முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)

Written by London Swaminathan

Post No. 16,074

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

முத்தொள்ளாயிரம் நூலில் என்ன விஷயம் பாடப்பட்டுள்ளது ?

2

முத்தொள்ளாயிரம் என்று ஏன் பெயர் இடப்பட்டது ?

3

இந்த நூலை இயற்றியவர் யார் ? இதன் காலம் என்ன ?

4

இதிலுள்ள பாடல்கள் எந்த வகையைச் சேர்ந்தவை ?

5

நூலாசிரியர் இந்துவா, சமணரா ?

6

இந்த ஆசிரியர் சோதிட வல்லுநர் என்பதை எப்படி அறியலாம் ?

7

அக்காலத் தமிழர்கள் என்னென்ன செய்தனர் என்று நூலாசிரியர் இயம்புகிறார் ?

8

புலவரின் கற்பனைத் திறத்துக்கு சிலந்திப் பூச்சியை எப்படிப் பயன்படுத்தினார் ?

9

பாண்டியன் மேல் காதல் கொண்ட பெண்ணின் செயல் என்ன ?

10

முத்தொள்ளாயிரம் காலம் பற்றி வையாபுரிப்பிள்ளை காட்டும் சான்றுகள் என்ன ?

****************************

விடைகள்

1.இது சேர சோழ பாண்டியர்களின் புகழ் பாடுவது. எந்தக் குறிப்பிட்ட மன்னனையும் இது பாடவில்லை. மூன்று குடியினருக்கும் உரிய கோதை, கிள்ளி, மாறன் முதலான பொதுவான பெயர்களே இதில் உள்ளன.

***

2.மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 பாடல்கள் கொண்டது என்பது ஒரு சாரார் கருத்து. மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது என்பது இன்னொரு சாரார் கருத்து. முதல் கருத்தே சரியானது . புறத்திரட்டு என்னும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட 108 பாடல்களே கிடைத்தன .

***

3.ஆசிரியர் பெயர் தெரியாது ஏனெனில் முழுப்பாடல்களும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். இந்நூலின் உள்ள சில அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார். அறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை இந்நூலின் காலத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் எனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

***

4.இது வெண்பா யாப்பில் எழுதப்பட்ட நூல்

***

5.இவர் இந்துவே ; சமணர் அல்ல; இந்நூலின் கடவுள் வாழ்த்து, சிவபெருமான் பற்றியது. சிவபெருமான் நாள்மீன்களையும், திங்களையும், சூரியனையும் படைத்தவன் என்றும், ஆனால் உலகம் அவனை ஆதிரையான் என்பது வியப்பானது என்றும் கூறுகின்றார் ஆசிரியர். மேலும், தாம் பாண்டியனைப் புகழ்ந்து பாடும் பாட்டு, மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகப்பெருமானைக் கடப்ப மலர் தூவிப் பாடிப் புகழ்தலை ஒத்தது என்கிறார். இதனால் இவர் சைவ சமயச் சார்புடையவர் என்பது விளங்கும்.

***

6. நூலாசிரியர் 27 நட்சத்திரப்பெயர்களில் பெரும்பாலானவற்றைப்பாடுகிறார் ; சிவா பிரபஞ்ச சத்துக்கே முதலானாவான்; அவனை ஆதிரையான் என்று சொல்லி ஒரு நட்ஷத்திரத்துக்கு மட்டும் பொருத்துவது முறையா என்கிறார்; சோழன் பிறந்த நாள் வருகின்றது. அது ரேவதி விண்மீன் சந்திரனோடு கூடி நிற்கும் நல்ல நாள் என்று பிறந்த நாள் நாட் சாத்திரத்தைக் குறிப்பிடுகிறார் .தென்னன் திருஉத்திராட நாள் (7)  என்றும் பாடியுள்ளார் .

***

 7. மன்னர்கள்  பர்த் டே HAPPY BIRTH DAY கொண்டாடி பிறந்த நாள் பரிசு வழங்கினார்கள் பெண்கள் குங்குமச் சாந்தினை அணிந்தனர் (9). கணவனை இழந்த பெண் எரி மூழ்கி இறக்கும் வழக்கம் இருந்தது (19). நீரில் நின்று தவம் செய்தனர் (25). உலக்கை கொண்டு குற்றும்பொழுது பாடல் இசைத்தல் உண்டு (34). வேட்டுவர்கள் பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தனர் (35), முதலான செய்திகள் கிடைக்கின்றன

***

8.சோழன் பிறந்த நாளில் வருவோர்க்கெல்லாம் உயர்ந்த பரிசிலை வாரி வழங்குகின்றான் சோழன்.  சோழன் அரண்மனையில் இருந்த சிலந்திப்பூச்சிக்கு மட்டும் சோக நாளாயிற்றாம்! ஆம்! அது தானே கட்டிக் கொண்டு வாழ்ந்த தன் வீடாகிய கூட்டை இழந்து விட்டது! ஒட்டடை நீக்கப் பெற்றுத் தூய்மையாயிற்று என்ற செய்தியையே புலவர் என்னோ! சிலம்பிதன் கூடு இழந்தவாறு! என்று நயமாகப் பாடுகிறார் .

***

9.பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப் பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல் கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது. தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக் கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா? ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள் தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால் உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்தது ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள். இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்

கழுதை செவி அரிந்தற்றால் – வழுதியைக்

கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்

கொண்டன மன்னோ பசப்பு (60)

(செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; பசப்பு = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)

***

10.தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் தனது ‘இலக்கிய தீபம்’ நூலில் உள்ள ‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ எனும் கட்டுரையில், காட்டும் முக்கிய சான்றுகள்:

உரையாசிரியர் மேற்கோள்கள்: பிற்கால உரையாசிரியர்களான பேராசியர் மற்றும் இலக்கண விளக்க உரையாசிரியர்கள் முத்தொள்ளாயிரப் பாடல்களை தங்களது உரைக்கு மேற்கோளாகக் கையாண்டுள்ள முறையைக் கொண்டு இதன் கால எல்லையை நிர்ணயித்தார்.சொல்லாட்சியும் நடையும்: சங்க இலக்கியங்களின் இறுதிக் காலத்திற்கும் பக்தி இலக்கியக் காலத்திற்கும் இடைப்பட்ட மொழிநடை, செய்யுட்களின் கட்டமைப்பு மற்றும் வெண்பா யாப்பு வடிவம் ஆகியவை ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலைச் ஒத்திருப்பது.வரலாற்றுப் பின்னணி: சேர, சோழ, பாண்டிய வேந்தர்களை இணைத்துப் போற்றும் பொதுவான அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழல் அக்காலத்தில் நிலவியிருந்தமை.பண்பாட்டுச் சான்றுகள்: அசுவினி முதலாகத் தொடங்கும் 27 விண்மீன்கள் பற்றிய தமிழர்களின் விரிவான அறிவு நிலைப்பாடு. (ஆழ்வார்கள் நாயன்மார்கள் மாணிக்கவாசகர் முதலியோர் காட்டும் நாயக- நாயகி பாவம் இதில் உள்ளது . பல்லவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.)

–subham–

Tags- முத்தொள்ளாயிரம் நூல், 10 கேள்விகள்

Leave a comment

Leave a comment