2015 ஜனவரி ஞான ஆலயம் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை.
ஜனவரி 2015 முதல் நாளே வைகுண்ட ஏகாதசியாக அமைந்தது. அதையொட்டி எழுதப்பட்ட கட்டுரை. ஏகாதசி விரத மஹிமையைச் சற்றுப் பார்ப்போமா!
Post No 1575; Dated 15th January 2015
Written by S.Nagarajan
by ச.நாகராஜன்
ஏகாதசி விரதம்
உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் உறுதி செய்து முக்திக்கு வழி வகுப்பது ஏகாதசி விரதம் என்பது தொன்று தொட்டு ஹிந்துக்களிடம் இருந்து வரும் நம்பிக்கை.
பாரதெமெங்கும் மன்னர்கள் முதல் சாமானிய ஏழை வரை ஏகாதசி விரதம் இருந்ததை வரலாற்று ஏடுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு காணலாம். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் மகனான சாமிநாதையரவர்கள் தமிழ்த் தாத்தா என போற்றப்படுபவர்.ஆற்றொழுக்கு போன்ற அழகிய தமிழ் நடையில் சுவையான பாரம்பரியச் செய்திகளைத் தருவதில் அவர் வல்லவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய தமிழ் உலகில் அவரது நூல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க எந்த ஒரு ஏற்பாடும் இல்லை. அவரது என் சரித்திரத்தில் (1941 ஆம் வருடம் எழுதியது) முதல் அத்தியாயமாக மிளிர்வது உத்தமதானபுரம் எப்படித் தோன்றியது என்பது பற்றித் தான். அது ஒரு ஏகாதசி விரத பங்கத்தால் ஏற்பட்ட ஊர் என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கும். அவரது தெள்ளிய நடையிலேயே அந்த ஏகாதசி சம்பவத்தைக் கீழே பார்ப்போம:
விரத பங்க பரிகாரமாக அமைந்த ஊர் ஒரு தமிழ் அறிஞரின் ஊராக அமைந்து தமிழைத் தழைக்கச் செய்தது ஒரு புறமிருக்க ஏகாதசிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஒரு பாலமாக இருந்ததும் ஒரு சுவையான செய்தி தான்!
ஒரு இஸ்லாமியரின் ஏகாதசி விரதம்
பிரபல சிதார் கலைஞர் ரவிசங்கரின் குரு ஒரு இஸ்லாமியர். அவர் ஏகாதசி விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வந்தவர். பங்களா தேஷ் முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்றும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வருகின்றனர். ஏகாதசி விரதம் மத எல்லையைக் கடந்து பலன் அளிப்பது என்பதை கல்யாண் கல்பதரு (கீதா பிரஸ் வெளியிடும் ஆங்கில மாத இதழ்) பத்திரிக்கை ஒரு ஆச்சரியமான உண்மைச் சம்பவத்தை வெளியிட்டு வெளிப்படுத்தியுள்ளது.
சுருக்கமாகச் சொல்லப் போனால் சம்பவம் இது தான்.
இஸ்லாமிய நிறுவனம் ஒன்றில் பாக்கிங் செய்த பொருள்களை அவசரம் அவசரமாக லோட் செய்து அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கண்டிப்பான முதலாளி “இருந்து வேலையை முடிக்கச் சொல்லி” உத்தரவைப் போட்டதால் அங்கிருந்த இஸ்லாமியர் ஒருவர் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருந்தார். தண்ணீர் அருந்த முடியவில்லை; உணவருந்த நேரமில்லை. பகல் போனது. இரவும் நீண்டது.தொடர்ந்து சாமான்களைச் சுமந்து வண்டியில் ஏற்றியவாறே இருந்த அவர் அதிகாலை நேரத்தில் மிகவும் சோர்வடைந்தார்.
வேலை முடிந்தது. ஆனால் அவரோ திடீரென மயங்கி விழுந்தார். அவரது ஆவியும் பிரிந்தது. நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற நண்பர்கள், உறவினர்கள் அவரது அந்திம யாத்திரைக்கு ஏற்பாடுகளைச் செய்யலாயினர்.
ஆனால், என்ன ஆச்சரியம், திடீரென அவர் உடலில் ஒரு அசைவு தோன்றியது. பிரமித்துப் போன அனைவரும் உடனடியாக அவரை எழுப்பி அமர வைத்தனர்.
