

Written by London Swaminathan
Post No. 16,067
Date uploaded in London – 8 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
நாலடியார் நூல் தோன்றியது பற்றிய சுவையான கதை என்ன ?
2
நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் என்ன ஒற்றுமை ?
3
சமணர்கள் ஊழ்வினை / தலைவிதி பற்றிக் கொண்ட கொள்கைக்கு அருமையான மாடுகள்- கன்றுகள் உவமை கூறப்பட்டுள்ளது. அது என்ன பாடல்?
4
நாம் எல்லோரும் நூல் என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்; ஆனால் புஸ்தகம் / புத்தகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை சமணர்கள் புகுத்திய பாடல் எது ?
5
கணவனைக் கொல்லும் மூன்று வகைப் பெண்கள் யாவர்?
6
மூன்றுவகை மனிதர்கள் பற்றி சமண முனிவர்கள் என்ன சொன்னார்கள் ?
7
நண்டு சாப்பிட்டால் குஷ்ட ரோகம் வரும்! என்ற அறிவியலுக்கு முரணான கருத்தினை சமண முனிவர் எங்கே செப்புகிறார் ?
8
உலகில் மிகப்பெரிய அதிசயம் என்று வியாசர் மஹாபாரதத்தில் சொன்னதை நாலடியார் பாட்டில் எங்கே காணலாம் ?
9


கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள் என்று வள்ளுவன் சொன்னான். சமண முனிவர்களும் வன்முறையை ஆதரிக்கிறார்களா ?
10
மந்திர விபூதியைப் போட்டால் பாம்பு அடங்குமாமே?
**************************************
விடைகள்
1.ஒரு காலத்தில் கொடிய பஞ்சத்தால் வேறு இடங்களில் வசித்த 8000 சமணர்கள் பாண்டிய நாட்டில் தஞ்சம் புகுந்தனர் ; பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவரவர் இடங்களுக்குத் திரும்ப முடிவு செய்தபோது பாண்டிய மன்னன், போகாதீர்கள், நான் தொடர்ந்து ஆதரவு தருகிறேன் என்றான் ; அவர்கள் அதை ஏற்காமல் ஒவ்வொருவரும் ஒரு பாடலை எழுதிவைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார்கள் . அவை முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் ஓலைச் சுவடிகளை பாண்டிய மன்னன் வைகை ஆற்றில் எறிந்துவிட்டான் ; அவைகளில் கரை சேர்ந்த 400 பாடல்கள் இப்போது நாலடியார் என்ற பெயரில் உள்ளது. நாலடியார் காலம் : நாலடியார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சங்கம் மருவிய காலம் (Post-Sangam period) அல்லது கி.பி 400 மற்றும் 500-க்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
***
2.திருக்குறளைப் போலவே இதிலும் தர்ம, அர்த்த, காம – அறம், பொருள், இன்பம்- என்ற மூன்று பிரிவுகளே உள்ளன. இரண்டு அடிகளைக் குறள் என்று சொல்லுவார்கள்; இதில் நாலடிகள் உள்ளதால் நாலடியார் எனப்பெயரிட்டனர்; அதாவது பெயரிடும் முறையிலும் ஒற்றுமை! இரண்டு நூல்களும் சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வைக்கப்பட்டுள்ளன; அது இன்னுமொரு ஒற்றுமை!
***
3.பசு உவமை !
இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச் சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப் பாட்டு வருகிறது :
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்
(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ; இளைய ஆன்கன்று, தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும், தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும். (க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்..
***
4.புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உய்த்தக மெல்லா நிறைப்பினும் – மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.–318
(பொ-ள்.) புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார் – புத்தகங்களைமிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின்பொருள் தெரியாதவராவர்: உய்த்து அகமெல்லாம்நிறைப்பினும் அவற்றைப் போற்றும் புலவரும் வேறுபொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறுபிறர்முயன்று நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைத்தாலும்அவற்றை அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்களும் வேறு,அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும்தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்களும் அவரின்வேறாவர்.
***

