புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633)
Written by London Swaminathan
Post No. 15,633
Date uploaded in London –19 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
80திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 80
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 80
***
தனித்தனி முக்கனி பிழிந்து ……
ராமலிங்க சுவாமிகள் அருணகிரிநாதரைப்போல தனித்தனி முக்கனி பிழிந்து …. பாடலைப் பாடினார். அருணகிரிநாதரோ புரந்தர தாசர் போலப் பாடினார்; தெய்வீகப் பாடல்களை ஒப்பு நோக்கி மகிழ்வோம்
தேனை வடித்துச் சொரிந்ததோ கொதி
பாலு டன்ஒக்கக் கலந்ததோ நல
சீனி யில்விட்டுப் பிசைந்ததோ பல …… கனிதானோ
தேடி யெடுத்துப் பிழிந்ததோ நிறை
பாகு பதத்திற் கமைந்ததோ இவை
சேர வுருட்டித் திரண்டதோ நவ …… ரசமீதோ
ஞான முளைத்துப் படர்ந்ததோ யதி
லேயெ ழுபுட்பச் சுகந்தமோ விது
நாம கள்வித்தை ப்ரசங்கமோ வென …… உரைநாவால்
நாவ லர்மெச்சிப் பணிந்துதா ழவும்
நீய துமெச்சித் தணிந்துபே சவும்
நானு னைமெச்சிப் புகழ்ந்துபா டவும் ……. அருள்தாராய்!
யானை மதப்பட் டெழுந்ததா மென
வேயி ருபத்மச் சதங்கையோ லிட
ஆறு முகத்துக் குழந்தையா யருள் …… அணையார்பால்
ஆறு முகத்திற் சொரிந்தபாற் குளம்
ஆறு முலைக்குப் பிரிந்தபால் நிறை
வார மலைக்குச் சிறைந்தபோ திலு …… மமையாதோ
சோனை மலைக்குட் திரிந்துலா விய
சீர சமுத்ரத் தரங்கமே லெழு
சூரி யனொக்கத் திரிந்துலா விய …… புதல்வோனே!
சோலை மலைக்குக் கடம்புபோல் வளர்
விரா லிமலைக்குக் கொழுந்துபோ லுயர்
சுவா மிமலைக்குக் கரும்புபோல் வரு …… முருகோனே!
……… பதவுரை ………
தேனை வடித்துச் சொரிந்ததோ கொதி … சுத்தமான தேனைப் பிழிந்து எடுத்து ஊற்றியதோ, சூடான
பாலுடன் ஒக்கக் கலந்ததோ நல … பாலுடன் அத்தேனை தகுந்த அளவு கலந்துள்ளதோ, நல்ல
சீனியில் விட்டுப் பிசைந்ததோ பல கனிதானோ … சர்க்கரையில் கொட்டிப் பிசைந்துள்ளதோ, பல வகையான பழங்களோ,
தேடி யெடுத்துப் பிழிந்ததோ நிறை … அப்பழங்களைத் தேடி எடுத்து அதன் சாற்றைப் பிழிந்து எடுத்ததோ, தேவையான
பாகு பதத்திற் கமைந்ததோ இவை … நல்ல பக்குவத்திற்கு உள்ளானதோ, இவைகள் எல்லாம்
சேர வுருட்டித் திரண்டதோ நவரசமீதோ … ஒன்றாக சேர்த்து உருட்டி உருவானதோ, ஒன்பது விதமான இனிமைகளைக் கொண்டதோ
ஞான முளைத்துப் படர்ந்ததோ யதிலே … மெய்யான உணர்வு உதித்து பரவியுள்ளதோ, அவற்றுள்
யெழு புட்பச் சுகந்தமோ விது … எழுகின்ற பலவகைப் பூக்களின் நறுமணமோ, இது
நாமகள் வித்தை ப்ரசங்கமோ வென உரை நாவால் … சரஸ்வதியின் அருளால் வெளிப்படும் ஞானத் தெளிவோ என உன் அருளை நாவினால் போற்றுகின்ற,
நாவலர் மெச்சிப் பணிந்து தாழவும் … புலவர்கள் விரும்பிப் பணிவோடு தலை வணங்கவும்,
நீயது மெச்சித் தணிந்து பேசவும் … நீ அதைக் கண்டு விரும்பி நிறைவோடு அவர்களுடன் பேசவும்,
நானுனை மெச்சிப் புகழ்ந்து பாடவும் அருள்தாராய்! … நான் உனை விரும்பித் துதித்துப் பாடவும் உனது அருளைத் தருக!
