Written by London Swaminathan
Post No. 15,992
Date uploaded in London – 18 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
காரைக்கால் அம்மையார் என்று நாம் போற்றி வணங்கும் பெண்மணி எழுதிய பாடல் நூல்கள் யாவை ?
2
அந்த அம்மையாரின் பாடல் நூல்கள் பன்னிரு திருமுறையில் எதில் சேர்க்கப்பட்டுள்ளன ?
3
காரைக்கால் அம்மையாரின் பெயர் என்ன ? அவருடைய கணவர் பெயர் என்ன?
4
அவரை விட்டுக் கணவர் பிரிந்ததற்குக் காரணம் என்ன?
5
மீண்டும் அவரும் கணவரும் சந்த்தித்தபோது என்ன நிகழ்ந்தது ?
6
அவரை பேயார் என்று நாம் அழைக்கிறோம் ? அம்மையார் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது ?
7
அவர் வாழ்ந்த காலம் எது?
8
இந்தியாவுக்கு வெளியே அம்மையாரின் புகழ் எங்கு, எப்படி பரவியது?
9
அம்மையாருக்குத் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுத் தந்தது எது?
10
காரைக்கால் எங்குள்ளது ?
விடைகள்
1.காரைக்கால் அம்மையார் என்று நாம் போற்றி வணங்கும் பெண்மணி எழுதிய பாடல் நூல்கள் நான்கு ; அவையாவன :திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு; திருவிரட்டை மணிமாலை; அற்புதத்த திருவந்தாதி.
***
2.அந்த அம்மையாரின் பாடல் நூல்கள் பன்னிரு திருமுறையில், பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. 63 நாயன்மார்களில் ஒருவர்; சேக்கிழார் பெருமானால் பெரியபுராணத்தில் பாடப்பட்டவர்.
***
3.காரைக்கால் அம்மையாரின் இயற் பெயர் புனிதவதி அவருடைய கணவர் பெயர் பரமதத்தன். (இவர்களும் அப்பரும் பிராமணர்கள் அல்ல ; ஆயினும் பரமதத்தன், புனிதவதி, அப்பர் இல்லத்தில் திலகவதி என்ற பெயர்கள் ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டிலேயே சம்ஸ்க்ருத மொழியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.)
***
4.அவரை விட்டுக் கணவர் பிரிந்ததற்குக் காரணம் என்னவென்றால், ஒரு நாள் கணவரின் கையில் இரண்டு அரிய மாம்பழங்கள் கிடைத்தன; அதை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு வெளியே அலுவலுக்காகச் சென்றார்; வீட்டுக்குத் திரும்பியவுடன் சாப்பிட அமர்ந்தார்; அப்போது அரிய மாம்பழங்களில் ஒன்றினை அவரது இலையில் பரிமாறினார்; அதன் சுவையைக் கண்டு, மேலும் ஒரு மாம்பழத்தையும் கேட்டார். ஆனால் அந்த மாம்பழம் இல்லை! ஏனெனில் கணவர் வீடு திரும்பு முன்னர் வந்த சிவனடியார் ஒருவருக்கு அம்மையார் அதைக் கொடுத்துவிட்டார் ; இரண்டாவது மாம்பழத்தைக் கணவர் கேட்டபோது சமையலறைக்குச் சென்ற புனிதவதியார் சிவபெருமானை வேண்டவே ஒரு அதிசய மாம்பழம் அவர் கையில் விழுந்தது; அதைக் கணவருக்குப் படைத்தபோது மேலும் சுவையாக இருக்கவே இது எப்படி வந்தது? என்று கேட்டவுடன் சிவபெருமானே உதவிய உண்மை வெளிப்பட்டது ; அவள் சாதாரணப் பெண்மணி அல்ல என்று அஞ்சிய பரமதத்தன் அவளை விட்டுப் பிரிந்தான்.
***
5..நீண்ட காலம் புனிதவாதியும் பரமதத்தனும் தனித்து வாழ்கையில் அவர் வெளியூருக்குச் சென்று வேறு ஒரு பெண்ணை மணந்தார்; ஒரு பெண் குழந்தையும் பிறந்தது; இதை அறியாத உறவினர்கள் கணவருடன் அவரைச் சேர்த்துவைக்க அழைத்துச் சென்றபோது இருவரும் சந்த்தித்தனர்; அப்போது பரமதத்தன், முன்னாள் மனைவியைப் புகழந்து நான் வேறு பெண்ணை மணந்து மகளையும் பெற்றுவிட்டேன்; உன் மீதுள்ள அபார அன்பினால், பக்தியால் பிறந்த பெண்ணுக்கும் உன்னுடைய பெயரையே சூட்டியுள்ளேன் என்றான். காரைக்கால் அம்மையாருக்குப் புதிய வழிபிறந்தது .