5.“எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம், சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி -அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை”
எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம்: உன்னைத் தைரியமிருந்தால் அடித்துப் பார் என்று எதிர்த்து நிற்பவள் கணவனுக்குக் கூற்றுவன் (எமன்) போன்றவள் ஆவாள்.சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி: விடியற்காலையில் கூட சமையலறைக்குச் சென்று சமைக்காதவள் கொடிய நோயாவாள்.அட்டதனை உண்பியாது அளிவாழ்பேய்: சமைத்த உணவை அன்போடு பரிமாறாமல் முகம் சுளிப்பவள் இல்லத்தில் வாழும் பேய் ஆவாள்.கொண்டானைக் கொல்லும் படை: இம்மூன்று வகையான மனைவியரும் தன் கணவனைக் கொல்லும் படைக் கருவிகளைப் போன்றவராவர்.
***
6.கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம்2என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
கல்லாக் கழிப்பர் தலையாயார் – மக்களில் உயர்ந்தோர், நற்கருத்துக்களை ஆழ்ந்து அறிந்து தெளிவு பெறுதலை மேற்கொண்டு அம்முறையில் தம் வாழ்நாட்களைக் கழிப்பர்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள் – இடைத்தர மக்கள், இனிய பண்டங்களை ஐம்புலன்களானும் நுகர்ந்தின்புறுதலை மேற்கொண்டு அம் முறைமையில் வாழ்நாள் கழிப்பர்; கடைகள் இனிது உண்ணேம் ஆரப்பெறேம் யாம் என்னும் முனிவினால் கண்பாடு இலர் – கடைத்தர மக்கள், ‘யாம் பண்டங்களை இன்பமாய் நுகரப் பெற்றிலேம், நிறையப் பெற்றிலேம்’ என்னும் வெறுப்பினால் இரவிலும் உறக்கமில்லாதவராவர்.
***
7.அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
(இ-ள்.) அக்கால் – அந்தக் காலத்தில் [முற்சன்மத்தில்], அலவனை – நண்டை, காதலித்து – விரும்பி, கால் முரித்து – காலையொடித்து, தின்ற – (அதனைத்) தின்ற, பழவினை – (அதனாலுண்டாகிய) கருமம், வந்து அடைந்தக் கால் – (பயன் பெறும்படி) வந்து சேர்ந்த போது, அங்கை – உள்ளங்கையானது, அக்கு போல் – சங்குமணியைப் போல, ஒழிய – நீங்க, விரல் அழுகி – விரல்கள் அழுகிப் போய், துக்கம் – துக்கத்தைத் தருகின்ற, தொழு நோய் – பலவகைக் குட்ட நோய்கள், எழுப – உண்டாகப் பெறுவார் (பாவிகள்), .
நண்டை முரித்துத் தின்றவர்க்குக் குட்ட நோயுண்டாமாதலால் அதுவும் தீவினை யென்பதாம்.
8. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்
வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணராதார்
பொருள்:-நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள்தோறும் நாள் கழிதலை அறியாதார், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக்கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர். ஒரு நாளையும் வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.
வள்ளுவனும் இதே கருத்தை நம் முன் வைக்கிறான்:–
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு–(திருக்குறள் 336)
பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.
மகாபாரதத்தில் யக்ஷப் பிரச்சனம் எ ன்னும் பேயின் கேள்வி பதில் பகுதியில் தினமும் பலர் இறப்பதைப் பார்த்தும், தான் மட்டும் என்றும் நிலைத்திருப்பதாக மனிதன் நினைத்து வாழ்வதே உலகிலேயே மிகப்பெரிய அதிசயம் என தருமபுத்திரர் (யுதிஷ்டிரன்) குறிப்பிடுகிறார்.
***
9.ஆமாம்; அவர்களும் அடித்தால்தான் கொடுப்பார்கள் என்கிறார்கள்:
தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா
உளி நீரர் மாதோ கயவர் : – அளி நீரார்க்(கு)
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின். 355
தளிர்மேலே நின்றாலும் ஒருவர் (கொட்டாப்புளி அல்லது மரத்தாலான சுத்தியல்) தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர். அடித்தால்தான் கொடுப்பார்கள்
வள்ளுவனும் வன்முறையை ஆதரிக்கிறான்:–
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)
பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.
இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் (1078)
பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.
***
10.கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை
இடுநீற்றால் பையவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு .
படமெடுத்து ஆடும் பாம்பும் விபூதியை மந்திரித்துப் போட்டால் அடங்கிவிடும் ; அதுபோல கயவர் வாயிலிருந்து கொடுமை தரும் சொற்கள் கல்லால் அடிப்பது போலவந்தாலும் அவற்றையெல்லாம் பலரும் காணும்படிப் பொறுத்துக்கொண்டு செல்பவர்கள் மேன்மக்கள்ஆவர்.
–subham—
Tags– பாம்பு, மந்திர விபூதி, கணவனைக் கொல்லும் பெண்கள் சமண முனிவர்கள், வன்முறை, நாலடியார், 10 கேள்விகள்,மூன்றுவகை மனிதர்கள்