யானை மதப்பட் டெழுந்ததா மெனவே … யானை மதங்கொண்டு ஓடும்போது, அதன் கழுத்திலுள்ள மணிகளின் ஒலியைப் போன்றதோ என்று
யிரு பத்மச் சதங்கை யோலிட … உனது இரு தாமரை மலர்ப் பாதங்களை அலங்கரிக்கும் சதங்கைகள் ஓசையிட
ஆறு முகத்துக் குழந்தையா யருள் அணையார் பால் … அறுமுகக் குழந்தை வடிவாக வந்து உன்னை அணைத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு அருள் புரிந்தவனே
ஆறு முகத்திற் சொரிந்த பாற்குளம் … உனது ஆறு முகத்திற்கு பொழிந்த பாற்குளம் போன்ற
ஆறு முலைக்கும் பிரிந்த பால் நிறை … கார்த்திகைப் பெண்கள் அறுவர் தனங்களிலிருந்து வெளிப்பட்டப் பாலின் அளவானது
வார மலைக்குச் சிறைந்த போதிலு மமையாதோ … நீண்ட நெடிய மலையினால் தடுக்கப்பட்டு அடைக்கப்பட முடியுமோ?
சோனை மலைக்குட் திரிந்துலாவிய … கார் மேகங்கள் சூழ்ந்துள்ள மலகளின்மேல் திரிந்து உலாவி வருகின்றவனாகவும்,
சீர சமுத்ரத் தரங்க மேலெழு … பாற்கடலின் அலைகளின் மேல் எழுகின்ற
சூரிய னொக்கத் திரிந்துலாவிய புதல்வோனே! … ஞான சூரியனாகவும் உலாவி வருகின்ற மைந்தனே
சோலை மலைக்குக் கடம்புபோல் வளர் … சோலை மலை எனும் திருத்தலத்திற்கு வளர்கின்ற கடம்ப மலர் போன்றும்,
விராலி மலைக்குக் கொழுந்து போலுயர் … விராலிமலை எனும் திருத்தலத்திற்கு இளந்தளிர் போன்றும், உயர்ந்த
சுவாமி மலைக்குக் கரும்புபோல் வரு முருகோனே! … சுவாமி மலை எனும் திருத்தலத்திற்கு இனிக்கும் கரும்பு போன்றும் வந்து அருள் புரிகின்ற முருகப் பெருமானே!
****
புரந்தரதாசர் கண்டுபிடிப்பு! ராமர் பாயசம், கிருஷ்ணா சர்க்கரை, புதுவகை கல்கண்டு! (Post.14,272)
Written by London Swaminathan
Post No. 14,272
Date uploaded in Sydney, Australia – 5 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(புரந்தரதாசர் பற்றிய 7–வது கட்டுரை இது)
புரந்தரதாசர் கீர்த்தனைகளில் நல்ல ருசி உண்டு; யாராவது அவரது வீட்டுக்குப் போனால் ராமர் பாயசம் தருவார்; அதில் கிருஷ்ணா சர்க்கரையும் இருக்குமாம்; அத்தோடு வாசலில் உள்ள தாம்ப்பாளத் தட்டிலிருந்து கற்கண்டும் எடுத்துக்கொள்ளலாமாம் . இதற்காக அவர் நம்மை வெற்றிலை பாக்கு வைத்து மேள தாளத்துடன் வரவேற்கிறார் . இதோ அவரே சொல்கிறார்
ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே
விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)
ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;
விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)
ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி
சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)
கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு
அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)
ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு
புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு
ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக
ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)
இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு
புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு
(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது
ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)
***
சஜ்ஜிகே – கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.
ஷாவிகே – சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்
****
தமிழில் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசத்தைக் கேட்டவர்களுக்கு ஊறுகாய் போடுவது பற்றி அவர் சொன்னது மறக்காது!
புது வகைப் பழச்சாறு SWEET — வள்ளலார்
வள்ளலார் பாடலுடன் ஒப்பீடு ; சிவன் நாமம் மூன்று பழச் சாறு
தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,
தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,
இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,
அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,
அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!
