
Post No. 10,118
Date uploaded in London – 21 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 20-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

ஸ்ரீ காமாக்ஷி தேவியையும் அருணாசல சிவனையும் ஸ்ரீ ராமரையும் போற்றி பெரும் தபஸ்வியாக இருந்து அனைவருக்கும் அருள் பாலித்த பெரும் மகான்
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்!
தர்மக்ஷேத்ரம் என்றும் ப்ரஹம புரம் என்றும் போற்றப்படும் கல்வியில் கரையிலாத காஞ்சி மாநகரில் ஆதி சங்கர பகவத்பாதர் காமாக்ஷி அம்மனைத் தொழுது வழிபட சில நடைமுறைகளை வகுத்து அதைத் திறம்படச் செய்ய நர்மதை நதிக்கரையில் வசித்து வந்த 30 குடும்பங்களை காஞ்சிக்கு அழைத்து வந்தார். அந்தக் குடும்பங்கள் வழிவழியாக இந்த பூஜாமுறைகளை நடத்தி வந்தனர். இந்தக் குடும்பங்களுள் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள் என்பவர் பெரும் புக்ழ் பெற்றவராக இருந்தார். இவரது தமையனார் சிதம்பர சாஸ்திரிகளின் பெண்ணான மரகதத்தை காமாக்ஷியின் அம்சம் என்றே இவர் கருதினார். மரகதம் தனது 12வது வயதிலேயே சாஹித்ய சங்கீத கலாநிதி என்ற பெரும் பட்டத்தைப் பெற்றார். அவருக்குத் திருமண வயது ஆகவே காமகோடி வம்சத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்த வரதராஜர் என்பவரை அவர் மணந்தார். வரதராஜர் ஸ்ரீவித்யா சித்தி பெற்றவர். இந்த தம்பதியருக்கு மகனாக உத்தரமேரூர் அருகில் உள்ள வாவூர் கிராமத்தில் 1870 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி – தைமாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் – சேஷாத்ரி ஸ்வாமிகள் அவதரித்தார். சனிக்கிழமை பிறந்ததால் அவருக்கு சேஷாத்ரி என்று பெயர் சூட்டப்பட்டது.
இளவயதில் ஒரு நாள் மரகதம் தனது நான்கு வயதான சேஷாத்ரியை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். வரதராஜ பெருமாள் உற்சவம் நிகழ இருப்பதால் வியாபாரிகள் தாங்கள் செய்த பொருள்களை கூடையில் வைத்து விற்பனைக்குக் கொண்டு வந்தனர். அதில் ஒருவர் நவநீத கிருஷ்ணனின் வெங்கலச் சிலை வார்ப்புகளை ஒரு சாக்கில் போட்டுக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சேஷாத்ரி அந்த குவியலின் மீது தன் கையை வைத்தார். அந்த பொம்மைச் சிலைகளில் ஒன்றை சேஷாத்ரி எடுத்துக் கொண்டார். இரண்டனா பெறுமானம் உள்ள அந்தச் சிலைக்கு பணத்தை மரகதம் தரவே அதைப் பெற வியாபாரி மறுத்து விட்டார். மறுநாள் மரகதம் குழந்தையுடன் அதே பாதையில் செல்லும் போது முதல் நாள் கிருஷ்ண விக்ரஹத்தைத் தந்த அந்த வியாபாரி மரகதம் முன்னால் நமஸ்காரம் செய்து சேஷாத்ரியின் கைகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். ‘தங்கக் கை, ‘தங்கக் கை’, என்று கூவினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
#விஷயம் என்னவெனில் சாதாரணமாக மிக குறைந்த அளவே விற்பனையாகும் அந்த பொம்மைகள் அன்று முழுவதும் விற்றுத் தீர்ந்தன என்பது தான். அன்றிலிருந்து அனைவரும் தங்கக் கை என குழந்தையை அழைக்க ஆரம்பித்தனர். இந்த கிருஷ்ணருக்கு ஸ்வாமிகள் நெடுங்காலம் பூஜை செய்து வந்தார். உரிய வயதில் சேஷாத்ரியின் நாக்கில் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள் சரஸ்வத மஹாபீஜத்தையும் சரஸ்வத தசஸ்லோகி மந்திரத்தையும் தர்பை புல்லால் எழுதி அனுக்ரஹித்தார். அன்று பாடசாலைக்குச் செல்ல ஆரம்பித்த சேஷாத்ரி ஸ்வாமிகள் மூன்றே வருடங்களில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். இசையைக் கற்று இசை மேதையானார். திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களையும் கசடறக் கற்றார். 15ஆம் வயதிற்குள் அவர் புகழ் எங்கும் பரவியது. வந்தவாசியில் அவர் ராமாயண கதாகாலக்ஷேபம் செய்ய மக்கள் மெய்ம்மறந்து அதைக் கேட்டனர். விதிவசத்தால், அவரது தந்தையும் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகளும் இறைநிலையை எய்தினர்.
