WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,856
Date uploaded in London – 11 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (61) பிரம்மா நிவாதகவசருக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் இருபத்துமூன்றாவது ஸர்க்கமாக அமைவது ‘வருணனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து ராவணனின் பராக்ரமம் பற்றி கூறி வரும் போது பிரம்மா நிவாதகவசருக்கு அளித்த வரம் பற்றிய ஒரு குறிப்பைத் தருகிறார்.
யமனை போருக்கு அழைத்த ராவணன் அவனுடன் யுத்தம் செய்ய யத்தனித்தான். ஆனால் யமன் அவன் எதிரிலிருந்து மறைந்து போகிறார். ராவணன் அவரைத் தோற்கடித்து வீட்டதாக தனது பெயரை பிரபலப் படுத்தினான். பின்னர் ரஸாதலம் என்ற பாதாள லோகத்திற்குச் சென்றான்.
மஹா சமுத்திரத்தினுள் புகுந்தான். மணிமயம் என்ற பட்டணத்திற்கு அவன் சென்று சேர்ந்தான்.
அதில் இருந்த நிவாதகவசர்கள் என்ற தைத்யர்கள் வரப்ரஸாதம் பெற்றவர்கள்.
அவர்களை ராவணன் போருக்கு அழைக்க போர் மூண்டது. ஒரு வருட காலம் போர் தொடர்ந்தது. வெற்றியோ தோல்வியோ கிட்டவில்லை. அப்போது அங்கு பிரம்மா வந்து சேர்ந்தார். அவர் நிவாதகவசர்களின் போரைத் தடுத்து நிறுத்தி, “போரில் ராவணனை ஜயிக்க முடியாது. அவனுடன் ஒற்றுமையாக இருத்தலே நல்லது” என்றார்.
அதன்படி அக்னி சாக்ஷியாக நிவாதவசர்கள் ராவணனுடன் ஒற்றுமை உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
இங்கு நிவாதகவசர்கள் பற்றிய குறிப்பை வால்மீகி ராமாயணத்தில் இப்படி காண்கிறோம்:
நிவாதகவசாஸ்தத்ர தைத்யா லப்தவராவசன் |
உத்தரகாண்டம் இருபத்துமூன்றாவது ஸர்க்கம் ஸ்லோக எண் 6
தத்ர – அங்கு லப்தவரா: – வரப்பிரஸாதம் பெற்ற நிவாதகவச: – நிவாதகவசர்கள் என்ற தைத்யா: – தைத்யர்கள் அவஸன் – வாஸம் செய்து கொண்டிருந்தார்கள்
இங்கு நிவாதகவசர்கள் வரம் பெற்றவர்கள் என்பதை அறிகிறோம். இவர்கள் பிரம்மாவிடம் வரம் பெற்றவர்கள் என்பதை அறிந்தாலும், பிரம்மா எப்போது எதற்காக இவர்களுக்கு வரம் கொடுத்தார் என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.
**