எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும், மரியாதையும்! – 3 (Post.15,935)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,935

Date uploaded in London – 2 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும், மரியாதையும்! – 3 

ச. நாகராஜன் 

பாக்யராஜ் அவர்கள் பிர்ச்சாரத்தில் ஈடுபட்டபோது நல்ல வரவேற்பு இருந்தது. கூட்டத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எம்ஜியாரை சந்தித்து விட்டு வந்த பாக்யராஜ் அவர்களிடத்தில் எம்ஜியாரின் உடல்நிலை பற்றித் தெரிந்து கொண்டு உற்சாகமானார்கள் மக்கள். அதனால் பாக்யராஜ் அவர்கள் பிரச்சாரத்திற்கு சென்ற இடமெல்லாம் மக்கள் பெருமளவில் கூடினார்கள்.

 தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பிய ஜெயலலிதா அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களுடன் ஆண்டிபட்டியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். பல இடங்களில் பேசினார். அரசியலில் அடுத்த ரவுண்டுக்கான வாய்ப்பாக ஜெயலலிதா அங்கிருந்து காய் நகர்த்தினார்.

ஆனாலும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்த வண்ணம் தொடர்ந்தது. இதில் பாக்யராஜையும் இழுத்து அவருக்கும் ஜெயலலிதா அவர்களுக்கும் சண்டை மூட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நல்ல முறையில் ஆபரேஷன் நடைபெற்று முடிந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே எம்.ஜி.ஆர் இரண்டு விரலைக் காட்டும் படம் தமிழகம் முழுவதும் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் அங்கு அவர் நடமாடுவது, சாப்பிடுவது, கையசைப்பது போன்ற காட்சிகள் வீடியோ மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

 வெற்றி பெற்றவர்கள் விவரம் பேக்ஸ் மூலம் எம்ஜியாருக்கு கிடைத்தது.

 1985 பிப்ரவரி 4ந்தேதி அது. பரங்கிமலைப் பகுதி ராணுவத் திடலில் அதிகாலையிலேயே மக்கள் வெள்ளம். இதயதெய்வமாய், கோயிலுக்கும் கூட போகாமல் குல தெய்வமாய் கும்பிடும் அவரது ரசிகப் பெருமக்கள், கட்சியினர் என கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தலைவர் எம்ஜியாரின் நீல நிற அம்பாசிடர் கார் மேடை அருகே மின்னல் போல் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர் முன்பு இருந்ததை விட பளிச்சென்று இருந்தார்.

 இறங்கிய எம்.ஜி.ஆர் மேடையை நோக்கி சுறுசுறுப்புடன் ஓட்டமாய் நடக்க ஆரம்பித்தபோது நெகிழ்ந்து போன மக்கள் கூட்டம், புரட்சித் தலைவர் வாழ்க! என்று கோஷம் போட்டதும் எம்.ஜி.ஆர் இரண்டு விரலைக் காட்டி மக்களைப் பார்த்து உற்சாகமானார்.

 **

இப்படியாக கட்டுரை எம்ஜியாரைப் பற்றியும் பாக்யராஜ் அவர்களைப் பற்றியும் விவரிக்கிறது.

 முதல் அமைச்சரான எம்.ஜி.ஆர் எப்போதும் போல பாக்யராஜை அன்புடன் அரவணைத்து வந்தார்.

தமிழ்நாட்டு அரசியலில் திரு பாக்யராஜ் ஏன் பதவிப் பொறுப்பில் இருக்க மும்முரமாக முயலவில்லை?

 இந்தக் கேள்விக்குப் பதிலாக ஒரு நீண்ட அரசியல் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

‘நானும் அரசியலும்’ என்ற ஒரு நீண்ட தொடரை பாக்யராஜ் அவர்களே பாக்யா இதழில் எழுதியுள்ளார்.

2011ம் ஆண்டு தீபாவளி இதழில் தொடங்கிய அந்தத் தொடர் 73 வாரங்கள் தொடர்ந்து, 22-3-2013 இதழில் முடிவு பெற்றது.

சின்னச் சின்ன சுவையான சம்பவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

அரசியல் வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, ஆரம்ப கால வாழ்க்கை என இதில் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

ஒரு கட்டத்தில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தேர்தலில் ஓட்டுப்போடுமாறு சொல்ல எத்தனித்த பாக்யராஜை எம்.ஜி.ஆர் தடுத்தார்.

பாக்யராஜ் திடுக்கிட்டார். கூட்டம் முடிந்தபிறகு காரில் செல்லும் போது எம்.ஜி.ஆர் தான் தடுத்ததற்கான காரணத்தை பாக்யராஜ் அவர்களிடம் கூறினார்.

“நீ திரைத்துறையில் வெற்றி பெற்று வருகிறாய். இன்னும் சாதிக்க வேண்டியது அதில் நிறைய இருக்கிறது. இளம் வயது. . உனக்கு தி.மு.க.விலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு இப்போது உனக்கு அரசியல் களம் வேண்டாம்”

இதை ஏற்ற பாக்யராஜ் அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியே தான் இருந்தார்.

இருந்தாலும் காலத்தின் கட்டாயத்தால் அவர் தி.மு.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்தது, பின்னர் அரசியலிலிருந்து ஒதுங்கியது ஆகிய எல்லா விவரங்களும் அவரது தொடரில் இடம் பெற்றுள்ளன.

இதைப் படித்தால் பாக்யராஜ் அவர்களின் வாழ்க்கைப் பயணம் நமக்குப் புரியும்.

 எம்ஜியாருடனான அவரது நட்பு அலாதியானது.

எம்.ஜி.ஆர் புகழ் நிலைக்கும் வரை பாக்யராஜ் புகழும் நிலைக்கும்.

 ஏராளமான பாக்யா இதழ்களைப் பார்த்தால் அதில் இடம் பெறாத தமிழ் திரையுலகம் பற்றிய நுணுக்கமான விவரங்களே இல்லை என்று கூறலாம்.

நடிகர்கள், இயக்குநர்கள், கலைஞர்கள் என அனைவரும் அதில் தங்களின் அற்புதமான பங்களிப்பைப் பல்வேறு தொடர்களில் எழுதியுள்ளனர்.

 இத்துடன் அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளைப் பற்றியும் ஆக்கபூர்வமான கட்டுரைகளை பாக்யா வெளியிட்டது.

 அந்த மகத்தான மனிதர் தமிழ் உலகிற்கு இறைவன் அளித்த ஒரு பொக்கிஷம் என்று கூறி இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

                         ***                      முற்றும்

Leave a comment

Leave a comment