அவர் சொன்ன கனவு போன்ற நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்திக்குள்ளாக்கியது. இறந்தவுடன் அவரை இரு கரிய நிறத்தவர் கொண்டு போய் தங்கள் தலைவனிடம் சேர்ப்பித்தனர். தலைவனாக இருந்த அவன் தன் கையில் இருந்த ஏடுகளைப் புரட்டி விட்டு, இவனுக்கு இன்னும் ஆயுள் இருக்கிறதே ஏன் இவனை அழைத்து வந்தீர்கள் என தூதர்களை வினவ அவர்களோ இல்லை, இல்லை, இவன் கணக்கு முடிந்து விட்டது, சரியாகப் பாருங்கள், கட்டளையின் படி தான் இவனைக் கொண்டு வந்திருக்கிறோம் என பதில் அளித்தனர்.
இவன் ஆயுள் முடிந்தது உண்மை தான்! ஆனால் கடைசி நேரத்தில் இவன் நீர் கூட அருந்தாமல் இருந்திருக்கிறான். இன்றோ ஏகாதசி. ஏகாதசி விரதம் இருந்தவனுக்கு ஆயுள் நீட்டிக்கும் என்ற பலன் படி இவன் ஆயுள் நீடிக்கிறது. இவனைப் பூமியில் கொண்டு போய் சேருங்கள் என தலைவன் உத்தரவிட்டான்.
“அடுத்த கணம் பார்த்தால் என் கனவு போன்ற காட்சி கலைகிறது. நீங்கள் அனைவரும் என்னை எழுப்பி விட்டீர்கள்” என்ற உயிர் பிழைத்த அந்த அதிசய மனிதர் கூறி முடித்து விட்டு ஏகாதசி விரதம் என்றால் என்ன என்று அப்பாவியாக ஆனால் ஆர்வமுடன் கேட்டார்.
உள்ளூர் பண்டிதரை அனைவரும் அணுக அவர் மிகுந்த பிரமிப்புடன் நீங்கள் வந்து சந்தேகம் கேட்கும் இந்த வேளையில் புராணம் கூறும் ஏகாதசி பலனைப் பற்றித் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். ஏகாதசி அன்று விரதம் இருந்தால் ஆயுள் நீடிக்கும் என்று இது தெரிவிக்கிறது. என்ன விஷயம்? சொல்லுங்கள் என்றார்.வந்திருந்தோர் அதிசயித்தனர். ஏகாதசி விரத மகிமை அனைவருக்கும் புரிந்தது.
ஆயுளை நீட்டிக்கும் ஏகாதசி விரதம்
மாதம் தோறும் வரும் இரு ஏகாதசிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு; உரிய பலன்களும் உண்டு. ஆரோக்கியத்தைத் தந்து ஆயுளை நீட்டிப்பது ஏகாதசி என்பதை மார்க்கண்டேய புராணம் பத்ம புராணம் ஆகியவை வெவ்வேறு விளக்கக் கதைகளுடன் தெரிவிக்கின்றன.
ஆனால் நடந்த உண்மைச் சம்பவத்தைக் கலியுகத்தில் கேட்கும் போது நம் நம்பிக்கை உறுதிப் படுகிறது. மன்னர்கள் முதல் சாமானியர் வரை இருந்து வந்த ஏகாதசி விரதத்தின் புனிதமும் மஹிமையும் வெளிப்படுகிறது.
ஏகாதசி விரதம் இருப்போம்; ஆயுளை நீட்டித்து இறை வழிபாட்டில் ஈடுபடுவோம்!
********************
contact swami_48@yahoo.com




































தமிழில் சாதனை படைத்த ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ !
தமிழில் சாதனை படைத்த ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ !
Part of “The Wonder that is Tamil” written by London Swaminathan
கட்டுரையாளர் லண்டன் சுவாமி நாதன்
ஆய்வுக்கட்டுரை எனண் 1568; தேதி 13 ஜனவரி 2015
இந்தியாவில் எழுத்து வேலைகளுக்காக நோபல் பரிசு பெறத் தகுதி உடையவர் வியாசர் என்னும் மாமுனிவன் என்று ஒரு கட்டுரை எழுதி னேன். தமிழில் எழுத்து, அதிலும் குறிப்பாக உரை எழுதியமைக்காக, ஒரு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று பாராட்டப்படும் நச்சி அவர்களுக்கே தரவேண்டும்.