17ஆம் வயதில் அவரது அன்னையார் அவருக்கு மணம் முடித்து வைக்கத் தீர்மானித்தார். ஆனால் ஜோதிடரோ சேஷாத்ரி பெரும் யோகி என்றும் அவர் சந்யாசி ஆவார் என்றும் தீர்க்கமாகக் கூறி விட்டார். இதனால் பெரிதும் வருத்தமுற்ற மரகதம் ஒரு நாள் அவரை அழைத்து ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வ்ம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிச்சலதத்வே ஜீவன் முக்தி என்பதை மும்முறை சொல்லி அவர் மார்பைத் தட்டிக் கொடுத்தார். ‘அம்பா சிவே’ என்ற கீர்த்தனையையும் அவரைப் பாடச் சொன்னார். ‘அருணாசலா, அருணாசலா’ என்று கூவியவாறே சேஷாத்ரி ஸ்வாமிகளின் மடியில் அவர் உயிரைத் துறந்தார். அன்றிலிருந்து சேஷாத்ரி ஸ்வாமிகள் சுதந்திர புருஷராக அலைய ஆரம்பித்தார். அனைவரும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் கர்மாவைத் தீர்க்க ஜபம் செய்வதாக கூறுவார். ஒரு லட்சம் தடவை மந்திரத்தைச் சொல்லி விட்டதாகவும் இன்னும் அரை லட்சம் தான் பாக்கி என்றும் அவர் கூறினார். கோவிலில் அவரை சுற்றமும் நட்பும் தொந்தரவு செய்யவே மயானத்திற்குச் சென்று ருத்ர பூமியான அங்கு தனது தியானம் உள்ளிட்டவற்றைச் செய்யலானார்.
தனது மாமாவிற்கு எண்ணெய் தேய்த்து விடுவது அவரது வழக்கம். ஒரு நாள் அப்படிச் செய்யும் போது திடீரென்று வானத்தைப் பார்த்தவாறே சில நிமிடங்கள் இருந்து மீண்டும் வந்து எண்ணெயை எடுத்தார். ‘அங்கே வானத்தில் என்ன பார்த்தாய்’ என்று கேட்டார் மாமா. “அதோ அங்கு தேவதைகள் சென்று கொண்டிருக்கின்றனர், அதைப் பார்த்தேன்” என்றார் அவர். ‘அவர்களுடன் கந்தர்வர்கள் சிலரும் செல்கின்றார்களோ’ என்று கிண்டலாக மாமா கேட்க, ‘ஆமாம் ஆமாம் கந்தர்வர்களும் பாடிக் கொண்டே செல்கின்றனர்’ என்றார் சேஷாத்ரி. ‘ஆஹா, என்ன ராகமோ’ என்று கேட்க ‘பிலஹரி ராகம்’ என்றார் சேஷாத்ரி. இதனால் திடுக்கிட்ட மாமா, ‘அவர்கள் எங்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை’ என்று கேட்க, ‘கர்மாவை முழுவதும் கழித்தவர்களின் கண்களுக்கே அவர்கள் தோன்றுவர்’ என்றார் சேஷாத்ரி.
ஒரு நாள் பாலாஜி ஸ்வாமிஜி என்பவர் ஹரித்வாரிலிருந்து ராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டு வந்தார். அவரை சேஷாத்ரி ஸ்வாமிகள் பார்த்துக் கண்களில் நீராய் பொழிந்தார். ‘மாஷுச மாஷுச வருந்தாதே, வருந்தாதே’ என்றார் அவர். ஆறு நாட்கள் அவருக்குச் சேவை செய்தார் சேஷாத்ரி ஸ்வாமிகள். அவரது பக்குவ நிலையைக் கண்ட பாலாஜி அவருக்கு சந்யாச தீக்ஷையை அளித்தார். அன்றிலிருந்து அவர் சந்யாசியானார். காஞ்சியில் சிறிது நாட்கள் தங்கிய பின்னர் காவேரிப்பாக்கம் சென்றார். இது காஞ்சிக்கு மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமம். பின்னர் திண்டிவனத்தில் சிலர் அவரைப் பார்த்தனர். பின்னர் 1889ஆம் ஆண்டு தை மாதம் ரத ஸப்தமி அன்று திருவண்ணாமலையை வந்து அடைந்த ஸ்வாமிகள் அங்கேயே இருக்கலானார்.

Miracles of Sri Seshadri Swamikal | Tamil and Vedas
https://tamilandvedas.com › 2014/06/20 › miracles-of-s…
20 Jun 2014 — Ramana is known to all spiritual aspirants around the world. But Seshadri Swami is not known to many outside Tamil Nadu. His life was full of …
tags — சேஷாத்ரி , ஸ்வாமிகள்,seshadri swamikal, ஸ்ரீ,
You must be logged in to post a comment.