நூல்: திருவருட்பா; பாடியவர் வள்ளலார்
மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச் சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும் கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில் ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இளம் சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டால் எப்படி இருக்கும்? அந்தச் சுவைக்கட்டியைவிட அதிகம் இனிப்பான தெள்ளமுது, என் இறைவனாகிய நீ!
நிலையில்லாத பிறவித் துயரம் அறுபடும்விதமாக அம்பலத்தில் ஆடும் நடராஜனே, உன்னுடைய பாத மலர்களை என் சொற்களால் அலங்கரிக்கிறேன், ஏற்றுக்கொண்டு அருள் செய்!
*****
புது வகைக் கற்கண்டு – புரந்தரதாசர்
கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு
கல்லு சக்கரே கொள்ளீரோ
கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு
புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)
கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்
கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு
கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)
மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)
எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா
ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா
எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா
உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா… (கல்லு)
எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது
எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது
எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது
உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)
நஷ்ட பீடுவதல்லா நாத ஹுட்டுவதல்லா
எஷ்டு ஒய்தரு பெலே ரொக்க இதக்கில்லா
கட்டிருவெய திந்து கடிமே ஆகுவதில்லா
பட்டணதொளகே பிரசித்த ஆகிருவந்தா.. (கல்லு)
(இதனால்) நஷ்டமே வராது.. (எவ்வளவு சேர்த்தாலும்) துர்நாற்றம் வராது
(உங்களிடமிருந்து) யாராவ்து எடுத்துப் போனாலும் மதிப்பு குறையாதது
கட்டெறும்பு தின்றாலும் குறையவே குறையாதது
பட்டணத்தில் மிகவும் பிரசித்தமானதாக இருக்கும்… (கற்கண்டு)
சந்தே சந்தேக்கே ஹோகி சிரம படிசுவதல்லா
சந்தே ஒளகேயிட்டு மாருவதல்லா
சந்தத பக்தர நாலகே சவிகொம்ப
காந்த புரந்தர விட்டல நாமவெம்ப.. (கல்லு)
சந்தை சந்தையாக போய் விற்க முடியாதது
சந்தையில் வைத்து வாங்கவும் முடியாதது
எப்போதும் (அவர் பெயர் சொல்லும்) பக்தரின் நாக்கில் இனிமையை தரும்
புரந்தர விட்டலா என்னும் நாமமான … (கற்கண்டு)
***
ராம நாமம் செய்யும் அற்புதம் – – புரந்தரதாசர்
ராம மந்தரவ ஜபிஸோ, ஹே மனுஜா
ராம மந்த்ரவ ஜபிஸோ
ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா
சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)
ராம நாமத்தை ஜபியுங்கள், ஹே மக்களே
அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்
அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)
குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர
சல பீதியொளு உச்சரிப மந்த்ர
ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர
சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)
அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்
சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்
எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்
சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)
மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர
சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர
துரித கானனகிது தாவானல மந்த்ர
பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)
வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்
அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்
பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்
உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)
ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு
சானுராகதி நித்ய சேவிப மந்த்ர
பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர
தீன ரக்ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)
ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)
காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்
சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்
(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)
****
பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி உரித்தாகுக.
****
‘ஏறுமயில் ஏறி‘ உள்ளர்த்தம்


ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
……… இப்பாடலின் மேலார்ந்த பொருள் ………
ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம்தான்.
உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்
தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை
உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு முகம்தான்.
உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.
… அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை
நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
……… இப்பாடலின் உள்ளர்த்தம் ………
1. என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடியும்,
2. எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளியும்,
3. என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளியும்,
4. என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளியும்,
5. என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளியும்,
6. என்னை உன்னோடு புணர்த்தியருளியும்
… இவ்வாறு உன் ஆறு திருமுகங்களாலும் எனக்கு கருணை புரிவாயாக.
****
இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின் திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து இகபர செளபாக்கியத்தை அருளும்.
—-subham—
Tags- Part 80, ‘ஏறுமயில் ஏறி’ பாட்டின் ,உண்மையான பொருள், புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை, தனித்தனி முக்கனி பிழிந்து ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே