



WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,670
Date uploaded in London – 29 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-3-26 தினமணி கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை!
மூளைக்கு வேலை! படைப்பாற்றலை ஊக்குவிப்பது எப்படி?
ச. நாகராஜன்
எந்தத் துறையாகத் தான் இருக்கட்டும், நமது திறனை மற்றவர்களுக்கு உணர்த்துவது நமது தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் தான்!
அட, வித்தியாசமான மூளையாக இருக்கிறதே என்று பிறரை வியப்படையச் செய்வது நமது படைப்பாற்றல் திறன் தான்!
அதை எப்படிக் கூட்டுவது/ இதோ வழிகள்:
ஒரு சின்ன பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்று முதல் நூறு வரை எண்களை இட்டு வரிசையாக உங்கள் கருத்துக்களையும் யோசனைகளையும் எழுதுங்கள்.
சின்ன குழுவாக இருக்கும் உங்கள் நண்பர்களுடன் உங்கள் புதுக் கருத்துக்களையும் யோசனைகளையும் பற்றி விவாதியுங்கள். குறைந்த பட்சம் இரண்டு பேர், அதிக பட்சம் ஆறு பேர். நிறைய நண்பர்கள் சேர்ந்தால் திட்டம் மிக மிக காலதாமதமாகி விடும்.
உற்சாகம் உயரட்டும். புன்சிரிப்புடன் உற்சாகமாக எதிலும் செயல்படுங்கள். இது வெற்றியைத் தரும் என்ற எண்ணமே உற்சாகத்தைத் தரும். உற்சாகமே வெற்றியைத் தரும்.
படம் வரையுங்கள். ஒரு மேப்பைப் போட்டு அதில் உங்கள் எண்ணங்களை படமாக்குங்கள்.
உங்களுடன் நீங்கள் பேசுங்கள். உங்கள் கருத்துக்களை உங்களுடன் பேசுங்கள். பல மேதைகள் இந்த உத்தியைக் கடைப்பிடித்துத் தான்’தங்கள் எண்ணங்களைச் செம்மைப்படுத்தி அதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.
அவசரம் வேண்டாம். பொறுமையாக இருங்கள். ஏமாற்றம் உங்கள் படைப்பாற்றல் திறனைப் பழுதாக்கி விடும். அதிகமான ஆர்வக் கோளாறினால் வேகமாக எதையும் ஆரம்பித்தால் அதில் ஏற்படும் தடைகள் உங்களை முற்றிலுமாகச் சீர்குலைத்து விடும். நிதானமாக, படிப்படியாக முன்னேறுங்கள்.
உங்களின் எதிர்பார்ப்பைச் சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள். ;பிரம்மாண்டமான வெற்றி ஒரே நாளில் கிடைத்து விடாது. மிகவும் பிரமாதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சரி தான். ஆனால் அதிக எதிர்பார்ப்பு ஒரு தடையாகவே ஆகி விடும்.
ஒரே எண்ணத்தைத் திருப்பித் திருப்பி எண்ணி அதைச் செம்மையாக்கப் பாடுபடவேண்டாம். நமக்கு வேண்டுவது திரளான ஐடியாக்களே. ஆகவே நிறைய ஐடியாக்கள் வேண்டும்.
நமது நம்பிக்கையே நமக்கான பலம். நமது தனிப்பட்ட ஆளுமையை நாம் நமது நம்பிக்கையால் வெளிக்காட்ட வேண்டும்.
உங்கள் ஐடியாக்களை நீங்களே கடுமையாக விமர்சித்துப் பாருங்கள்.
ரத்னங்கள் பாலிஷ் செய்யச் செய்ய மெருகேறி ஒளிர் விடும் அல்லவா?
SWOT உத்தியைக் கடைப்பிடியுங்கள். Strenth, Weaknesses, Opportunities Threats – பலம், பலவீனம், வாய்ப்பு, எதிர்ப்படும் தடைகள் -ஆகிய இவற்றை உங்கள் திட்டம் பற்றி ஆலோசியுங்கள்.
டைம் பட்ஜெட்: தேவை! தேவையற்ற செயல்களை உங்கள் வாழ்க்கை முறையிலிருந்து நீக்குங்கள். First Things First! முக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். குறிப்பிட்ட காலக் கெடுவினுள் உங்களின் குறிப்பிட்ட பணி முடிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருங்கள்!
இது தேவையா? இது முக்கியமா என்ற கேள்விகளைக் கேட்டால் உங்களது விடைகள் உங்கள் வழியைச் செம்மைப் படுத்தும்.
உங்கள் கருத்துக்கள் நீங்கள் அல்ல. ஆகவே கருத்துக்களை விமர்சிப்பவர்களுடன் சண்டை போடாதீர்கள். அவர்கள் உங்களை விமர்சித்துத் தரம் தாழ்த்தவில்லை. உங்கள் கருத்துக்களையே விமர்சிக்கிறார்கள் என்று புரிந்து கொண்டு நட்பு ரீதியில் விமரிசனங்களை எதிர் கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட வழிகளை நீங்கள் கையாள ஆரம்பித்த சில நாட்களிலேயே என்ன ஆளே மாறிட்டாரே என்று உங்கள் வட்டாரம்
உங்களைப் பற்றிச் சொல்லும் போது படைப்பாற்றல் திறனுக்கு ஒரு ஜே என்று சொல்லி புன்சிரிப்புடன் அந்தப் புகழ்மொழியை ஏற்றுக் கொள்ளுங்கள்!
**