***
6.கணவனுடன் சேர்ந்து இல்லறம் நடத்த முடியாது என்ற நிலை வந்தவுடன் அவரே தலையை மழித்து தனக்குப் பேயுருவம் அளிக்கும் படி இறைவனை வேண்டவே அவரது உருவம் விகாரமானது; அதனால் அவரைப் பேயார் என்று ஊரார் அழைக்கத் தொடங்கினர்; அவர் தலைகீழாக நடந்து கயிலை மலைக்கு யாத்திரை செய்ய முயன்ற போது சிவபெருமானே தோன்றி அம்மையே! என்று அழைத்தார் ; இதனால் அவருக்கு அம்மையார் என்ற பெயரும் கிடைத்தது.
***
7.காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர் காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவர் ; ஆகையால் இவரை ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருதுகிறோம்; இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
***
8.புனிதவதியார் வணிகர் குலத்தில் (செட்டியார் ஜாதியில்) பிறந்தவர்; வணிகர் குலத்தினர் ஆதிகாலம் முதலே பர்மா, மலேயா, சிங்கப்பூர், தாய்லாந்து முதலிய நாடுகளுக்குச் சென்று வணிகம் நடத்தினர்; அங்கு சைவத்தையும் பரப்பினர். இதனால் அம்மையாரின் சிலைகள் அங்கும் கிடைத்தன ; பல உலக மியூசியங்களில் அம்மையாரின் சிலைகள் உள்ளன ; சில மியூசியங்களில் இவரை யார் என்று வரலாறு அறியாதோர், வேறு தேவியரின் பெயரைச் சூட்டி இவரைக் காட்சிக்கு வைத்தும் உள்ளனர் !
***
9.அம்மையாருக்குத் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் உண்டு. அந்தாதி, பதிகம் என்பதை நமக்கு முதலில் தந்தவர் இவரே . சங்க காலத்தில் காப்பியாற்றுக் காப்பியனார் என்ற புலவர் பதிற்றுப் பத்து நூலில் நான்காம் பத்தில் அந்தாதித் தொடை அமைப்பினைப் பின்பற்றியுள்ளார்; ஆயினும் அற்புதத் திருவந்தாதி போல முதல் மண்டில அந்தாதி நூலினைப் படைத்தவர் இவரே ; திருவிரட்டை மணிமாலையும் இவ்வகைத்தே .
அதாவது முதற் செய்யுளின் முதல் சீரும் இறுதிச் செய்யுளின் இறுதிச் சீரும் தம்முள் இணைந்து மாலை போல , மண்டிலமாக (வட்டமாக) அமையும்! பதிகத்தை ஓதுவோருக்குக் கிடைக்கும் பலனைச் சேர்க்கும் முறையும் இவர்தான் முதல்முதலில் பயன்படுத்தியுள்ளார் ; இவை அனைத்தும் மாணிக்க வாசகரின் திருவாசகத்தில் உள்ளன; ஆனால் அவரது காலம் இதுவரை விவாதத்துக்குரியதாகவே உள்ளது! கட்டளைக்கலித்துறை , இரட்டை மணிமாலை போன்ற பாவினங்களை இவர் தமிழ் கூறு நல்லுலத்துக்கு அளித்தார்; இதனைப் பின்பற்றிப் பல புலவர்களும் நூல்களை யாத்தனர் .
திருவாலங்காட்டுப் பதிகத்தில் எல்லா இசைக் கருவிகளின் பெயர்களையும் ஒரே பாடலில் அமைத்துக் காட்டினார்!
****
10.காரைக்கால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு முக்கியத் துறைமுக நகரமாகும். புனித காரைக்கால் அம்மையார் பிறந்த இந்த ஆன்மீகத் தலம், புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், அழகிய காரைக்கால் கடற்கரை மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது. புதுச்சேரியிலிருந்து 132 கிலோமீட்டர்; சென்னையிலிருந்து 295 கிலோமீட்டர், நாகப் பட்டிணத்திலிருந்து 20 கிலோமீட்டர் திருவாரூரிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் காரைக்கால் இருக்கிறது.
—Subham—
Tags- காரைக்கால் அம்மையார், புனிதவதி, மாம்பழம், பேயார், அந்தாதி.