கல்யாணத்தில் டான்ஸ் ஆடவேண்டும்: பரத முனி உத்தரவு (Post.15,733)

Written by London Swaminathan

Post No. 15,733

Date uploaded in London –13 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரத நாட்டிய சாஸ்திரம் பற்றி சம்ஸ்க்ருத மொழியில் பரத முனி ஒரு அற்புதமான நூலை எழுதியுள்ளார் . அதில் நாட்டியம், நாடகம், நடனம்,  தியேட்டர்களின் அமைப்பு , நாட்டியம் எப்படி பூமிக்கு வந்தது  என்றும் சங்கீதம் பற்றியும் ஆறாயிரம் ஸ்லோகங்களை எழுதியுள்ளார். இப்போது வடநாட்டு இந்து சமய கல்யாணங்களில் ரோட்டிலும், வீட்டிலும் கல்யாண மண்டபங்களிலும் எல்லோரும்,  குறிப்பாக பெண்கள், நடனம் ஆடுவதைக் காண்கிறோம் ; இது கல்யாணச் சடங்கின் ஒரு பகுதி ; ஆனால் தமிழ் நாட்டில் பிராமண கல்யாணங்களிலும் மற்றவர் கல்யாணங்களிலும் இதை அரிதாகவே காண முடிகிறது .

தமிழ்நாட்டில் தற்போது பஜனைகளில் மட்டுமே பக்தர்கள் ஆனந்தப் பரவசம் அடைந்து நடனம் ஆடுகிறார்கள்

தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்தங்களிலும் டான்ஸ் பற்றி வருகிறது; இவர்களுக்கெல்லாம் கதாநாயகர் நடராஜப் பெருமானும், கோபியருடன் ஆடிய கிருஷ்ண பரமாத்மாவும் என்பதை இந்துக்களுக்குச் சொல்லத் தேவை இல்லை. உலகில் வேறு எங்கும் ஆதிகாலத்தில் இப்படி இருந்ததில்லை ; ரிக் வேதத்திலேயே நாட்டியம் பற்றிய குறிப்புகள் வருகின்றன ; ஆகையால் இந்து சமய கலாசாரம், சனாதன தர்மம் கைபர் கணவாய் வழியாக வந்ததாக வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் கட்டுக்கதை என்பது வெட்ட வெளிச்ச மாகிவிட்டது .

காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயன மகரிஷி பெண்களுக்கு ஒரு சிலபஸ் syllabusபோட்டுக்கொடுத்துள்ளார் ; அதில் அவர்கள் கற்க வேண்டிய 64 கலைகளில் சங்கீதமும் நடனமும் உள்ளன ; உலகில் இப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்விக்கு சிலபஸ் போட்டுகொடுத்தை சம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே காண முடிகிறது!

எகிப்திய, பாபிலோனிய, சுமேரிய, கிரேக்க, சீன நாகரீகங்களில் நடனம், சங்கீதம் இருந்தது உண்மைதான் ; ஆனால் அதை இப்படி முறைப்படுத்தி எழுதிய நூல்கள் இல்லை ; ஆதி மனிதர்களும் கூட டான்ஸ் Dance ஆடத்தான் செய்தார்கள் !

இந்திர லோகத்திலேயே ரம்பாமேனகா , ஊர்வசி, திலோத்தமா முதலிய நடன மாதர் இருந்ததும் அவர்கள் பூலோகத்துக்கு வந்து விஸ்வாமித்ரர், ரிஷ்யஸ்ருங்கர் போன்றோரை மயக்கியதையும் புராணக் கதைகளில் படிக்கிறோம்

எப்போதெல்லாம் ஆட வேண்டும் என்று பரத முனி எழுதியும் வைத்திருக்கிறார் .

எப்போது டான்ஸ் ஆட வேண்டும் ?

பரத முனி பெரும் சைக்காலஜிஸ்ட், Psychologist; மனிதர்களுக்கு ஆடலும் பாடலும் பிறப்பிலேயே உண்டு; இது அவர்களின் அடிப்படை உணர்ச்சி; இது மனித சுபாவம் என்றும் சொல்கிறார் ; ஆடுவதும் பாடுவதும் மங்களத்தைத் தரும் என்றும் செப்புகிறார் .

கல்யாணத்திலும் குழந்தை பிறந்த வீடுகளிலும் மாப்பிள்ளை, பெண் ஊர்வலங்களில் , ஒருவர் வெற்றி அடைந்த நிகழ்ச்சிகளிலும் ஆட வேண்டும் என்றும் பகிர்கிறார்.

இதோ அந்த ஸ்லோகங்கள்

ப்ராயேன ஸர்வலோகஸ்ய ந்ருத்தம் இஷ்டம் ஸ்வபாவதஹ

மாங்கல்யமிதி க்ருத்வா ச ந்ருத்தமேதத் ப்ரகீர்த்திதம்

நாட்யசாஸ்த்ரம் 4-261

விவாஹ ப்ரஸவாக வாஹபிரமோதாப் யுதயாதிஷு  

விநோதக்கரணஞ் சேதி ந்ருத்தமேதத் ப்ரவர்த்திதம் 

நாட்யசாஸ்த்ரம் 4-262

இதற்கெல்லாம் எடுத்துக்காட்டுகள் காளிதாசனின் மாளவிகா அக்நிமித்ரம் நாடகத்திலும் கதாசரித் சாகரக் கதைககளிலும் உள்ளன .சோமதேவர் எழுதிய  கதாசரித் சாகரம்தமிழில் கதைக்கடல் என்ற பெயரில் வெளியாகியது.


பெரும்பாலான கதைகளில் ஆண்கள்தான் ஆசிரியர்கள் ; பல கதைகளில், மாணவிகள் ஆசிரியர்களையே காதலித்துக் கல்யாணமும் கட்டிவிடுகிறார்கள்.

கதைக்கடல் நூலில் வரும் கதைகளில் ஏராளமான நாட்டிய வகைகள் குறிப்பிடப்படுகின்றன ; காளிதாசனின் நாடகத்தில் கதா நாயகி மாளவிகா, சலில என்னும் 4 அங்கங்கள் உடைய கடினமான நாட்டியத்தை ஆடுகிறார்

ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நடன அரங்குகள் இருந்ததையும் கதாசரித் சாகரம் ஆசிரியர் சோமதேவ தெரிவிக்கிறார் .

***

நான் 16-6-2012  எழுதிய பழைய கட்டுரை இதோ

மாதவியின் 11 வகை நடனங்கள்

Picture shows famous danseuse Jyotsna Jaganathan

கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்

குடைகுடிமால் அல்லியமற்கும்பம்—சுடற்விழியாற்

பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்

கொட்டியிவை காண்பதினோர் கூத்து

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” —என்று பாரதியாரால் பாராட்டப்பட்ட சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் மிகவும் சிறந்தது. கண்ணகி-கோவலனின் கதையைக் கூறும் இந்தக் காவியம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. தமிழ் மக்களின் கலைக் களஞ்சியம் இந் நூல். இதில் நாட்டியம், இசை, சிற்பம், ஓவியம் முதலிய எல்லாக் கலைகள் பற்றிய குறிப்புகளும் உண்டு. இந்த காவியத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டிவிட்டார்.

சிலப்பதிகாரக் காவியத்தில் கண்ணகிக்கு அடுத்தபடியாக வரும் பெண் கதாபாத்திரம் மாதவி. அவள் பேரழகி. சித்திராபதியின் மகள். பூம்புகாரில் அவளை அறியாதோர் இல்லை. காவிரி பூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பூம்புகாரில் இந்திரவிழா கோலாகலமாக நடந்தது. அதில் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் சீரும் சிறப்புமாக நடந்தது. சோழ மன்னன், மனம் மகிழ்ந்து மாதவிக்கு 1008 பொற்காசுகளையும் தலைக்கோல் பட்டத்தையும் தந்து கவுரவித்தான். ஐந்து வயது முதல் நாட்டியம் கற்ற மாதவி அத்துறையில் கரை கண்டு 12ஆம் வயதில் அரங்கேறினாள்.

இசையிலும் நடனத்திலும் பெரும் ஈடுபாடு கொண்ட கோவலன், மாதவியின் கலைகளில் மயங்கினான். அவனது மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்தான். பின்னர் கண்ணகியை அடைகிறான். பொய்க் குற்றச் சாட்டின்பேரில் மதுரையில் கொலைத் தண்டணை பெறுகிறான். பொங்கி எழுந்த கண்ணகி மதுரையை எரித்து சேரநாடு சென்று பத்தினித் தெய்வமாகிறாள்.

இந்த அற்புதமான காவியத்தில் மாதவி ஆடிய 11 வகை நடனங்களை உரைகாரர்கள் நமக்கு அளிக்கின்றனர். அத்தனையும் அற்புதமான இந்துமத புராணக் கதைகள். 2000 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் வாழ்வில் இந்துமதம் எப்படி இரண்டறக் கலந்திருந்தது என்ற பேருண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. “நன்மை வந்தெய்துக !! தீதெலாம் நலிக” என்ற வெற்றிச் செய்தியை தமிழர்கள் பறை சாற்றியது தெரிகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய விஷ்ணு, சிவன், துர்க்கை, முருகன், கண்ணன் ஆகியோரின் அழகிய 11 நடனங்களை மாதவி ஆடினாள். அவைகளைக் காண்போம்:

picture shows Japanese woman performing Bharatanatyam

எண்ணும் எழுத்தும்இயல் ஐந்தும்பண் நான்கும்

பண் நின்ற கூத்து பதினொன்றும்— மண்ணின் மேல்

போக்கினாள்பூம்புகார்ப் பொன் தொடி மாதவிதன்

வாக்கினால் ஆடு அரங்கின் வந்து

1.அல்லியம்: கண்ண பிரானை அழிக்க ஏவப்பட்ட யானையை அவன் வென்றதைக் குறித்து ஆடும் ஆட்டம் இது.

2.கொடுகொட்டி: சிவபெருமான் அசுரர்களின் முப்புரத்தை எரித்து ஆடிய ஆடம் கொடுகொட்டி.

3.குடை: முருகப் பெருமான் அவுணர்களை வென்றதைச் சித்தரிப்பது குடை நாட்டியம்

4.குடம்: கண்ண பிரான் தனது பேரப் பிள்ளை அநிருத்தனை பாணாசுரனிடமிருந்து மீட்க ஆடிய ஆடம் குடம் என்னும் வகை ஆகும்

5.பாண்டரங்கம்; சிவன் முப்புரம் எரித்த பின்னர் நான்முகன் காண ஆடியது பாண்டரங்கம் என்னும் வகை.

6.மல்: கண்ணனும், பாணனும் நடத்திய மற்போரைக் காட்டுவது மல் வகை நடனம்.

7. துடி: சூரபத்மனை முருகன் வென்ற பின்னர் ஆடிய ஆடம் துடி

8.கடையம்: வாணாசுரனின் தலைநகரின் வடக்கு வாசலில் அயிராணி (இந்திராணி) ஆடியது கடையம் என்னும் வகையால் காட்டப்படும்

9.பேடு: மன்மதன் தன் மகன் அநிருத்தனை சிறையிலிருந்து மீட்க பேடி வடிவத்தில் ஆடியது பேடு என்பதாகும். பாணாசுரணின் மகள் உஷாவைக் கடத்திச் சென்றதால் அநிருத்தனை பாணன் சிறையில் போட்டான்.

10.மரக்கால்: கொற்றவையை/ துர்க்கையை வெல்ல அவுணர்கள் தேள் ,பாம்பு முதலிய விஷப் பிராணிகளை அனுப்பினர். அப்போது மரக் கால்கள் கொண்டு நடனமாடி துர்க்கை வெற்றி பெறுவதைக் காட்டும் நடனம் இது

11. பாவை: போர் செய்ய வந்த அரக்கர்களை அழித்து திருமகள் ஆடிய ஆட்டம் பாவை எனப்படும்.

இவைகளில் முதல் ஆறும் நின்று ஆடும் ஆட்டங்கள். ஏனைய ஐந்தும் வீழ்ந்தாடுபவை. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள், நாட்டிய மேடை எப்படி இருக்க வேண்டும், எப்படி அலங்கரிக்கப் படவேண்டும் என்ற அரிய தகவல்களையும் தருகிறார்.

காவியத்தில் வேறு மூன்று இடங்களில் வேடுவர் ஆடிய ஆட்டங்கள், ஆய்ச்சியர் என்னும் இடையர்கள் ஆடிய ஆட்டம், மலைவாழ் மக்களாகிய குன்றக் குறவையர் ஆடிய ஆட்டம் என்பனவற்றையும் விளக்குகிறார். சிலப்பதிகார காவியத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் படித்து ஜீரணிக்க பாமர மக்களால் முடியாது. அத்துறையில் வல்ல அறிஞர் பெருமக்கள் வாழ் நாள் முழுதும் ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம் அது என்றால் மிகையாகாது.

சில நாத்திகர்கள் பழந்தமிழர்கள் பற்றிப் பரப்பிவரும் தவறான கண்ணோட்டத்தை சங்க இலக்கியத்தில் வரும் நூற்றுக் கணக்கான இந்துமதக் கதைகளும் சிலப்பதிகாரமும் தவிடு பொடியாக்கிவிட்டன.

Picture shows another famous danseuse Charulatha Jayaraman

–subham—Dance, Psychologist syllabus

Tags- மாதவி , 11 வகை நடனங்கள் , கல்யாணத்தில் டான்ஸ், ஆடவேண்டும், பரத முனி, உத்தரவு ,நாட்ய சாஸ்திரம், Dance, Psychologist

Leave a comment

Leave a comment