சித்திரா பெளர்ணமியும் சித்திர குப்தன் கோயிலும் (Post No.15,671)


Picture of Yama Dharmarajan

Written by London Swaminathan

Post No. 15,671

Date uploaded in London –29 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இந்துக்களுக்கு எல்லா பெளர்ணமி நாட்களும் திருவிழா நாட்கள்  ஆகும். அதிலும் குறிப்பாக சித்திரை மாதத்தில் வரும் முழுநிலவு நாள் கோடைகாலத்தில் வருவதால் மேலும் சிறப்பு பெறுகிறது. மக்கள் தங்கு தடையின்றி, பயமின்றி பயணம் செய்யும் காலம் இது;

சித்திரைத் திருவிழா என்று சொன்னவுடன் பல லட்சம்பேர் பங்கு கொள்ளும் மதுரை மாநகர  சித்திரைத் திருவிழாதான் நினைவுக்கு வரும். இதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் சித்திர குப்தன் கோவிலும் வழிபாடும்திருவண்ணாமலை கிரிப் பிரதக்ஷிணமும் கூடலூர் முதலிய இடங்களில் நடைபெறும் பூக்குழி இறங்கும் விழாக்களும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்  விழாவும் நினைவுக்கு வரும் . சொல்லப்போனால் இந்த நாளில் சிறப்பு வழிபாடோ அபிஷேக ஆராதனைகளோ இல்லாத கோவிலே இல்லை எனலாம் .

Chitra Gupta Temple, Kanchipuram

சித்திர குப்தன், மரணத்துக்கு அதிபதியான எம தர்மராஜனின் கணக்குப்பிள்ளை /அக்கவுண்டண்ட்; அவன் ஒரு சூப்பர் கம்ப்யுயூட்டர் ;  ஒரு வினாடிக்கு ஒரு பில்லியன் கணக்குகளைப் போடும், விஷயங்களை சேகரிக்கும், கணினி அவன் ; மக்களின் சொல், செயல், சிந்தனை — அதாவது மனோ வாக் காயம் — மூன்றினாலும் செய்யும் பாவ புண்ணியங்களை இவன் நோட்டுப் புஸ்தகத்தில் எழுதி , நம்முடைய உயிர் எம தர்மன் தர்பாருக்கு வரும்போது , சமர்ப்பிக்கிறான். அவன் ராஜாவானாலும் சேவகன் ஆனாலும் அவரவர் கர்மங்களுக்குத் தக்க நல்லதோ கெட்டதோ அளிக்கிறன் எம தர்மன். 

உண்மையில் இது ஒரு விஞ்ஞான ரகசியம் ; சித்திர குப்தன் என்றால் தமிழில் மறைவான வரைபடம் என்று பொருள்; நாம் எதை நினைத்தாலும் செய்தாலும்  நமது உடலைச் சுற்றியுள்ள ஒளிவட்ட கம்பியூட்டரில் அது பதிவாகி விடுகிறது  . நாம் இறந்தவுடன் இதை எமன் பார்க்கிறான் ; பூலோகத்தில் கூட சாது சந்யாசிகள், விரும்பினால், இதைப்பார்க்க முடியும்!

கிராமஃபோன் இசைத்தட்டில் , வீடியோவில், ஆடியோ டேப்பில் , யு எஸ் பி பென் ட்ரைவில்USB, PEN DRIVE நாம் சேகரித்து வைப்பது போன்றது இது.

***

காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவில், சித்திரகுப்தனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில், சித்திரகுப்தர் கையில் எழுத்தாணி மற்றும் ஏட்டுச்சுவடியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோவில் கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும், சித்ரா பௌர்ணமி விழாவுக்குப் புகழ்பெற்றதாகவும் விளங்குகிறது.

9-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.

சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியிலும் ஒரு சித்திரகுப்தன் கோவில் உள்ளது.

இந்த 2026 ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி மே 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும்  கொண்டாடப்பட உள்ளது. சித்திரை மாத பௌர்ணமி நாளாகக் கொண்டாடப்படும் இந்த நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.

சித்ரா பௌர்ணமி நாளில் எமதர்மனின் கணக்கப்பிள்ளையான சித்ரகுப்தரை வழிபடுகிறார்கள்.

***

கல்வெட்டுகள்

திருச்சி  குகையில் உள்ள ராஜகேசரி வர்மனின் பதினாறாவது ஆட்சியாண்டு கல்வெட்டு சித்திரைத் திருவிழாவின் ஒன்பது நாட்களுக்குப் பிராமணர்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் அளிக்க நிலத்தை ஒதுக்கிய செய்தியைக் கூறுகிறது.

திருநெடுங்களம் என்னும் ஊரிலுள்ள நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டு தரும் செய்தி பின் வருமாறு :–

சித்திரை விழாவின்போது 550 சிவயோகிகளுக்கு அமுது படைப்பதற்காக இந்த நிலம் தானம் செய்யப்படுகிறது ; இதுவும் ராஜகேசரி வர்மனின்  கால கல்வெட்டு (985-1013 CE).