அவர் ஒரு பிராமணன். வடமொழி தென் மொழி இரண்டையும் கரை கண்டவர் என்பது அவர் உரை வளத்தில் இருந்தே தெரிகிறது. சில நேரங்க்களில் வடமொழியையோ வடமொழி நூல் குறிப்பிடும் வழக்கங்களையோ மட்டம் தட்டிக் கூட தமிழைப் புகழ்ந்துள்ளார். இன்னும் சில இடங்களில் வேத, புராண, இதிஹாசக் கருத்துக்களை உரையின் கண் நுழைத்துள்ளார். ஆக மறத் தமிழர்களின் பாராட்டுக்கும், குட்டுக்கும் ஆட்படுகிறார். தமிழனைப் புகழும் இடங்களில் தமிழ் ஆர்வலர்கள் இவரை உச்சிமேற் வைத்துக் கொண்டாடுவர். சிலருக்கு ஒவ்வாத கருத்துக்கள் வரும்போது திட்டுவார்கள். இது திராவிட அரசியலின் தாக்கம். ஆயினும் அரசியலுக்கு அப்பாற்பட்ட அந்தக் கால சத்திய சந்தர்கள் —- உரைகாரர்களிலேயே அதிகம் புகழ்ந்தது இந்தப் பார்ப்பனரைத்தான்!!
அப்படி என்ன சாதனை படைத்தார் திருவாளர் நச்சி?
கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் என்னும் ஒரு புதிய உத்தியை அதிகம் கையாண்டது இவர்தான். அதாவது ஒரு செய்யுளில் முதல் வரியிலோ இரண்டாவது வரியிலோ வரும் சொல்லை வேறு எங்க்காவது கொண்டு இணைத்து (கூட்டி) பொருள் சொல்லுவார். அது கன கச்சிதமாக இருக்கும். கவிதை பாடியவரே நேரில் வந்தாலும் அட நான் எழுதிய கவிதையில் இப்படியும் பொருள் இருக்கிறதா என்று வியப்பார்.
எல்லாப் பெண்களும் ஏற்கனவே சந்திரன், கந்தருவன், அக்னி ஆகியோரை மணந்த பின்னரே நாலாவது நாள் மணமகனை மணக்கிறான் என்ற வேதக் கருத்தை இவர் தொல்காப்பிய சூத்திர உரையில் கையாண்டது பற்றிய விமர்சனத்தை நேற்று ஆளவந்தார்- ஆக்கியாழ்வான் கதையுடன் தந்தேன்.
நச்சி. தமது உரைகளில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோளாகக் காட்டுகிறார் என்றால் இவருடைய மேதாவிலாசம் எத்தகையது என்பது விளங்கும். அந்தக் காலத்தில் இண்டெர்னெட் கிடையாது. நூலகங்களோ மிகக் குறைவு!
இவரை வடமொழியில் சிறந்த உரைகளைத் தந்த மல்லினாதருடன் ஒப்பிடுகிறார் தமிழ் தாத்தா உ.வே.சா.
ஒவ்வொரு உரையின் இறுதியிலும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று — என்று கூறுவதால் இவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர், மதுரைக்காரர் என்பது தெரிகிறது.
வண்டிமிர் சோலை மதுரா புரிதனில்
எண்டிசை விளங்க வந்த வாசான்
பயின்ற கேள்விப் பாரத்துவாசன்
என்று உரையின் பாயிரத்தில் உளதால் இவர் குலம், கோத்திரம் முதலியவற்றை அறிகிறோம்.
தொல்காப்பியம், பத்துப் பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி, குறுந்தொகையில் பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்கள் ஆகிய அனைத்துக்கும் இவர் உரைகண்டார்.
பாரத் தொல்காப்பியமும் பத்துப் பாட்டுங் கலியும்
ஆரக் குறுந்தொகையுள் அயன் நான்கும் — சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்தி நச்சினார்க்கினியமே – என்று ஒரு வெண்பா உளது.
நச்சி. இன்னும் சில நூல்களுக்கு உரை கண்டார் என்றும் அவை எவையெனப் புலப்படவில்லை என்றும் உ.வே.சா. கூறுகிறார்.
நச்சி எழுதியதாகக் கூறப்படும் உரையிலும் குறுந்தொகை உரையும், தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் ஆகிய பகுதிகளுக்கான உரைகளும் கிடைக்கவில்லை.
இன்று, நச்சி. உரையை மற்றவர் உரையுடன் ஒப்பிட்ட சில இடங்களைக் காண்போம். கீழேயுள்ள பகுதி தொல்காப்பியக் கடல் என்ற அற்புத நூலை எழுதிய வ.சுப மாணிக்கம் சொல்லும் கருத்துக்கள்:
“நச்சினார்க்கினியர் தமிழ் இலக்கியத்துக்கும் இலக்கணத்துக்கும் உரை எழுதற்கென்றே பிறந்த பெருமகனாவார் இலக்கியங்களில் உரை நயம் கண்டவராதலின் இவர்தம் இலக்கண உரையிலும் நயக்காட்சிகளைக் காணலாம். இவர்தம் நடை இளம்பூரணத்துக்கும் சேனாவரையத்துக்கும் இடைப்பட்டதாகும். சேனாவரையரை இவர் மறுத்த இடங்களும் உண்டு.இளம்பூரணர்க்குப் பின் தொல்காப்பியத்திற்குப் பெரும் பாகம் உரை கண்ட பெருமையுடையவர் நச்சினார்க்கினியர்.
“சொற்கிடந்தாங்கு பொருள் கொள்ளாது தாம் நினைத்தாங்குச் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இவர் தம் உரை உரையறங் கடந்த உரை ஆயிற்று. பொருளறை செய்த இப்பெருங்குறை இவ்வுரையில் இல்லாதிருப்பின் நச்சினார்க்கினியர் உரை ஞாயிறாகப் பெரும் புகழ் பெற்றிருப்பர்.
பெண்மை யடுத்த மகனென் கிளவியும் — தொல்.649
பெண்ணைப் பெண்மகன் என்று ஆண்பால் படச் சொல்லுகின்ற வழக்கை இத் தொல்காப்பிய அடி குறிக்கின்றது. இப்பகுதிக்கு வரைந்த உரை வளர்ச்சியைக் காண்போம்:
(அ)இளம்பூரணர்:
புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் பெண்மகன் என்று வழங்குப.
(ஆ)சேனாவரையர்
புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப.
(இ)கல்லாடர்:
நாணுவரை இறந்தாள் தன்மையளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண் மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்போது மாறோக்கத்தார் வழங்குவர். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு
(ஈ) தெய்வச்சிலையார்
விளையாடு பருவத்துப் பெண்மகளை பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு.
(உ)நச்சினார்க்கினியர்
பெண்மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினார் ஆயிற்று.
இங்ஙன ம் கூறலின் ,
பெண்மகன் என்பது இளம்பூரணர் காலத்து நாடு முழுதும் பரவலாக வழங்கியிருந்தது என்பதும் சேனாவரையர், கல்லாடர் காலங்களில் திசை வழக்காயிற்று என்பதும் சிலையார், இனியார் காலத்து அத்திசை வழக்கும் அருகிற்று என்பதும் பெறப்படும்”
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி — பனம் பாரனார் பாயிரம்
இப்பாயிரத்தில் எழுத்து முறை என்பது நூல் எழுதும் முறை எனப்பொருள்படும். உரை ஆசிரியர்கள் இதற்கு வேறு வேறு பொருள் எழுதியுள்ளனர். பிற நூல்கள் எழுத்திலக்கணத்தைச் சொல் இலக்கணத்தோடு மயங்கிக் கூறின எனவும் , அங்கனமின்றி மயங்காத முறையானே எழுத்திலக்கணத்தை வேறு தெரிவித்தார் தொல்காப்பியர் எனவும் உரை செய்குவர் இளம்பூரணர்.
நச்சினார்க்கினியர், மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி என்னும் பன்னிரெண்டாம் அடியை ‘’ புலந்தொகுத்தோனே’’ என்ற எட்டாவது அடியோடு கொண்டு கூட்டிக்கொள்வர். மேல் யான் விளக்கியபடி , எழுத்திலக்கணம் ஒன்றை மட்டும் மயங்காதபடி தொல்காப்பியர் மொழிந்தார் என்ற இளம்பூரண உரை குறையுடைத்து என்று கண்டு கொண்ட நச்சினார்க்கினியர் கீழதை மேலதொடு கொண்டு கூட்டி,மூன்று இலக்கணங்களையும் மயங்காத முறையில் செய்தார் தொல்காப்பியர் என்று நிறுவ முயல்வர். தானம் மாற்றிச் செய்யும் கணக்குக் கூட்டு போல , அடிமாற்றும் இவ்வகைக் கொண்டு கூட்டும் முறை குற்றம் உடையது. முவ்விலக்கணங்களையும் ஒழுங்குறச் செய்தார் ஆசிரியர் என்பதற்கு ‘முறைப்பட எண்ணி’, போக்கறு பனுவல்’, ‘அரில்தப’ என்ற செந்தொடர்களே சாலப்போதும். கொண்டு கூட்டும் நச்சினார்க்கினியம் வேண்டா.”
-தொல்காப்பியக் கடல், வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்
எனது கருத்து: நச்சியின் கொண்டு கூட்டும் உத்தி தான் அவருக்குப் புகழை ஈட்டித் தந்துள்ளது. ஆகவே இந்த விமரிசனம் சரியன்று. இளம் பூரணரைவிடப் பொருத்தமான — தொல்காப்பியரை பாராட்டும் உரையையே — நச்சி. இங்கே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
-சுபம்–
contact swami_48@yahoo.com
Posted by Tamil and Vedas on January 13, 2015
https://tamilandvedas.com/2015/01/13/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%9a/