Written by London Swaminathan
Post No. 15,967
Date uploaded in London – 10 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிரத்யும்னன்
கிருஷ்ணன்- ருக்மிணியின் அன்பு மகன்; கைக் குழந்தையாக இருந்த போதே சம்பரன் என்ற அசுரன் கடத்திச் சென்றான்; காரணம்? அந்தக் குழந்தையால் அவனுக்கு எதிர்காலத்தில் மரணம் சம்பவிக்கும் என்று ஒரு ஆரூடம் இருந்ததால் இப்படிச் செய்தான் ; பின்னர் அக் குழந்தையைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டான்; அதை ஒரு மீன் விழுங்கியது ; அந்த மீன் கடலில் பிடிபட்டு சம்பரனின் சமையல் அறைக்கே வந்து சேர்ந்தது அதை சம்பரனின் மனைவி மாயாதேவி அறுக்கவே அழகான குழந்தையைக் கண்டு அதை கவனமாகக் காப்பாற்றி வந்தாள். பெரியவன் ஆன பின்னர் அவனையே மாயாதேவி திருமணம் செய்து அநிருத்தன் என்ற மகனை ஈன்றாள். பிற்காலத்தில் துவாரகையை ஆண்டபோது சகோதரன் சாம்பனுடன் சேர்ந்து படையெடுத்து வந்த ஸால்வ தேச மன்னனைத் தோற்கடித்தான் ; கிருஷ்ணனின் வம்சாவளி இவன் மூலம் நீடித்தது .
***
ப்ரக்ஜ்யோதிஷ- தற்கால அஸ்ஸாம், அருணாசல பிரதேசத்தின் பழைய பெயர்; அதை ஆண்ட நரகாசுரனைக் கிருஷ்ணன் கொன்று அவன் சிறை வைத்திருந்த 16,000 பெண்களை மீட்டு துவாரகைக்கு அழைத்து வந்தான் .
இந்த எண்ணிக்கையை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது ; 16,000 பெண்கள், 60,000 மனைவிகள் என்பதெல்லாம் வழக்கமாகப் பயன்படும் மரபுச் (Hindu Idioms and Phrases) சொற்கள்; இதன் பொருள் – எண்ணற்ற , கணக்கற்ற என்பதாகும்.
***
பிரார்த்தனை –
இறைவனை நோக்கிச் செய்யப்படும் வேண்டுதல் துதி; ஆங்கிலச் சொல் PRAYER ப்ரேயர்- இதிலிருந்து வந்ததே.
***
ப்ரதர்தன
மன்னன் திவோதசனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகன்; யயாதியின் மகள் மாதவி; வீதஹவ்யன் என்பவன் திவோதசனின் குடும்பம் முழுதையும் அழித்ததால் அவனைப் பழிவாங்கவே பிறந்தான் என்று சொல்லுவார்கள்; இறக்கும்போது தனது புண்ணியத்தை எல்லாம் யயாதிக்கே கொடுத்துவிட்டு சொர்கத்துக்குச் சென்றார்.
யயாதி என்ற மன்னன் பெயர் ரிக்வேதத்தின் கடைசி பகுதியில் உள்ளது பிரதர்தன என்ற மன்னன் பெயர் துருக்கியில் போகஸ்கொய் Turkey (Bogazkoi) கல்வெட்டில் உள்ளது அதன் காலம் கி மு 1400 BCE என்பதால் வரலாறு ஆராய்ச்சிக்கு உதவும் தகவல் இது
***
பிருதா- குந்தி தேவியின் உண்மைப் பெயர் ; பாண்டவர் மூவரின் தாய்; பாண்டு மன்னனின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி . பாண்டவர்களில் கடைசி இருவர், மாத்ரி தேவிக்குப் பிறந்தவர்கள் .
***
புலோமா
இந்த தானவ (அசுரர்) பெண்மணி பிரம்மதேவனை வேண்டி ஹிரண்யபுரம் என்ற நகரத்தைப் பெற்றாள்; அந்த நகரத்தை கந்தர்வர்களோ தேவர்களோ அசுரர்களோ அழிக்கக் கூடாது என்ற வரத்தையும் வாங்கிக் கொண்டாள்; ஆனால் மனிதர்களை அற்பப்பதற்களாக கருதியதால் வரத்தில் சேர்க்கவில்லை; இதைப் பயன்படுத்திக்கொண்டு, மனிதனாகிய அர்ஜுனனை அனுப்பி இந்திரன், அந்த நகரத்தை அழித்தான்.