***

.திருவண்ணாமலை கிரிவலம்.:- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பகுதியில் நடைபெறும் கிரிவலம், சித்ரா பௌர்ணமி நாளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சுமார் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலை சுற்று பாதையில் பக்தர்கள் காலில் நடந்து கிரிவலம் செய்வர்.

***

சித்திரைத் திருவிழா

Azakar stepping into Vaigai River in Madurai.

மதுரை சித்திரைப் பெருவிழா  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா. “ஆற்றில் அழகர் இறங்கும் விழா” என்றும் வழங்கப்பெறுகிறது. இது ஆண்டுதோறும் சித்திரைமாதம் ஒன்பது நாள் நடைபெறும் திருவிழாவாகும். முதல் மூன்று நாட்கள் கோயிலிலும், நான்காம் நாள் மதுரை நோக்கிய பயணத்திலும் கழிந்துவிடுகிறது. ஐந்தாம் நாள் சித்திரை முழுநிலவு நாளாகும். அன்றுதான் அழகர் கள்ளர் கோலத்துடன் வைகை ஆற்றுக்குள் தங்கக்குதிரையில் அமர்ந்தவாறு இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அழகர் போல வேடமணிந்த பக்தர்கள் அழகர்மீது தண்ணீர்ப் பீய்ச்சி அடிப்பார்கள்.

அந்தக் காலத்தில் மாட்டு வண்டிகளில்  பக்கத்து கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கூடாரம் அடிப்பார்கள்; எல்லா மண்டகப் படிகளிலிலும் இலவசமாக புளியோதரை, தயிர்சாதம் ,சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்வார்கள் . ஆறாம் நாள் பகலில் வண்டியூர் என்னும் பகுதியில் வைகை ஆற்றின் நடுவே உள்ள தேனூர் மண்டபத்தின் முன் அமைக்கப்பெற்ற குளத்தில் ‘மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம்’ அளிக்கும் சடங்கும் பிறகு தசாவதார அலங்காரங்களும் , பூப்பல்லக்கும் , என்று திருவிழா நிறைவடையும். பின்னர் சுந்தர ராஜப்பெருமாள் என்னும் அழகர்,  அழகர் கோவிலுக்குத் திரும்பிச் செல்வார்.

***

திருமலை நாயக்கர் 400 ஆண்டுகளுக்கு முன்னர் சைவ- வைஷ்ணவ  ஒற்றுமையை நிலைநாட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் திருவிழாவையும் அழகர் கோவில் விழாவையும் இணைத்தார் ; மீனாட்சி திருக்கல்யாணம் தனியாக மாசி மாதத்திலும், அழகர் ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதமுமாக நடைபெற்று வந்தது. மேலும் தற்சமயம் மதுரையின் வைகை ஆற்றங்கரையில் அழகர் இறங்கி, வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தின் முன் நடைபெறுகிற மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் முன்னர் மதுரைக்கு மேற்கே சோழவந்தானுக்கு அருகில் உள்ள தேனூர் என்னும் ஊரில்தான் சித்திரை முழுநிலவு தினத்தன்று நடைபெற்று வந்துள்ளது. மன்னர் திருமலைதான் இவ்விரு விழாக்களையும் இணைத்ததோடு, மாசி மாதம் நடைபெற்று வந்த மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கும், தேனூரில் நடைபெற்று வந்த அழகர் விழாவினை மதுரைக்குமாக மாற்றியமைத்தார்.

***

Meenakshi Ratha

இதன் பின்னால் ஒரு கற்பனைக் கதையையும் சொல்லுவார்கள். தங்கையின் திருமணத்திற்கு , அழகர் வருவதற்குள் திருமணம் நடந்து முடிந்த செய்தி கேட்டு, அவர் ஆற்றில் இறங்கிவிட்டு, ஊருக்குள் நுழை யாமல் சென்றுவிட்டார் என்று பாமர மக்கள் வேடிக்கையாகச் சொல்வதுண்டு . கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காண மக்கள் கூட்டத்தில் நீந்திச் செல்வோம்..

Kallazakar / Sundara Raja Perumal of Azakar koil, near Madurai.

சித்திரைத் திருவிழாவின்போது திருப்பரங்குன்ற முருகன், மதுரை பெருமாள் கோவில் விஷ்ணு எல்லோரும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பின்னால் மாசி வீதியில் உலா வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி .அதை என்னுடைய 35 வயது வரை- அதாவது 1987-ம் ஆண்டில் லண்டனுக்கு வந்து குடியேறும் வரை- கண்டு களித்தேன் .

–subham—

Tags- சித்திரா பெளர்ணமி, சித்திர குப்தன் கோயில், அழகர் ஆற்றில் இறங்குதல் , மீனாட்சி கல்யாணம் , கிரி வலம், chitragupta temple,

Leave a comment

Leave a comment