அழகர் கோயில்

Leave a comment

Leave a comment