****
புரு
யயாதிக்கும் ஷர்மிஷ்டாவுக்கும் பிறந்தவர்களில் கடைக்குட்டி புரு . சுக்ராசார்யாவின் சாபம் காரணமாக யயாதிக்கு இளமையிலேயே முதுமை வந்தது; ஒவ்வொரு மகனிடமும் இளமையைக் கொடுக்கும்படி வேண்டினார் ; அவர்கள் எல்லோரும் மறுத்தபோது கடைசி மகனான புரு , தந்தையின் முதுமையை வாங்கிக்கொண்டு, அவனுடைய இளமையைக் கொடுத்தான். நீண்ட காலத்துக்குப் பின்னர் இளமையை புருவிடமே யயாதி, திரும்பக் கொடுத்தார் ; புரு ஆட்சியைத் தொடர்ந்தார் ; அவர் வழியில் வந்த வம்சத்தைப் பெளரவர்கள் என்பர் . அவர் கெளசல்யா என்பவரை மணந்துகொண்டு ஜனமேஜயன் என்பவரைப் பெற்றாள்.
***
புலஸ்தியர்
பிரம்மாவின் ஆன்மீகப் புதல்வர்களில் ஒருவர் ; பீஷ்மரிடம் அன்பு பூண்டு பல தலங்களுக்கு யாத்திரை செல்வதன் மஹிமையை அவருக்கு எடுத்துரைத்தார் ; இதே போல நாரதரும் யுதிஷ்த்திரருக்கு யாத்திரை செல்வதன் பலன்களைக் கூறினார் என்பது மஹாபாரதத்தில் உள்ளது
***
புரூரவன்
குரு வம்சத்தின் மூதாதையர்களின் ஒருவர் ; புதனுக்கும் மனுவின் புத்ரி இளாவுக்கும் பிறந்தவர் ; ஆணழகன் ; தர்மவான் ; இவ்வளவு சிறப்புகளையும் நாரதர் வாயிலாக அறிந்த தேவலோக அழகி ஊர்வசிக்கு ஆசை பிறந்தது ; பூலோகத்துக்கு வந்து புருருவ னுடன் வசிக்க ஆசை தெரிவித்தாள். அவனும் உடனே ஆமாம் என்று ஒப்புதல் தெரிவித்தான் ; ஆயினும் அவனுடன் வசிப்பதற்கு அவள் இரண்டு நிபந்தனைகளை போட்டாள்; அவள் கொண்டுவரும் இரண்டு ஆட்டுக்குட்டிகளை அவன் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்ற வேண்டும் என்பது முதல் நிபந்தனை ;
இரண்டாவது நிபந்தனை எந்த ஒரு காலத்திலும் அவன் நிர்வாணமாக காட்சி தரக்கூடாது.
இந்திரனுக்கோ ஊர்வசியைப் பிரிந்து வாழ முடியவில்லை; ஆகையால் ஒரு தந்திரம் செய்தான் ; ஆட்டுக்குட்டிகளைத் திருடச்செய்தான் ; உடனே அலறிப் புடைத்துக்கொண்டு புரூருவன் தூக்கத்திலிருந்து எழுந்து ஓடிவந்தான் அப்போது அவனுடலில் ஆடைகள் இல்லை ! நிபந்தனையை அவன் மீறிவிட்டதால் ஊர்வசி தேவலோகத்துக்குத் திரும்பி சென்றாள் . புரூருவன் ஊர்வசிக்காக ஏங்கித் தவித்தான் ; அவளும் கர்ப்பமாக இருந்ததால் பூமிக்குத் திரும்பி வந்தாள்; அவளுக்கு ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிறந்தன
அவர்களுடைய பெயர்கள் :திமான, அமாவசு, ததாஸ்யு, வனாயு, சதாயு.
***
புஷ்கர்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற நகரம்; பிரம்மாவின் கோவில்கள் உள்ள சில இடங்களில் மிகவும் புகழ்பெற்ற தலம் இது. ஆண்டு தோறும் நடக்கும் ஒட்டகச் சந்தையைக் காணவும், அதே நேரத்தில் நடக்கும் கலை விழா நிகழ்ச்சிகளைக் காணவும், பல்லாயிரம் பேர் வருவார்கள் ; இங்குள்ள ஏரி, சாவித்ரி கோவில், கம்பி வழி ரயில் ஆகியனவும் சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றன .To be continued………………………………
Tags- பிரத்யும்னன், புஷ்கர், புரு, புரூரவன், புலஸ்திய, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, PART 80; இந்து மத கலைச்சொல் அகராதி,